கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, August 6, 2017

சில செய்திகள், சில எண்ணங்கள்

சில செய்திகள், சில எண்ணங்கள் 


வரதக்ஷனை கேட்டு தன்னை கொடுமை படுத்தினார்கள் என்று ஒரு பெண் புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்ட கணவன்,மற்றும் அவன் வீட்டாரை உடனே கைது செய்து சிறையில் அடைக்கலாம் என்று சட்டம் இயற்றப் பட்ட பொழுது, சோ மட்டுமே அதை கண்டித்தார்.
"இதனால் தனிப்பட்ட விரோதம் காரணமாக ஒரு பெண் மாமனார், மாமியாரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு புகார் கொடுத்தால் அப்பாவியான அவள் கணவனும், அவன் பெற்றோரும் தண்டிக்கப் படக்கூடும்" என்றார். ஆனால் அப்படி பெரும்பாலும் நடக்காது. 


வரதக்ஷனை கொடுமைக்காக பல பெண்களின் புகுந்த வீடுகளில் ஸ்டவ்கள் வெடித்ததால்தான் அப்படி ஒரு சட்டம் இயற்றப் பட்டது. நம் பாரத நாரிகள் கணவனோ, மாமியாரோ அவளை கொளுத்தினால் கூட, இறக்கும் தருவாயில் அவளிடம் வாக்குமூலம் வாங்க காத்திருக்கும் போலீசிடம், "என் கணவருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இது ஒரு விபத்துதான்' என்று கூறி ராமன்களை(??)மன்னிக்கும் சீதைகளாக இருந்ததால், குற்றவாளிகள் என்று நன்றாக தெரிந்தாலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருந்தது. அதற்காகத்தான் வரதக்ஷனை கொடுமைகளில் சம்பந்தப் பட்டவர்களை விசாரணை இல்லாமல் கைது செய்யலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டது. அது மீண்டும் மாற்றப்பட்டு விட்டது.


மனிதர்களுக்கு காதல் உணர்வை தூண்டுவது மூளையில் சுரக்கும் டோபோமைன் என்னும் ஹார்மோனம். காதல் உணர்வு கம்மியாக இருப்பவர்களுக்கு இந்த டோபோமைனை ஊசி மூலம் செலுத்தினால் காதல் உணர்வு அதிகரிக்குமாம். நம் நாட்டை பொறுத்த வரை டோபோமைன் சுரக்காமல் இருக்க மருந்து கண்டு பிடிக்கலாம். 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியில் ஒரு பெண்ணை விசாரித்த லட்சுமி ராமகிருஷ்ணனிடம் அந்தப் பெண்,"பிளஸ் டூ படிச்சேன்,லவ் பண்ணினேன்" என்று கூற,லட்சுமி ராமகிருஷ்ணன்,"லவ் பண்ணியது இருக்கட்டும், வேற என்ன உருப்படியா பண்ணின?" என்றார். அதைப் போல நம் ஊர் இளைஞர், மற்றும் இளம்பெண்களை இந்த காதல் படுத்தும் பாடு இருக்கிறதே..! பாருங்கள் வாரா வாரம் ஓட்டுக்களை குவித்த ஓவியா  பிக் பாஸிலிருந்து வெளியேற காதல்தானே காரணம்!(அட சட்! பி.பி.யை தவிர்க்க முடியவில்லையே..!)


அதே போல தவிர்க்க முடியாத வேறு சில விஷயங்கள்  ஜி.எஸ்.டி., நீட் தேர்வு. ஜி.எஸ்.டி. பற்றி பேச எனக்கு ஞானம் பத்தாது. நீட் தேர்விலிருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தினசரி தொலைக்காட்சியில் கதறுகிறவர்கள் எல்லோரும், சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம், ஸ்டேட் போர்ட் பாடத்திட்டம் என்று ஏதோ சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் அதிகமாக கற்பிக்கப்படுவது போலவும், ஸ்டேட் போர்ட் பாடத்திட்டத்தில் ஒன்றுமே கற்பிக்கப் படுவதில்லை போலவும் பேசுகிறர்கள். உண்மையில் சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.சி., ஸ்டேட் போர்ட் எல்லாமே ஒரே பாட திட்டம்தான், கற்பிக்கப்படும் முறைதான் வேறு. முதல் இரண்டு போர்டுகளின் கல்வி முறை  ஒரு நிலத்தை ஆழ உழுவதற்கு சமம் என்றால், ஸ்டேட் போர்ட் கல்வி முறை அதே நிலத்தை அகல உழுவதற்கு சமம்.

ஸ்டேட் போர்டில் கிராம புறத்து மாணவர்கள் கல்வி கற்க எளிதாக இருக்க வேண்டும் என்று சொல்லி,ஒரு புறம் பாடத்திட்டத்தை நீர்த்து போக செய்து விட்டு, மறுபுறம் மதிப்பெண்களை அள்ளிப் போட்டு வாங்கும் மார்க்குகளுக்கு மரியாதை இல்லாமல் செய்து விட்டார்கள். வட மாநில பல்கலைக்கழகங்களில் தமிழ் நாட்டில் படித்து ஒரு மாணவன் 90 சதவிகிதம் பெற்றால் அதிலிருந்து 10மார்க்குகள் குறைவாகத்தான் மதிப்பிடுவார்கள். அதற்காகத்தான் ஒரு பொது தேர்வு நடத்தி அதன் மூலம் மாணவர் சேர்க்கை நடை பெறுகிறது. அதே முறையை மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கும் கடை பிடிப்பதில் என்ன தவறு? இவர்கள் பாட முறை எதையும் மாற்ற வேண்டாம். ஸ்டேட் போர்ட் தரத்தை உயர்த்த வேண்டுமென்றால் இரண்டு விஷயங்கள் செய்தால் போதும். ஒன்று, புத்தகத்தில் இருக்கும் அதே கேள்வியை நம்பரைக் கூட மாற்றாமல் கேட்பதை நிறுத்த வேண்டும். இரண்டாவது மதிப்பெண்களை அள்ளிப் போடுவதை குறைக்க வேண்டும். இவை இரண்டையும் செய்தாலே தரம் தன்னால் உயர்ந்து விடும்.