அந்த 37 வருடங்கள்
ஆசிரியர் : பாக்கியம் ராமசாமி
குமுதத்தில் துணை ஆசிரியராக இருந்த திரு.ஜ.ரா.சுந்தரேசன் அவர்கள் அவருடைய இளமைக் காலத்தைப் பற்றி சுவைபட எழுதியிருக்கும் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த புத்தகம். அவருக்கே உரிய நகைச்சுவை பொங்கி வழிகிறது. பல இடங்களில் வாய் விட்டு சிரிக்கிறோம்.
பள்ளியிறுதி முடித்து விட்டு, சென்னை சென்று சொந்தமாக ஒரு பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும் என்ற அவரது ஆசைக்கு பெரிய அண்ணா முட்டுக்கட்டை போட்டதால் அவருடைய பள்ளியிலேயே ஆசிரியராக பணிபுரியத் தொடங்கிய அனுபவத்தை விவரிப்பதில் தொடங்குகிறது.
அவர் மூன்றாம் வகுப்பு ஆசிரியராக இருந்த பொழுது, ஒரு நாள் டிக்டேஷன் கொடுத்தாராம். லோகநாதன் என்னும் மாணவன், அழகான கையெழுத்தில் ஒரு பக்கம் முழுவதும் 'கண்டு,கண்டு, டிங்கி டிங்கி' என்று மட்டும் எழுதியிருந்தானாம். என்னடா இது பாஷை? என்று கேட்டதற்கு மற்ற பசங்கள், "அவன் இதுதான் சார் எழுதுவான்" என்றார்களாம். இப்படிப்பட்ட பையன் எப்படி இரண்டு வகுப்புகளை பாஸ் பண்ணினான் என்று சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை கேட்டதற்கு, "அவன் குடும்பத்தில் யாரும் படிக்கவில்லை, அவனாவது சீக்கிரம் படித்துவிட்டு வரட்டுமே" என்றார்களாம்.
சேலத்தில் தங்கியிருந்தபொழுது ஓட்டலில் அளவு சாப்பாடு, அரிசி சோறு பறிமாறும் முன் சோள சாதம் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று வற்புறுத்திய சர்வர் நாகராஜனைப் பற்றி தான் நடத்தி வந்த 'சுந்து நேசன்' பத்திரிகையில், 'சப்ளையர் நாகராஜனின் அட்டூழியம்! சோளச்சோறு சாப்பிட வேண்டுமென்று கட்டாயப் படுத்துகிற கசடா!டேய் நாகராஜா உன் லீலைகளை நிறுத்திக் கொள். இல்லாவிட்டால் நீ உன் மடியில் பீடிக்கட்டு மறைத்து வைத்திருக்கும் ரகசியம் அம்பலமாகிவிடும். கபர்தார்! உஷார்! என்றெல்லாம் எழுதுவாராம். அதென்ன சுந்து நேசன் என்று தோன்றுகிறதா?
லக்ஷ்மிகாந்தன் நடத்திய இந்து நேசன் என்னும் பத்திரிகை பரபரப்பாக விற்பனை ஆனதால் தான் நடத்திய கையெழுத்துப் பத்திரிகைக்கு 'சுந்து நேசன்' என்று பெயர் கொடுத்திருந்தாராம். லக்ஷ்மிகாந்தன் இறந்தபிறகும் தொடர்ந்து வந்து கொண்டிருந்த அந்த பத்திரிகையில் மாஜி ஆசிரியர் லக்ஷ்மிகாந்தன் என்று இருந்ததால், மாஜி என்பதற்கு என்ன பொருள் என்று தெரியாமலேயே தன்னுடைய சுந்து நேசனிலும் மாஜி ஆசிரியர் சுந்து என்றே குறிப்பிட்டாராம்.
ஊரில் சில ஓட்டல்கள் இருந்ததாம். அத்ற்கெல்லாம் அந்த விலாஸ்,இந்த விலாஸ் என்ற பெயரெல்லாம் கிடையாது. ஓட்டல் அதிபரின் பழக்க வழக்கத்தை அனுசரித்து அழுக்கைய்யர் கடை, சிகரட்டைய்யர் கடை என்றுதான் பெயராம். எந்த ஓட்டலில் அழுக்கு அதிகமாக இருக்கிறதோ அங்கு ருசி சிறப்பாக இருக்குமாம்.
சிறு வயதில் அவர் நட்பாக இருந்த கன்னடம் பேசும் ஒரு நெசவாளரின் மகனோடு பழகியதுதான் பின்னாளில் அப்புசாமி கதைகளில் பீமாராவ் பாத்திரத்தை படைக்க உதவியது போலும்.
பிறகு சென்னைக்கு வந்து டாக்டருக்கு படித்துக் கொண்டிருந்த தன் இரண்டாவது அண்ணனோடு தங்கிய வீட்டில் இருந்த சேஷய்யர் என்பவர் கால் அலம்பும் வைபவத்தை விவரித்திரிப்ப்தை படித்துதான் ரசிக்க வேண்டும்.
ஆனால் அந்த வீட்டில் இவர் திண்ணையில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருக்கும்பொழுது பேசிக் கொண்டே வரும் பெண்கள்,"எழுத்தாளர் கதை எழுதிக் கொண்டிருக்கிறார்" என்று சட்டென்று தங்கள் குரலை தழைத்துக் கொள்வார்களாம்.
அண்ணன் சிபாரிசில் ஒரு ரேடியோ கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த அவரிடம் அவர் முதலாளி "நீதான் பெரிய எழுத்தாளனாச்சே, என் மனைவிக்கு கடிதம் எழுத உதவி செய், சும்மா ஜிலுஜிலுன்னு எழுதணும்" என்று கேட்டாராம். இப்படி பா சம்பவங்கள், நான் ஒன்றிரண்டைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன்.
எல்லாம் சரி, 'அந்த 37 வருடங்கள் என்று பெயர்', 37 வருடங்கள் குமுதத்தில் பணி புரிந்ததுதான் எனக்கு எழுத்தாளன் என்ற அந்தஸ்து கிடைத்தது என்றாலும், ஒரு சினிமா விமர்சனத்தில் தாங்க்ஸ் என்று எழுதியிருந்த ஒரு வார்த்தை குமுதம் எடிட்டர் திரு.எஸ்.ஏ.பி. அவர்களை கோர்ட்டுக்கு இழுத்தது என்று ஒரே ஒரு சம்பவத்தைதான் குறிப்பிட்டிருக்கிறாரே தவிர வேறு குமுதம் அனுபவங்கள் இல்லையே என்று தோன்றுகிறது. இருந்தாலும் படித்து,ரசித்து, அனுபவிக்கக்கூடிய புத்தகம்.
கனடாவில் பிப்ரவரி 2ஆம் தேதியை
