ஸ்ரீராமநவமி உற்சவம்
என் சிறு வயதில் திருச்சி உறையூரில்
ஸ்ரீராமநவமி உற்சவம்
என் சிறு வயதில் திருச்சி உறையூரில்
அறியாமையும், அலட்சியமும்
பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நன்கு குறைந்திருந்த தீ நுண் கிருமி தொற்று மார்ச்சிலருந்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இப்போது பழைய தீவிரத்தை அடைந்துள்ளது. இதற்கு மக்களின் அறியாமை மட்டுமல்ல அரசியல் தலைவர்களின் அலட்சியமும்தான் காரணம்.
தேர்தல் அறிவித்து, நடத்தியது தவறு என்று கூற முடியாது. ஆனால் பிரச்சாரத்தை ஊடகங்கள் மூலம் மட்டுமே நடத்தியிருக்க வேண்டும். தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு வந்திருந்த மக்களில் பெரும்பான்மையோர் மாஸ்க் அணிந்திருக்கவில்லை, சமூக இடைவெளியா? அப்படி என்றால் என்ன? என்று கேட்கும்படியாகத்தான் இருந்தது நிலைமை.
நான் சென்னையிலிருந்து ஊர் திரும்பி, வீட்டிற்கு வந்த ஆட்டோ டிரைவரிடம், "இங்கு(பெங்களூர்) கொரோனா தீவிரம் எப்படி இருக்கிறது?" என்று கேட்டேன். அதற்கு அவர், "நானும் ஒரு வருஷமா தேடிக்கொண்டிருக்கிறேன் மேடம், எங்க இருக்கு கொரோனா?" என்றாரே பார்க்கலாம்.
"என்னங்க இப்படி சொல்றீங்க? உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள், இப்படி கேட்கிறீர்களே?"
"இதுக்கு முன்னால வியாதி வந்து யாரும் சாகலையா? அவங்க கொரோனாவினால்தான் செத்தார்கள் என்று என்பது என்ன நிச்சயம்?" கடவுளை கண் முன் வரச்சொல் அப்போதுதான் நம்புவேன் என்பது போல கூறினார். மேலும் இது மருத்துவர்கள் பணம் சம்பாதிக்க செய்த சதி என்று அபாண்டமாக பழி கூறினார்.
"எல்லாத்தையும் முடக்கிப் போட்டு எங்கள பிச்சை எடுக்க வைத்ததுதான் மிச்சம் இன்னிக்கு கார்த்தாலேர்ந்து இதுதான் ரெண்டாவது சவாரி" என்ற அவரின் ஆத்திரத்தைக் கூட புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் படித்தவர்கள் செய்யும் அட்டூழியம்..!
வீட்டில் சில பொருள்களை மாற்ற வேண்டியிருந்தது. என் மகன் ஆன் லைனில் தேடி ஒரு கடையைத் தேர்ந்தெடுத்திருந்தான். அந்த ஷோ ரூம் இருக்கும் சந்தில் ஒன்றிரண்டு பப்கள்(Pub) இருந்தன. அவற்றிலிருந்து இரைச்சலான இசை பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. தெரு முழுவதும் இளைஞர்கள்.. ஒன்றிரண்டு இளைஞிகளும்.. ஒருவரும் மாஸ்க் அணிந்திருக்கவில்லை. எல்லோரும் படித்து வேலையில் இருபவர்களாகத்தான் இருக்கும். இந்த நேரத்தில் பப்பிற்கு செல்ல வேண்டியது ரொம்ப அவசியமா?
நடிகர் விவேக் மரணமடைந்தது மிகவும் வருத்தமளிக்கும் செய்திதான். ஆனால் அதற்காக அவருடைய இறுதி ஊர்வலத்தில் இத்தனை பேர்கள் கலந்து கொள்ள வேண்டுமா? இவர்களில் எத்தனை பேர்கள் தங்கள் உறவினர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டிருப்பார்கள்? இங்கிலாந்து ராணியின் கணவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முப்பது பேருக்குத்தான் அனுமதியாம். எம்.ஆர்.ராதா இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்று யோசித்துப் பார்க்கிறேன்.
இதற்கிடையில் மக்களை கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தாமல் அதனால் பலன் ஏதும் கிடையாது என்பது போல மீம்ஸ்! இவர்களையெல்லாம் என்ன செய்தால் தேவலை? நல்ல புத்தியைக் கொடு கடவுளே என்று வேண்டிக் கொள்ளகிறேன். சப்பகோ சன்மதி தோ பகவான்!