கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, September 24, 2023

போனேனே ஊர்கோலம் பேத்தியோடு – 4 (அரங்கன் ஆலயம்)

 போனேனே ஊர்கோலம் பேத்தியோடு – 4 (அரங்கன் ஆலயம்)

படம் உபயம் கூகுள் 

என் பேத்தியோடு திருச்சி கோவில்களுக்குச் சென்றதை மூன்று பகுதிகளாக எழுதினேன். நிறைவுப் பகுதியானா ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்றதை எழுதுவதற்கு ஏனோ இத்தனை நாட்களாகி விட்டது

ஸ்ரீரங்கத்தில் பல வருடங்கள் இருந்திருந்தாலும் ஒவ்வொரு முறை அந்தக் கோவிலுக்குச் செல்லும்பொழுதும் மனம் விகசிக்கும். எத்தனையெத்தனை மகான்கள் இங்கு வந்து அரங்கனை தொழுதிருக்கிறார்கள்! இங்குதானே ஆண்டாளும், திருப்பாணாழ்வாரும் அரங்கனோடு கலந்தார்கள்! பன்னிரு ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில் அல்லவா? இங்கிருப்பது சாட்சாத் ராமபிரானின் முன்னோர்கள் வழிபட்ட, அவர்களின் குலதெய்வம் அல்லவா? என்றெல்லாம் நினைவுகள் அலைமோதும். என் பேத்தியோ முதல்முறையாக திருவரங்கம் வருகிறாள்.


இதை எடுத்தது என் பேத்தி 

நாங்கள் முதலில் 21 கோபுரங்களை தரிசித்து, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, கருடாழ்வாரை தரிசித்தோம். பிரும்மாண்டமான கருடாழ்வாரை பார்த்த அவள், “ஆ..! இவ்ளோ பெரிய கருடனா?” என்று வியந்தாள். “ஆமாம் இங்கு எல்லாமே பெரிசு. பெரிய கோவில், பெரிய பெருமாள், பெரிய திருவடி” என்றேன். அங்கிருந்த கோவில் யானையிடம் ஆசி வாங்க வேண்டும் என்றாள். ஆசி வாங்கிக் கொண்டு, கட்டண சேவைக்காக நுழைவு சீட்டு வாங்க காத்திருந்த நேரத்தில் அவளுக்கு ஸ்ரீரங்கம் கோவில் தல புராணம் சுருக்கமாக சொன்னேன். அப்போது பெருமாளுக்கு தைலக்காப்பு சாற்றியிருந்ததால் முகமண்டலம் மட்டுமே தரிசனம் செய்ய முடிந்தது. சன்னதியை விட்டு வெளியே வந்தவள் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டிருந்தாள். என்ன காரணம் என்று கேட்டதற்கு, “ஐ குட் நாட் சீ த ஸ்னேக், தே புஷ்ட் மி” என்றாள். “நெக்ஸ்ட் டைம் பார்க்கலாம்” என்று கூறி சமாதானம் செய்து விட்டு, தாயார் சன்னதிக்ககுச் சென்றோம்.

தாயார் சன்னதியில் பூ வாங்கிக் கொண்டோம். அங்கிருந்த வயது முதிர்ந்த அர்ச்சகர் ஒருவர், இவளிடமிருந்து பூவை வாங்கிக்கொண்டு, “இங்கு மூன்று பேர்கள் இருக்கிறார்கள், ரங்கநாயகி, பூமாதேவி, மஹாலக்ஷ்மி, இந்த மூவரில் யாருக்கு இந்த பூவை சாற்ற வேண்டும்? ஒன்? டூ? திரி?” என்றார். அவள் டூ என்றதும், மத்தியில் இருந்த தாயாருக்கு சாற்றி, எங்களுக்கு பிரசாதம் கொடுத்தார்.

*அங்கிருந்து கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றிய இடத்திற்கு வந்ததும், கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றிய பொழுது அவர் ராமாயணத்தில் நரசிம்ம அவதாரத்தை விவரித்திருந்த விதம் சரியில்லை என்று அங்கிருந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் கூறினாலும் மேட்டழகியசிங்கராகிய நரசிம்மர் கர்ஜனை செய்ததால் ஸ்ரீவைஷ்ணவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள்” என்று நான் சொன்னதும், “அரங்கேற்றம் என்றால் என்ன?” என்று கேட்டாள். “புக் பப்ளிஷ் பண்ணி, அதை லான்ச் பண்ணுவது” என்றேன். உடனே, எனக்கு அந்த நரசிம்மரை பார்க்கணும்” என்றாள்.

அந்த படிகளில் ஏறிச் சென்றால் அவரை தரிசிக்கலாம். நீ போய் தரிசனம் செய்து விட்டு வா. நேற்று மலைக்கோட்டையில் ஏறியதில் எனக்கு கால் வலிக்கிறது. நான் கீழே நின்றபடியே தரிசித்துக் கொள்கிறேன்” என்று அவளை மேலே அனுப்பினேன். மேட்டழகிய சிங்கரை தரிசித்துவிட்டு வந்தவள், “வென் ஐ ரோட் அ புக் அண்ட் பப்ளிஷ், யூ ஷுட் ஹெல்ப் மீ” என்று அவரிடம் சொல்லிவிட்டு வந்தேன்” என்றவள் தொடர்ந்து, “வில் ஹீ அண்டர்ஸ்டாண்ட் இங்க்லிஷ்? பிகாஸ் ஐ பிரேட் டு ஹிம் இன் இங்கிலிஷ் ஒன்லி” என்றாளே பார்க்கலாம்.

எனக்கு சிரிப்பு வந்தது. “தமிழ் கடவுள், சமஸ்கிருத கடவுள், என்றெல்லாம் நாம் பிரித்து பேசும் பொழுது கடவுளுக்கும் இப்படித்தான் சிரிப்பு வருமோ?  

*கம்பர் ராமாயணத்தை திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்ததற்கு முன் அவருக்கு ஏற்பட்ட தடைகள் பற்றியெல்லாம் நான் கூறவில்லை.






 "