ஆஸ்பத்திரி அனுபவங்கள்
வாழ்நாள் முழுதும் மருத்துவமனைக்கு செல்லாமல் இருக்க முடிபவர்கள் பாக்கியசாலிகள். ஆனால் என்னைப் போன்ற பலருக்கு அது வாய்ப்பதில்லை. நான் சிறு வயதிலிருந்தே மருத்துவமனைக்கு நிறைய படையெடுத்திருக்கிறேன்.
சிறு வயதில் வீசிங் தொந்திரவு இருந்ததால், அடிக்கடி நோய்வாய்ப்படுவேன். இரவெல்லாம் தூங்க முடியாது. அப்போதெல்லாம் எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் முத்துராமய்யர் என்னும் ஒரு டாக்டரிடம் என்னை என் பெரிய அக்கா கூட்டிக் கொண்டு போவார். நான் சிறு குழந்தையாக இருந்து பொழுது என்னை தூக்கிக்கொண்டும் சென்றிருக்கிறாராம். அந்த டாக்டரை 'ஒன்றரை அணா டாக்டர்' என்பார்கள். காரணம், அவருடைய கன்சல்டிங் ஃபீஸ் வெறும் ஒன்றரை அணாதான் அவர் ஏதோ சூரணம் கொடுத்து அதை தேனில் குழைத்து சாப்பிட சொல்வார். அவருடைய டிஸ்பென்சரிக்கு எதிரே இருக்கும் ஒரு கடையில் சிறு தேன் பாட்டிலும் வாங்கி வருவோம். வீட்டில் வெற்றிலை இருக்கும், அதில் சூரணத்தை போட்டு தேனில் குழைத்து சாப்பிட்டால் பெரும்பாலும் இரண்டு நாட்களில் ஜுரமும், வீசிங்கும் சரியாகி விடும். சரியாகவில்லையென்றால், எங்கள் வீட்டிர்க்கு எதிரே இருந்த பன்னீர்செல்வம் என்னும் டாக்டர் வீட்டிற்கோ, அல்லது குஜிலித்தெருவில் இருந்த ஒரு டாக்டரின் க்ளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்படுவேன்.


இதில் பன்னீர்செல்வம் என்பவரின் க்ளினிக் பச்சை நிற டிஸ்டம்பர் அடிக்கப்பட்டு நிசப்தமாக, இருக்கும். அங்கு வைக்கப்பட்டிருக்கும் பெடஸ்டல் ஃபேன் சுழலும் ஓசை தவிர வேறு ஓசை இருக்காது. சுவரில் வேறு "ஷ்ஷ்ஷ்" என்று வாயில் விரல் வைத்து நம்மை எச்சரிப்பார் ஒரு பெண். மடக்கக்கூடிய இரும்பு நாற்காலிகளில் அமர்ந்திருப்பவர்கள் யாரும் பேச மாட்டார்கள். அந்த டாக்டர் பரிசோதித்த பிறகு, "அங்க பார்" என்பார், அப்படி சொன்னால் ஊசி குத்த போகிறார் என்று அர்த்தம். நான் அழாமல் ஊசி குதிக்க கொண்ட சமத்து குழந்தைகளில் ஒருத்தி.
குஜிலித் தெரு டாக்டரின் கிளினிக்கை டாக்டர் வீடு எனலாம். ஏனென்றால் ஹாலில் காத்திருக்கும் நோயாளிகள், சத்தம் போடாதே படம், டோக்கன் கொடுக்கும் கம்பௌண்டர் போன்ற எந்த விஷயங்களும் அங்கு இருக்காது. அது ஒரு வீடுதான். திண்ணையில் ஏறியதும் வரும் ஒரு அறையில், அதை ரேழி என்பது வழக்கம். இரண்டு பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். நோயாளிகள் அதிகம் பேர் காத்திருக்க மாட்டார்கள். ரேழி தாண்டி இருக்கும் சிறிய ஹாலில் வலது பக்கம் ஒரு சிறிய மேஜையில் எக்ஸ் ரேயை பார்க்கும் ஸ்க்ரீனும், பச்சை நிற டெலிபோனும் இருக்கும். பச்சை கலரில் கூட போன் வைத்துக் கொள்ள முடியுமா என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஒரு பெரிய மேஜைக்கு பின்னால் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் டாக்டர் எப்போதும் விஷ்ணு சஹஸ்ரநாமம் படித்தபடி இருப்பார். பார்ப்பதற்கு ஓவியர் மாயா வரையும் டாக்டர் போல இருப்பார்.
நோயாளிகள் வந்தவுடன் அவரே கிடுகிடுவென்று வந்து வாயில் தெர்மாமீட்டரை வைத்து விட்டு, நாடியை பிடித்து பார்ப்பார். ஸ்டெதாஸ்கோப்பால் செக் பண்ணி விட்டு, தெர்மாமீட்டரை எடுத்து டெம்பெரேச்சர் பார்த்து விட்டு, உள்ளே போய் ஒரு ஊசியை கொண்டு வந்து சுருக்கென்று குத்தி விட்டு, மீண்டும் உள்ளே சென்று மாத்திரைகளை கொண்டு வந்து "காலையில் சிவப்பு மாத்திரை, மதியம் வெள்ளை மாத்திரை, ராத்திரி மீண்டும் சிவப்பு மாத்திரையும் இந்த ட்யூப் மாத்திரையும் சாப்பிடு" என்று கூறி அவரே பொட்டலம் மடித்து கொடுத்து "பத்து ரூபாய் எடு" என்பார். புதிய பேஷண்ட் என்றால் ஸ்டெத் வைக்கும் பொழுதே "பத்து ரூபாய் வெச்சுருக்கியா?" என்று கேட்டு உறுதி செய்து கொண்ட பின்தான் வைத்தியம் செய்வார். அறுபதுகளின் இறுதியிலும், எழுபதுகளிலும் இது அதிகம்தான். வியாதியை கண்டறிவதிலும், வைத்தியம் செய்வதிலும் நிபுணராக இருந்த பொழுதிலும் பண விஷயத்தில் அவர் காட்டிய கறார்தனத்தினால் மக்களிடம் அத்தனை நல்ல பெயர் சம்பாதிக்கவில்லை. ஆனால் இவர் வீட்டிற்கும் வந்து பார்ப்பார்.
எங்கள் அம்மாவுக்கும் இரண்டாவது அக்காவுக்கும் இவர்தான் தன்வந்திரி. எங்கள் அப்பாவுக்கு இவரை பிடிக்காது. "பணப்பிசாசு, எல்லோருக்கும் ஒரே மாத்திரையை கொடுக்கிறான்" என்று தூற்றுவார். "எதைக் கொடுத்தால் என்ன? வியாதி குணமாகிறதா இல்லையா?" என்பது எங்கள் அம்மாவின் வாதம். இவருடைய பரிந்துரையின்படி என் பாட்டிக்கு சில சமயம் ஒரு கோர்ஸ் இன்ஜெக்ஷுன் செய்ய வேண்டி வரும். அப்போதெல்லாம் நானும் என் அக்காவும் எங்கள் வீட்டுக்கு வாடிக்கையாக வரும் அழகிரி என்பவரின் குதிரை வண்டியில் பாட்டியோடு செல்வோம். அந்த கிளினிக் வாசலில்ஒருவர் மசால் வடை போட்டுக் கொண்டிருப்பர். பாட்டி எங்களுக்கு தினமும் மசால் வடை சாங்ஷன் செய்வாள்.
தில்லை நகரில் இருந்த பொழுது எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு மருத்துவரிடம்தான் காண்பிப்போம். அவரிடம் எப்போதும் கும்பல் நிரம்பி வழியும். முதலில் போய் டோக்கன் ஒருவர் வாங்கிக்கொண்டு வந்துவிட்டால் எத்தனையாவது நம்பர் சென்றிருக்கிறது என்று கேட்டுக்கொண்டு அதற்கேற்றார் போல வீட்டிலிருந்து கிளம்பிச் செல்லலாம். இவரும் டயகனாஸ் செய்வதில் திறமை மிகுந்தவர்தான், ஆனால் இந்த இந்த வியாதியாக இருக்கலாம், அந்த வியாதியாக இருக்கலாம் என்று நம்மிடமே கூறி கொஞ்சம் பயப்படுத்தி விடுவார். பணம் கேட்கவே மாட்டார். இரண்டாவது முறை செல்லும் பொழுது ப்ரிஸ்கிரிப்ஷன் கொண்டு செல்லவில்லையென்றால் கோபம் வந்துவிடும்.
நாங்கள் ஸ்ரீரங்கத்திற்கு குடிபெயர்ந்த பொழுது நான் திடமாகி விட்டேன். என் கடைசி அக்காவுக்கு அடிக்கடி ஜுரம் வரும். அப்போதெல்லாம் அவளை ரங்கநகரில் இருந்த ஒரு மருத்துவரிடம் நான்தான் அழைத்துச் செல்வேன். அவர் தன்னுடைய வீட்டின் ஒரு பகுதியை க்ளினிக் ஆக மாற்றியிருந்தார். எப்போதும் கும்பல்தான். அங்கு போக வேண்டுமென்றால் நான் கையோடு ஒரு புத்தகத்தையும் எடுத்துச் செல்வேன். வரவு செலவுகளை கவனித்துக் கொண்ட அவருடைய அண்ணன் நோயாளிகளிடம்," உங்கள் வீட்டில் இன்னும் அறுவது ரூபாய் தர வேண்டி இருக்கிறதே என்று சத்தமாக கேட்டு எரிச்சல் படுத்துவார். அங்கிருக்கும் கம்பவுண்டர் ஊசி குத்துவது மிகவும் வலிக்கும்.
இந்த டாக்டர் என்னையும் என் மூன்றாவது அக்காவையும் எப்போதும் குழப்பிக் கொள்வார். மாத்வரான இவர் தமிழ், கன்னடம், ஆங்கிலம் எல்லாம் கலந்து கட்டி பேசுவார். உப்பு ஜலத்தில் காகில் பண்ண வேண்டும் என்பதை,"டேக் லூக் வார்ம் வாட்டர், சுடக்கூடாது, புட் சால்ட், நன்னா மிக்ஸ் பண்ணி, வாயில் விட்டு ஹா ஹா ஹாக்கி துப்பிடுமா" என்பார்.
நாங்கள் மஸ்கட்டிலிருந்து விடுமுறைக்கு இந்தியா வரும்பொழுதெல்லாம் என் மகளுக்கு ஜுரம் வந்துவிடும். நான் கையோடு க்ரோசின் போன்ற மருந்துகள் வைத்திருந்து அவற்றை கொடுத்தாலும், சில சமயம் அதில் சரியாகாமல் பக்கத்தில் இருக்கும் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அப்படி பார்த்த மருத்துவர்களில் மறக்க முடியாதவர் அண்ணா நகரில் இருந்த ஒரு பெண் மருத்துவர். மருத்துவம் பார்த்ததில் குறை ஒன்றும் இல்லை. அனால் மருந்தை கொடுத்து விட்டு விளக்குவார் பாருங்கள்.. "இந்த மாத்திரை காலையில் மட்டும்தான் கொடுக்கணும், மத்தியானமும், இரவும் கொடுக்கக் கூடாது, இதை மதியம் உணவுக்கு பின் கொடுங்கள் இரவும், காலையிலும் கொடுக்க கூடாது, இந்த சிரப்பும், மாத்திரையும் இரவில் சாப்பிடணும், காலையிலும், மதியமும் கிடையாது, என்று குழப்பி விட்டு, கன்ஃபியூஸ் ஆகாதீர்கள்" என்று வேறு சொல்லுவார்.
எங்கள் வீட்டில் என் அண்ணாவுக்கும், எனக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இரண்டு பெரும் ஷார்ட் டெம்பெர்ட், இரண்டு பெரும் வேகமாக பேசுவோம், இரண்டு பெரும் சர்க்கரை நிறைய சாப்பிடுவோம். எங்கள் அம்மா, "நம்மாத்தில் காபிக்கு போட எவ்வளவு சர்க்கரை வாங்க வேண்டியிருக்கிறதோ, அதே அளவு தின்பதற்கும் வாங்க வேண்டியிருக்கிறது" என்பார். அதனாலோ என்னவோ சொத்தைப் பல்லும் அதிகம். இதன் காரணமாக சிறு வயதிலிருந்தே நிறைய டெண்டிஸ்டுகளிடம் பல்லைக் காட்டியிருக்கிறேன். இப்படி சொன்னால் ரசக்குறைவாக இருக்கிறதோ?, மண்ணையுண்ட கண்ணனைப் போல பல் வைத்தியர்கள் முன் வாயைத் திறந்திருக்கிறேன். அவர்களுக்கு பிரபஞ்சம் தெரிந்திருக்காது, என் சொத்தை பல்தான் தெரிந்திருக்கும். அவ்வப்பொழுது வலி வரும் பொழுதெல்லாம் அம்மா, "கிராம்பு வைத்துக் கொள்" என்பாள். ஓட்டையை அடைக்க முடியும் என்பது என் பெற்றோர்களுக்கு தெரியவில்லையோ என்னவோ? சொத்தைப் பல் பெரிதாகி வலி வந்து, தாங்க முடியாமல் போகும்பொழுது அப்பா ஒரு டாக்டரிடம் அழைத்துச் செல்வார். அப்போதெல்லாம் திருச்சியில் பல் டாக்டர்கள் மிகவும் குறைவு. அந்த பல் டாக்டர் வீடு மாடியில் இருக்கும். அங்கும் என்னை விட பெரிய பையன் ஒருவன் அலற, அந்த டாக்டர் அவனிடம் என்னை காண்பித்து,"பாரு உன்னை விட சின்ன பொண்ணு எப்படி சமர்த்தா இருக்கு, நீ கத்துகிறாய்?" என்று என்னை உதாரணம் காட்டியிருக்கிறார். இன்னும் என் டென்டல் கிளினிக் விசிட்டுகள் நிற்கவில்லை.
என் மகன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது கல்லூரிக்காக கால் பந்து விளையாடி கீழே விழுந்து கை சுளுக்கிக்கொண்ட பொழுது ஒரு கார்ப்பரேட் மருத்துமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு ஆர்த்தோ டிபார்ட்மென்டின் தலைவரும், அந்த மருத்துவ மனையின் நிர்வாக இயக்குனருமான அந்த மருத்துவர் ஒரு எக்ஸெண்ட்ரிக் போல நடந்து கொண்ட விதம் எனக்கு வியப்பளித்தது.
நான் மஸ்கட்டில் சந்தித்த மருத்துவர்கள் எல்லோருமே," நாம் சொல்வதை காது கொடுத்து கேட்பார்கள். நமக்கு வந்திருக்கும் வியாதி என்ன? அதற்கு என்ன மருத்துவம் செய்யப் போகிறார்கள் என்பதை நம்மிடம் தெளிவாக கூறுவார்கள்.
எப்படி இருந்தாலும் மருத்துவர்கள் நமக்கு அவசியமானவர்கள். இதை உணர்ந்ததால்தான் நாம் எத்தனை ஜோக்குகள் அவர்களை வைத்து எழுதினாலும், அவர்கள் அதை புன்னகையோடு ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஆபரேஷன் டேபிளில் படுத்திருந்த ஒருவர் டாக்டரிடம், டாக்டர் இந்த சர்ஜரிக்குப் பிறகு என்னால் நடக்க முடியுமா? என்று கேட்டார், "தாராளமாக" என்றார் டாக்டர்.
நோயாளி: "வயலின் வாசிக்க முடியுமா?"
டாக்டர்: "ஏன் முடியாது? நன்றாக வாசிக்கலாமே"
நோயாளி: "ஆச்சர்யமாக இருக்கே?"
டாக்டர்: "இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கு?"
நோயாளி: "எனக்கு வயலின் வாசிக்கவே தெரியாது"