கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, December 31, 2021

திருவெம்பாவை - 16

திருவெம்பாவை - 16

முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை
ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

முன்னொரு பாடலில் பாவைப் பெண்கள் நீராடும் பொய்கை அவர்களுக்கு சிவபெருமானையும், பிராட்டியையும் நினைவு படுத்தியது போல இந்தப் பாடலில் மழை வருவதற்கான சூழல் அவர்களுக்கு பிராட்டியை நினைவு படுத்துகிறது.

கருநீலக்கடலை சுருங்கியது போல திரண்டிருக்கும் கார் மேகங்கள் பிராட்டியையும், மழை வரும் முன் பளிச்சிடும் மின்னல் அவளுடைய மெல்லிய இடையையும், இடியோசை அம்பிகை காலில் அணிந்திருக்கும் பொற்சிலம்பு எழுப்பும் இசையையும்,  வானில் தோன்றும் வானவில் வளைந்திருக்கும் அவளது புருவத்தையும், நினைவூட்டுவதாக கூறும் அப்பெண்கள் மழையிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறார்கள். பெண்கள் பாவை நோன்பு நோர்ப்பது நல்ல கணவனை அடைந்து தங்கள் வாழ்க்கை செழிக்க வேண்டும் என்பதற்காகவும், நாட்டில் நல்ல மழை பொழிந்து சமுதாயம் செழிப்பதற்காகவும்தான். எனவே அந்த மழை எப்படி பொழிய வேண்டும் என்றால் தன் கணவனை பிரியாத பார்வதி பக்தர்களுக்கு அருள வேண்டும் என்னும் பொழுது அவருக்கு முன்னால் ஓடி வந்து அருளுவது போல எங்களுக்கு தேவையான நேரத்தில் காத்து நிற்கத் தேவையில்லாமல் பொழிய வேண்டும்.

Thursday, December 30, 2021

திருவெம்பாவை - 15

திருவெம்பாவை - 15


ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.

இந்தப் பாடல் குளத்தில் நீராடும் பெண்கள் தங்கள் தோழி ஒருத்தியின் பக்தியைப் பற்றி பேசுவதாக அமைந்திருக்கிறது. சாதாரணமாகவே எந்த ஒரு துறையிலும் முன்னேற விரும்புகிறவர்கள் அந்த துறையில் சிறப்பாக  விளங்குகிறவர்களின் செயல்பாடுகளை முன்மாதிரியாக கொள்வதுதானே வழக்கம்.

அழகிய ஆபரணங்கள் பூண்டிருக்கும் கொங்கைகளை உடைய பெண்களே, அதோ அங்கே வரும் நம் தோழி சிவபெருமானின் நினைவிலேயே வாழ்பவள். ஒரு முறை சிவனே என்பாள். மீண்டும் மீண்டும் பல முறைகள் எம்பெருமான் எம்பெருமான் என்றே மன மகிழ்ச்சியோடு கண்களில் நீர் வழிய உணர்ச்சி வசப்பட்டு பிச்சியைப் போல பிதற்றுவாள். இவ்வுலகை மறந்து பூமியில் கால் பாவாமல் பேரின்பப் பெருவெளியில் மிதப்பாள். அந்தப் பெண்ணை ஆட்கொண்டு இப்படிப்பட்ட நிலைக்கு ஆளாக்கிய வித்தகனாகிய சிவபெருமானின் திருவடிகளை நாமும் பாடி அழகான இந்தப் பொய்கையில் நீராடலாம் வாருங்கள்.

Tuesday, December 28, 2021

திருவெம்பாவை - 14

திருவெம்பாவை - 14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

மற்றுமொரு அழகான பாடல். பாவை நோன்பு நோர்க்கும் பெண்களைப் பற்றிய வர்ணனை. அந்தப் பெண்கள் பொய்கையில் குடைந்து நீராடும் பொழுது அவர்கள் காதில் அணிந்திருக்கும் குழைகள் ஆடுகின்றன, உடலில் அணிந்திருக்கும் அணிகலன்கள் ஆடுகின்றன, கூந்தல் அசைகிறது, அதில் அவர்கள் சூடியிருக்கும் மலர்கள் அமைகின்றன, அந்த மலர்களை மொய்க்கும் வண்டுகளும் சுற்றிச் சுற்றி ஆடுகின்றன. இப்படி நீராடும் நாங்கள் வேதத்தின் பொருளாக விளங்கும் சிவபெருமானை துதித்து, உருவமற்ற சோதியாக உயர்ந்த அவர் நமக்காக ஒரு உருவத்தை எடுத்துக் கொண்டு கொன்றை மாலை அணிந்து காட்சியளிக்கிறாரே அவரின் திறத்தையும், நன்மை, தீமைகளை பிரித்து காட்டி நம்மை உயரச்செய்யும் உமையாளின் பாதகமலங்களையும் பாடி நீராடுகிறோம்.

திருவெம்பாவை - 13

திருவெம்பாவை - 13



பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து
நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு
கலர்ந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.

பாவை நோன்பு மேற்கொள்ளேம் பெண்களுக்கு அவர்கள் நீராடும் குளத்தின் காட்சி சிவ பெருமானையும், பார்வதி தேவியையும் நினைவு படுத்துகிறது. 

அந்தக் குளத்தில் பூத்திருக்கும் கரு நிறம் கொண்ட குவளை மலர்கள் பார்வதி தேவியையும், சிவப்பு நிற தாமரை மலர்கள் சிவபெருமானையும், நீர் அருந்த வந்து வரிசையாக அமர்ந்திருக்கும் வெண்மை நிற குருகுப் பறவைகள் சிவ பெருமான் அணிந்திருக்கும் மாலையையும், குளத்தில் அங்கும் இங்கும் ஓடும் நீர்ப் பாம்புகள் சிவ பெருமான் அணிந்திருக்கும் நாகாபரணங்களையும், அந்த குளத்தில் நீராடி தங்கள் உடல் அழுக்குகளை கழுவிக் கொள்கிறவர்கள், சிவ நாமத்தை ஜபித்து தங்கள் ஆன்மாவை தூய்மை படுத்திக் கொள்ளும் அடியார்களையும் ஒத்திருப்பதாக தோன்றுகிறது. அப்படிப்பட்ட பொய்கையில் நம் கைகளில் அணிந்திருக்கும் சங்கு வளையல்கள் ஒலி எழுப்பவும் அதோடு சேர்ந்து பாதச் சலங்கைகள் ஒலிக்கும் வண்ணம் தாமரைகள் பூத்திருக்கும் குளத்தில் பாய்ந்து அதனால் அந்தப் பொய்கை அசைய, நம் கொள்கைகளும் அசைய நீராடுகிறோம்.

நம்மை அந்த குளக்கரைக்கு அழைத்துச் செல்லும் வண்ணம் மிக அழகான வர்ணனை. பொய்கையை‌ பார்க்கும் பொழுது சில பெருமானின் நினைவு வருகிறது என்பது பக்தியின் சிறப்பு. கோபிகைகளுக்கு பார்க்கும் அத்தனை பேரும் கண்ணனாக தெரிந்தார்கள் என்று பாகவதத்தில் படித்திருக்கிறோம். "மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்று சொல்லும், விண்ணைத் தொழுது அவன் மேவும் வைகுண்டம் என்று கை காட்டும்..." என்று ஆழ்வார் பாடவில்லையா? "பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்தலாலா நின்றன் பச்சை நிறம் தோன்றுதய்யே நந்தலாலா என்பது மஹாகவியின் வாக்கு.

Monday, December 27, 2021

திருவெம்பாவை -12

 திருவெம்பாவை -1




ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்

தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்

எங்கள் பிறவித் துன்பம் நீங்குவதற்காக நாங்கள் வணங்கும் சிவபெருமான் தலையில் கங்கையை கொண்டவராக கையிலே நெருப்பை ஏந்தி அந்தத் தில்லையிலே நடனமாடுகிறார். அவர் இந்த வான், மண் அதற்கு இடையில் உள்ள பொருள்கள் எல்லாவற்றையும் விளையாடுவது போல மிகவும் அனாயசமாக படைத்து, காத்து, அழிக்கவும் செய்கிறார். அவரை நாங்கள் புகழ்ந்து பேசியபடி எங்கள் கை வளையல்கள் ஒலிக்க இடையில் அணிந்திருக்கும் மேகலை சிணுங்க, தலையில் சூடி இருக்கும் வாசமுள்ள மலர்களை மொய்க்கும் வண்டுகள் ஒலி எழுப்ப இந்தப் பொய்கையில் நீராடி வணங்குகிறோம்.

Sunday, December 26, 2021

திருவெம்பாவை - 11

திருவெம்பாவை - 11


மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்
ஆரழல் போல் செய்யா!
வெண்ணீறு ஆடி! செல்வா!
சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

கொழுந்து விட்டு எரியும் நெருப்பு போல சிவந்த நிறம் கொண்டவரே, திருநீற்றிலேயே குளித்தது போல உடலெங்கும் வெண்ணீறு பூசிக் கொண்டிருப்பவரே, சிறுத்த இடையும், பெரிய கண்களும் கொண்ட பார்வதியின் மணாளனே,  வண்டுகள் மொய்க்கும் பொய்கையில் நீராடி, வழி வழியாக உன்னை வழிபடுவதால் நாங்கள் நலமாக வாழ்கிறோம். பக்தர்களை ஆட்கொண்டு அருளும் உன் திருவிளையியாடலுக்கு ஆட்பட்டதால் பல நன்மைகளை அடைந்தோம். இதிலிருந்து குறையாமல் எங்களை காப்பாயாக. 

Saturday, December 25, 2021

திருவெம்பாவை -10

 திருவெம்பாவை -10


பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
கோதில் குலத்தரன் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள் 
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.


சிவ பெருமானின் கோவிலை நாடி வந்திருக்கும் பெண் பிள்ளைகளே, சிவனின் பெருமையை எப்படி கூறுவது? அவருடைய திருவடியோ அதள, விதள, சுதள, தளாதள, ரசாதளா, மஹாதள, பாதாள என்னும் ஏழு உலகங்களுக்கும் கீழே உள்ளது, திருமுடியோ எல்லா உலகங்களையும் தாண்டி உள்ளது. அதை விவரிக்க நம்மிடம் சொற்கள் இல்லை. பெண்ணை தன் இட பாகத்தில் கொண்ட அவரை விண்ணுலக தேவர்களும், மண்ணுலக மாந்தர்களும் பல விதமாக பாடினாலும் முழுமையாக விளக்க முடியாதவர். வேதங்களின் முதல் பொருள். இப்படியெல்லாம் இருந்தாலும் தொண்டர்களின் உள்ளத்தில் இருப்பவன். அவர்களுக்கு ஒரு தோழன். தனக்கென்று ஒரு ஊரோ, பெயரோ இல்லாதவன்(எண்ணற்ற பெயர்களை உடையவன், எல்லா இடங்களிலும் உறைபவன் என்பது மறைந்திருக்கும் பொருள்). அவனுக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்றும் கிடையாது.

Friday, December 24, 2021

திருவெம்பாவை - 9

 திருவெம்பாவை - 9


முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார்
அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்
இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.

இப்போது எல்லா பெண்களும் சிவபெருமான் உறையும் கோவிலை அடைந்து விட்டார்கள். அங்கு இறைவனைப் பணிந்து தங்கள் கோரிக்கையை வைக்கிறார்கள்.

பாவை நோன்பு அனுஷ்டிப்பதின் நோக்கங்களுள் ஒன்று நல்ல கணவனை அடைவது. இந்த பெண்களைப் பொறுத்தவரை யார் நல்ல கணவன்? சிவனடியாராக இருப்பவன்தான். சிவபெருமான் மீது பக்தி கொண்ட ஒருவன்தான் தங்களுக்கு கணவனாக வர வேண்டும் என்று இந்தப் பாடலில் வேண்டுகிறார்கள். 

இந்த உலகில் மிகப் பழமையானது என்று ஒன்றை சொன்னால் அதைவிடப் பழமையானவனாகவும்,  புதுமை என்று வரும் பொருளை விட புதுமையானவனாகவும் விளங்குகிறான் நீ. உன்னைத் தலைவனாக பெற்ற சிறந்த அடியவர்களாகிய நாங்கள் உன்னையும் பணிவோம், உன் அடியவர்களையும் பணிவோம். அவர்களோடு இணங்கி இருப்போம். அந்த சிவனடியார்களில் ஒருவரே என் கணவராகி விட்டால் அவர் எந்த சிவத்தொண்டில் ஈடுபட்டாலும் நாங்கள் அவருக்கு பணி செய்வோம். இப்படிப்பட்ட ஒரு பரிசை எங்களுக்கு அளித்தால் எங்கள் வாழ்வில் ஏது குறை?

Thursday, December 23, 2021

திருவெம்பாவை - 8

திருவெம்பாவை - 8 


கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.

பெண்ணே கோழி(சேவல்) கூவுவதும், குருகுப் பறவைகள் எழுப்பும் ஒலியும், கோவிலிலிருந்து வரும் மங்கள வாத்தியத்தின் நாதமும், சங்கொலியின் ஓசையும்,  ஒப்புமை அற்ற பரஞ்சோதியாகிய சில பெருமானின் ஒப்புயர்வற்ற கருணையையும், இணையற்ற சிறப்பையும் நாங்கள் பாடும் ஓசையும் கேட்கவில்லையா?அப்படி ஓர் உறக்கமா? உன்னிடமிருந்து சத்தமே இல்லையே? கடலளவு கருணை கொண்டவன் மீது உன் அன்பை வெளிப்படுத்தும் வழிகளுள் இதுவும் ஒன்றா? பிரளய காலத்திலும் அழியாமல் இருக்கும் ஒருவனும், பெண்ணை தன் இடது பாகத்தில் கொண்டவனுமாகிய அந்த சிவ பெருமானை பாடு.
மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடல்களை 

திருவண்ணாமலையில்தான் பாடினார் என்பதற்கு இந்தப் பாடலில் வரும் 'ஏழைப்பங்காளனை' என்னும் வார்த்தை ஒரு சான்று என்பார்கள். ஏழைப்பங்காளன் என்பதை ஏந்திழை பங்காளன் அதாவது பெண்ணை தன் உடலின் ஒரு பங்காக கொண்டவன் என்று பொருள் கொள்ள வேண்டும். தவமியற்றிய பார்வதி தேவிக்கு தன் உடலின் இடது பாகத்தை அளித்து அர்தாதநாரீஸ்வரராக அவர் அருளுவது திருவண்ணாமலையில் தான்.

துயிலிடைப் பாடல்கள் என்னும் பாடல்கள் இந்த பாடலோடு முடிகின்றன. வெளியே நிற்கும் பெண்கள் உள்ளே உறங்கிக்  கொண்டிருக்கும் பெண்களை எழுப்புகிறார்கள் என்பது ஒரு உருவகம். 

வெளியே நிற்பவர்கள், உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் பெண் எல்லாம் நாம்தான்.  அடிப்படையில் கடவுள் பக்தியும், ஆன்மீக நாட்டமும் கொண்டிருந்தாலும் நம் கர்ம வினை அதற்கு ஒத்துழைக்க மறுக்கின்றது. விழித்துக்கொண்ட புத்தி, உறங்கிக் கொண்டிருக்கும் புலன்களையும், மனதையும் எழுப்புவதாகக் கொள்ளலாம்.

Wednesday, December 22, 2021

திருவெம்பாவை - 7

 திருவெம்பாவை - 7

அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.

பெண்ணே இப்படி எங்களை வாசலில் நிற்க வைத்திருக்கிறாயே என்று வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் இதுவும் உன் விளையாட்டுகளில் ஒன்றா என்று கேட்பதன் மூலம் அதைத்தான் உணர்த்துகிறார்கள் எனலாம். தொடர்ந்து அவர்கள்," பெண்ணே நீ எப்படிப்பட்டவள் தெரியுமா?  உருத்திராட்சம், விபூதி, திரிசூலம்,பிறைச்சந்திரன் போன்ற 
சிவபெருமானுக்குரிய அடையாளங்களைப் பார்த்தாலே சிவனே! சிவனே என்பாய், யாராவது தென்னாட்டுடைய சிவனே போற்றி என்று கூறுவதற்காக தென்னா.. என்று தொடங்கும் பொழுதே தீயிலிட்ட மெழுகு போல் உருகுவாய், சிவன்தான் என் தந்தை, அவரே என் அரசன், எனக்கு அமுதம் போன்றவன் என்றெல்லாம் கூறுவாய், அப்படிப்பட்ட, அமரர்களாலும் அறியப்பட முடியாத, பரம்பொருளாகிய ஒருவனும், பெருமைகள் கொண்டவனுமாகிய சிவபெருமானின் பெருமைகளை நாங்கள் பாடுவதைக் கேட்டும் கல் நெஞ்சம் கொண்டவளைப்போல நீ பேசாமல் படுத்துக் கொண்டிருக்கிறாய். இதுதான் தூக்கத்தின் சிறப்பு போலிருக்கிறது.

Tuesday, December 21, 2021

திருவெம்பாவை - 6

திருவெம்பாவை - 6

மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்


அடுத்த வீட்டிற்கு சென்றால் அந்த பெண்ணும் உறங்கிக் கொண்டுதான் இருக்கிறாள். மானே என்று அவளை மிக இனிமையாக அழைக்கும் தோழிகள்,"நேற்று நீ, நான் முதலில் வந்து உங்களை எல்லாம் எழுப்புவேன் என்றாய் அந்த வார்த்தை எங்கே போனது? அப்படி கூறிவிட்டு நாணமின்றி உறங்கிக் கொண்டிருகாகிறாய். உனக்கு இன்னும் பொழுது புலரவில்லையா? விண்ணகத்து தேவர்களும், மண்ணில் வசிக்கும் மாந்தர்களும், இந்த இரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்ட முனிவர்கள், ஞானிகள் போன்றவர்களாலும் முழுவதுமாக அறிந்து கொள்ள முடியாதவனும், நம்மை போன்ற பக்தர்களுக்கு தானே இறங்கி வந்து அருளுகிறவனுமாகிய அந்த சிவப் பரம்பொருளை போற்றி நாங்கள் பாடுவதை கேட்டும் வாய் திறவாமலும், ஊன் உருகாமலும் கிடப்பது உனக்கு மட்டுமே
சாத்தியம். எங்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் அரசனாகிய சில பெருமானைப் போற்றிப் பாடலாம் வா".

Monday, December 20, 2021

திருவெம்பாவை பாடல் - 5

 திருவெம்பாவை  - 5




மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே
சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்

வாசனை பொருந்திய கூந்தலை உடைய பெண்ணே திருமாலும், நான்முகனும் காண முடியாத அண்ணாமலையார் எனக்கு மிகவும் நெருக்கமானவர் தெரியுமா? என்று பாலிலும், தேனிலும்‌ ஊறியது போன்ற இனிமையான வார்த்தைகளை பேசுவாயே? வந்து உன் வாசல் கதவுகளை திறப்பாயாக. இந்த உலகில் உள்ள மனிதர்களும், விண்ணுலகில் உள்ள தேவர்களும் அறிய முடியாதவரும் நம் குறைகளை மன்னித்து நமக்கு அருளுவதற்காக ஒரு வடிவம் எடுத்து வருபவருமாகிய சிவ பெருமானின் பெயர்களை சிவனே, சிவனே என்று நாங்கள் உரக்கப் பாடுவதை கேட்டும் நீ உறங்குகிறாயே இதுதான் உன் சிறப்பா?

Sunday, December 19, 2021

திருவெம்பாவை பாடல் 4

 


திருவெம்பாவை பாடல் 4


ஓண்ணித்தில நகையாய்
இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளி மொழியார்
எல்லோரும் வந்தாரோ
எண்ணிக் கோண்டுள்ளவா
சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவுமே
காலத்தை போக்காதே
விண்ணுக்கொரு மருந்தை
வேத விழுப் பொருளை
கண்ணுக்கினியானை பாடி
கசிந்துள்ளம் உள்நெக்கு 
நின்றுருக யாமாட்டம்
நீயே வந்து எண்ணிக் குறையில்
துயிலேலோர் எம்பாவாய்

முத்துப்பல் சிரிப்பை உடைய பெண்ணே உனக்கு இன்னும் பொழுது விடியவில்லையா? என்று வெளியே நிற்கும் தோழிகள் கேட்டதும் இன்னும் தயாராகாத வீட்டிற்குள் இருக்கும் பெண்ணிற்கு ரோஷம் வந்து விடுகிறது. 

"என்னை மட்டும் பெரிதாக குறைகூறுகிறீர்களே? மற்ற எல்லோரும் வந்து விட்டார்களா?"
என்று வினவுகிறாள்.
யார் யாரெல்லாம் வந்திருக்கிறோம் என்று கூற நாங்கள் தயார், ஆனால் அந்த நேரத்தில் நீ உறங்கி விடாதே
விண்ணுலக தேவர்களுக்கே மருந்தாக இருப்பவன், வேதத்தின் மேலான உட்பொருளானவன், நமக்காக ஒரு அழகான உருவம் கொண்டிருப்பவன், அப்படிப்பட்டவனை பாடி நாங்கள் நெக்குருகி நிற்கிறோம்,எனவே நீயே வந்து எத்தனை பேர்கள் வந்திருக்கிறோம் என்று எண்ணி, எண்ணிக்கை குறைந்தால் உறங்கிக் கொள்.




Saturday, December 18, 2021

திருவெம்பாவை - 3

திருவெம்பாவை - 3



முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் 
நமக்கேலோர் எம்பாவாய்.

இந்தப் பாடலும், வெளியே நிற்கும் தோழிகளுக்கும் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணிற்கும் இடையே நிகழும் ஒரு உரையாடலாகத்தான் அமைந்திருகாகிறது.

"முத்துப்போல் பளிச்சென்ற புன்னகை கொண்டிருக்கும் பெண்ணே! எங்களோடு பேசும் பொழுது சிவபெருமான்தான் என் தந்தை, என் சந்தோஷமே அவன்தான், எனக்கு மரணமற்ற வாழ்வை அளிக்கவல்ல அமுதம் போன்றவன் என்றெல்லாம் நாவினிக்க பேசுவாய்.‌ உன் வீட்டு கதவைத் திறப்பாயாக". என்று கேலியாக கூறியதும்... 

உள்ளே இருப்பவளுக்கு நாணமும்,குற்ற உணர்ச்சியும் மேலிட, நல்ல பண்புகள் கொண்ட பெண்களே, நீங்கள் எல்லோரும் சிவபெருமான் மீது பற்று கொண்டவர்கள், நீண்ட நாட்களாக அவருடைய அடியவர்கள், நானோ புதியவள், உங்கள் நடைமுறைகளை எனக்கு சொல்லிக் கொடுத்து, என் குற்றங்களை மன்னித்தால் ஆகாதா? இதுதான் உங்கள் அன்பா? என்கிறாள்.
அவர்கள் விட்டு விடுவார்களா?

"அடியே, நீ சிவபெருமான் மீது கொண்டிருக்கும் பக்தி எங்களுக்குத் தெரியும்" என்றதும்
அவள் வாளாதிருப்பாளா?

"உள்ளம் தூய்மையாக இருப்பவர்கள் சிவனின் பெருமையை பேசுவதைத்தானே விரும்புவார்கள்? (இப்படி மற்றவர்களை குறை கூறுவார்களா? என்பது உட்கிடை)என்றதும், 

வெளியே நிற்கும் தோழிகளோ, "உன்னையும் சேர்த்துக் கொண்டதற்கு எங்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்" என்பதாக இந்தப் பாடலை முடிக்கிறார்.

என்ன ஒரு அழகிய நாடகம் போன்ற படைப்பு!

Friday, December 17, 2021

திருவெம்பாவை பாடல் 2

திருவெம்பாவை பாடல் 2




பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம் 
பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.

முதல் பாடலில் ஒரு பெண்ணை எழுப்பி அழைத்துக் கொண்டு வந்தவர்கள் அடுத்த பெண்ணின் வீட்டிற்கு வருகிறார்கள். அவளும் இன்னும் எழுந்திருக்கவில்லை. வாசலில் நிற்பவர்களுக்கு அலுப்பாக இருக்கிறது ஏனென்றால் இந்த பெண் எப்படிப்பட்டவள் என்றால், இரவும் பகலும் தோழிகளோடு பேசும் பொழுதெல்லாம் தனக்கு மிகவும் விருப்பமானவர் பரஞ்சோதியாகிய அந்த சிவபெருமான்தான் என்று கூறுகிறவள். ஆனால் இன்று இன்னும் எழுந்திருக்காமல் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்து வெளியே நிற்கும் தோழிகள் சற்றே கேலியாக," அழகான ஆபரணங்களை அணிந்து கொண்டிருக்கும் பெண்ணே,எங்களிடம் சிவபெருமான்தான் என் பாசத்திற் குரியவர் என்று கூறினாய். ஆனால் உன் பாசம்  படுக்கையின் மீதுதான் என்று புரிந்து விட்டது"  என்றதும் உள்ளே இருப்பவளுக்கு கோபம் வந்து விடுகிறது. "நீங்களும்தான் அழகான ஆபரணங்களை அணிந்திருக்கிறீர்கள். என்னை கேலி செய்து ஏசும் நேரமா இது? நாம் எல்லோருமே தேவர்களுக்கு கூட காட்ட விரும்பாத தன்னுடைய திருவடியை பக்தர்களுக்கு காட்டி அருளக்கூடிய, தில்லையில் இருக்கும் ஈசனின் அன்பர்கள் தானே?" என்று சமாதானமாக பேசி சமாளிக்கிறாள். 




Thursday, December 16, 2021

திருவெம்பாவை - 1

 திருவெம்பாவை



ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை

யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்

பாவை நோன்பு என்பது நாட்டில் நல்ல மழை பெய்து பயிர்கள் செழிக்கவும், நல்ல கணவனை அடைந்து தங்கள் வாழ்க்கை செழிக்கவும் பெண்கள் அனுசரிக்கும் நோன்பு.

மாணிக்கவாசகர் தன்னை ஒரு பெண்ணாக உருவகப்படுத்திக் கொண்டு நாயகன்,நாயகி பாவத்தில் திருவண்ணாமலையில் குடி கொண்டிருக்கும் அண்ணாமலையாரை துதித்து பாடியதுதான் திருவெம்பாவை பாடல்கள். இதில் முதல் ஒன்பது பாடல்கள் முதலில் எழுந்த பெண்கள், விடியற்காலையில் எழுந்து, பாவை நோன்பு நோற்பதற்கு வருவதாக கூறிவிட்டு, எழுந்திருக்காமல் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்களை எழுப்புவதாக அமைந்திருக்கும். 

முதல் பந்திலேயே சிக்ஸர் அடிப்பதை போல, முதல் பாடலின் முதல் வரியிலேயே யாரைக் குறித்து இந்த பாடல்கள் பாடப்பட்டன என்று தெளிவு படுத்தி விடுகிறார். 

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியாக எழுந்து, உயர்ந்து நின்றவன் அந்த அண்ணாமலையான் தானே? அப்படிப்பட்ட அந்த அண்ணாமலையானின் பெருமைகளை நாங்கள் பாடக் கேட்டும் பெரிய கண்களை உடைய பெண்ணே  நீ உறங்கிக் கொண்டிருக்கிறாயே? உன் செவிகள் என்ன இரும்பாலானவையா? 
வீதியில் யாராவது சிவபெருமானின் பெருமைகளை பேசிக்கொண்டு செல்வதை கேட்டாலே உணர்ச்சி வசப்பட்டு அழுவாயே? இப்போது நாங்கள் உன் வீட்டு வாசலில் வந்து சிவநாமத்தை சொல்கிறோம், நீயானால் எழுந்து வராமல் மெத்தையிலே புரண்டு கொண்டிருக்கிறாய். இதுதான் உன் சிறப்பா?
 

Tuesday, December 14, 2021

பார்ப்பது, கேட்பது, படிப்பது(தொடர்ச்சி)

பார்ப்பது, கேட்பது, படிப்பது(தொடர்ச்சி)



நான் இங்கே வருவதற்கு முன் என் மகன் இந்திரா நூயி எழுதிய மை லைஃப் இன் ஃபுல் என்ற புத்தகத்தை அமேசானில் வரவழைத்தான். ஊருக்கு வருவதற்கு முன் அதை படித்து விட வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் முடியவில்லை. இந்திரா நூயி பெப்ஸி கோவின் சிஇஓ வாக ஆவதோடு நிறுத்தி இருந்தேன். 

இங்கே வந்து லைப்ரரியில் தேடினால் வெயிட்டிங் லிஸ்ட் 93. ஒவ்வொருவரும் ஒரு புத்தகத்தை 14 நாட்கள் வைத்திருக்கலாம். அந்த கணக்கில் பார்த்தால் என் முறை வருவதற்கு வருடக்கணக்கில் ஆகிவிடும். ஆகவே நெட்டில் டவுன்லோட் செய்து படிக்க வேண்டும் அதற்கும் லைப்ரரியில் வசதி இருக்கிறது. ஆனால் அங்கேயும் இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும். அதற்கு பிறகு தான் படித்து முடிக்க வேண்டும் படித்து முடித்த பிறகு அதை பற்றி சொல்கிறேன். 

இங்கிருக்கும் நூலகத்தில் தமிழ் புத்தகங்களும் பார்க்க முடிந்தது. அசோகமித்திரன், தி ஜானகிராமன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்களின் புத்தகங்கள் இருந்தன இதுவரை எஸ்ராவின் கதை எதுவும் நான் படித்ததில்லை. எனவே அவர் எழுதிய 'நிமித்தம்' என்னும் புத்தகத்தை எடுத்து வந்தேன்.  

காதுகேளாத  ஒருவனின் அனுபவங்கள், சோகங்கள் கதையாக விரிந்திருக் கின்றன. "குளிக்கும் பொழுது தண்ணீர் கீழே விழும் சத்தம் கேட்காதா?" என்று ஒருவர் கேட்கிறார். அவனுக்கு கேட்காது. தண்ணீர் உடம்பில் படும் உணர்வுதான். காது கேட்காதவர்களின் இழப்புகளை துல்லியமாக புரிய வைத்த இடம் இது.  

தேவராஜ் என்னும் சிறுவன் குளிர் காய்ச்சலுக்கும் பிறகு தன் செவித்திறனை இழக்கிறான். இடது காது முற்றிலும் செயலிழக்க, வலது காது கொஞ்சமாக கேட்கும். இப்படிப்பட்ட ஒரு குழந்தைக்கு ஆதரவும், பரிவும் கிடைக்காததால் அவன் சந்திக்கும் அவமானங்களும் சோகங்களும் அவனை அலைக்கழிக்கின்றன. "செத்து தொலையாமல் இருந்து எங்களை தொல்லை செய்கிறாய்" என்று எப்போதும் அவனை கரித்துக் கொட்டும் மூர்க்கத்தனமான தந்தை, பள்ளியில் ஆசிரியர் பேசுவது புரியாமல் இவன் மதங்க மலங்க முழிக்கும் பொழுது, "செவிட்டு முண்டமே ஏன் இங்கே வந்து உயிரை வாங்குகிறாய்?" என்று புளியமர விளாரால் விளாசும் ஆசிரியரால் படிப்பை பாதியில் நிறுத்துகிறான். 

அவனுக்கு காது கேட்க வைப்பதற்காக அவன் தாய் எடுக்கும் முயற்சிகள் தோற்கின்றன. காது கேளாதோர் களுக்கான பள்ளியில் அவனை சேர்த்து விடுகிறாள். அங்கு அளவிற்கு அதிகமான மாணவர்கள் ஒரு சிறிய அறையில் ஒருவரோடு ஒருவர் இடித்துக் கொண்டு படுத்துக் கொண்டதில் ஒரு மாணவனுக்கிருந்த சரும நோய் இவனுக்கும் வந்துவிடுகிறது. அதை குணப்படுததிக்கொண்டு வா என்று வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள். வந்தவனுக்கு திரும்பிச் செல்ல பிடிக்கவில்லை.   தந்தையால் மூர்க்கமாக சிதைக்கப்படும் காதல், எந்த வேலையிலும் நிலைக்க முடியாமை என்று நூலறுந்த பட்டமாக அலைகிறது அவன் வாழ்வு. 

தேவராஜின் வாழ்க்கையில் தென்றலாய் இருப்பவர்கள் அவன்மீது அன்பாக இருக்கும் புஷ்பா டீச்சரும், ஓவியரான அவர் கணவரும், மற்றும் நண்பன் ராமசுப்பு மட்டுமே. இறுதியில் ராமசுப்பு வால் நிறந்தர வருமானத்திற்கு வழி பிறக்க, அவனுடைய 47 வயதில் கணவனை இழந்த ஒரு நர்ஸை மணந்து கொள்ள சம்மதிக்கிறான்.  திருமண சடங்குகள் ஒரு அபத்தமான நாடகமாக தோன்றுகிறது. முன்பை விட இப்போதுதான் வாழ்க்கையை நினைத்து பயமாக இருக்கிறது என்று முடிகிறது கதை.

கதையின் நீளம் அதிகம்.  காது கேட்காத ஒருவன் அனுபவிக்கும் துயரங்களை மட்டும் சொல்லி இருந்தால் அதற்கு ஒரு தீர்வும் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். சொல்ல வந்த விஷயம் நச்சென்று பதிந்திருக்கும்.  இந்த கதையில் அவன் சந்தித்த மனிதர்கள், அவர்களுடைய வாழ்க்கை என்று பிரிந்து போய் அவன் யார் யாரிடம் பழகினாலும் அவர்களை பற்றி எல்லாம் ஒவ்வொரு அத்தியாயம். அவர் திரட்டிய பல விஷயங்கள் அத்தனையையும் ஒரு நாவலில் கொட்டியிருக்கிறார். அதனால் மூலக்கரு சிதைந்து போகிறது. பாஸிட்டிவாக முடிக்காததும்,  செவித்திறன் அற்றவர்கள் எப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் இல்லாததும் குறைகளாக எனக்குப்பட்டன. 




Monday, December 13, 2021

பார்ப்பது, கேட்பது, படிப்பது

பார்ப்பது, கேட்பது, படிப்பது 

இங்கு வந்ததிலிருந்து ஒரு நாளைக்கு ஒன்று என்ற ரேஞ்சில் நிறைய சினிமாக்கள் பார்க்கிறேன்.  தமிழ்தான் என்றில்லை, ஹிந்தி,  ஆங்கிலம்,  மலையாளம் எல்லாம்தான். அண்ணாத்த, அரன்மனை3 போன்ற படங்களை இதய நோயாளிகள் தவிர்ப்பது நலம். அந்த இரைச்சல் அவர்கள் உடம்பிற்கு ஆகாது. ரஜினிகாந்த் இனியும் தொடர்ந்து நடிக்கத்தான் வேண்டுமா?

இந்த படங்களை பார்த்த பொழுது இது தமிழ் சினிமாவின் இருண்ட காலமோ என்று தோன்றியது. நம்பிக்கையளிக்கும் விதம் வேறு சில படங்களும் வந்திருக்கின்றன.  

ஜெய் பீம் நன்றாகத்தான் இருந்தது. அந்தப் படத்தின் கான்ட்ரவர்சிகளை பலரும் எழுதி விட்டார்கள். ஜெய் பீமிற்கு ஒரு மாற்று போன்ற படம் 'ருத்ர தாண்டவம்'. நல்ல போலீஸ், வக்கீலாக வரும் ராதா ரவி,"இந்த நாட்டு மக்கள் அத்தனை பேருக்குமான அரசியல் அமைப்பு சட்டத்தை எழுதியவர் அம்பேத்கர். அவரை  ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு மட்டும் சொந்தக்காரர் என்பது போல சொல்கிறார்கள்" என்கிறார். ஒரு வேளை இதற்கு தியேட்டரில் கைதட்டல் கிடைத்திருக்கலாம்.

வெங்கட் பிரபுவின் மாநாடு ஒரு வித்தியாசமான முயற்சி. டைம் லூப் என்னும் கான்செப்ட் தமிழுக்கு புதுசு. இன்று,நேற்று,நாளை என்னும் படத்தில் டைம் மிஷின் கான்செப்ட்டிலும் இறந்தவர் மீண்டும் பிழைப்பது போல் வரும். இதில் மீண்டும் மீண்டும் வருவது, எஸ்.ஜெ. சூர்யா வார்த்தைகளில் "வந்தான், சுட்டான், செத்தான், ரிபீட்.." . இந்த கான்செப்ட் எத்தனை பேருக்கு புரியும் என்று தோன்றியது. ஒரு இடத்தில் கூட தேங்காத விறுவிறுப்பு படத்தின் பிளஸ் குறிப்பாக படத்தின் முதல் பாதி விறுவிறுவிறு.... 

ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை ஒரு மாநாட்டில் வைத்து கொலை செய்து அதை மதக் கலவரமாக மாற்ற நடக்கும் முயற்சி எப்படி முறியடிக்கப்படுகிறது என்பதுதான் கதை. இந்த சாதாரண கதையை டைம் லூப் என்னும் கான்செப்டை பயன்படுத்தி ஸ்வாரஸ்யமாக்கியிருப்பது இயக்குனரின் திறமை.   

இந்த படத்தின் கதாநாயகன் சிம்புவாக இருந்தாலும், எஸ்.ஜே.சூர்யா ஸ்டீல்ஸ் தி ஷோ. கொஞ்சம் ஓவர் ஆக்டிங் என்று தோன்றலாம், ஆனால் அப்படி நடித்தால்தான் அந்த காரெக்டர் நிற்கும். வில்லனாக ஒய்.ஜி.மகேந்திரன் சிறப்பாக செய்திருக்கிறார்.  சினிமா ஒரு கூட்டு முயற்சி என்பது இந்த படத்தில் நன்கு விளங்குகிறது. எடிட்டர், இசையமைப்பாளர், திரைக்கதாசிரியர் என்று அத்தனை பேரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். தவற விடக்கூடாத படம். 

இந்தப் படத்தின் கதாநாயகி கல்யாணி ப்ரியதர்ஷன். "இவள் 'வரனே அவஸ்யமுண்டு'  என்னும் மலையாள படத்தின் கதாநாயகியாச்சே? அதில் 
ஷோபனாவின் மகளாக நடித்திருக்கிறாள்"  என்று என் மகள் கூறியதும் ஷோபனா நடிப்பதை நிறுத்தி விட்டார் என்றல்லவா நினைத்தேன், பார்த்து விட வேண்டியதுதான் என்று அந்த மலையாள படத்தை பார்த்தேன். திருமண வயதில் பெண் இருக்கும் சிங்கிள் பேரண்டான ஷோபனாவுக்கும்,  கட்டுப்படுத்த முடியாத தன் கோபத்திற்கு மனோதத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளும்  எக்ஸ் சர்வீஸ் மேனான சுரேஷ் கோபிக்கும் இடையே மலரும் நட்பை அழகாக சொல்லியிருந்த படம். இப்படியெல்லாம் ஏன் தமிழில் படங்கள் எடுப்பதில்லை என்னும் தாபம் வருகிறது. ஆனால் மலையாள இளம் கதா நாயகர்களுக்கும் ஹீரோயிசம் காட்ட வேண்டும் என்ற ஆசை வந்து விட்டதோ என்று தோன்றுகிறது. 

நிவின் பாலி நடித்திருந்த ஒரு படம் சரியாக சென்றுகொண்டே இருந்தது, தீடீரென்று தமிழ்.தெலுங்கு படங்களைப் போல மாறி விட்டது. துல்கர் சல்மான் படத்தில்கூட அவர் ஒரே ஒரு குத்து விடுகிறார், பேருந்தின் கண்டக்டர் பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்துக் கொண்டு கீழே விழுகிறார். ஹூம்ம்! காதை செவிடாக்கும் ஜாரிங் இசை இல்லை என்பது மலையாளப் படங்களின் சிறப்பு.

படித்த புத்தகங்களை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.



Friday, December 10, 2021

காணொளி காணீர்.

இந்த பதிவில் இரண்டு காணொளிகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒன்று கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே என்னும் பழமொழிக்கான விளக்கம்.  மற்றது என் மாமா மகன் நடித்திருக்கும் குறும்படம். 

https://www.youtube.com/watch?v=GzjQ9_wSdWQ&t=16s


மேற்கண்ட காணொளியில் நான் கன்னம் என்பது கடப்பாரை போல ஒரு ஆயுதம் என்று கூறியிருந்தேன். எங்கள் உறவினரான திருமதி.நிர்மலா கல்யாணராமன் அவர்கள் கன்னம் என்பது உறுதியான மூங்கில் கழி, அதன் கீழ் பாகத்தில் ரசாயன கலவைகள் கலந்த துணி கட்டப்பட்டிருக்கும். அந்தக் காலங்களில் வீடுகள் பெரும்பாலும் மண், சுண்ணாம்பு, காறை போன்ற கரையக் கூடிய பொருட்களால் தான் கட்டப்பட்டிருக்கும் என்பதால் ரசாயன கலவை கொண்ட கன்னத்தால் சுவரை சத்தமில்லாமல் கரைத்துவிட முடியும். என்னும் விளக்கத்தை அளித்திருந்தார்.

அடுத்து பிராயச்சித்தம் என்னும் குறும்படத்தை பார்த்து உங்கள் கருத்தை பகிருங்கள்.




https://www.youtube.com/watch?v=bpgvrRhmKFU




Monday, December 6, 2021

கிறிஸ்துமஸ் அலங்காரங்கள்

கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் 

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அழகு உண்டு அந்த பிராந்தியத்திற்கு என்று விசேஷமான பண்டிகைகள் உண்டு. அது வரும் சமயத்தில் அந்த இடத்தின்  பொலிவு அதிகமாகிவிடும். பொங்கல் என்றால் கிராமங்களில்தான் அதன் அழகை பார்க்க முடியும் நாங்கள் திருச்சியில் இருந்த வரை  தீபாவளி கடைத் தெருவை பார்ப்பதற்கென்றே ஒருமுறை சின்ன கடை வீதி பெரிய கடை வீதி எல்லாம் சுற்றி விட்டு வருவோம்.  சென்னையிலும் விண்டோ ஷாப்பிங் செய்யவே டி.நகர் சென்றிருக்கிறோம். ஊரே ஜொலி ஜொலிக்கும்.  ஓமானில் ரமதான் வருகிறது என்றால் அந்த ஊரின் தோற்றமே மாறிவிடும். ஒரு ஃபெஸ்டிவல் மூடு வந்து விடும். கடைகள் எல்லாம் இரவு பதினொன்றரை திறந்திருக்கும். பூங்காக்களும் அப்படியே. நிறைய பேர் இரவு பூங்காக்களுக்கு குடும்பத்தோடு சென்று உணவருந்தி விட்டு மெல்ல வீடு திரும்புவார்கள். அதைப்போல இப்பொழுது இங்கு கனடாவில் கிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டிருப்பதால் ஊர் விளக்கு அலங்காரங்களால் ஜொலிக்கிறது. அதன் சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு



நாதன் பிலிப் ஸ்கொயர்(Nathan Phillips square) என்னும் இடத்தில் நிறுவப்பட்டிருக்கும் இந்த கிறிஸ்துமஸ் மரம்தான் டொரோண்டோவின் அதிகாரபூர்வ கிருஸ்துமஸ் மரம். 58 அடி  உயரமும்,, 300,000 விளக்குகளும், 500 அலங்கார அமைப்புகளும் கொண்டிருக்கிறது. இந்த மரம் நிறுவப்பட்ட பிறகுதான் மற்ற இடங்களில் கிருஸ்துமஸ் மரங்கள் நிறுவப்படுமாம். 








உறைந்திருக்கும் பனியில் ஸ்கேட்டிங் விளையாடுபவர்கள் அவுட் ஆஃப் 
ஃபோகஸில் தெரிகிறார்களா? 

பனிக்கட்டி சிற்பங்கள் 


ஈடன் சென்டர் என்னும் வணிக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய கிருஸ்துமஸ் மரம். 


Friday, December 3, 2021

பெயரில் என்ன இருக்கிறது?

பெயரில் என்ன இருக்கிறது?

ஒரு ரோஜாவை எந்த  பெயரிட்டு  அழைத்தால் என்ன?  அது  ரோஜாவாகத்தனே இருக்கும்  என்னும் ஷேக்ஸ்பியரின் பிரபலமான
வாசகத்தை எல்லோரும் ஒரு முறையாவது மேற்கோள் காட்டாமல்
இருக்க மாட்டோம். ஆனால் பெயர் அவ்வளவு சாதாரணமான விஷயம்
கிடையாது என்பது 18 .3 .12 அன்று 'நீயா நானா'வில் விவாதிக்கப்பட பொழுது
புரிந்தது. ராஜரத்தினம்,  புகழேந்தி  என்ற ஆண் பெயரைக்  கொண்ட  பெயரைக் கொண்ட பெண்களும், சிந்து,தேன்மொழி என்றெல்லாம் 
பெயர் கொண்ட ஆண்களும் விவாதத்தில் கலந்து கொண்டனர்.

பொதுவாக ஆண் பெயெர் கொண்ட பெண்களெல்லாம் தங்கள் பெயரால்
தங்களுக்கு நேர்ந்த அவமானத்தை கூறும் பொழுது அதிகம் உணர்ச்சி
வசப்படாமல் இயல்பாக பேசினார்கள்.மேலும் ஆண் பெயரைக்  கொண்டிருப்பது தங்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கிறது
என்று கூட கூறினார்கள். இதற்க்கு நேர் மாறாக பெண் பெயரைக் கொண்டிருக்கும் ஆண்கள் பேச்சில் கழிவிரக்கமும், கோபமும், தாபமும் 
வெளிப்பட்டன.

ஒரு இளைஞர் தனக்கு பெண் பெயரை வைத்த  தன் பெற்றோர்  மீது  வெறுப்பு  வருகிறது என்றார். மற்றொருவருக்கு பேசும் பொழுது துக்கம் தொண்டையை
அடைத்தது.

சிறப்பு விருந்தினராக வந்திருந்த சாரு நிவேதிதா(இவர்  நீயா  நானாவின்  நிலைய வித்வான்) இப்பொழுது பெயர்கள் தம் அடையாளங்களை இழந்து
விட்டன என்றார். உண்மைதான். முன்பெல்லாம் பெயரை  வைத்து  அவர்  தென் இந்தியரா, வட இந்தியரா என்று  கணிக்க  முடியும்.  ஏன்  தமிழ் நாட்டை  எடுத்துக் கொண்டாலே பெயரை வைத்து அவர் தமிழ் நாட்டின்  எந்த  பகுதியைச்  சார்ந்தவர்,  எந்த  குலத்திர்க்குரியவர்  என்றெல்லாவற்றையும்  அறிந்து கொண்டுவிட முடியும்.

குருசாமி, குருநாதன், சுவாமிநாதன் போன்ற பெயர்களை கொண்டவர்கள் என்றால் அவர்களுக்கு சுவாமி மலை முருகன் குல தெய்வமாக இருக்கும்.
மன்னார்குடியை சேர்ந்தவர்கள் ராஜகோபாலன், விமலா என்றெல்லாம் பெயர்
வைப்பார்கள்.  மாது என்னும் மாத்ருபூதம்,  சுகந்தா/சுகந்தி,  ஜம்புநாதன்,  அகிலா போன்ற பெயர்கள் திருச்சி மாவட்டகாரர்களுக்கு    உரியவை.  சப்த ரிஷி, ஸ்ரீமதி போன்ற பெயர்கள்  லால்குடி  வட்டத்தில்  உண்டு.  காந்திமதி, கோமதி, நெல்லையப்பன் போன்ற பெயர்கள்  நெல்லை  மாவட்டதிற்குரியவை  என்று  சொல்லத் தேவை இல்லை. 

தாங்கள் வைணவர்கள் என்று அப்பட்டமாக வெளிப்படுத்தும் கமலவல்லி, வேதவல்லி, குமுதவல்லி,உப்பிலி, கேசவன்,போன்ற பெயர்களும் மற்றும் ஆராவமுதன், வகுளாபரணன் என்ற அழகான தமிழ் பெயர்களும் போனதெங்கே?

உறவில் ஒரு குழந்தைக்கு இவியான் என்று பெயர். கூகுளில் தேடி வைத்திருக்கிறார்கள். இவியான் என்றால் சிவா என்று பொருளாம். நமக்கு இவியான் என்றால் வைட்டமின் இ மாத்திரைதான் நினைவுக்கு வரும். நிகிதா என்றால்  ரஷ்ய  மொழியில் 'சாந்தி' என்று  பொருளாம், அதனால்  தன்  மகளுக்கு நிகிதா என்று பெயர் வைத்திருப்பதாக எங்கள் நட்பு வட்டத்தில் ஒரு பெண்மணி கூறினார். சாந்தி என்றே வைத்திருக்கலாமே! எந்த ரஷ்யரும் சாந்தி என்று  பெயர்  வைப்பதாக  தெரியவில்லை.  ஏன்   நாம்  வட  இந்திய  பெயர்களை ஸ்வீகரித்திருக்கும்  அளவிற்கு அவர்கள்  செய்வதாக தெரியவில்லை. நாம்தான் நம் அடையாளங்களை தொலைத்து  விட்டு நிற்கிறோம்.

இந்திய பெயர்கள் வெளிநாடுகளில் படும் பாடு...! நான் அரபுநாடுகள் ஒன்றில்  மினிஸ்டரியில் பணிக்கு சேர்ந்த பொழுது உன் பெயர் என்ன என்று கேட்ட என் மேலதிகாரியிடம்,"பானுமதி" என்றதும்,"ஓ டிபிகல்ட்! இந்டியன் நேம்ஸ்" என்றார் அஹமத் பின் அப்துல் காதர் அல் கசானி" என்று பெயர் வைத்துக் கொண்டிருந்த அவர். 

பானுமதியே கஷ்டம் என்றால் கோவிந்தராஜபுரம் கிருஷ்ணமூர்த்தி வெங்கடேஸ்வரன் என்ற என் கணவரின் பெயரை நினைத்துப் பாருங்கள். ஜொவிந்தா ராகா என்பதற்கு மேல் தொடர முடியாமல் கஷ்டப்பட்ட அவர்கள் என் கணவரின் பெயரில் அவர்களுக்கு உச்சரிக்க சுலபமாக இருந்த மூர்த்தி என்பதை மட்டும் எடுத்துக் கொண்டார்கள்.  

இதற்காகவே சில நண்பர்கள் தங்கள் பெயரை சுருக்கிக்கொண்டார்கள். நீலகண்டன் நீல் ஆனதும் , பத்மநாபன் பாடி(Paddy) ஆனதும் ஓகேதான் தண்டபாணி டான் ஆனதுதான் மனதிற்கு கஷ்டமாக இருந்தது.   

எனிவே, ஒரு  ஜோக்கோடு  இதை  முடிக்கலாம்  என்று  நினைக்கிறேன்.  அருணஜடை என்னும் வித்தியாசமான பெயர்  கொண்ட  ஒரு நண்பர்  சொன்ன ஜோக் இது. 
ஒருவனுக்கு முதலில் பிறந்த பெண் குழந்தைக்கு பூஜா என்று பெயர்  வைத்தானாம் , இரண்டாவதாக பிறந்த பெண்ணுக்கு ஆர்த்தி என்று பெயர்  சூட்டி  விட்டான்.  மூன்றாவதாக  பிறந்தது  ஆண் குழந்தை,  என்ன  பெயர் வைக்கலாம்  என்று  நண்பரிடம்  ஆலோசனை  கேட்க,  குறும்புக்கார  அந்த  நண்பன்,  பேசாமல்  குருக்கள்  என்று  வைத்து  விடேன் என்றானாம். 

இது ஒரு மீள் பதிவு. மத்யமரில் உங்கள் பெயர் உங்களுக்கு கொடுக்கப்பட்டதன் காரணம் என்ன? நீங்கள் யாருக்காவது பெயர் வைத்திருக்கிறீர்களா? உங்களுக்கு பிடித்த ஐந்து பெயர்களை எழுதுங்கள் என்றெல்லாம் கேட்டிருந்தார்கள், அப்பொழுது நான் பெயரில் என்ன இருக்கிறது என்னும் தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. மத்யமரில் நான் எழுதியது கீழே:

"உனக்கு யார் பானுமதி என்று பெயர் வைத்தார்கள்?" என்று ஒருவர் என்னை கேட்டபொழுது என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் எனக்கு இந்தப் பெயரை வைக்க வேண்டும் என்று யோசித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். 

நான் என் வீட்டில் ஏழாவது குழந்தை, ஐந்தாவது பெண், என்னைப் பெற்றது என் அம்மாவுக்கு ஹை ரிஸ்க் டெலிவரி. அம்மா பிழைத்ததே தெய்வ அனுகிரஹம். குழந்தையின் முகத்தையே ஒரு மாதம் கழித்துதான் பார்த்தாளாம். இப்படியிருக்க எனக்கு என்ன பெயர் வைப்பது என்றெல்லாம் யோசித்திருப்பார்களா என்ன?  என் அக்காக்கள் யாராவது அப்போது பிரபலமாக இருந்த பானு என்று அழைத்திருக்க வேண்டும். பள்ளியில் சேர்த்தபொழுது அது பானுமதி ஆகிவிட்டது. வகுப்பில் எப்போதும் இரண்டு மூன்று பானுமதிகள் இருப்போம். 

இப்போது முதல் பாராவின் கேள்விக்கு வரலாம். "உனக்கு யார்  பானுமதி என்று பெயர் வைத்தார்கள்?" என்ற கேள்விக்கு பதில் இல்லாததால் "ஏன்?" என்று எதிர் கேள்வி கேட்டேன் 

"பானுமதி என்பது துரியோதனின் மனைவியின் பெயர், அந்தப் பெயரை வைக்கக்கூடாது" என்றதும் நான்," பானுமதி என்றால் துரியோதனன் மனைவி என்று ஏன் நினைக்க வேண்டும்? பானு என்றால் சூரியன், மதி என்றால் அறிவு, சூரியனைப் போல் பிரகாசிக்கும் அறிவை உடையவள் என்று எடுத்துக் கொள்ளலாமே? அல்லது பானு என்பதை ஒளி என்று கொண்டால் பானுமதி என்பதற்கு ஒளியுடையவள் என்று அர்த்தம் கொள்ளலாம்" என்றேன். அவர் "உடனே அதெப்படி?" என்கிறார்.
"ஸ்ரீமதி என்றால் செல்வம் உடையவள், வசுமதி என்றால் வளம் உடையவள்(பூமாதேவி) என்றெல்லாம் பொருள் கூறுகிறார்கள், அதனால் பானு என்பதை ஒளி என்று கொண்டால் பானுமதி  என்றால் ஒளி உடையவள் என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும்" என்றேன். 

அன்று முதல் எனக்கு என் பெயர் மிகவும் பிடித்து விட்டது. பானுமதி - ஒளியுடையவள் ஆஹா! எத்தனை பொருள் பொதிந்த பெயர்! அதுவும் எப்படிப்பட்ட ஒளி? தான் மாறாமல், தன் ஓளி எதன் மீது படுகிறதோ அந்தப் பொருளை தன் இயல்புக்கு மாற்றும் தன்மை கொண்டதாம் பானு என்னும் ஒளி என்று வேளுக்குடி கிருஷ்ணன் ஒரு முறை கூறினார். என் பெருமை இன்னும் கூடிவிட்டது. 

எங்களுக்கு மகன் பிறந்த பொழுது, என் கணவர் அவருடைய தந்தையின் பெயரான கிரிஷ்ணமூர்த்தியிலிருக்கும் கிருஷ்ணனோடு  சாயி பக்தர்களானதால்  சாய் என்பதை சேர்த்து சாய்கிருஷ்ணன்  என்னும் பெயரை தேர்ந்தெடுத்து விட்டு, வினு என்று கூப்பிடலாம் என்றார். அதற்கு அவர் கூறிய காரணம் வெங்கடேஸ்வரனில் இருக்கும் வி, பானுவில் இருக்கும் னு இரண்டையும் சேர்த்து வினுவாம். என்னிடம் உன் விருப்பம் என்ன? உனக்கு இந்த பெயர் பிடித்திருக்கிறதா? என்ற ஆலோசனை யெல்லாம் கிடையாது. அது எனக்கு கொஞ்சம் வருத்தம்தான். அதை சொல்லிக்கொண்டே இருந்ததால் மகள் பிறந்த பொழுது பெயரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை என்னிடமே விட்டு விட்டார். 

எனக்கு பொன்னியின் செல்வனில் வரும் நந்தினி கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும். அதனால் நந்தினி என்று பெயர் வைக்க விரும்பினேன். ஆனால் நியூமராலஜி கைகொடுக்காததால் சுபாஷிணி என்னும் பெயரை தேர்ந்தெடுத்தேன். சுபாஷிணி என்றால் இனிமையாக பேசுகிறவள் என்று பொருள். அவள் அப்படிதான். மிகவும் தன்மையாகவும்,இனிமையாகவும் பேசுவாள். கோபத்தில் கூட நிதானமிழந்து வார்த்தைகளை கொட்ட மாட்டாள். 

அவளுடைய முதல் மகள் பிறந்தபொழுது அந்த குழந்தைக்கு சாய் ஷிவானி என்ற பெயரை  அவளுடைய மானார் தேர்ந்தெடுத்தார். காரணம் என் மகள் முதல் முதலாக வங்கியில் வேலை கிடைத்து சென்ற ஊர் திருவண்ணாமலை. திருமணமாகி சில மாதங்கள் அங்குதான் இருந்தாள். அதனாலோ என்னவோ என் மகளுக்கு  திருவண்ணாமலை மீது ஒரு தனி பற்று உண்டு.  குழந்தையின் நட்சத்திரம் சிவனுக்குகந்த  திருவாதிரை. எனவே சாய் ஷிவானி! 

என் மகனுக்கு சென்ற வருடம் சியாமளா நவராத்திரியில் பெண் குழந்தை பிறந்ததால் சரஸ்வதியின் பெயரோடு ஸ்ரீ சேர்த்து இருக்க வேண்டும் என்று நினைத்தோம். சரஸ்வதி அஷ்டோத்திரத்தை  படித்த பொழுது ரிதன்யா என்னும் பெயர் எனக்கு பிடித்தது. அதற்கு முன்பே நான் பேத்தியாக இருந்தால் எங்கள் ஊர் தெய்வமான ஹேமாம்பிகா என்னும் பெயரை வைக்க வேண்டும் என்றும், பேரனாக இருந்தால் ஹேமந்த் என்று பெயரிட வேண்டும் என்றும் நினைத்திருந்தேன்.  அக்ஷரா என்னும் பெயர் என் மருமகளின் பெற்றோர்களுக்குப் பிடித்தது. மருமகளின் தேர்வு நவ்யா. ஆக நான் விரும்பிய ஹேமாம்பிகா, சம்பந்திகளின் தேர்வான அக்ஷரா, என்ற இரு பெயர்களோடு மகன் மருமகளின் விருப்பமான நவ்யா என்பதோடு ஸ்ரீ சேர்த்து நவ்யாஸ்ரீ என்று மூன்று பெயர்களிட்டோம். நவ்யாஸ்ரீதான் அஃபிஷியல்!

பிடித்த பெண் பெயர்கள் 
ஹேமா 
பூர்ணா
அபர்ணா 
ராதிகா  

ஆண் பெயர்கள் 
க்ருத்திவாசன் 
வகுளாபரணன் 
ஆராவமுதன் 

        
 
  
      


                                

Monday, November 29, 2021

நயாகரா

நயாகரா


கனடா என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது நயாகரா நீர்வீழ்ச்சி. கடந்த வெள்ளியன்று அங்கு ஒளியலங்காரங்கள் தொடங்க இருப்பதால் வெள்ளியன்று மதியம் அங்கு சென்றால் சூரிய வெளிச்சத்திலும் நயாகராவை பார்த்து பிரமிக்கலாம், இருட்டிய பிறகு ஒளியலங்காரங்களையும் ரசிக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் வெள்ளியன்று என் அக்கா பேத்திக்கு ஜலதோஷம், லேசான ஜுரம் என்பதால் செல்ல முடியவில்லை, சனிக்கிழமைதான்(27.11.21) செல்ல முடிந்தது. 

நயாகரா நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்பட்டாலும் ஹார்ஸ் ஷூ ஃபால்ஸ், அமெரிக்கன் ஃபால்ஸ், பிரைடல் வெய்ல் ஃபால்ஸ் என்னும் மூன்று நீர்வீழ்ச்சிகளை கொண்டது. நீர் வரத்து அதிகமாக இருக்கும் நாட்களில் ஒரு வினாடிக்கு 225,000 க்யூபிக் ஃபீட் நீர் விழுமாம். சராசரியாக 85000 கியூபிக் ஃபீட்.  இந்த நீர்நவீழ்ச்சியின் பெரும் பகுதி கனடாவிலும், சிறு பகுதி அமெரிக்காவிலும் இருக்கிறது. இந்த இரு நாடுகளையும் ரெயின்போ பிரிட்ஜ் என்னும் ஒரு பாலம் இணைக்கிறது.  இங்கிருக்கும் நீர்மின் நிலையம் கனடாவின் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. 

அதுவும் சனியன்று நயாகரா செல்லலாம் என்று காலை பதினோரு மணிக்குத்தான் முடிவெடுத்தோம். எனவே நினைத்தது போல் சீக்கிரம் கிளம்ப முடியவில்லை. நயாகராவை அடைந்த பொழுதே மாலை ஐந்து மணி ஆகி விட்டது. இப்பொழுதெல்லாம் மாலை நாலரைக்கே இருட்டத் தொடங்கி விடுகிறது. ஐந்து மணிக்கு நல்ல இருட்டாகி அங்கு விளக்கு அலங்காரங்கள் ஒளிரத் தொடங்கி விட்டன. அருவிக்கு அருகில் வாண வேடிக்கைகளும் தொடங்கி விட்டன.

அருவியை அருகில் சென்று பார்த்தோம். வழியெங்கும் விளக்கு அலங்காரங்கள், செல்ஃபி எடுத்துக் கொள்ள ஸ்டாண்டுகள். 

 






















சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால் அவர்களை கவர்ந்திழுக்கும் பல அம்சங்கள், கேசினோ எனப்படும் சூதாட்ட கேளிக்கை விளையாட்டுகள் நிறைய இருப்பதால் அந்த வீதியே ஜொலிக்கிறது. என்னதான் செயற்கை வெளிச்சத்தில் குளித்தாலும் பகல் வேளையில் பாக்கும் பொழுதுதான் அதன் பிரும்மாண்டத்தை உணர முடியும் என்பது என் மகளின் கருத்து. உணர்ந்தால் உங்களோடு பகிர்வேன்.