கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, March 12, 2026

கனடா டைரி

 கனடா டைரி

நம் நாட்டில் பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் என்னவோ நம் நாட்டில் மட்டும்தான் மூட நம்பிக்கைகள் அதிகம், மேலை நாடுகளில் மூட நம்பிக்கைகளே கிடையாது என்பார்கள். இது "வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்'' என்பது போன்ற ஒரு மூட நம்பிக்கைதான். உண்மையில் எல்லா நாடுகளிலும் இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள் நிலவத்தான் செய்கின்றன. 

கனடாவில் பிப்ரவரி 2ஆம் தேதியை 'க்ரெளண்ட்ஹாக் டே(groundhog day) எங்கிறார்கள். groundhog என்பது ஒரு நாலுகால் பிராணி. ஹைபர்நேஷன் எனப்படும் குளிர்கால தூக்கத்தில் இருக்கும் க்ரெளண்ட்ஹாக் அன்றைக்கு முழித்துக் கொண்டு வெளியே வருமாம். வெளியே வந்த அது தன் நிழலைப் பார்த்தால் குளிர்காலம் இன்னும் ஆறு வாரங்களுக்கு நீடிக்கும் என்றும், அது தன் நிழலைப் பார்க்காவிட்டால் வசந்தம் விரைவில் வந்து விடும் என்றும் ஒரு நம்பிக்கையாம். இந்த வருடம் க்ரௌண்ட்ஹாக் தன் நிழலை பார்க்காததால் இந்த வருடம் வசந்தம் விரைவில் வந்து விடும் என்கிறார்கள். க்ரௌண்ட்ஹாக் வெளியே வருவதை கண்காணிக்க ஒரு குழுவே உண்டாம்.

இதை நான் தவறுதலாக என்னுடைய சென்ற பதிவில் எழுதிவிட, அதைப் படித்த கமலா ஹரிஹரன், தன்னுடைய கருத்தில், "அழகர் (வைகை)ஆற்றில் இறங்கும் வைபவத்தன்று பச்சை நிற பட்டு உடுத்திக் கொணிடிருந்தால் வரும் வருடம் செழிப்பாக இருக்கும் என்று ஒரு நம்பிக்கை உண்டு என்று குறிப்பிட்டிருந்தார். இப்போதெல்லாம் எல்லா வருடங்களும் பச்சை பட்டாடையே உடுத்தி விடுகிறார்களாம் என்றும் கூறியிருந்தார். அவருக்கு நன்றி.

இந்த வருடம் நிஜமாகவே வெய்யில் சீக்கிரம் துவங்கி விட்டதோ என்றுதான் தோன்றியது. நேற்று பளீரென்று வெய்யில் அடிக்க. "ஆஹா! இன்னிக்கு வெதர் பிரமாதம்! நீ கண்டிப்பாக கொஞ்ச நேரம் வெளியில் நிற்கத்தான் வேண்டும்" என்று என் மகள் என்னை வற்புறுத்தி வெளியில் நிற்க வைத்தாள். அக்கம் பக்கத்து குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தன. ஆனால் இன்று அதிகாலையிலிருந்து மழை. இதுவரை(பிற்பகல் 2:30) சூரிய பகவான் தலைகாட்டவில்லை. ஹூம்!

இன்று என் பேத்தி என்னிடம்,"இந்தியாவில் குளிர்காலத்தில் எவ்வளவு டெம்பரேச்சர் இருக்கும்?" என்று கேட்டாள். நான், "20 டிகிரியிலிருந்து 23 வரை செல்லும் என்றேன்."

"வாட் அபவுட் சம்மர்?"

"அது 40, 42 வரை செல்லும்"

"அப்போ நீ லீவ் போட்டு விடுவாயா?"

"லீவா..? சம்மரில் சென்னைக்கு வா, டி.நகருக்கு அழைத்துச் செல்கிறேன். ஜே ஜேன்னு மக்கள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருப்பார்கள் அதுதான் இந்தியா" என்றேன்.

 


இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு சம்பிரதாய பஜனைக்குச் சென்றிருந்தோம். முடித்து விட்டு மற்றும் சில நண்பர்களும் சேர்ந்து கொண்டார்கள். எல்லோரும் ஐஸ்க்ரீம் சாப்பிட முடிவெடுத்தார்கள். ஓட்மில்க் ஐஸ்க்ரீமாம்(ருசி அப்படி ஒன்றும் பிரமாதமில்லை) ஏற்கனவே குளிர், இதில் ஐஸ்க்ரீம் வேறு சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தால் பனி பொழிய தொடங்கி விட்டது. நான் நிஜமாகவே நடுங்க ஆரம்பித்து விட்டேன். காரில் என் மகளை பின் சீட்டில் உட்காரச் சொல்லி விட்டு, நான் முன் சீட்டுக்கு வந்தேன். அதில் சீட் வார்மர் இருக்கும். அந்த சீட்டில் உட்கார்ந்து வந்த பிறகுதான் என் நடுக்கம் குறைந்தது.

என் மகள் தொலைகாட்சியில் ஒரு ஆஸ்திரேலியன் சீரியலை விரும்பி பார்ப்பாள் அதன் பெயர் 'Married at first sight'. திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஆண்களும், பெண்களும் தங்கள் விருப்பங்களை தெரிவித்து விண்ணப்பிக்க வேண்டும். அவற்றை பரிசீலிக்கும் பேனல் யார், யாருக்கு பொருத்தமானவர்களாக இருப்பார்கள் என்று கருதுகிறதோ அந்த ஜோடிகளை முதலில் பேசச் சொல்கிறது. பேசி, பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்ளலாம். அப்படி திருமணம் செய்து கொண்டவர்கள் மூன்று மாதங்கள் கண்டிப்பாக சேர்ந்து வாழ வேண்டும், அதன் பிறகும் விருப்பமிருந்தால் திருமண பந்தத்தை தொடரலாம் அல்லது முறித்துக் கொள்ளலாம். இந்த மூன்று மாதங்களில் அந்த ஜோடிகளுக்கு அவ்வப்பொழுது விருந்து, வெளியே அழைத்துச் செல்வது போன்றவைகளும், அந்த ஜோடிகளின் அனுபவங்களும் கேட்டு அறியப் படுகின்றன. பெரும்பான்மையான ஜோடிகள் சேர்ந்து வாழ முடிவெடுக்க, ஒரு ஜோடி மட்டும் ஒருவர் மீது மற்றவர் குற்றம் சாட்டி பிரிய முடிவெடுத்தனர்.

நல்ல கூத்து என்று தோன்றுகிறதோ? இப்படிப்பட்ட விஷயங்கள் நம் நாட்டிற்குள்ளும் வராது என்று சொல்ல முடியாது.  

 

Wednesday, March 11, 2026

அந்த 37 வருடங்கள் - நூல் விமர்சனம்

அந்த 37 வருடங்கள்

ஆசிரியர் : பாக்கியம் ராமசாமி

குமுதத்தில் துணை ஆசிரியராக இருந்த திரு.ஜ.ரா.சுந்தரேசன் அவர்கள் அவருடைய இளமைக் காலத்தைப் பற்றி சுவைபட எழுதியிருக்கும் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த புத்தகம். அவருக்கே உரிய நகைச்சுவை பொங்கி வழிகிறது. பல இடங்களில் வாய் விட்டு சிரிக்கிறோம். 

பள்ளியிறுதி முடித்து விட்டு, சென்னை சென்று சொந்தமாக ஒரு பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும் என்ற அவரது ஆசைக்கு பெரிய அண்ணா முட்டுக்கட்டை போட்டதால் அவருடைய பள்ளியிலேயே ஆசிரியராக பணிபுரியத் தொடங்கிய அனுபவத்தை விவரிப்பதில் தொடங்குகிறது.

அவர் மூன்றாம் வகுப்பு ஆசிரியராக இருந்த பொழுது, ஒரு நாள் டிக்டேஷன் கொடுத்தாராம். லோகநாதன் என்னும் மாணவன், அழகான கையெழுத்தில் ஒரு பக்கம் முழுவதும் 'கண்டு,கண்டு, டிங்கி டிங்கி' என்று மட்டும் எழுதியிருந்தானாம். என்னடா இது பாஷை? என்று கேட்டதற்கு மற்ற பசங்கள், "அவன் இதுதான் சார் எழுதுவான்" என்றார்களாம். இப்படிப்பட்ட பையன் எப்படி இரண்டு வகுப்புகளை பாஸ் பண்ணினான் என்று சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை கேட்டதற்கு, "அவன் குடும்பத்தில் யாரும் படிக்கவில்லை, அவனாவது சீக்கிரம் படித்துவிட்டு வரட்டுமே" என்றார்களாம்.

சேலத்தில் தங்கியிருந்தபொழுது ஓட்டலில் அளவு சாப்பாடு, அரிசி சோறு பறிமாறும் முன் சோள சாதம் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று வற்புறுத்திய சர்வர் நாகராஜனைப் பற்றி தான் நடத்தி வந்த 'சுந்து நேசன்' பத்திரிகையில், 'சப்ளையர் நாகராஜனின் அட்டூழியம்! சோளச்சோறு சாப்பிட வேண்டுமென்று கட்டாயப் படுத்துகிற கசடா!டேய் நாகராஜா உன் லீலைகளை நிறுத்திக் கொள். இல்லாவிட்டால் நீ உன் மடியில் பீடிக்கட்டு மறைத்து வைத்திருக்கும் ரகசியம் அம்பலமாகிவிடும். கபர்தார்! உஷார்!  என்றெல்லாம் எழுதுவாராம். அதென்ன சுந்து நேசன் என்று தோன்றுகிறதா?

லக்ஷ்மிகாந்தன் நடத்திய இந்து நேசன் என்னும் பத்திரிகை பரபரப்பாக விற்பனை ஆனதால் தான் நடத்திய கையெழுத்துப் பத்திரிகைக்கு 'சுந்து நேசன்' என்று பெயர் கொடுத்திருந்தாராம். லக்ஷ்மிகாந்தன் இறந்தபிறகும் தொடர்ந்து வந்து கொண்டிருந்த அந்த பத்திரிகையில் மாஜி ஆசிரியர் லக்ஷ்மிகாந்தன் என்று இருந்ததால், மாஜி என்பதற்கு என்ன பொருள் என்று தெரியாமலேயே தன்னுடைய சுந்து நேசனிலும் மாஜி ஆசிரியர் சுந்து என்றே குறிப்பிட்டாராம். 

ஊரில் சில ஓட்டல்கள் இருந்ததாம். அத்ற்கெல்லாம் அந்த விலாஸ்,இந்த விலாஸ் என்ற பெயரெல்லாம் கிடையாது. ஓட்டல் அதிபரின் பழக்க வழக்கத்தை அனுசரித்து அழுக்கைய்யர் கடை, சிகரட்டைய்யர் கடை என்றுதான் பெயராம். எந்த ஓட்டலில் அழுக்கு அதிகமாக இருக்கிறதோ அங்கு ருசி சிறப்பாக இருக்குமாம்.

சிறு வயதில் அவர் நட்பாக இருந்த கன்னடம் பேசும் ஒரு நெசவாளரின் மகனோடு பழகியதுதான் பின்னாளில் அப்புசாமி கதைகளில் பீமாராவ் பாத்திரத்தை படைக்க உதவியது போலும்.

பிறகு சென்னைக்கு வந்து டாக்டருக்கு படித்துக் கொண்டிருந்த தன் இரண்டாவது அண்ணனோடு தங்கிய வீட்டில் இருந்த சேஷய்யர் என்பவர் கால் அலம்பும் வைபவத்தை விவரித்திரிப்ப்தை படித்துதான் ரசிக்க வேண்டும்.

ஆனால் அந்த வீட்டில் இவர் திண்ணையில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருக்கும்பொழுது பேசிக் கொண்டே வரும் பெண்கள்,"எழுத்தாளர் கதை எழுதிக் கொண்டிருக்கிறார்" என்று சட்டென்று தங்கள் குரலை தழைத்துக் கொள்வார்களாம்.

அண்ணன் சிபாரிசில் ஒரு ரேடியோ கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த அவரிடம் அவர் முதலாளி "நீதான் பெரிய எழுத்தாளனாச்சே, என் மனைவிக்கு கடிதம் எழுத உதவி செய், சும்மா ஜிலுஜிலுன்னு எழுதணும்" என்று கேட்டாராம். இப்படி பா சம்பவங்கள், நான் ஒன்றிரண்டைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன். 

எல்லாம் சரி, 'அந்த 37 வருடங்கள் என்று பெயர்', 37 வருடங்கள் குமுதத்தில் பணி புரிந்ததுதான் எனக்கு எழுத்தாளன் என்ற அந்தஸ்து கிடைத்தது என்றாலும், ஒரு சினிமா விமர்சனத்தில் தாங்க்ஸ் என்று எழுதியிருந்த ஒரு வார்த்தை குமுதம் எடிட்டர் திரு.எஸ்.ஏ.பி. அவர்களை கோர்ட்டுக்கு இழுத்தது என்று ஒரே ஒரு சம்பவத்தைதான் குறிப்பிட்டிருக்கிறாரே தவிர வேறு குமுதம் அனுபவங்கள் இல்லையே என்று தோன்றுகிறது. இருந்தாலும் படித்து,ரசித்து, அனுபவிக்கக்கூடிய புத்தகம்.