கணம்தோறும் பிறக்கிறேன் 

Showing posts with label POTW. Show all posts
Showing posts with label POTW. Show all posts

Friday, October 9, 2020

மைக் மேனியா

மைக் மேனியா 

மூன்று வாரங்களுக்கு முன்பு முகநூலின் மத்யமர் குழுவில் ஒரு விவாதத்தில்  பேசும் வாய்ப்பு கிடைத்தது. இங்கு மத்யமர் என்றால் என்ன என்று கூறி விடுகிறேன். முக நூலில் இருக்கும் எத்தனையோ குழுக்களில் மத்யமாறும் ஒன்று. சங்கர் ராஜரத்தினம் என்பவரால் தொடங்கப்பட்டு இப்போது 30000 உறுப்பினர்களோடு சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. வெறுமனே முகநூலில் அரட்டை அடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் சமூக சேவைகளும் செய்து வருகிறார்கள்.  ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பு கொடுத்து எழுதச் சொல்வார்கள். சிறந்த படைப்புகளுக்கு போஸ்ட் ஆஃப் தி வீக் என்று சான்றிதழ் வழங்குவார்கள். நம் ரஞ்சனி நாராயணன் நிறைய POTW வாங்கியிருக்கிறார்.  நானும் இந்த வருடத்தில்  இதுவரை நான்கு POTW வாங்கியிருக்கிறேன். இதைத்தவிர தனித்திறமை, குழுத்திறமை, நாடகம், கவிதை என்றெல்லாம் நடத்தி  பரிசுகள் வழங்குகிறார்கள். சமீபத்தில் புதன் கிழமைகளில் மத்யமர் சபா என்று விவாதங்கள் நடத்துகிறார்கள். அதில்தான் நான் பங்கு கொண்டு பேசினேன். 

இந்த மத்யமர் சபாவில் மூன்று வாரங்களுக்கு முன்பு நம் சமுதாயத்தில் ஆணாதிக்கம் முடிந்து பெண்ணாதிக்கம் தொடங்கி விட்டது, இல்லை இன்னும் ஆணாதிக்கம்தான் தொடர்கிறது என்று பேச விருப்புகிறவர்கள் பெயர் கொடுக்கலாம் என்றார்கள். அடுத்த நாள் திரு.சங்கர் ராஜரத்தினம் அவர்கள், "என்னது பெண்ணாதிக்கம் தொடங்கி விட்டது என்று பேச யாருமே பெயர் கொடுக்கவில்லையே, அவ்வளவு பயமா?" என்று கேட்டிருந்தார். நான் உடனே," யாருமே முன்வரவில்லையென்றால் நான் பேசுகிறேன் என்று செய்தி அனுப்பினேன். உடனே, "நீங்கள் என்ன பேச நினைக்கிறீர்கள் என்பதை சுருக்கமாக ஒரு நிமிட ஆடியோவாக எடுத்து அனுப்புங்கள்" என்றார்கள். அதன்படி செய்து தேர்ந்தெடுக்கப் பட்டேன். 

அதில் இன்னும் ஆணாதிக்கம்தான் நீடிக்கிறது என்று கலிபோர்னியாவிலிருந்து பேசிய ஒரு பெண்மணி வெளுத்து வாங்கினார். அவர் வீட்டில் மகன், மருமகள்  இருவருமே ஐ.டி.யில் பணிபுரிந்தாலும், மகன் காலையில் பேப்பர் படித்துக் கொண்டிருக்க, மருமகள் அடுப்பங்கரையில் பிசியாக இருப்பாளாம். மாலை அலுவலகத்திலிருந்து வந்ததும் மகன் செல்போனுடனும், ரிமோட்டுடனும் சோபாவில் செட்டிலாகி விட, மருமகள் அவன் தேவைகளை பார்த்து பார்த்து நிறைவேற்றுவாளாம். கோபம் அதிகமாகும் பொழுது மகனின் கை நீளுமாம். இப்படி அதிரடியாக பேசினார். பின்னூட்டங்களில் கூட அவருக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. 

அதே ஆண்டி மறு நாள், " ஐயையோ! என் மகன் தங்கம். வீட்டு வேலைகளை மகன்,மருமகள்  இருவரும் பகிர்ந்துதான் செய்வார்கள்.  நான் என் வாதத்திற்கு வலு சேர்க்க உதாரணம் கொடுப்பதற்காக என் மகனை பயன்படுத்திக் கொண்டு விட்டேன். என் மகனும்,மருமகளும் இதை ஈசியாக எடுத்துக் கொண்டாலும் மற்ற உறவினர்களுக்கு என் மீது ரொம்ப கோபம். எங்கள் சம்பந்தியும் மத்யமரில் இருக்கிறார் அவர் என்ன நினைத்துக் கொள்வார்? தயவு செய்து நான் செய்த தவறை மற்ற பேச்சாளர்கள் இனிமேல் செய்யக் கூடாது என்று விரும்புகிறேன் என்று அந்தர் பல்டி அடித்து விட்டார். ஆண்டியின் ஆண்ட்டி க்ளைமாக்ஸ் எப்படி?     

சிலருக்கு மைக்கை கையில் எடுத்து விட்டால் கீழே வைக்கத் தெரியாது, சிலருக்கு என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? என்பதே தெரியாது. எல்லாம் மைக் மேனியா!