கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, August 29, 2022

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று. 


நான் கனடா சென்று நாலாவது மாதத்தில் என் மகன் வயிற்று பேத்திக்கு ஆண்டு நிறைவு வந்ததால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை.  குழந்தைக்கு முடி காணிக்கை கொடுப்பதற்காவது நான் வரும் வரை காத்திருக்க சொன்னேன். 

எங்கள் குடும்பத்தில் முதல் மொட்டை ஒரு குறிப்பிட்ட கோவிலில்தான் அடிக்க வேண்டும் என்னும் பழக்கம் கிடையாது. நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு திருப்பதியில் முதலில் முடியிறக்கினோம். அதனால் பேத்திக்கும் அங்கேயே முடியிரக்கலாம் என்று தோன்றியது. 

என் மகன் நான் அங்கிருக்கும் பொழுதே,"நீ இங்கே வந்தவுடன் திருப்பதி சென்று வந்து விடலாம், நாள் பார்த்து சொல் நான் புக் பண்ணி விடுகிறேன்" என்றான். ஆனால் நான் பார்த்து சொன்ன நாட்கள் அவர்களுக்கு அலுவலகத்தில் பிஸியான நாட்களாக இருந்தது. 

புரட்டாசியில் முதல் மொட்டை அடிக்க மாட்டார்கள். பெண் குழந்தை என்பதால் செவ்வாய், வெள்ளி நோ! சனி,ஞாயிறில் திருப்பதியில் கும்பல் அதிகம் இருக்கும். மகனுக்கும், மருமகளுக்கும் அலுவலகத்தில் விடுமுறை எடுக்க முடிய வேண்டும், மருமகளின் மாதாந்திர அசௌகரியத்தை பார்க்க. வேண்டும். 21.8.22, திங்கள் கிழமை எல்லாவற்றிர்க்கும் ஈடு கொடுத்தது. 

மகன் புக் செய்த டிராவல் ஏஜெண்ட் ஞாயிறு இரவு 11:45க்கு டயோட்டா இடியாஸ் காரில் எங்களை பிக் அப் செய்தார்.  விடியல் காலை 4:30க்கு கீழ் திருப்பதியில் ஒரு ஹோட்டலில் எங்களை இறக்கி விட்டு எங்களுக்கு குளித்து ரெடியாக ஒரு மணி நேரம் தந்தார்.

நாங்கள் நேராக மலையேறி, குழந்தைக்கு மொட்டை அடித்து, சுவாமி தரிசனத்தையும் முடித்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் முதலில் அலமேலுமங்காபுரம் சென்றோம். அங்கு அப்போது நடை அமைத்திருந்தார்கள். 7:30க்கு அஷ்ட தள பத்மார்ச்சனை சேவைக்கு ரூ.300க்கு டிக்கெட் வாங்கினால் அம்மனுக்கு முன்னால் உட்கார வைப்பார்கள் என்றதால் அந்த சேவைக்கான டிக்கெட் வாங்கி தரிசித்தோம். 

பின்னர் காலை உணவை முடித்துக் கொண்டு மேலை சென்ற பொழுது 10:30 ஆகி விட்டது. அங்கே கும்பலான கும்பல். குழந்தைக்கு மொட்டை அடித்துக் கொண்டு வருவதற்கு 12 மணியாகி விட்டது. பின்னர் முன்னூறு ரூபாய் டிக்கெட் வரிசை துவங்கும் இடத்தில் எங்களை இறக்கி விட்டார். 

செல்ஃபோன் அனுமதிக்க மாட்டார்கள் என்று தெரியும். ஸ்மார்ட் வாட்சிற்கும் அனுமதி இல்லை என்பதை முன்னரே கூறி விட்டதால் என் மகன், மருமகள் இருவரும் தங்கள் ஸ்மார்ட் வாட்சுகளை கட்டிக்கொண்டு வரவில்லை. ஆனால் மெட்டல் ஸ்டார்ப் வாட்சுகளுக்கும் அனுமதி இல்லை என்றார்கள். அதனால் எங்கள் கை கடிகாரங்களை காரிலேயே வைத்தோம்.

அதே போல் டிரஸ் கோடும் கொடுத்திருந்தார்கள். ஆண்கள் என்றால் வேஷ்டி, சட்டை அல்லது அங்கவஸ்திரம், பெண்கள் என்றால் புடவை அல்லது துப்பட்டாவோடு சூடிதார். என் மருமகள் துப்பட்டாவை மறந்து விட்டாள். மறுபடியும் காருக்குச் சென்று எடுத்து வர வேண்டுமோ? என்று திகைத்தோம். வாயில் காப்பானாகிய பெண், "இங்கே கடையிலேயே, துப்பட்டா விற்கிறார்கள், வாங்கிக் கொள்ளுங்கள்" என்றாள். அங்கிருந்த கடைகளில் கலர் கலராக  துப்பட்டாக்கள் தொங்கிக் கொண்டிருந்தன. ஒன்று வாங்கிக் கொண்டாள். நல்ல வியாபாரம்! நாங்கள் ஆளுக்கு ஒரு மாஸா குடித்து விட்டு, நடந்து,  நடந்து ஒரு ஹாலை அடைந்து, அங்கு எங்கள் அடையாள அட்டை, டிக்கெட் காண்பித்து மீண்டும் நடந்துட நடந்து நடந்து 26ம் எண் கூண்டில் சென்று அமர்ந்து பொழுது மணி ஒன்று. பசி மற்றும் நெரிசலில் அழத்தொடங்கிய குழந்தைக்கு செரிலாக் கொடுக்கலாம் என்று அங்கிருந்த பொருள்களை ஸ்கேன் செய்யும் இடத்திற்கு அருகில் இருந்த நாற்காலிகளில் அமர்ந்து கொண்டோம், அப்போது அங்கு வந்த ஒரு அதிகாரி," இங்கு உட்காரக் கூடாது என்று விரட்டினார்.  வரிசையில் எங்களுக்குப் பின்னால் இருந்த பெண்மணி, இரண்டு பிஸ்கெட்டுகளைத் தந்தார். அதை சாப்பிட்ட குழந்தை உறங்கியது.  

திருப்பதி சந்திரனுக்கு உரிய தலம் என்பதால் அங்கு திங்கள் கிழமை செல்வது விசேஷம், அதோடு ஏகாதசியும் சேர்ந்து கொண்டதாலோ என்னவோ கும்பல் கொஞ்சம் அதிகம்தான். எப்படியோ பெருமாளை சேவித்து வெளியே வந்த பொழுது மணி நான்கு. மலை மேல் இருந்த உணவகங்களில் சாப்பாட்டு கடை முடிந்து விட்டது. "கீழே ஹோட்டல் மயூராவிற்குச் செல்லுங்கள், டிபன் கிடைக்கும் என்றேன்".  மயூராவின் டொமாடோ ஆம்லெட்டிற்கு மனம் ஏங்கியது.  ஆனால் அந்த டிரைவரோ," போகும் வழியில் ஹை வேயில்  நல்ல ஹோட்டலில் சாப்பிடலாம்" என்றார். 

கீழே இறங்கும் பொழுதே நான் உறங்க ஆரம்பித்து விட்டேன். ஹை வேயில் சரவணபவனில் சப்பாத்தி சாப்பிட்டு விட்டு மீண்டும் நல்ல உறக்கம். வீடு வந்து சேர்ந்த பொழுது இரவு மணி பதினொன்று. எப்போதாவது புயல் அடிக்கும் ஒரு நாள் திருப்பதி சென்றால் நல்ல தரிசனம் கிட்டலாம். முன்பெல்லாம் ஒரு முன்னூறு ரூபாய் டிக்கெட்டிற்கு இரண்டு லட்டுகள் தருவார்கள். இப்போது ஒரு டிக்கெட்டிற்கு ஒரு லட்டுதான், அதுவும் அளவும் குறைந்து விட்டது. சுவை? அது குறைந்து பல ஆண்டுகள் ஆகி விட்டதே.

சரி, தலைப்பை நியாயப்படுத்தவே இல்லையே? என்கிறீர்களா? இதோ வந்து விட்டேன். 

பெரிய பணக்காரர்கள் ஆடம்பரமாக செய்யும் பூஜையில் படைக்கப்படும் உயர் ரக உணவை ஏற்காமல் அருகில் ஒரு ஏழை படைக்கும் கூழை விரும்பி கடவுள் உண்பதாக திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம், கதைகள் படித்திருக்கிறோம். மகாபாரதத்தில் கூட துரியோதனின் அரண்மனையை தவிர்த்து விட்டு, விதுரரின் வீட்டில்தான் கிருஷ்ணர் தங்கியதாக வரும். 

எங்கள் வீட்டில் என் மருமகள் தன் குழந்தைக்கு சிறந்த உணவை கொடுக்க வேண்டும் என்பதற்காக எல்லோரிடமும் விசாரித்து, யூ டியூபில் தேடி பார்த்து பார்த்து தயாரித்து கொடுக்கும் உணவை என் பேத்தியை சாப்பிட வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. ஆனால் அதை பார்த்துக் கொள்ள வரும் பெண்மணி கொண்டு வரும் உணவை, "ஐயோ இது பேடா, இது காரா.." என்று அந்தப் பெண்மணி தடுத்தாலும் எந்த பிகுவும் இல்லாமல் எடுத்து உண்கிறது.