கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, June 4, 2022

அழகே உன்னை ஆராதிக்கிறேன்

அழகே உன்னை ஆராதிக்கிறேன்

மனிதர்கள், விலங்குகள் பறவைகள், தாவரங்கள் எல்லாவற்றிர்க்கும் அழகு இருப்பது போல் ஊர்களுக்கும் அழகு உண்டு. 

ஒரு இடம் இயற்கையாக அமைந்த விதத்தால் உண்டாகும் அழகு, நிர்மாணிக்கப்பட்ட விதத்தில் உண்டாகும் அழகு என இரண்டு வகை அழகுகள் உண்டு. 

மலை வாசஸ்தலங்கள் இயற்கை அழகில் மிளிரும். அப்படி பல மலைகள் இருந்தாலும் ஊட்டியைத்தானே 'மலைகளின் ராணி' என்கிறோம். அதன் அழகு அப்படிப்பட்டது. 

நான் பார்த்தவரை அழகான ஊர்கள் என்றால் திருச்சி, மதுரை, புனே, மைசூர், டில்லி, மஸ்கட் இவைகளைச் சொல்வேன். 



இப்போது திருச்சிக்கு செல்லும் பொழுதெல்லாம் நாம் பிறந்து வளர்ந்த திருச்சி இதுவல்ல என்று தோன்றும். என் சிறு வயதில் நகரத்தின் நடுவிலேயே வயல்கள் இருக்கும். இப்போது கரூர் டர்னிங்கிலிருந்து பிரிந்து ஒரு ரோடு தில்லை நகருக்கு முன்னால் வந்து சேருகிறதே அவையெல்லாமே வயல்கள்தான். காவேரிப்பாலம் தாண்டி விட்டால் வயல்களும், தோப்பும் துரவுமாக ஒரே பசுமை!

கோட்டை ஸ்டேஷனுக்கு செல்லும் பாதையில் நரிக்குறவர்களின் கூடாரம் இருக்கும். அங்கு இரவில் வெட்டவெளியில் அடுப்பு மூட்டி அவர்கள் சமைக்கும் நெருப்பு, மரத்தில் கட்டப்பட்ட தூளிகளில் ஆடும் குழந்தைகள்... ஒரு ஓவியம் போல இன்னும் என் மனதில் இருக்கிறது. 

ஒரு நகரத்தின் சௌகரியம், கிராமத்தின் அமைதி, அழகு இதுதான் திருச்சியாக இருந்தது. நவீனமயமாக்குதலில் இவை எல்லாம் மாறி விட்டன. 




பின்கொசவம் வைத்த புடவை கட்டிக்கொண்டு, தலையை பிச்சோடா போட்டு, பூவைத்துக் கொண்டிருக்கும் மாத்வ பெண்மணியைப் போன்ற அழகு மதுரைக்கு என்று லா.ச.ரா. எழுதியிருப்பார்.   எனக்கு மைசூர் அப்படித் தோன்றும். கோவிலை மையமாகக் கொண்டு வாஸ்து சாஸ்திரப்படி அமைக்கப்பட்ட எதினிக் சிட்டியான மதுரை ஸ்மார்ட் சிட்டி ஆவதற்காக இப்போது நிறைய மாறி விட்டது என்கிறார்கள். மைசூர் மாறியிருக்காது என்று நினைக்கிறேன். 



பெங்களூர், புனே, டில்லி எல்லாமே பெருகி வரும் மக்கள் தொகை, அதிகரித்து வரும் வாகன நெரிசல் இவைகளை சமாளிக்க மேம்பாலங்கள் கட்டவும், மெட்ரோ ரயிலுக்காகவும் பல மரங்களை இழந்து புது கோலத்தை ஏற்றிருப்பது காலத்தின் கட்டாயம். எப்படி இருந்தாலும் அழகான ஊர்கள்தான். 

வெளிநாடுகளில் மக்கள்தொகை குறைவாக இருப்பதாலோ என்னவோ பழைய அழகை இழக்காமல் வளர்வது சாத்தியமாகிறது. அங்கெல்லாம் சில இடங்களில் நகரம் நியூ சிட்டி, ஓல்ட் சிட்டி என்று இரண்டு பகுதிகளாக இருக்கும். ஓல்ட் சிட்டி பழமையை அப்படியே மெயின்டெய்ன் பண்ண, நியூ சிட்டி அடுக்கு மாடி குடியிருப்புகளோடு நவீனமாக இருக்கும். 

 
கண்டாப் பீச் - மஸ்கட் 

பாலைவனமான மஸ்கட், துபாய் போன்றவை பார்த்து பார்த்து அழகூட்டப்பட்டிருப்பது சந்தோஷம் அளிக்கும் விஷயம். ஓமானில் மன்னராக இருந்த சுல்தான் காபூஸ் அவர்களுக்கு அழகுணர்ச்சி அதிகம். பால்கனியில் 
கொடியில் தொங்கும் துணிகள் பார்வைக்கு நன்றாக இருக்காது என்பதால் அங்கு கலர்கலராக துணிகளை பால்கனியில் உலர்த்த முடியாது. அதே போல் ஏ.சி.யிலிருந்து வெளியேறும் தண்ணீர் சுவற்றில் வழிந்து கறை உண்டாக்கு -வதையும் அனுமதிக்க மாட்டார்கள்.  அங்கிருக்கும் கடற்கரைகளையும் மிக அழகாக்கி விட்டார்கள். 
 






சமீபத்தில் தன் அழகால் என்னைக் கவர்ந்த ஊர் மாண்ட்ரியால். அங்கிருக்கும் கலைநயமிக்க பிரும்மாண்டமான கட்டிடங்களும், வயலும், ஆறும் மனதை கொள்ளை கொண்டன. 

முகநூலில் பெண் சக்தி என்னும் குழுவில் 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்' என்ற தலைப்பில் கட்டுரை கேட்டிருந்தார்கள், அதற்கு நான் எழுதிய கட்டுரை இது.

Sunday, May 29, 2022

சூடாக ஒரு கப் டீ!

சூடாக ஒரு கப் டீ!


காலை எழுந்தவுடன் சூடாக அருமையான ஃபில்டர் காபி குடித்த வாயோடு மத்யமரில் உமா சஷிகாந்தின் டீ பற்றிய பதிவை குடித்தேன் , சாரி ஃபார் த  டங்க் ஸ்லிப் படித்தேன். சிறிது நேரத்திலேயே அருணா ரகுராமனின் டீ பற்றிய பதிவு. என் பங்கிற்கு ஒரு கப் சாய்!

என்ன இருந்தாலும்  மதராஸிகளிடம் காபியா? டீயா? என்று கேட்டால் காபி என்றுதான் கூறுவோம். திராவிட மாடல்! அதுவும் வீட்டில். மாடு இருந்து, கறந்த பாலில் காபி குடித்து பழகிய என்னைப் போன்றவர்கள் காபி பிரியர்களாகத்தானே இருக்க முடியும்?

ரயில் பயணங்களில் தமிழ் நாடு எல்லையைத் தாண்டினால் காபி கிடைக்காது. திரும்பி வரும் பொழுது "காபி காபி.." என்னும் குரல் கேட்டால் இன்பத்தேன் வந்து பாயும் காதினிலே.

எங்கள் வீட்டில் டீ வாங்கியதே இல்லை. அப்போதெல்லாம் டீ என்றால் ஒரு சின்ன சாஷேயில் கட்டி தொங்கவிடப் பட்டிருக்குமே அதுதான். எங்கள் உறவில் இரண்டு பெண்மணிகள் மஹா பெரியவரின் பக்தைகள். அவர் காபி குடிக்க கூடாது என்று சொன்னதால் காபியை துறந்து டீயை பற்றிக் கொண்டவர்கள்.  அவர்கள் மற்றவர்கள் வீடுகளுக்குச் செல்லும் பொழுது டீ பாக்கெட்டுகளோடு டீ வடிகட்டியும் கொண்டு வந்து விடுவார்கள்.

என் மூன்றாவது அக்கா கருவுற்றிருந்த பொழுது அவளுக்கு காபி பிடிக்கவில்லை, டீ குடிப்பாள். அப்போதுதான் எங்கள் வீட்டில் டீ வாங்க ஆரம்பித்தோம். எனக்கும் இதே கதை.  கருவுற்றிருந்த பொழுது காபி ஒரு துளி கூட உள்ளே தங்காது. அப்போதுதான் டீ குடிக்க ஆரம்பித்தேன். இருந்தாலும் நான் போடும் டீ எனக்கு அவ்வளவு திருப்தி தந்ததில்லை. பலவிதமான காம்பினேஷன்கள் முயற்சி பண்ணினேன். 

மஸ்கட்டில் இருந்த பொழுது சிலோன் டீ என்று கிடைக்கும் பிராண்ட்தான் என் சாய்ஸ். இந்தியா திரும்பிய பிறகு நட்ஸ் & ஸ்பைஸில் கிடைக்கும் ஒரு பிராண்ட் டீ நான் போட்டால் கூட நன்றாக இருக்கும். 

ஒரு முறை பெங்களூர் மால் ஒன்றில் சாய் பாய்ண்ட் என்னும் டீக்கடையில் என் மகன் இஞ்சி டீ வாங்கித் தந்தான். லோட்டா போன்ற பெரிய கப்பில் வந்த சூடான, காரமான அந்த டீயை குடிப்பதற்குள் வியர்த்து, விறுவிறுத்து விழி பிதுங்கினேன்.

டீயோடு கொஞ்சம் பூஸ்ட் அல்லது கோகோ சேர்த்த பூஸ்ட் டீ எனக்கும் என் மகளுக்கும் பிடிக்கும். 

தோழி ஒருத்தி லைட்டான டீ டிகாஷனில் பனங்கல்கண்டு சேர்த்து தந்த பிளாக் டீ அருமையாக இருந்தது. நானும் அவ்வப்பொழுது அந்த பிளாக் டீ குடிப்பதுண்டு. அதில் புதினா இலைகளும் போடலாம்.

லெமன் டீ குடித்தால் உடல் இளைக்குமாம். கொழுப்பு குறைகிறதோ இல்லையோ, சில நாட்கள் கேரா இருக்குமே, அப்போது லெமன் டீ நல்ல பரிகாரம். 

டில்லியில் எங்கள் சம்பந்தி வீட்டில் வேலை செய்யும் பெண்மணி டீயில் கொஞ்சமாக உப்பு சேர்த்து அருந்துவார்.

டீயை குடிப்பதற்கு மட்டுமல்லாமல், தலைக்கு ஹேர் பேக் போடவும் பயன்படுத்துவார்கள்.

சரித்திரத்தில் ஒரு முக்கியமான சம்பவம் அமெரிக்க சுதந்திர போரோடு சம்பந்தப்பட்ட பாஸ்டன் டீ பார்ட்டி என்னும் நிகழ்வு.


ஜப்பானிய கலாசாரத்தில் சனோயூ அல்லது சாடோ எனப்படும் க்ரீன் டீ தயாரித்து வழங்கும் தேநீர் சடங்கு ஒரு முக்கியமான விஷயம். இதற்கு நிழலில் வளர்க்கப்பட்டு, நிழலிலேயே உலர்த்தப்பட்ட மாச்சா என்னும் பச்சை நிற தேயிலைத்தூளே பயன்படுத்தப் படும். 

கனடாவில் டொரொண்டோவில் ஒவ்வொரு வருடமும் ஜனவரியில் தேநீர்த் திருவிழா கொண்டாடப்படுமாம். பலவிதமான தேநீரை அங்கே சுவைக்க முடியுமாம். ஆனால் மூன்று வருடங்களாக கொரோனா காரணமாக அந்நிகழ்ச்சி நடைபெறவில்லை. கனடாவில் சில மால்களில் 'சாய் டீ' என்ற அறிவிப்பை பார்த்தேன். இங்கே இருப்பவர்கள் தேநீரில் பால் சேர்க்காமல்தான் அருந்துவார்கள். பால்சேர்த்த இந்திய தேநீர் தான் சாய் டீ என்ற விளக்கம் கிடைத்தது.

நம் நாட்டில் அஸ்ஸாமிலும் நவம்பரிலிருந்து ஜனவரிக்குள் இப்படி ஒரு டீ ஃபெஸ்டிவல் உண்டு.

பிரிட்டிஷ் கலாசாரத்தில் முக்கியமானது 'ஹை டீ'. இதில் ஸ்பைஸி உணவுகளோடு டீ பரிமாறப்படும். உணவை விட அரட்டையும், உரையாடலும் முக்கியம் என்றாலும் எந்த விதமான பாத்திரங்களை பயன்படுத்தவேண்டும், எப்படிப்பட்ட மேஜை விரிப்புகள், திரைச்சீலைகள் இருக்க வேண்டும் என்று  பலவித கோட்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு தங்கள் அந்தஸ்தை வெளிப்படுத்தும் விஷயமாக ஆனது. 

ஒரு கப் சாறோடு உலகத்தையே சுற்றி  விட்டேன் போலிருக்கிறது. 



என் தளத்திற்கு வருகை தந்து படிக்கப் போகும் அனைவருக்கும் நன்றி. பிளாக்கர் பிரச்சனையினால் கருத்திட முடியவில்லை. மன்னிக்கவும் 🙏🙏