கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, November 16, 2018

வண்டிப் பயணமும், வாழ்க்கைப் பயணமும்

வண்டிப் பயணமும், வாழ்க்கைப் பயணமும் 


நூறு புத்தகங்கள் படிப்பதால் பெறும் அறிவை ஒரு பயணம் தந்துவிடும் என்பார்கள். பயணங்கள் மூலம் நான் பெற்ற அறிவை விட, பயணங்களுக்கும்  நம் வாழ்க்கைப் பயணத்திற்கும் உள்ள ஒற்றுமையை அலசுவதே என் நோக்கம். 

என் நாற்பதாவது வயதில்தான் டூ வீலர் ஒட்டக்  கற்றுக் கொண்டேன். என்னைவிட இளையவர்களைவிட நான் சீக்கிரம் கற்றுக் கொள்வதாகவும், தைரியமாக ஓட்டுவதாகவும் எனக்கு பயிற்சி அளித்தவர் சொன்னாலும், எனக்கு அடி மனதில் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். "நமக்குப் பின்னால் ஒரு குடும்பம் இருக்கிறது, நாம் ஏதாவது விபத்தில் சிக்கிக் கொண்டால் மிகவும் கஷ்டம்" என்னும் அச்சம் இருந்ததால் மெதுவாகத்தான் செல்வேன், சாலை விதிகளை மீற மாட்டேன். 



நம் நாட்டில் சாலையில் மாட்டு வண்டி, மீன் பாடி வண்டி, சைக்கிள், ஆட்டோ, சிட்டி பஸ், தண்ணீர் லாரி, நவீன ரக டூ வீலர்கள், பென்ஸ் கார், டாட்டா சுமோ என்று எல்லா வகை வாகனங்களும் அதனதன் வேகத்தில் விரையுமே. இதில் சைக்கிளையோ, மாட்டு வண்டியையோ முந்துவதால் நமக்கு எந்த பெருமையும் கிடையாது. டாட்டா சுமோவோடு போட்டி போடுவது அறிவீனம். நம் சௌகரியத்திற்க்காக நாம்  வண்டியில் செல்கிறோம், நாம் போக வேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக செல்வதுதான் நம் வேலை. 

இதைப் போலத்தான் வாழ்க்கையும். அவரவர்க்கு வாய்த்த இடம் அவன் போட்ட பிச்சை. நம் வாழ்க்கையைத்தான் நாம் வாழ வேண்டுமே தவிர, மற்றவர்களோடு ஓப்பிட்டுக் கொள்ளுதல் சரியில்லை என்னும் மிகச்சிறந்த வாழ்க்கை பாடத்தை புரிந்து கொண்டேன். 

இது ஒரு விதம் என்றால், வெளிநாட்டுப் பயணங்கள் வேறு விதமாக வாழ்க்கை தத்துவத்தை புரிய வைத்தன. 

நம் நாட்டிலிருந்து வேறு ஒரு நாட்டிற்கு செல்லும்பொழுது அங்கு தங்குவதற்கு மூன்று மாதமோ, ஆறு மாதமோ, இரண்டு வருடங்களோ தங்கும்படி விசா கிடைக்கும். அத்தனை நாட்கள்தான் அங்கு தங்க முடியும். அதே போல நாமும் இந்த பூமியில் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே வாழ அனுமதிக்கப் படுகிறோம். விசா முடிந்து விட்டால் தங்க முடியாதது போல நமக்கான காலம் முடிந்து விட்டால் இங்கிருந்து கிளம்ப வேண்டியதுதான். சில சிறப்பு காரணங்களுக்காக விசாவை நீட்டித்துக் கொள்ளலாம் என்பது போல, நம்மால் இங்கு ஏதாவது நன்மை விளையும், என்றால் குருவின் அருளோடு ஆயுளை நீட்டித்துக் கொள்ளலாம். 



சரி நம் காலம் முடிந்து நாம் கிளம்புகிறோம், நண்பர்கள் வீட்டிலேயே பை சொல்லி விடை கொடுத்து விடுவார்கள். மகனோ, மகளோ ஏர்போர்ட் வரைதான் நம்மோடு வர முடியும். அதன் பிறகு பாவ,புண்ணியம் போல லக்கேஜ், கேபின் பேகேஜ் என்னும் இரண்டு சுமையையும் நாம் மட்டும் தனியாகத்தான் சுமந்து செல்ல வேண்டும். எத்தனைக்கெத்தனை குறைவாக லக்கேஜ் இருக்கிறதோ, அத்தனைக்கத்தனை பயணம் சுகமாக இருக்கும். ஆனால் நாம் எங்கே குறைவாக லக்கேஜ் வைத்துக் கொள்கிறோம்?  செல்லும் இடங்களிலெல்லாம் எதையாவது வாங்கி அதிக சுமையோடுதானே திரும்புகிறோம். அப்போது அதற்கு எக்ஸெல் பேகேஜ் கட்டணம் கட்டித்தான் ஆக வேண்டும். இந்த எக்செஸ் பேகேஜ் கட்டணத்தை நாம் வியாதிக்காக செலவிடும் தொகையோடு ஒப்பிடலாமா?  

லக்கேஜ், அல்லது கேபின் பேகேஜ் குறைவாக இருந்தால், சில சமயம் நாம் எகானமி வகுப்பு டிக்கெட் வாங்கியிருந்தாலும், நம்மை முதல் வகுப்பிற்கு உயர்த்துவார்கள். இதனால் என்ன பயன்? என்று கேட்கலாம். பேகேஜ் அதிகம் எடுத்துச் செல்ல முடியும், விரைவாக வெளியே சென்று விடலாம்.  

நம் நாட்டை அடைந்ததும் இங்கு சுங்க வரி(கஸ்டம்ஸ்) கட்ட வேண்டிய பொருள்களை நாம் வைத்திருந்தால் அதை கட்டாமல் இருக்க முடியாது. அப்படி எதுவும் இல்லை என்றால் க்ரீன் சேனல் வழியே விரைவாக வெளியேறி விடலாம்.  அரசை ஏமாற்றி விலக்கப்பட்ட பொருள்களை கடத்த நினைத்தால் கடுமையான தண்டனை நிச்சயம்.

அதைப்போலவே வரம்பு மீறாமல் வாழும் பொழுது நமது அடுத்த பிறவி நன்றாக அமைந்து விடும். நாலு பேருக்கு நல்லது செய்வதற்காக சில பாவங்களை செய்தால், அதற்கான கூலியை கொடுத்தேயாக வேண்டும். பேராசையால் பெரும் குற்றங்களை செய்யம் பொழுது, தண்டனையிலிருந்து தப்ப முடியாது. 

எப்படி பார்த்தாலும் லெஸ் லக்கேஜ், மோர் கம்ஃபார்ட் என்பது வண்டிப் பயணம், வாழ்க்கைப் பயணம் இரண்டுக்குமே நல்லது. என்ன என் கருத்து சரியா? நீங்கள் நினைப்பதை சொல்லுங்கள். 


37 comments:

  1. என்ன இது... எல்லோரும் ஆசிரமம் நடத்த ஆரம்பித்தாயிற்று போலிருக்கு. ரொம்ப தத்துவங்களாகவே இருக்கே....

    ReplyDelete
    Replies
    1. நெல்லை என் பதிலை பார்த்துட்டு நான் ஆசிரமம் தொடங்கிட்டேனோனு நினைச்சுராதீங்க...மீ குட்டிப் பாப்பா....ஹா ஹா ஹா ஹா
      அது சரி வேறயாரு ஆசிரமம் தொடங்கிருக்காங்க....??!!

      கீதா

      Delete
    2. >>> என்ன இது.. எல்லோரும் ஆசிரமம் நடத்த ஆரம்பித்தாயிற்று போலிருக்கு...<<<

      நானே ராஜா.. நானே மந்திரி!...
      நானே கேள்வி.. நானே பதில்!..
      நானே குரு.. நானே சீடன்!...

      அன்பின் நெ. த., ஒங்களுக்கு தெரியும்..ன்னு நெனைக்கிறேன்...

      பானுமதி..ன்னு பேர் உள்ளவங்க எல்லாம்
      பெரும்பாலும் (90%) பக்குவப்பட்டவங்களாகவே இருப்பாங்க!..

      ( இவங்க ஏதாவதொரு வகையில 5 என்ற எண்ணுக்கு தொடர்புடையவங்களா இருப்பாங்க!...)

      பண்பட்ட நெஞ்சம் பக்குவத்தின் அடையாளம்!...

      Delete
    3. வயதாகிக்கொண்டிருகிறதே நெல்லை.

      Delete
    4. ( இவங்க ஏதாவதொரு வகையில 5 என்ற எண்ணுக்கு தொடர்புடையவங்களா இருப்பாங்க!...) அட! என்னைப் பொருத்த வரையில் சரி.
      //பானுமதி..ன்னு பேர் உள்ளவங்க எல்லாம்
      பெரும்பாலும் (90%) பக்குவப்பட்டவங்களாகவே இருப்பாங்க!..//
      கொஞ்சம் அதாரிடேடிவ்வாக பேசுவாரகள்.


      Delete
  2. பானுக்கா மீ ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பவே குட்டிப் பாப்பா...ஹா ஹா ஹாஹா ஹா ஹா...

    ஃபன் அபார்ட்....நல்லா சொல்லிருக்கீங்க...நானும் நிறைய இப்படி யோசித்ததுண்டு யோசிப்பதுண்டு....நீங்க அழகா எழுதறீங்க அக்கா...சூப்பரா மனசுல தோன்றும் கருத்துகளை எழுத்து வடிவமாக்கிடறீங்க....மீ க்கு அது வரவே மாட்டேங்குது...ஹா ஹா
    ஹா ஹா

    முன்னாடி ரெண்டு, நாலுனு ஓட்டும் போது இப்படியான தத்துவார்த்தங்கள் நிறைய வரும்...நானும் ரூல்ஸ் ப்ரேக் பண்ண மாட்டேன். ஆனா நம்மூர்ல ரூல்ஸ் ப்ரேக் பண்றவங்க நம்ம இடிச்சுட்டுப் போயிடுவாங்க...

    வண்டி ஓட்டுவது கான்சென்ற்றேஷன் ரொம்ப முக்கியம் இலக்கை அடையும் கான்சென்ட்ரேஷன்...அது வாழ்க்கைக்கும் பொருந்தும்...

    நான் பல வருடங்களுக்கு முன் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்....கார் ஓட்டக் கற்றுக் கொண்ட போது நாகர்கோவிலில் பயிற்சி கொடுத்தவர் தக்கலை வரை அழைத்துச் செல்வதுண்டு. அந்த ரோடு தான் கொஞ்சம் அகலமாக இருக்கும். திருவனந்தபுரம் செல்லும் ஸ்டேட் ஹைவே. இரு பக்கமும் அத்தனை அழகாக இருக்கும்.

    சேர்ந்த மூன்றாவது நாள். வில்லுக்குறி வரை சென்று அங்கு யு டெர்ன் அடித்து திரும்பும் பயிற்சி முடிந்து மீண்டும் புறப்பட்ட இடத்துக்கு வரவேண்டும். நான் ஒட்டிக் கொண்டிருந்தேன். எதிரில் பல பேருந்துகள் ஸ்பீடாகச் சென்று கொண்டிருந்தன. நானும் கான்ஃபிடெண்டாக ஓட்டினேன்...பயிற்சியாளர்தான் இருக்கிராரே என்று. ஓட்டிக் கொண்டு புறப்பட்ட இடத்துக்கு நெருங்கியாச்சு..அது டவுனுக்குள் ட்ராஃபிக் வேறு....வண்டியை எங்கு விட வேண்டும் என்று கேட்க பயிற்சியாளரிடம் கேட்க பதில் இல்லை. மீண்டும் கேட்க பதில் இல்லை எனக்கு அதுவரை இல்லாதிருந்த பயம் திக் என்று...பயிற்சியாளர் நல்ல உறக்கம்...நான் மூன்றாவது தடவை அவரை கொஞ்சம் சத்தமாகக் கூப்பிடவும் அவர் எழவும் கொஞ்சம் பயந்து போனார் தான் தூங்கிவிட்டோமே என்று அப்புறம் வ்ண்டியை ஓரங்கட்டினோம்...

    இதில் என்ன? தத்துவம் என்று தோணுதா? நம் நம்பிக்கை. முழுதான கேள்வி எதுவும் எழாத நம்பிக்கை. அவர் இருக்கிறார் பார்த்துக் கொள்வார் என்ற பரிபூரண நம்பிக்கை...அது நமது கான்ஃபிடென்ஸையும் வளர்க்கிறது. அந்தப் பயிற்சியாளர் கவனிக்கலை என்று தெரிய வரும் போது மனம் சில நிமிடங்கள் ஆட்டம் காண்கிறது.

    இதேதான் இறைவனிடமும்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //அந்தப் பயிற்சியாளர் கவனிக்கலை என்று தெரிய வரும் போது மனம் சில நிமிடங்கள் ஆட்டம் காண்கிறது// உண்மைதான், நம்பும் விஷயம் பொய்துப்போகும் பொழுது மிகவும் சோர்ந்து விடுவோம். அது கடவுளாக இருக்க வேண்டும் என்றில்லை, கொள்கைகளாக கூட இருக்கலாம்.

      Delete
  3. சில சிறப்பு காரணங்களுக்காக விசாவை நீட்டித்துக் கொள்ளலாம் என்பது போல, நம்மால் இங்கு ஏதாவது நன்மை விளையும், என்றால் குருவின் அருளோடு ஆயுளை நீட்டித்துக் கொள்ளலாம். //

    அப்படியா? என் யோகா ஆசிரியர் வகுப்பில் சொன்னது. யோகா மூச்சுப் பயிற்சி செய்தால் நம் ஆயுள் கூடும் என்று...

    எனக்கு அதில் மற்றுக் கருத்து உண்டு. ஆனால் ஆசிரியரிடம் (அவரை எல்லோரும் குருஜி என்றுதான் அழைப்போம்) நான் கேள்வி எழுப்பவில்லை. என்னதான் யோகா தியானம் எல்லாம் செய்தாலும் நம் வாழ்நாளை அது நீட்டிக்குமா? அது நீட்டுகிறது என்று நாம் தான் நினைத்துக் கொள்கிறோம் இல்லையா? ஏற்கனவே நம் கடைசி மூச்சு நிச்சயிக்கப்பட்ட ஒன்று இல்லையா? அக்கா? அது யார் கையிலும் கிடையாதே...குரு உட்பட...என்பது நான் நினைப்பது..

    உங்களின் இந்த வரிகள் நான் இப்பத்தான் அறிகிறேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நல்ல சிந்தனைகள். நம் ஆயுளை நீட்டிப்பதும் நீட்டிக்க முடியாமல் போவதும் நிச்சயம் அவன் கையில் தான் இருக்கிறது. ஆனால் தேர்ந்த யோகப் பயிற்சி பெற்றவர்கள் மூச்சுக்காற்றைச் சிக்கனமாகப் பயன்படுத்தி நம் வாழ்நாளில் இத்தனை எண்ணிக்கை என உள்ள மூச்சுக்காற்றை அந்த எண்ணிக்கைக்கு உட்பட்ட வருடங்களுக்கும் மேல் நீட்டிப்பார்கள். நீட்டித்திருக்கிறார்கள். ஆகவே தி/கீதாவின் யோக குரு சொன்னதில் தப்பில்லை.

      Delete
    2. கீதா ரங்கன், கீசா மேடம் - ஒருவருக்கு இத்தனை மூச்சுகள்தான் ஆயுள் என்றும், மூச்சுவிடும் எண்ணிக்கையைக் குறைப்பதன்மூலம்்ஆயுள் கூடும் என்றும் படித்திருக்கிறேன், பிறர் சொல்லியிருக்கின்றனர். நானும் கொஞ்சம் ப்ராக்டிஸ் பண்சி அப்புறம் விட்டுவிட்டேன். ஆமையின் ஆயுள் அதிகத்திற்கு இதுதான் காரணம்

      Delete
    3. //சில சிறப்பு காரணங்களுக்காக விசாவை நீட்டித்துக் கொள்ளலாம் என்பது போல, நம்மால் இங்கு ஏதாவது நன்மை விளையும், என்றால் குருவின் அருளோடு ஆயுளை நீட்டித்துக் கொள்ளலாம். //

      அப்படியா?//

      இதில் என்ன சந்தேகம்? ஆதி சங்கரரின் கதை தெரியாதா? அவருக்கு விதிக்கப்பட்ட பதினாறு வருடங்களை நீட்டித்து முப்பத்திரெண்டு வருடங்களாக்கிக் கொண்டாரே.
      ஆதி சங்கரர் மட்டுமல்ல, சாதாரண மனிதர்களுக்கு கூட இது நடந்திருக்கிறது.

      Delete
    4. இந்த மூச்சை அடக்கி விடுவது குரு மூலமே வரணும். ஆனாலும் நெல்லை சொல்லி இருப்பது சரியே! மூச்சுக்காற்றை விரைவாகவும் குறுகிய காலங்களில் செலவழித்தல் கூடாது என்பார்கள். எத்தனைக்கெத்தனை குறைக்கிறோமோ அவ்வளவுக்கு ஆயுள் நீடிக்கும். நெல்லை சொல்லுவதை ஆமோதிக்கிறேன். என் யோக குருவும் சொல்லுவார்.

      Delete
  4. ​நல்ல ஒப்பீடு. திடீரென ரசிக்கத்தக்க தத்துவ சிந்தனைகள்...

    ReplyDelete
    Replies
    1. திடீரென்று வரவில்லை. நீண்ட நாட்களுக்கு முன்னமேயே வந்துவிட்டது. ரசித்தமைக்கு நன்றி.

      Delete
  5. பானுமதியிடம் நான் கண்டு வியக்கும் ஒரு விஷயம் சொல்ல வருவதைத் தெளிவாகவும் சுருக்கென்றும் சரியான ஒப்பீடுகளுடனும் சொல்லி விடுகிறார். தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்கள் இல்லை. முதலில் நான் இதை அவரிடமிருந்து கற்க வேண்டும். ஆனால் இதெல்லாம் தானாக வருவது என்றே நினைக்கிறேன். அவர் இயல்பே இதுவாக இருக்கும். நான் பேச்சுக் குறைவு! ஆனாலும் எழுத ஆரம்பித்தால் "வளவள"! அதையும் குறைக்க வேண்டும். ஆனால் குறைக்கிறேன் என்னும் பெயரில் பதிவுகள் போடாமல் தப்பித்தலும் அல்ல! இதற்கு உள்ள வித்தியாசங்களைப் புரிஞ்சுக்கணும். முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கீதா அக்கா.. நானும் ஆமோதிக்கிறேன். எல்லோருக்கும் வராது இந்தத் திறமை. திங்கக்கிழமைக்கு அனுப்பும் சமையல் ரெசிப்பிக்கள் கூட சுருக்கமாகத்தான் இருக்கும்.

      Delete
    2. படிக்கிற நாட்களில் ப்ரிசி ரைடிங்கில் 100/100 எடுத்திருப்பார்! :)

      Delete
    3. அல்லது அதற்கு அவருக்கு வாய்த்த ஆசிரியர் சிறப்பானவராக இருந்திருப்பார்!

      Delete
    4. //அவர் இயல்பே இதுவாக இருக்கும்.// சரியாக கணித்திருக்கிரீர்கள். பேசும் பொழுதும் இப்படித்தான் பேசுவேன். இதில் ஒரு பாதகம் என்னவென்றால், சில சமயம் நாம் என்ன சொல்கிறோம் என்பது எதிராளிக்கு புரியாது.
      கல்லூரியில் படிக்கும் பொழுது, எகனாமிக்ஸில் வள வளவென்று எழுதத் தெரியாமல் கஷ்டப்பட்டிருகிரேன்.
      என் தந்தை கூட "உன் விடைகள் மிகவும் சுருக்கமாக இருக்கின்றன" என்று கூரியிருகிறார்.

      Delete
    5. //கீதா அக்கா.. நானும் ஆமோதிக்கிறேன்.//
      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      Delete
  6. பானுமதி அருமையான ஒப்பீடுகளுடன் வாழ்க்கைப் பயணத்தை அலசி இருக்கிறார். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. //தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்கள் இல்லை. முதலில் நான் இதை அவரிடமிருந்து கற்க வேண்டும்.// உங்களின் இந்த பாராட்டு மிகவும் சந்ததோஷத்தை அளிக்கிறது. சாதாரணமாக நான் என்னுடைய சில பதிவுகளை என் குடும்பத்தாருக்கு படித்து காண்பிப்பேன், இன்று பின்னூட்டங்களையும் படித்து கான்பித்தேன். ரொம்ப சந்தோஷம்!

      Delete
  7. >>> வண்டிப் பயணமும், வாழ்க்கைப் பயணமும் ...<<<

    நானும் இப்படித்தான் நினைத்துக் கொள்வேன்!...

    நினைக்கறதையெல்லாம் எங்கே பதிவு செய்ய முடியுது!...

    இப்படியெல்லாம் நினைத்து மனதை நேர் செய்து விட்டால் பெருவாரியான துன்பங்கள் நம்மைக் கண்டாலே ஓடிப் போய் விடுகின்றன....

    அப்படியும் சிலதுகள்...

    நீ வாடா... எங்க ஏரியாவுக்கு வந்து பார்றா!.. ந்னு கூச்சல் போட்டுக்கிட்டு ஓடினாலும்..
    நாம அங்கேயே போயி ஜெயிக்க முடியுது!...

    துன்பமும் தொந்தரவும் நம்ம கால்லயே விழுந்து அழுவுதுங்க...
    இப்படியா தொரத்திக்கிட்டு வர்றது.. எங்கள உட்டுடுங்கோ..ன்னு!...

    இதைத் தானே அன்னைக்கே -
    ஊழையும் உட்பக்கம் காண்பர்..- ன்னு,
    வள்ளுவர் ஐயா சொல்லிப் போனார்!...

    இப்படியான வாழ்க்கைக்குள்ளும்
    நலம் வாழ்க!...

    ReplyDelete
    Replies
    1. விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி.

      Delete
  8. அருமை...

    ஒப்பீடு செய்யலாம் : நம்மை நம்மோடு...

    ReplyDelete
  9. எப்படி பார்த்தாலும்
    லெஸ் லக்கேஜ், மோர் கம்ஃபார்ட் என்பது
    வண்டிப் பயணம், வாழ்க்கைப் பயணம்
    இரண்டுக்குமே நல்லது.
    என்ன என் கருத்து சரியா?

    சரியான கருத்துத் தான்!
    ஆனால்..................................
    புறச் சுமைகளைக் குறைத்தால்
    போதாது தான் - எப்போதும்
    அகச் சுமைகளைக் குறைத்தால் தானே
    அமைதி வரும், மகிழ்ச்சி வரும்...
    அதுவே
    வண்டிப் பயணம், வாழ்க்கைப் பயணம்
    இரண்டுக்குமே நல்லது.
    புறச் சுமையைக் குறைத்தால்
    உடல் களைப்பைக் குறைக்கும்
    அகச் சுமையைக் குறைத்தால்
    அமைதியான உள்ளத்தைத் தோற்றுவிக்கும்
    இதுவே
    நீண்ட ஆயுளுக்கும் சிறந்த வழி!

    ReplyDelete
    Replies
    1. புறச் சுமையைக் குறைத்தால்
      //உடல் களைப்பைக் குறைக்கும்
      அகச் சுமையைக் குறைத்தால்
      அமைதியான உள்ளத்தைத் தோற்றுவிக்கும்//
      அருமை! வருகைக்கு நன்றி.

      Delete
  10. சற்றே வித்தியாசமான ஒப்பீடல்

    ReplyDelete
  11. முன்பு ஆல் இந்தியா ரேடியோவில் ஒரு விளம்பரம் வரும். குடும்பக் கட்டுப்பாட்டு விளம்பரம்.. "மூட்டை முடிச்சைக் குறையுங்கள் ​.. வண்டிப்பயணம் சுகமாகும்.. குடும்ப அளவிக் குறையுங்கள்.. வாழ்க்கைப் பயணம் சுகமாகும்.. அது நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  12. அடடே...

    >>> மூட்டை முடிச்சைக் குறையுங்கள் ​.. வண்டிப் பயணம் சுகமாகும்..
    குடும்ப அளவைக் குறையுங்கள்.. வாழ்க்கைப் பயணம் சுகமாகும்.. <<<

    இந்த விளம்பரத்தில் -
    குடும்ப அளவைக் குறையுங்கள்.. - என்ற வார்த்தைகள்
    மட்டும் நினைவுக்குள் வரவே இல்லை!...

    அரையும் குறையுமாக ஏதையாவது எழுதி பல்பு வாங்குவதா!..
    என்று சும்மா இருந்து விட்டேன்!...

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... ஹா...

      அடுத்த வரிகளை சொல்லட்டுமா?

      வண்டியாயினும்...
      வாழ்க்கையாயினும்
      சுமை குறையட்டும்....
      சுகம் பெருகட்டும்...

      Delete
    2. //அரையும் குறையுமாக ஏதையாவது எழுதி பல்பு வாங்குவதா!..
      என்று சும்மா இருந்து விட்டேன்!...//
      ஹா ஹா ஹா!

      Delete
  13. ஸ்ரீராம்: அதைத் தொடர்ந்து,"பீலிப்பெய் சாகாடும் அச்சிறும், அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் எனும் திருக்குறள் ஒலிக்குமோ?

    ReplyDelete
  14. சிறப்பான ஒப்பீடு.

    Less Luggage More Comfort!

    அகச் சுமைகளைக் குறைப்பது நல்ல விஷயம். எல்லோருக்கும் வந்து விடுவதில்லை. பலவற்றையும் மனதில் சுமந்து சுமந்து பாரம் தூக்கிக் கொண்டே அலைகிறோம்.

    சிறப்பாகச் சொல்லி இருக்கீங்க.... பாராட்டுகள்.

    ReplyDelete