கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, December 3, 2022

ஸ்ரீ திருமலாகிரி லக்ஷ்மிவெங்கடேஸ்வரஸ்வாமி கோவில் ஜே.பி.நகர், பெங்களூர்

 ஸ்ரீ திருமலாகிரி லக்ஷ்மிவெங்கடேஸ்வரஸ்வாமி கோவில் 
ஜே.பி.நகர், பெங்களூர் 


சமீபத்தில் மத்யமர் மூலம் அறிமுகமானவர்களில் ஒருவர் ரேவதி ஜானகிராமன். இந்தியன் வங்கியில் உயரதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கலகல, பரபர, சுறுசுறு வார்த்தைகளுக்கு சொந்தக்காரர். பெங்களூரில் எங்கள் வீட்டிற்கு கொஞ்சம்  அருகாமையில் இருக்கிறார். ஓலா ஆட்டோவில் சென்றால் ரூ,130 ஆகும். 

சென்ற வாரம் சந்தித்தப் பொழுதே கோவில்கள் எங்காவது சேர்ந்து செல்லலாம் என்றார்.  "3.12.22, சனிக்கிழமை, ஏகாதசி இரண்டும் சேர்ந்து வருகிறது, கார்த்திகை மாதத்து ஏகாதசியை குருவாயூர் ஏகாதசி என்பார்கள், எனவே அருகில் ஏதாவது குருவாயூரப்பன் கோவில் இருந்தால் போகலாமா?" என்று கேட்டேன். 

அவர் குருவாயூரப்பன் கோவிலுக்கு பதிலாக ஜே.பி.நகரில் இருக்கும் லட்சுமி வெங்கடேஸ்வரா பெருமாள் கோவிலுக்குச் செல்லலாமா? என்று கேட்டார். ஏதோ ஒரு பெருமாள் கோவில் ஓ.கே. என்று சொல்லி விட்டேன். 

காலை எட்டரைக்குள் கோவிலில் இருக்கும்படி வரச் சொன்னார். எங்கள் வீட்டிலிருந்து கோவிலுக்குச் செல்ல நாற்பது நிமிடங்களாகும் என்று கூகுள் சொன்னாலும், ஒரு மணி நேரம் ஆனது. 

கோவில் ரொம்ப பெரியது என்று சொல்ல முடியாது, ஆனால் விநாயகர், யோக நரசிம்மர், வெங்கடேச பெருமாள், லக்ஷ்மி, பள்ளிகொண்ட பெருமாள் மூர்த்தங்கள் பெரிதாகத்தான் இருக்கின்றன. 


முதலில் விநாயகர், ஆஞ்சநேயர், காளிங்க நர்த்தன கிருஷ்ணர் சந்நிதிகள் அடுத்தடுத்து அமைந்துள்ளன. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை பிரதி எடுத்ததை போன்றே இரண்டு கரங்கள், வலது கரத்தில் சிவலிங்கத்தோடு காட்சி அளிக்கிறார். இன்று வெள்ளிக்கவசம் சாற்றியிருந்தார்கள். 

ஆஞ்சநேயரும், கிருஷ்ணரும் அளவில் சற்று சிறிய மூர்த்தங்கள். காளிங்க நர்தனருக்கு கீழே வேலோடு முருகன்!! ஆச்சர்யமாக இருந்தது.

அந்த சன்னதிகளில் தரிசனம் செய்து விட்டு பள்ளிகொண்ட பெருமாள் சன்னதிக்கு பிரதட்சிணமாக சென்றால் வலது பிரகாரத்தில் ஒரு சிறிய ஜன்னல் போன்ற அமைப்பின் வழியாக பெருமாளின் திருவடியை மட்டும் சேவிக்க முடிகிறது.(நவதிருப்பதிகளில் ஒரு கோவிலில் இப்படியிருக்கும்). சயனித்திருக்கும் பெருமாளின் காலடியில் மஹாலக்ஷ்மி தாயாரும், ஆண்டாளும் எழுந்தருளியிருக்கிறார்கள்.  


இந்த தரிசனங்களை முடித்துக் கொண்டு வெங்கடேச பெருமாளின் சந்நிதிக்கு வருகிறோம். சாஷாத் திருப்பதி பெருமாள். சங்கு, சக்கரம், வட்சஸ்தலம், வெள்ளியில் யக்னோபவீதம்(பூணூல்), சாளக்கிராம மாலை, என்று அற்புதமாக காட்சியளிக்கிறார். 

ரேவதியின் மகன் சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கி வைத்திருந்தார். எனவே உட்கார்ந்து உற்சவருக்கு நடந்த பால் அபிஷேகம்  பார்க்க முடிந்தது. அர்ச்சனை, தீபாராதனை முடிந்து ஸ்வாமிக்கு வெகு அருகில் சென்று தரிசிக்க அனுமதித்தார்கள். பெருமாளின் காலடியில் சிறிய கருடாழ்வாரையும் தரிசிக்க முடிந்தது. பெருமாளுக்கு அடுத்து தனி சந்நிதியில் தாயாரையும் தரிசித்து வெளியே வந்தோம். சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கியவர்களுக்கு ஒரு டப்பா நிறைய புளியோதரை பிரசாதம் கொடுத்தார்கள். மனதிற்கு நிறைவைத் தந்த தரிசனம்!


ரேவதியும் நானும்