கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, February 12, 2024

கர்னாடகா யாத்திரை - 2

கர்னாடகா யாத்திரை – 2 

இடகுஞ்சி மஹாகணபதி கோவில் முன்பு


கோகர்ணத்தில் தரிசனத்தை முடித்துக் கொண்டு, அடுத்த இடகுஞ்சி மஹாகனபதி கோவிலை தரிசித்துக் விட்டு முருடேஷ்வர் செல்ல வேண்டும் என்பது ஒரிஜினல் திட்டம். ஆனால், கோகர்ணத்திலிருந்து கிளம்பவே நேரமாகி விட்டதால் நேராக முருடேஷ்வர் சென்று விட்டோம். 

முருடேஷ்வர் கோவில் முகப்பு 




முருடேஷ்வர் கோவில் கோபுரம் இரவில்



முருடேஷ்வர் கோவில் கோபுரம் பகலில்

சக பயணிகள் திருமதி புவனா & திருமதி வசந்தா

பஸ்ஸிலிருந்து க்ளிக்கியது 

முருடேஷ்வர் கோவில் கோகர்ணத்தைப் போல் அவ்வளவு புராதனமானது இல்லை 500 வருட பாரம்பரியம் மட்டுமே உண்டு என்று சிலர் கூறுகிறார்கள், ஆனால் கோகர்ணம் கோவில் தல புராணத்தோடு சம்பந்தப்பட்டிருகிறது.

சிவபெருமானிடமிருந்து பெற்று வந்த ஆத்ம லிங்கத்தை, சிறு பையனாக வந்த விநாயகர் தந்திரமாக கீழே வைத்ததும், அதை பெயர்த்தெடுக்க முயலும் ராவணன் லிங்கத்தின் மேல் இருந்த கவசங்களை கழற்றி வீசி எறிகிறான். அவை விழுந்த இடங்களுள் முருடேஷ்வரும் ஒன்று. சமீப காலத்தில், பெரிய சிவன் சிலை அமைத்த பிறகு, இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக படகு சவாரி, வாட்டர் ஸ்கீய்ங் போன்ற பல விஷயங்கள் இருக்கின்றன. கோவில் பிரும்மாண்டமாகவும், நவீனமாகவும் இருக்கிறது. அதே சமயத்தில் தெய்வீகத்திற்கும் குறைவில்லை. 



நாங்கள் சென்ற பொழுது அர்த்தஜாம பூஜை முடிந்து நடை அடைக்கும் நேரம். அப்போது நடக்கும் சீவேலியை காணும் பாக்கியம் கிடைத்தது. சீவேலி முடிந்து கண்குளிற ஸ்வாமி தரிசனம் செய்து, வெளியே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். ஆனாலும், பெரிய கோபுரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் லிஃப்டில் ஏறி பார்க்க முடியாத குறை பலருக்கு இருந்தது. நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு எதிரில் கடற்கரை. ஆனால் அங்கிருந்து சிவன் சிலையின் பின் புறத்தைதான் பார்க்க முடிந்தது. நேர் தோற்றம் கிடைக்கவில்லையே என்பது என் வருத்தம். 

மறு நாள் அதிகாலையில் இடகுஞ்ஜி விநாயகரை தரிசிக்க கிளம்பினோம். பஸ்ஸை கோவிலுக்கு சற்று தொலைவிலேயே நிறுத்தி விட்டு, நடந்து செல்ல வேண்டும். கோவிலைச் சுற்றியுள்ள இடங்கள் விஸ்தாரமாக இருந்தாலும், பிரதான கோவில் சிறியதுதான். இடம் என்றால் இடது புறம், குஞ்ஜி என்றால் தோட்டம், ஷராவதி நதிக்கு இடது புறம் அமைந்துளதால் இடகுஞ்சி என்று பெயராம். விநாயகரின் தோற்றம் வித்தியாசமாக இருக்கிறது. சாதாரணமாக விநாயகருக்கு நான்கு கரங்கள்(தும்பிக்கையை சேர்த்து ஐந்து) இருக்கும், இங்கு விநாயகருக்கு இரண்டு கரங்கள்தான். இடது கையில் மோதகமும், வலது கையில் தாமரை மலரும் ஏந்தி, நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். வாமன ரூப என்பதற்கு ஏற்ப கால்கள் குட்டையாக இருக்கின்றன. விநாயகர் மிகவும் வரப்பிரசாதியாம். இவரிடம் நாம் எதற்காக வேண்டிக் கொள்கிறோமோ அந்த காரியத்தை கட்டாயம் நிறைவேற்றிக் கொடுப்பாராம், நம் வேண்டுதல் நிறைவேறியதும், அவரை தரிசித்து, ஐந்து ரூபாயோ, பத்து ரூபாயோ காணிக்கை செலுத்தினால் போதுமாம்.

நாங்கள் சென்ற நேரம் காலை அபிஷேகம் துவங்கும் நேரம். எங்கள் குழுவில் எல்லோரும் ஸ்வாமியை தரிசித்துக் கொண்டு வெளியே வந்து விட்டோம். ஒரு தம்பதியினர் மட்டும் வராததால் அவர்களுக்காக காத்திருந்த நேரத்தில் எங்களுக்கும் பால் அபிஷேகம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. மனம் குளிர தரிசித்தோம். 

ஹோட்டலுக்குத் திரும்பி, பகலுணவு முடித்துக் கொண்டு, கடற்கரையில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, கொல்லூர் நோக்கி சென்றோம். 

தல புராணம்: 

துவாபர யுகத்தின் முடிவில் கிருஷ்ணர் இந்த பூவுலகத்தை விட்டு, தன் இருப்பிடத்திற்கு திரும்ப முடிவு செய்திருப்பதை உணர்ந்த முனிவர்கள் கலியுகம் பிறக்கப் போவதை அறிந்து அச்சம் கொள்கிறார்கள். அதன் தீமைகளிலிருந்து விடுபட கிருஷ்ணரின் உதவியை நாடி, வால்கில்ய முனிவர் கர்நாடகாவின் ஷராவதி நதிக்கரையில் குஞ்சவனத்தில் யாகங்கள் செய்யத் தொடங்கினார். ஆனால் அதில் பலவிதமான தடைகள் வரத் தொடங்க நாரதரின் உதவியை நாடுகிறார். அவர் விநாயகரை வழிபடச் சொல்கிறார். வாலகில்ய முனிவரின் வேண்டுகோளை ஏற்று நாரதரும், மற்ற முனிவர்களும் சேர்ந்து தேவதீர்த்தம் என்னும் ஏரியை உருவாக்குகிறார்கள். அவர்கள் விநாயகரை துதித்து, பார்வதியிடம் விநாயகரை அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறார்கள். விநாயகரும் அவர்கள் கோரிக்கையை ஏற்று, அங்கே வர இசைகிறார். அதுவே இடகுஞ்சி ஆகும். அந்த சமயத்தில் மேலும் ஒரு ஏரி உருவாக்கப்பட்டு விநாயக தீர்த்தம் என்று பெயரிடப்படுகிறது. விநாயகர் இன்றும் தன்னை வழிபடுவோரின் இன்னல்களை தீர்த்து வருவது கண்கூடு.