கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, September 19, 2026

அதீதம்

 அதீதம் 

அதீதம் என்றால் எனக்கு இரண்டு பேர்கள் நினைவுக்கு வருவார்கள். ஒருவர் நெருங்கிய உறவில் ஒரு பெண்மணி மற்றும் ஒரு நண்பர்.  

அந்த பெண்மணியின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்ததால் பத்தொன்பது வயதிலேயே திருமணமான இவர் கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் வெளிநாடுகளில் வசித்ததால் இந்தியா ஒரு குப்பை மேடு என்ற எண்ணம். அதனால் வெளியே எங்கும் செல்ல மாட்டார்.  

வாங்கும் மளிகை சாமன்களைை கழுவி வெய்யிலில் உலர்த்தி எடுத்து வைக்க வேண்டும். சாம்பார், ரசம் போன்றவைகள் செய்வதற்கு புளியை ஊற வைக்க வேண்டுமானால் அதை அலம்பிய பிறகுதான் ஊற வைக்க வேண்டும். தினமும் காலையில் காபி போடும் முன் ஃபில்டர், பால் காய்ச்சும் பாத்திரம், காபி குடிக்க பயன் படுத்தும் டவரா,டம்ப்ளர் போன்றவைகளை ஸ்டிரிலைஸ் செய்ய வேண்டும்.  

இவருடைய இந்த அதீத சுத்தத்தினால் பாதிக்கப்பட்டது அவருடைய மருமகள்தான். வெளியே எங்கும் சாப்பிட மாட்டார். கல்யாணங்களுக்குச் செல்வதானால் கூட அவருடைய மருமகள் அவருக்காக சமைத்து வைத்து விட்டுதான் செல்ல வேண்டும். கோவில்களில் தரும் தீர்த்தப்பிரசாதத்தைக் கூட அருந்த மாட்டார். அதை வாங்கி கீழே விட்டு விடுவார். தான் செய்வது எப்படிப்பட்ட அபசாரம் என்று உணரவேயில்லை.  

இவர்கள் வீட்டில் யாராவது வெளியூர்களுக்குச் சென்றுவிட்டு வந்தால் பெட்டிகளை உள்ளே கொண்டு வந்துவிட முடியாது. வாசல் வராண்டாவில் வைத்து துணிகளை எடுத்து விட வேண்டும். பெட்டியை அலம்பிய பிறகுதான் உள்ளே எடுத்துச் செல்ல வேண்டும்.  

வீட்டிற்கு வருபவர்கள் வாசலில் இருக்கும் குழாயில் காலை அலம்பிய பிறகுதான் உள்ளே வர வேண்டும். தப்பித் தவறி யாராவது காலை அலம்பாமல் உள்ளே வந்து விட்டால் அவர்கள் சென்றதும் வீட்டை டெட்டால் போட்டு துடைக்க வேண்டும்.  அவருடைய மருமகளின் நிலையை நினைத்துப் பாருங்கள்.  

அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு மருத்துவர்கள் கையை சோப்பு போட்டு கழுவி உதறுவார்களே அப்படி இவர்கள் வீட்டில் எல்லோரும் சாப்பிடும் முன் கைகளை கழுவி உதறுவார்கள், டவலில் துடைத்துக் கொண்டால் அதில் இருக்கும் கிருமி கைகளில் ஒட்டிக் கொண்டு விடுமே..! 

இவர் இப்படி என்றால், நண்பரின் அதீதம் வேறு வகை. அவருக்கு சாப்பிட பிடிக்கும். சமைக்கவும் பிடிக்கும். ஆனால் சமைக்கிறேன் பேர்வழி என்று அவர் படுத்துவது.. ஏ! அப்பா! எல்லாவற்றையும் நிறைய செய்து விடுவார். அவர் வீட்டிற்கு நான்கு பேர்களை சாப்பிட அழைப்பார். இருபது பேர்கள் சாப்பிடலாம் போல அவர் மனைவியை சமைக்கச் சொல்வார்.  

சாம்பார் என்றால் அரைத்து விட்ட சாம்பார், பொடி போட்ட சாம்பார், புளிக்குழம்பு, மோர்க்குழம்பு, பொரித்த குழம்பு.  

ரசம்: மைசூர் ரசம், எலுமிச்சை ரசம், ஜீரக ரசம். 

கூட்டு: அரைத்து விட்ட கூட்டு, பயத்தம் பருப்பு போட்ட கூட்டு, அவியல். 

பொரியல்: தேங்காய் போட்ட கறியில் இரண்டு வகை, வதக்கல் கறியில் இரண்டு வகை. 

சிப்ஸ்: உருளைக்கிழங்கு சிப்ஸ், வாழைக்காய் சிப்ஸ், நேந்திரன் சிப்ஸ், பொரித்த அப்பளம் 

பாயசம்: பால் பாயசம், வெல்லம் போட்ட பாயசம், பச்சடி. 

வடை: உளுந்து வடை, பருப்பு வடை, தயிர் வடை. 

இதைத்தவிர இலைக்கு போளி அல்லது மைசூர் பாக் போல ஒரு ஸ்வீட் 

ஊறுகாய்: மாங்காய் ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய் தவிர மாங்காய் பிசிறல்   

எதற்கு இவ்வளவு ஐட்டம்கள்? என்று கேட்டால் சாப்பிட வருபவர்களுக்கு அரைத்துவிட்ட சாம்பார் பிடிக்காது என்றால் சாய்ஸ் இருக்க வேண்டாமா என்பார். இத்தனை ஐட்டம்கள் செய்கிறோமே கொஞ்சம், கொஞ்சம் செய்தால் போதாதா என்று அவர் மனைவி கேட்க முடியாது. மஸ்கட்டில் அவர் இந்த லூட்டி அடித்தார். அங்கெல்லாம் சமையலுக்கு உதவிக்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். அவர் மனைவி ஒற்றை ஆளாக இவை அத்தனையையும் செய்ய வேண்டும்.  

எக்கச்சக்கமாக சமைத்து, மிஞ்சியதை மறுநாளுக்கும் வைத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டார். அப்படியே கொட்டுவார். அநியாயம்!நன்றாகப் பாடுவார். ஆனால் பாடுவது மட்டுமே கலைத் திறமை என்ற எண்ணம். மற்ற கலைகளை பாராட்ட மாட்டார். பெண்களுக்கு எந்த மதிப்பும் தரத் தேவையில்லை என்ற எண்ணம் கொண்டவர். பெண்களுக்கென்று ஒரு சொந்த கருத்து இருக்கக் கூடாது என்ற நினைப்பும் உண்டு. அவரது ஒரே மகன் ஒரு விபத்தில் இறந்ததும், மனைவியைப் பற்றி கொஞ்சம் கூட நினைக்காமல், ஏற்கனவே இதய நோயாளியான அவர் அளவிற்கு அதிகமாக குடித்து பத்து நாட்களுக்குள், மனைவியை நிராதாரவாக விட்டு விட்டு இறந்து போனதும் அதீதம்தானே!   

Sunday, September 13, 2026

விநாயகனே வினை தீர்ப்பவனே

 விநாயகனே வினை தீர்ப்பவவனே 

விநாயகனே வினை தீர்ப்பவனே

 


விநாயகர் என்றால் தனக்கு மேல் ஒரு தலைவர் இல்லாதவர் என்று பொருள். 

அவருக்கு உரிய சிறப்பான நாமங்கள் 16. அதை ஷோடச நாமங்கள் என்பார்கள்.  

தமிழ் நாட்டில் எப்படி முருகனுக்கு ஆறுபடை வீடுகள் இருக்கிறதோ அப்படி விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உண்டு. அவை திருவண்ணாமலை, வி்ருதாச்சலம், திருக்கடையூர், திருநாரையூர், பிள்ளையார்பட்டி, மதுரை ஆலால சுந்தர விநாயகர் சிலர் திருச்சி உச்சிப்பிள்ளையார் என்றும் கூறுகிறார்கள். 

மஹாராஷ்டிரத்தில் அஷ்ட விநாயக் என்று பூனாவைச் சுற்றி எட்டு விசேஷமான கோவில்கள் உண்டு.  

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை என்றுதான் விநாயகரை வணங்குவோம். ஆனால் அவர் மனித முகத்தோடு நரமுக விநாயகராக சிதம்பரம், திலதர்ப்பணபுரி, திருசெங்காட்டங்குடி போன்ற இடங்களில் காட்சி அளிக்கிறார்.  

அதைப் போல நான்கு கரங்கள் மற்றும் ஒரு தும்பிக்கையோடுதான் விநாயகர் காட்சி அளிப்பார் ஆனால் பிள்ளையார்பட்டியில் அவருக்கு இரண்டு கரங்கள் + ஒரு தும்பிக்கை மட்டுமே. இடது கரத்தை இடுப்பில் வைத்து, வலது கரத்தில் ஒரு சிவ லிங்கத்தை ஏந்தியிருப்பார்.  

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்

திருவலஞ்சுழியில் வெண்மை நிறத்தில் ஸ்வேத விநாயகராக காட்சி அளிக்கிறார். பாற்கடலை கடைந்தபொழுது வெளிப்பட்ட நுரையால் உருவானதால் வெண்மை நிறத்தவராக இருக்கிறார் என்பது நம்பிக்கை. பத்து அங்குல அளவே இருக்கும் சிறிய திருமேனி.  புனுகு சாத்துவார்கள். பச்சை கற்பூரத்தை இத்திருமேனியைத் தொடாமல் அர்ச்சகர் ு தூவுவார். அபிஷேகம் கிடையாது என்பதால் தீண்டாத் திருமேனி என்று அழைக்கப்படுகிறது. 

திருவலஞ்சுழி ஸ்வேத விநாயகர்

திருவையாற்றிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் இருக்கும் ஒரு சிறிய கிராமம் கணபதி அக்கிரஹாரம். பெயரே சொல்கிறதே விநாயகரின் முக்கியத்துவத்தை. இந்த ஊரில் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட்ப்படுவது வேறு எங்கும் காணப்படாத அதிசயம். இவ்வூரைச் சேர்ந்தவர்கள் மற்றவர்களைப்போல மண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வாங்கி, வீட்டில் வைத்து பூஜை செய்ய மாட்டார்கள். கோவிலில்தான் அர்ச்சனை. 

கணபதி அக்ரஹாரம் மஹாகணபதி

எல்லோரும் தங்கள் தங்கள் வீடுகளில் செய்யப்பட்ட அப்பம், வடை, கொழுக்கட்டை போன்றவைகளை கோவிலுக்கு கொண்டு வந்து சுவாமிக்கு நிவேதனம் செய்து, பின்னர்  அவை ஒன்றாக கலக்கப்படும். அதாவது எல்லா பாயசங்களும் ஒரு பாத்திரத்திலும், வடைகள் ஒரு பாத்திரத்திலும், கொழுக்கட்டைகள் ஒரு பாத்திரத்திலும் கலக்கப்பட்டு பின்னர் அனைவருக்கும் வினியோகம் செய்யப்படும். அந்த காலத்தில் உறவினர்களுக்குள் நிலவிய பூசல் கூட அன்றுதான் தீர்த்து வைக்கப்படுமாம். பாகப்பிரிவினைகள் கூட அன்று விநாயகர் முன்னிலையில் தீர்த்து வைக்கப்பட்டனவாம்.  

கணபதி அக்கிரகாரம், பிள்ளையார்பட்டி, திருவலஞ்சுழி போல் விநாயகர் பெயராலேயே வழங்கப்படும் இன்னொரு ஊர் கணபதீஸ்வரம் என்று அழைக்கப்பட்ட திருசெங்காட்டங்குடி. விநாயகர் கஜமுகாசுரனைக் கொன்ற பொழுது பீரிட்ட ரத்தத்தால் அந்தப் பகுதியில் இருந்த காடே சிவப்பு நிறமாக மாறியதாம் அதனால்தான் செங்காட்டங்குடி என்பது திரு சேர்ந்து திருச்செங்காட்டங்குடி என்னும் பெயர் பெற்றிருக்கிறது. கருத்த விநாயகரின் மேனியில் சிவப்பு நிற ரத்தம் தெளித்து அவர் உடல் கரும் சிவப்பாக மாறியதில் அவர் கபிலர் என்னும் பெயர் பெற்றார்.   

கஜமுகாசுரனைக் கொன்றதால்  ஏற்பட்ட வீரஹத்தி    தோஷம் நீங்க விநாயகர் சிவபெருமானை வழிபட்டதால் கணபதீஸ்வரம் என்னும் பெயர் பெற்ற தலம். ராமர் ஈஸ்வரனை வழிபட்ட தலம் ராமேஸ்வரம் ஆனது போல கணபதி ஈஸ்வரனை வழிபட்ட தலம் கணபதீஸ்வரம் என்று இதன் பெயர் காரணத்திற்கு அழகான விளக்கம் அளித்திருக்கிறார் காஞ்சி மாமுனிவர்.  

பஞ்சபூதங்களில் ப்ருத்வி தத்துவத்தை குறிப்பவர். நவகிரகங்களில் கேதுவுக்கு உரிய தெய்வம். செவ்வாய் தரும் பலன்களைத்தான் கேதுவும் தருவார் என்பதாலோ என்னவோ வட இந்தியர்கள் செய்வாய் கிழமையைத்தான் விநாயகர் வழிபாட்டிற்கு உகந்த நாளாக கருதுகிறார்கள். 

ஓம் கம் கணபதயே நமஹ: என்பதுதான் மஹாகணபதியின் மூல மந்திரம். “உன்னால் முடியலைனா கம்முனு இரு” என்று சாதாரணமாக சொல்வோம். இதில் வரும் ‘கம’ என்பது மஹா கணபதியின் மந்திரத்தைதான் குறிக்கிறது. நம்மால் இயலாத காரியங்களை இந்த மந்திரத்தை ஜபிப்பதன் மூலம் சாதிக்கலாம் என்பதைத்தான் இது குறிக்கிறது.  

ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் வரும் சதுர்த்தியும், தேய்பிறையில் வரும் சங்கடஹர சதுர்த்தியும் விநாயகர் வழிபாட்டிற்கு உகந்தவை. 

ஆவணி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி மஹா சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதை அடுத்து வரும் சதுர்த்திதான் விநாயக சதுர்த்தி.  

விநாயக சதுர்த்தி அன்று விநாயகரை 21 இலைகள்,(அன்று மட்டும் துளசி இலையால் விநாயகரை அ்ர்ச்சிக்கலாம்)  21 பூக்களால் அர்ச்சித்து 21 வகை பழங்கள், பட்சணங்கள் படைத்து வணங்குவது மரபு. ஆனால் அன்பும், கருணையும் கொண்ட விநாயகர் நாம் ஒரே ஒரு இலையோ, ஒரு பூவோ சமர்பித்து, நம்மால் முடிந்ததை சமர்பித்தாலே நமக்கு அருள் புரிவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  ஓம் கம் கணபதயே நமஹ: 


 

Thursday, August 27, 2026

1000 Islands

 1000 Islands


கனடாவில் கிங்க்ஸ்டன் என்னும் இடத்தில் செய்ண்ட் லாரன்ஸ் என்னும் நதியில் குட்டி குட்டியாக நிறைய தீவுகளை(திட்டுகள்?) 1000 தீவுகள் என்கிறார்கள். ஆனால் இருப்பது மொத்தம் 1864 தீவுகளாம்




தீவு என்று கருதப்பட முக்கியமான நிபந்தனை 365 நாட்களும் தண்ணீ⁹ரால் சூழப்பட்டிருக்க வேண்டும், அந்த நிலப்பகுதியில் ஒரு மரமாவது இருக்க வேண்டும்


இவற்றில் சில தனியார்களுக்கும், சில அரசாங்கத்துக்கும், சில தனியார் நிறுவனங்களுக்கும் சொந்தமானவை. சில தீவுகள் கனடாவிலும், சில தீவுகள் அமெரிக்காவிலும் உள்ளன. அமெரிக்க எல்லையில் இருக்கும் தீவுகளுக்குச் செல்ல அமெரிக்க விசா வேண்டும். விவேகானந்தர் அமெரிக்காவிற்கு சென்றபொழுது இந்த 1000 தீவுகளுக்கும் சென்றிருந்தாராம். ஆனால் அது ஏனோ பதிவு செய்யப்படவில்லை



கனடாவிலிருந்து cruise எனப்படும் சிறிய கப்பலில் சுற்றிப் பார்க்கலாம். ஒரு மணி நேர பயணம், மூன்று மணி நேர பயணம், ஐந்து மணி நேரப் பயணம் என்று வகைப்படுத்தியிருக்கிறார்கள். மூன்று மணி நேரம் மற்றும் ஐந்து மணி  நேர பயணங்களில் தீவுகளில் இறங்கி சுற்றிப் பார்க்கலாம், நேரம் கழிக்கலாம். ஒருமணி நேர பயணத்தில் வெறும் ப்பல் பயணம் மட்டுமே

இந்த சுற்றுலாவுக்கு சரியான காலம் மார்ச் முதல் அக்டோபர் வரை. கனடாவை பொருத்தவரை எல்லா சுற்றுலாக்களுக்குமே மார்ச் முதல் அக்டோபர் வரைதான். குளிர் காலத்தில் உரைந்து கிடக்கும் பனியில் எங்கே செல்ல முடியும்?

நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்..” என்ற பாடல் நினைவுக்கு வந்தது. இங்கே கடலுக்கு பதிலாக கடலைப் போல விரிந்திருக்கும் செய்ண்ட் லாரண்ஸ் நதி. ஆங்காங்கே பசுமையான தீவுகள், அழகழகான கட்டிடங்கள், ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை.

தீவுகளை விலைக்கு வாங்கி அங்கு தாங்கள் தங்குவதற்காக வீடுகளை கட்டிக் கொண்டிருப்பவர்கள் தங்களுடைய படகுகளை நிறுத்துவதற்கா கராஜுகள கட்டியிருக்கிறார்கள். கார் கராஜ் போல படகு கராஜ்.

Hart என்னும் தீவை விலைக்கு வாங்கியயவர் அதை ஹார்ட்(இதயம்) போல வடிவமைத்து Heart Island என்று பெயரிட்டாராம்,இன்றளவும் அப்படியே இருக்கிறதாம்



இது கார் பார்க்கிங் போல boat(s) parking

சுற்றிப் பார்த்து விட்டு அங்கிருந்து ஒரு பஞ்சாபி ஹோட்டலில் ருசியான சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு, அருகிலிருந்த நேப்பனி ஃபால்ஸ்(Napanee) என்னும் இடத்திற்குச் சென்றோம். முதல் நாள் ஆடிப்பூரம், நெல்லையின் வாரம் ஒரு பாசுரம் போன்றவைகளின் பாதிப்போ என்னவோ, நேப்பனி ஃபால்ஸ் என்பதை நான் நப்பின்னை ஃபால்ஸ் என்று படித்தேன்.😊 சிறிய நீரவீழ்ச்சி.

கிங்க்ஸ்டன் வீதிகள் பாண்டிச்சேரியை நினைவூட்டின.டொரொன்டோ நவீன நகரம். கிங்க்ஸ்டன் போன்ற ஊர்கள் அவ்வளவாக நவீனமாகாமல் பாரம்பரிய அழகோடு இருக்கின்றன.




வீட்டுக்கு வரும் வழியில் காபி குடிக்க டிம் ஹார்டன்ஸ் சென்றோம். ஹாரி பாட்டர் நாவல் எழுதப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதை ஒட்டி அங்கு குழந்தைகளுக்காக அந்த கதையில் வரும் வீடுகளின் நிறங்களில் டோனெட் மற்றும் குளிர்பானங்கள் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். ுழந்தைகளுக்கு அவற்றை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினோம்.

இந்த தீவுகளில் சில கனடாவிலும், சில அமெரிக்காவிலும் இருக்கின்றன. அப்படி இரண்டு நாடுகளிலும் இருக்கும் தீவுகளை இணைக்கும் பாலம்தான் உலகிலேயே இரண்டு நாடுகளை இணைக்கும் மிகச்சிறிய பாலம். அதை இந்த காணொளியில் பார்க்கலாம்.

இரண்டாவது காணொளியில் இருக்கும் பாலம் வாகனங்கள் செல்லக்கூடியது.