கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, April 21, 2021

ஸ்ரீராமநவமி உற்சவம்

ஸ்ரீராமநவமி  உற்சவம் 



என் சிறு வயதில் திருச்சி உறையூரில் நாங்கள் வசித்த பஞ்சு அய்யர்  ஸ்டோர் என்னும் இடத்தில் வெகு விமரிசையாக ராம நவமியைத் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு உற்சவம், நடத்தப்பட்டு, சீதா கல்யாணமும், கடைசி நாளன்று ஆஞ்சநேய உற்சவமும் நடந்து நிறைவு பெறும். 


ஸ்டோர் என்றதும் ஒண்டு குடித்தனம், காமன்  டாய்லட்  என்றெல்லாம் கற்பனை பண்ணிக்க கொள்ளாதீர்கள். ஒரு காம்பவுண்டுக்குள் பதினேழு தனித் தனி  வீடுகள். ஒவ்வொரு  வீட்டிற்கும் ஒரு குட்டித்திண்ணை, ஒரு பெரிய திண்ணை, ரேழி, முற்றம் எல்லாம் உண்டு. சில்ட்ரன்ஸ் பிளே ஏரியா கூட உண்டு. இப்போதைய பாஷையில் அதை கேட்டட் கம்யூனிட்டி எனலாம். 

ஒவ்வொரு வருடமும் ராம நவமி வருவதற்கு முன் அந்த கொண்டாட்டங்களுக்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு செலவுகள் திட்டமிடப்படுமாம். எங்களுக்கு அதெல்லாம் தெரியாது. ராம நவமிக்கு நான்கு நாட்களுக்கு முன்பே பந்தல் போடுவதற்கு ஆட்கள் வந்து விடுவார்கள். எங்களுக்கு ஒரே சந்தோஷம் தினமும் அந்த பந்தக் காலில் நாலு மூலை தாய்ச்சி விளையாடலாமே! 

செலவுகளை எல்லோரும் பகிர்ந்து கொள்வார்கள். அக்கம் பக்கத்திலும், தெரிந்தவர்களிடமும் வசூல் செய்வதும் உண்டு. ஒரு முறை என் அம்மாவும் அவரின் தோழியான  ஐய்யங்கார் மாமியும் அதிக பட்சம் வசூல் செய்து கொடுத்து பாராட்டு பெற்றார்கள். 

தோரணங்கள் கட்டுவதற்கு என் அப்பா, உஷா என்று ஒரு அக்கா இவர்கள்தான்  பொறுப்பு. அவர்கள் கட் பண்ணி கொடுப்பதை நாங்கள் ஒட்டுவோம்.  எங்கள் வீடு கடைசி வீடு என்பதால் எங்கள் வீட்டுத் திண்ணையில்தான் சாமி படங்கள் வைக்கப்படும். எங்கள் எதிர் வீட்டில் இருந்த தஞ்சாவூர் ராமர்  பட்டாபிஷேக  படம் பிரதான இடத்தைப் பிடிக்கும். இன்னொருவர் வீட்டிலிருந்து ராதா,ருக்மணி சமேத கிருஷ்ணர், இதுவும் தஞ்சாவூர் படம்தான்.எங்கள் வீட்டு ராமர் படமும் இரண்டாவது படியில் இடம் பெறும். 

தினசரி காலையும்,மாலையும் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் உண்டு.  அதை தவிர தினசரி பூஜை நைவேத்தியமாக பாயசம், வடை. அதை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் ஏற்றுக் கொண்டு செய்வார்கள். அந்த பாயசத்தை போன்ற ஒரு பாயசத்தை வேறு எங்கும்  இன்று வரை நான் சாப்பிட்டதில்லை.  

நடுவில் ஒரு நாள் அகண்ட ராம நாமம் இருக்கும். எங்கள் வீட்டுத்  திண்ணையில் சுவாமி வைத்திருப்பதால், அதற்கு எதிர் திண்ணையில் அமர்ந்து பேட்ச் பேட்ச்சாக ராம நாமம் சொல்வோம். அலுவலகம் பள்ளி செல்ல வேண்டியவர்களுக்கு காலை நேர பேட்ச் ஒதுக்கப்படும். பின்னர் குடும்பத்தலைவிகள், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் ராம நாமம் கூறுவார்கள். அதில் மதிய நேர பேட்ச்தான் கொஞ்சம் டல் அடிக்கும் என்று கேள்விப்  பட்டிருக்கிறேன். மாலை மீண்டும் சூடு பிடிக்கும். இரவில்  இளைஞர்கள் பங்கேற்பார்கள். ஒரு வருடம் என் மூத்த சகோதரி பொறுப்பு எடுத்துக் கொண்டு  வெவ்வேறு ராகங்களில் ராம  நாமத்தை சொல்ல வைத்ததை பாராட்டி ராமைய்யா மாமா என்றவர் என் அக்காவுக்கு ராம நாமம் பொறிக்கப்பட்ட ஒரு வெள்ளி மை கூடு பரிசளித்தார். 

சீதா கல்யாணத்திற்கு முதல் நாள் இரவு பூப்பந்தல் போடுவது எங்கள் கடைசி மாமா, எங்கள் அம்மா, பஞ்சு வாத்தியார் என்னும் ஒருவர் இவர்களின் வேலை. சீதா கல்யாணத்தன்று முத்து குத்துதல் என்னும் ஒரு நிகழ்ச்சியில் சிறு பெண்களின் கையில் தங்க மோதிரம் அணிவித்து அரிசியை ஒரு உரலில் போடச் சொல்வார்கள். நாங்கள் ஆவலாக காத்திருப்போம். தங்க மோதிரம் அணிந்து கொள்ளலாமே..!

அன்று எல்லோருக்கும் கல்யாண விருந்து. அன்றைய சாப்பாடு எங்கள் வீட்டு உபயம். எங்கள் வீட்டில்தான் சமையல். சமைப்பது, பரிமாறுவது, சுத்தம் செய்வது என்று அத்தனை வேலைகளையும் எல்லோரும் பகிர்ந்து செய்வார்கள். 

தினமும் மாலையில் கச்சேரி இருக்கும். பாடகர்களுக்கு டிபன்,காபி பெரும்பாலும் எங்கள் வீட்டில்தான்.  பஞ்சு வாத்தியார் என்பவர் என் அம்மாவிடம்,"மாமி கச்சேரி பார்ட்டி வந்து விட்டது, அவர்களுக்கு டிபன்,காபி கொடுக்க வேண்டுமே"  என்பார்.  எங்கள் அம்மா உடனே அவல் கேசரி, உப்புமா, ரவா கேசரி, கிச்சடி, சேமியா கேசரி பஜ்ஜி + தேங்காய் சட்னி செய்து விடுவார். அதை சாப்பிடுபவர்கள் எங்களிடம்,"நீ சாப்பிடலையா?" என்றால் நாங்கள் " நாங்கள் அப்பொழுதே சாப்பிட்டு விட்டோமே" என்று சமத்தாக பொய் சொல்லுவோம்.  

கடைசி நாள் மாலை குழந்தைகள் பங்கு பெரும் நடனம், நாடகம், மகளிர் பங்கேற்கும் பின்னல் கோலாட்டம் போன்றவை நடக்கும். எங்களுக்கு நடனம் பயிற்றுவிப்பது உஷா அக்காதான். இதில்  என்ன ஒரு விஷயம் என்றால் அப்போது முழு பரீட்சை(annual exam) சமயமாக இருக்கும். ஒரு பக்கம் பரிட்சைக்கு படித்துக் கொண்டு, இன்னொரு பக்கம் இவை எல்லாவற்றிலும் பங்கேற்போம். எங்கள் பெற்றோர்கள், "பரீட்சை சமயத்தில் என்ன பாட்டும், டான்ஸும்" என்று எங்களை கோபித்ததில்லை. 

வீடு விருந்தினர்களால் நிரம்பி வழியும். மாமாக்கள், அத்தைகள், அவர்கள் குழந்தைகள், இன்னும் தூரத்து சொந்தங்கள், நண்பர்கள், என்று எத்தனை பேர்கள்!.  எங்கள்  மட்டுமல்ல அந்த ஸ்டோரில் வசித்த எல்லோரும் ஏதோ தங்கள் வீட்டு பெண்ணுக்கு கல்யாணம் என்பது போல் தினசரி புத்தாடை அணிந்து, அலங்கரித்துக் கொண்டு,பக்தியோடு சந்தோஷமாக  அனுபவித்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை. 

ஒவ்வொரு வருடமும் சீதா கல்யாணம் முடிந்த பிறகு அந்த ஸ்டோரில் திருமண வயதில்  இருந்த பெண்களுக்கு திருமணம் நடந்தததாக அம்மா சொல்லியிருக்கிறார்.  அங்கு பாராயணம் செய்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தை கேட்டதனாலேயே அது மனப்பாடம் ஆனவர்கள் உண்டு. என் மூன்றாவது அக்கா ஐந்து வயதிலேயே விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பிழையில்லாமல் சொல்வாளாம். என் சகோதரிகளுக்கு அஷ்டபதி  பந்ததியும்  இதனால்தான் தெரிந்தது. 

அவையெல்லாம் பொற்காலங்கள். கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் திரும்ப கிடைக்காது.  சீதாராமன் அருளால் அப்போது கிடைத்தது. ஜெய் ஸ்ரீ ராம்!

Monday, April 19, 2021

அறியாமையும், அலட்சியமும்

 அறியாமையும், அலட்சியமும் 

பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நன்கு குறைந்திருந்த தீ நுண் கிருமி தொற்று மார்ச்சிலருந்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இப்போது பழைய தீவிரத்தை அடைந்துள்ளது. இதற்கு மக்களின் அறியாமை மட்டுமல்ல அரசியல் தலைவர்களின் அலட்சியமும்தான் காரணம். 

தேர்தல் அறிவித்து, நடத்தியது தவறு என்று கூற முடியாது. ஆனால் பிரச்சாரத்தை ஊடகங்கள் மூலம் மட்டுமே நடத்தியிருக்க வேண்டும். தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு வந்திருந்த மக்களில் பெரும்பான்மையோர் மாஸ்க் அணிந்திருக்கவில்லை, சமூக இடைவெளியா? அப்படி என்றால் என்ன? என்று கேட்கும்படியாகத்தான் இருந்தது நிலைமை.

நான் சென்னையிலிருந்து ஊர் திரும்பி, வீட்டிற்கு வந்த ஆட்டோ டிரைவரிடம், "இங்கு(பெங்களூர்) கொரோனா தீவிரம் எப்படி இருக்கிறது?" என்று கேட்டேன். அதற்கு அவர், "நானும் ஒரு வருஷமா தேடிக்கொண்டிருக்கிறேன் மேடம், எங்க இருக்கு கொரோனா?" என்றாரே பார்க்கலாம். 

"என்னங்க இப்படி சொல்றீங்க? உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள், இப்படி கேட்கிறீர்களே?"

"இதுக்கு முன்னால வியாதி வந்து யாரும் சாகலையா? அவங்க கொரோனாவினால்தான் செத்தார்கள் என்று என்பது என்ன நிச்சயம்?" கடவுளை கண் முன் வரச்சொல் அப்போதுதான் நம்புவேன் என்பது போல கூறினார். மேலும் இது மருத்துவர்கள் பணம் சம்பாதிக்க செய்த சதி என்று அபாண்டமாக பழி கூறினார். 

"எல்லாத்தையும் முடக்கிப் போட்டு எங்கள பிச்சை எடுக்க வைத்ததுதான் மிச்சம் இன்னிக்கு கார்த்தாலேர்ந்து இதுதான் ரெண்டாவது சவாரி"  என்ற அவரின் ஆத்திரத்தைக் கூட புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் படித்தவர்கள் செய்யும் அட்டூழியம்..!

வீட்டில் சில பொருள்களை மாற்ற வேண்டியிருந்தது. என் மகன் ஆன் லைனில் தேடி ஒரு கடையைத் தேர்ந்தெடுத்திருந்தான்.   அந்த ஷோ ரூம் இருக்கும் சந்தில் ஒன்றிரண்டு பப்கள்(Pub) இருந்தன. அவற்றிலிருந்து இரைச்சலான இசை பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. தெரு முழுவதும் இளைஞர்கள்.. ஒன்றிரண்டு இளைஞிகளும்.. ஒருவரும் மாஸ்க் அணிந்திருக்கவில்லை. எல்லோரும் படித்து வேலையில் இருபவர்களாகத்தான் இருக்கும். இந்த நேரத்தில் பப்பிற்கு செல்ல வேண்டியது ரொம்ப அவசியமா?   

நடிகர் விவேக் மரணமடைந்தது மிகவும் வருத்தமளிக்கும் செய்திதான். ஆனால் அதற்காக அவருடைய இறுதி ஊர்வலத்தில் இத்தனை பேர்கள் கலந்து கொள்ள வேண்டுமா? இவர்களில் எத்தனை பேர்கள் தங்கள் உறவினர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டிருப்பார்கள்? இங்கிலாந்து ராணியின் கணவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முப்பது பேருக்குத்தான் அனுமதியாம். எம்.ஆர்.ராதா இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்று யோசித்துப் பார்க்கிறேன். 

இதற்கிடையில் மக்களை கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தாமல் அதனால்  பலன் ஏதும் கிடையாது என்பது போல மீம்ஸ்! இவர்களையெல்லாம் என்ன செய்தால் தேவலை? நல்ல புத்தியைக் கொடு கடவுளே என்று வேண்டிக் கொள்ளகிறேன். சப்பகோ சன்மதி தோ பகவான்!