கனவு பலித்தது
கணம்தோறும் பிறக்கிறேன்
Saturday, April 15, 2023
கனவு பலித்தது
Wednesday, April 12, 2023
பிரார்த்தனை, நேர்த்திக் கடன்
பிரார்த்தனை, நேர்த்திக் கடன்
ஆனால் நாம் எப்போதும் பத்தாம் வகுப்பு மாணவியாகவே இருந்துவிட முடியுமா என்ன? வளர, வளர நாம் எதிர்கொள்ளும் தோல்விகள், நிராசைகள், சந்திக்கும் துக்கங்கள் நம்மை வேண்டிக்கொள்ளத்தான் தூண்டுகின்றன. என்னுடைய பிரார்த்தனைகள் பெரும்பாலும் கோவிலுக்கு நடந்து செல்வது, எனக்கு பிரியமான ஏதாவது ஒன்றை அந்தக் காரியம் நடக்கும்வரை விட்டுக் கொடுப்பது என்றுதான் இருக்கும்.
என் மகன் சி.ஏ. தேர்வில் இரண்டாம் முறையும் தோற்றப் பொழுது மிகவும் மனமுடைந்து போய், “இனிமேல் என்னால் பரீட்சை எழுத முடியாது, நான் வேலைக்குச் செல்கிறேன்” என்றான். என் மகன் பட்டப் படிப்பு முடித்து விட்டுதான் சி.ஏ.வில் சேர்ந்தான். லயோலாவில் அவன் கோல்ட் மெடலிஸ்ட்! அவன் பள்ளித் தோழர்களில் பலர் ப்ளஸ் டூவிற்குப் பிறகு இஞ்ஜினீயரிங்க் முடித்து வேலையிலும் அமர்ந்து விட்டது அவனுக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை தந்தது.
அப்போது எனக்கு, அவன் சி.ஏ.வில் தேர்ச்சி அடையும் வரை நமக்கு பிடித்த ஏதாவது ஒன்றை விடுகிறேன் என்று ஷிர்டி பாபாவிடம் வேண்டிக் கொள்ளலாம் என்று தோன்றியதால் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் எது என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
சாப்பாட்டு விஷயத்தில் இதுதான் பிடிக்கும், இது பிடிக்காது என்பது கிடையாது. சாக்லேட் கொஞ்சம் அதிகமாக பிடிக்கும். ஆனால் எல்லாவற்றையும் விட ரொம்ப ரொம்ப பிடித்தது புத்தகங்கள் படிப்பதுதான். அதிலும் கதைகள் படிக்க மிகவும் பிடிக்கும். எனவே, என் மகன் சி.ஏ.முடிக்கும் வரை கதைகள் படிப்பதில்லை என்று முடிவு செய்தேன். அப்போது பார்த்து பாலகுமாரன் ஃபோன் செய்து, “நான் கங்கை கொண்ட சோழன் என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். படித்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல். நீ நல்ல ரீடர், நன்றாக இருந்தால் நன்னா இருக்கு என்பாய், நன்றாக இல்லாவிட்டால், நன்றாக இல்லை என்று சொல்லி விடுவாய்” என்கிறார். எப்படி இருக்கும் எனக்கு? “கொஞ்ச நாள் கதைகள் படிக்க வேண்டாம் என்று இருக்கிறேன் சார்” என்றேன் கொஞ்சம் வருத்தத்தோடு.
என் மகள், “இவ்வளவு பெரிய ரைட்டர் உன்னிடம் அபிப்ராயம் கேட்பதெல்லாம் சாதாரணமான விஷயம் கிடையாது. நீ கண்டிப்பாக அந்த புத்தகத்தை படித்து அதைப் பற்றி அவரிடம் சொல்லத்தான் வேண்டும்” என்று கூறி எனக்கு ‘கங்கை கொண்ட சோழன்’ எல்லா பகுதிகளையும் வாங்கித் தந்தாள். என் மகனும் அந்த முறை சி.ஏ.வில் தேர்ச்சி அடைந்து விட்டான். நான் கங்கை கொண்ட சோழன் புத்தகத்தை படித்து முடித்து, பாலகுமாரனிடம் அதைப் பற்றிய என் கருத்தை பகிர்ந்து கொண்டேன்.