கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, November 13, 2023

திருமண கலாசார மாற்றங்கள்

 திருமண கலாசார மாற்றங்கள்

சென்னைய்யிலிருந்து கும்பகோணம் செல்ல ரயிலில் ஏறி உட்கார்ந்த நாம், “கும்பகோணம் வந்து விட்டதா? கும்பகோணம் வந்து விட்டதா?” என்று அருகில் இருப்பவரை தொனப்புவோம். கும்பகோணமா வரும்? நாமல்லாவா அங்கு செல்கிறோம். அதைப் போலத்தான், “சென்ற வருடம் தீபாவளிக்கு தைத்த சட்டை டைட்டாகி விட்டது” என்போம், சட்டை தைத்த அதே அளவில்தான் இருக்கும், நாம் வெயிட் போட்டிருப்போம், ஆனால் சொல்வதென்னவோ சட்டை டைட் ஆகி விட்டது என்று.

அதே கதைதான் திருமண மாற்றங்களிலும் நடக்கிறது. சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் மாற்றுவது என்னவோ நாம்தான். ஆனால் ஏதோ ஒரு தேவதையோ, அல்லது சாத்தானோ இந்த மாற்றங்களை கொண்டு வந்தது போல காலம் மாறி விட்டது காலம் மாறி விட்டது என்று புலம்பல்.

கல்யாணங்களில் இதுவரை இல்லாத புது பழக்கங்களை மற்றவர் வீட்டு திருமணங்களில் நடத்தும் பொழுது “இது என்ன புது பழக்கம்? நம் வீட்டில் கிடையாதே?” என்போம். அதே பழக்கத்தை நம் வீட்டுத் திருமணங்களில் கொஞ்சம் பெருமையாகவே நடைமுறை படுத்துவோம். அப்படி வந்ததுதானே நம் திருமணங்களில் கலயாணத்திற்கு முதல் நாள் ரிஷப்ஷனும், மெகந்தியும், சங்கீத்தும்? யாரோ ஒருவர் செய்யப் போக, பியர் பிரஷரில் மற்றவர்களும் தொடர்கிறார்கள்.

பெரியவர்கள் இப்படி சிலவற்றிர்க்கு வளைந்து கொடுக்க, சிறியவர்களின் கேண்டிட் ஃபோட்டோகிராஃபி போன்ற சில ஆசைகளுக்கும் பிடித்திரிக்கிறதோ இல்லையோ கட்டுப்பட வேண்டியிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சிறிய வயதில் அதிகமாக சம்பாதிக்கும் இளைய தலைமுறைக்கும், ஒரே ஒரு பெண்ணை வைத்திருக்கும் பெண்ணைப் பெற்றவர்களுக்கும் பணம் ஒரு பொருட்டு அல்ல. அதனால் திருமணங்கள் மிக ஆடம்பரமாக நடத்தப் படுகின்றன.

சமீபத்தில் எனக்கு வாட்ஸாப்பில் ஒரு செய்தி வந்தது. உங்களில் பலருக்கும்கூட வந்திருக்கும். மணப்பெண்ணின் பின்னலில் வைத்துக் கட்டும் ஜடை பாதாம், முந்திரி, வால்நட், கிஸ்மிஸ் போன்ற உலர் பழங்களால் தயாரிக்கப் பட்டிருந்தது. என்னுடைய ஒரு தோழி என்னிடம் ஒரு முறை, “உங்கள் பிராமணத் திருமணங்களில் ரிசப்ஷனில் பனிக்கட்டியால் சிற்பங்களும், வெஜிடபிள் கார்விங் என்று காய்கறி அலங்காரங்களும் செய்வீர்கள், நேஷனல் வேஸ்ட்!” என்றார். இந்த உலர்பழ ஜடையை என்ன சொல்வாரோ?

திருமணங்களில் சமீபத்திய மாற்றம் ஃபியூஷன் திருமணங்கள். கலப்புத் திருமணங்கள் அதிகமாகி விட்டதால் இரண்டு சம்பிரதாயங்களையும் கலந்து நடக்கும் இந்த திருமணங்கள் வரவேற்கப்பட வேண்டியவைதான். காலையில் ஹிந்து முறைப்படியும், மாலையில் சர்ச்சிலும் கூட திருமணங்கள் நடக்கின்றன. ஆணவக்கொலை செய்யாமல் ஏற்றுக் கொள்கிறார்களே!

மிக சமீபத்தில் எங்கள் குடும்ப குழுவில் ஒரு திருமண அழைப்பிதழ் பகிரப் பட்டிருந்தது. ஹிந்து முறைப்படி அச்சிடப்பட்டிருந்த அந்த மஞ்சள் நிற பத்திரிகை ஒரு இரு வீட்டார் அழைப்பு. மணமகன் பெயரைக் கொண்டு அவர் ஒரு இஸ்லாமியர் என்பது தெரிந்தது. மணமகள் ஹிந்துப் பெண். யாரும் மதம் மாறாமல் அவரவர் மாதத்திலேயே இருக்க, பெரியவர்களும் அதை அங்கீகரிக்கிறது நல்ல அந்த அழைப்பு என்னைக் கவர்ந்தது.

செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சங்கள் கலக்கும் பொழுது வாழ்த்தத்தானே வேண்டும்? 

Wednesday, November 1, 2023

பெற்றால்தான் பிள்ளையா?

 பெற்றால்தான் பிள்ளையா?

"உன் மகளிடமிருந்து செய்தி" என்றது வாய்ஸ் மெஸேஜர்.
"என்னவாம்?" என்றாள் தீக்ஷா.
"அம்மா, உன் ஆசை விரைவில் நிறைவேறப் போகிறது, நீ பாட்டியாகப் போகிறாய், உடனே எக்ஸைட் ஆகி அழைக்காதே, ஐயாம் பிஸி. ஐ வில் கால் யூ லேட்டர்"என்றது மகள் நீதாவின் குரல்.
தன் கணிணியை மூடிய தீக்ஷாவுக்கு உடனே மகளோடு பேச வேண்டும் என்று தோன்றியது. ஆனால் இப்போது அழைத்தால் பதிலளிக்க மாட்டாள்.
திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகி விட்டது. முப்பது வயதில் திருமணம் செய்து கொண்டவள் ஏதேதோ காரணங்களைச் சொல்லி பிள்ளை பேற்றை தள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தாள்.
வயதாகி முதல் குழந்தையை பெற்றுக் கொள்வது ஆரோக்கியமான விஷயம் இல்லை என்பதையெல்லாம் நவீன மருத்துவம் பொய்யாக்கி விட்டது.
மாலையில் நீதா வீடியோ காலில் வந்ததும், " டாக்டரை பார்த்தியா? எவ்வளவு நாட்கள் ஆகிறது?" என்றதும் நீதா கொஞ்சம் யோசித்து ஐ திங்க் ஃபைவ்மன்த்ஸ்"என்றாள்.
"திங்கா? என்னடி. ?" என்றதும் கொஞ்சம் யோசித்து, செல்போனில் எதையோ தேடி, ஆ.. ஐஞ்சு மாசங்கள் முடிஞ்சாச்சு.." என்றாள் நீதா.
"மை காட்!" இத்தனை நாள் எங்கிட்ட சொல்லவேயில்லை..?" கொஞ்சம் தள்ளி நில், உன்னை முழுமையாக பார்க்கிறேன்" என்றதும், காமிராவை விட்டு தள்ளி நின்று கையாட்டினாள்.
"என்னடி இது? ஐஞ்சு மாசம் முடிஞ்சாச்சு என்கிறாய், வயிறே தெரியலை..?"
"எனக்கு ஏன் வயிறு தெரியனும்?" என்று நீதா கேட்டதும், தீக்ஷாவுக்கு குழப்பமாகியது.
"நீ கர்பமாக இருப்பதாக சொன்னாயே..?"
நான் எங்கே அப்படி சொன்னேன்? நீ அப்படி புரிந்து கொண்டிருக்கிறாய்"
" நான் பாட்டியாக வேண்டும் என்றால் நீ கர்ப்பமாக இருக்கிறாய் என்றுதானே அர்த்தம்?"
தீக்ஷா இப்படி கேட்டதும்,"வெயிட் வெயிட், எங்களுக்கு குழந்தை பிறக்கப் போகிறது, ஆனால் நான் கர்ப்பமாக இல்லை.. எங்கள் குழந்தையை சுமக்க ஒரு வாடகைத் தாயை புக் பண்ணி விட்டோம்"
"உன் குழந்தையை உன்னால் சுமக்க முடியாதா?"
"கஷ்டம் மா..இப்போது என் கேரியர் ரொம்ப க்ரூஷியல் ஸ்டேஜில் இருக்கு. ஃபர்ஸ்ட் நானே பெத்துக்கலாம்னு தான் நினைச்சேன், ஆனால் என் ஃப்ரண்டு வாமிட்டிங்,நாஸியானு பட்ட கஷ்டத்தை பார்த்ததும் வேண்டாம், சர்ரகஸி இஸ் பெட்டர்னு தோணிடுத்து. ரகு ஆல்ஸோ ஓகே வித் திஸ்."
"வளர்க்கவாவது செய்வியா..?"
"கண்டிப்பா.. பட் இனிஷியலா பார்த்துக்க நானி புக் பண்ணியாச்சு"
யாரோ பெத்து குடுக்க போறா, யாரோ வளர்க்க போறா..நீ என்ன அம்மா..?"
"பட் ஸ்டில் அது எங்களோட குழந்தை. கொஞ்சுவோம், விளையாடுவோம், படிக்க வைப்போம்.."
அம்மா அலுத்துக் கொண்டதற்கு சமாதானமாக பதில் சொன்னாள்.
"இதுக்கு பேசாமல் ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாமே..?"
"அம்மா உனக்கு புரியவில்லையா? தத்து குழந்தை எங்கள் குழந்தை கிடையாது. இது எங்கள் குழந்தைதான், எனக்கு கர்ப்ப கால தொந்தரவுகள் கிடையாது. எவ்வளவு சௌகரியம்!"
"ம் ம், என்னவோ போ.. அந்த வாடகைத் தாய் எப்படிப் பட்டவள்?"
"அதெல்லாம் நல்ல பெண்தான். நல்ல ஏஜென்சி மூலம் தான் ஏற்பாடு செய்திருக்கிறோம்". என்று நீதா சொன்னதும், 2023க்கு முன்பாகவே வாடகைத் தாய் கான்செப்ட் வந்து விட்டாலும், 2053ல் இது மிகவும் பிரபலமாகி விடும் என்று அப்போது தோன்றவேயில்லையே..? என்று தீக்ஷா நினைத்துக் கொண்டாள்.

Tuesday, October 31, 2023

மாற்றம்

'இன்னும் முப்பது வருடங்களுக்குப் பிறகு எப்படிப்பட்ட மாற்றங்கள் வரும்?' என்று மத்யமரில் வீக்லி டாபிக் கொடுத்திருந்தார்கள். அதற்கு என் பங்களிப்பு.

மாற்றம் ஒன்றே மாறாதது. உலகம் தோன்றியதிலிருந்தே பலவித மாற்றங்களை சந்தித்து கொண்டுதான் இருக்கிறது. 

வேட்டையாடிக் கொண்டிருந்த மனிதன் விவசாயம் செய்யத் தொடங்கியது முதல் மாற்றம்.  கடலைக் கடந்தது,  அடுத்த பெரிய மாற்றத்திற்கு வித்திட்டது. 

சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டதும் தொழில் வளர்ச்சியும், மாற்றமும் ஒரு கங்காரு ஜம்ப் அடித்தது என்றால் கணினியின் வரவால் பூதாகாரமாக வளர்ந்தது. இப்போது ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் எங்கே கொண்டு நிறுத்துமோ..?

நம் நாட்டை பொறுத்தவரை நூறு ஆண்டுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால் கடந்த முப்பது ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் மிக அதிகம். 1980களில் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவோம் என்று நினைத்திருப்போமா?  சாலையில் இத்தனை வெளிநாட்டு கார்கள் விரையும் என்று கற்பனை செய்தோமா? இன்னும் என்னவெல்லாம் மாற்றங்கள் வரலாம்..?

பணப் பரிமாற்றம் ஏன் அச்சிடப்பட்ட பணம் என்பது இல்லாமல் போகலாம்.

விவசாய நிலங்கள் குறைவதால் விவசாயம் செய்பவர்கள் செல்வந்தர்கள் ஆவார்கள். 

குறைந்த நிலத்தில் நிறைய மகசூல் செய்யும் வழிமுறைகள் கண்டுபிடிக்கப் படும்.

இயற்கை வளங்களான சோலார் எனர்ஜி, விண்ட் எனர்ஜி போன்றவை அதிக பயன்பாட்டிற்கு வரும். அதனால் மேற்கத்திய நாடுகளை விட கிழக்காசிய நாடுகள் தொழில் வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும்.

கடல் நீரை குடி நீராக்கும் முயற்சியை மேற்கொண்டு தண்ணீர் பஞ்சம் தீர்க்கப்படும்.

பயண நேரங்கள் கணிசமாககுறையும். விமானத்தில் பயணிப்பவர்கள் அதிகமாவார்கள்.

கான்சர் உட்பட பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும். அதனால் மக்களின் சராசரி ஆயுட்காலம் நீட்டிக்கப்படும். இதனால் பூமி பாரத்தை குறைக்க பூகம்பம், புயல் போன்ற நிறைய இயற்கை உற்பாதங்கள் நிறைய நிகழும்.

கூட்டுக் குடும்பம் சிதைந்தது போல குடும்பம் என்னும் அமைப்பே குறையலாம், சிதையாது.

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, விவாகரத்து, மறுமணம் போன்றவை அதிகரிக்கும். 

கல்வி கற்பிப்பது டிஜிட்டல் மயமாகும், ஆகவே எழுத வேண்டிய தேவை இருக்காது எனவே எழுத படிக்கத் தெரிந்தவர்கள் குறைந்து போவார்கள். அதாவது படிக்கத் தெரிந்தவர்களுக்கு எழுதத் தெரியும் என்று கூற முடியாது.

புத்தகங்கள் இல்லாமல் போகலாம். அதனால் நிறைய மரங்கள் பிழைக்கும்.

அரசு நிறுவனங்கள் தனியார் வசம் செல்லும்.

இப்பொழுது கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள். இதனால் ஏற்படும் சங்கடங்களை உணர்ந்து யாராவது ஒருவர் வேலைக்குச் சென்றால் போதும் என்று நினைக்கலாம்.

இப்பொழுது பலர் ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்கின்றார்கள், ஆனால் இரண்டு தலைமுறைகளுக்குப் பிறகு மூன்று குழந்தைகளாவது வேண்டும் என்று அரசாங்கமே குழந்தைகள் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும்.

காவடி எடுப்பது, மொட்டை அடித்துக் கொள்வது போன்ற நம்முடைய மத நம்பிக்கைகள் அப்படியே தொடரும். 

வீட்டு பூஜைகளுக்கு ரோபோ புரோகிதர் வருவார். 

நம் நாட்டை பொறுத்தவரை என்ன மாற்றங்கள் வந்தாலும் சாலையில் எச்சில் துப்புவதும், சிறுநீர் கழிப்பதும் மாறாது.

Thursday, October 26, 2023

நவராத்திரி அலப்பறைகள்

நவராத்திரி அலப்பறைகள்


எங்கள் குடியிருப்பில் நவராத்திரி நவராத்திரி முதல் நாள் ஒரு சிறப்பு பூஜை இருந்தது லலிதா சகஸ்ரநாம சகஸ்ரநாம பாராயணம், பக்தி பாடல்கள் என்று நடந்த பூஜையில் பிரசாத வினியோகமும் இருந்தது. சர்க்கரை பொங்கல், புளியோதரை, கேசரி, தயிர் சாதம் என்று ஐட்டங்கள். "புளியோதரைக்கு தொட்டுக் கொள்ள ஏதாவது இருக்கிறதா"? என்று கேட்டார் ஒருவர். எனக்கு படித்த ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.

நங்கநல்லூர் ஆஞ்சனேயர் கோவில் கட்டி முடித்த புதிதில் அதன் நிர்வாகி ஒருவர் மஹாபெரியவரை பார்க்கச் சென்றாராம். சென்றவர் மஹா பெரியவரிடம், "நாங்கள்,கோவிலில் , சாம்பார் சாதம், புளியோதரை, தயிர் சாதம் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று போட்டு, வருகிறவர்களுக்கு தாராளமாக வயிறு ரொம்பும் அளவு வினியோகிக்கிறோம்" என்று பெருமையாக சொல்லிக் கொண்டாராம். அதற்கு பெரியவர், "பிரசாதமெல்லாம் நிறைய கொடுக்க கூடாது, கொஞ்சமாகத்தான் கொடுக்க வேண்டும், நீயே புரிந்து கொள்வாய் என்றாராம். இவருக்கு கொஞ்சம் ஏமாற்றமாக போய் விட்டதாம். 

கோவிலில் வழக்கம் போல பிரசாத வினியோகம் தொடர்ந்து கொண்டிருந்ததாம். ஒரு நாள் காலையில் சாம்பார் சாதம், தயிர் சாதம் வழங்கியிருக்கிறார்கள். அதை சாப்பிட்ட ஒருவர், இவரிடம் வந்து, " நீங்க என்ன பண்ணுங்க.. சாம்பார் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள ஒரு பொரியலும், தயிர் சாதத்தோடு ஊறுகாயும் போட்டு விடுங்கள், சாப்பிட சௌகரியமாக இருக்கும்" என்றாராம். அப்போதுதான் அவருக்கு பெரியவா சொன்னது புரிந்ததாம். எல்லோருக்கும் புரிய வேண்டும். 

நேற்று சரஸ்வதி பூஜை, உறவினர் ஒருவர் கிரக பிரவேசம் வைத்திருந்தார். அவர்கள் பூஜை மணி கேட்டதால் கொடுத்தோம். கிரக பிரவேசம் அதிகாலையில் முடிந்து விடும், அதன் பிறகு நம் வீட்டு பூஜைக்கு மணியை கொண்டு வந்து விடலாம் என்று நினைத்தோம், ஆனால் எடுத்து வர மறந்து விட்டோம். நைவேத்தியம் செய்யும் பொழுதும், தீபாராதனையின் பொழுதும் மணி அடிக்க வேண்டுமே..? என்ன செய்வது? என்று யோசித்தேன். இருக்கவே இருக்கிறது யூ ட்யூப், அதில் மணியை ஒலிக்கச் செய்து விட்டேன்.. எ..ப்..பூ..டி..?! எங்களுக்குத் தெரிந்த ஒரு தமிழ் பிராமண பையன் வட இந்தியப் பெண்ணை மணந்து கொண்டான். தென்னிந்திய முறைப்படி திருமணம். ஆனால் திருமணத்தில் நாதஸ்வரம் கிடையாது. கெட்டி மேளம் உட்பட D.J. வைத்தே சமாளித்தார்கள். வாழ்க டெக்னாலஜி!

Sunday, October 8, 2023

குஷி(தெலுங்கு)

 குஷி(தெலுங்கு)


எத்தனை நாட்களாயிற்று இப்படி ஒரு காதல் கதையை திரையில் பார்த்து? எங்கே பார்த்தாலும் ரத்தம் தெறிக்கும் வன்முறை, ஆகாயத்தில் பறக்கும் கார்கள், தீப்பிழம்புகள் என்று பார்த்து அலுத்த கண்களுக்கு இதமாக அழகான இடங்கள், அதைவிட கண்களுக்கு குளுமையாக அழகான ஜோடி. அற்புதமான கெமிஸ்ட்ரியோடு(இதற்கு ஒரு தமிழ் வார்த்தையை யாரவது கண்டுபிடியுங்கள்,ப்ளீஸ்)இப்படி ஒரு ஜோடியை திரையில் பார்த்தும்தான் எத்தனையோ நாட்களாகி விட்டது.

கடவுள் நம்பிக்கை இல்லாத விஞ்ஞானியான ஒருவரின் மகனும், புராண பிரவசனங்கள் செய்யும், கடவுள் மற்றும் சடங்குகள் முடலியவற்றில் தீவிர நம்பிக்கை கொண்ட ஒருவரின் மகளும் காதலித்து மணமுடிக்கிறார்கள். சில காலம் வரை அவர்கள் எக்கச்சக்க முத்தங்களை பரிமாறிக் கொண்டு சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள். கதாநாயகியின் குழந்தை ஆசை நிறைவேறாத பொழுது தன் தந்தை கூறியபடி ஒரு பரிகார ஹோமம் அதுவும் மகன், தந்தை இருவரும் சேர்ந்து செய்ய வேண்டும் என்று ஆராத்யா(ஸமந்தா) வலியுறுத்த, “என் அப்பாவுக்கென்று சொஸைட்டியில் ஒரு மரியாதை இருக்கிறது, அவர் இப்படிப்பட்ட ஹோமங்களை ஒரு நாளும் செய்ய மாட்டார்” என்று விப்லவ்(விஜய் தேவரகொண்டா) மறுத்துவிட, இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு அதிகரித்து பிரிந்து விடுகிறார்கள். கடைசியில் இருவரும் இணைந்தார்களா? விப்லவ் அப்பா ஹோமத்திற்கு ஒப்புக் கொண்டாரா? என்பதுதான் மீதிக் கதை. விப்லவ் மிகவும் இறங்கி வந்து தன் காதலை வெளிப்படுத்திய பிறகும் ஆராத்யா ஏன் அத்தனை பிடிவாதமாக பிரிந்து போகிறாள் என்பது புரியவில்லை.

விஜய் தேவரகொண்டாவின் உயரதிகாரியாக ரோகிணி, அவர் கணவராக ஜெயராம், வி.தே.வின் அம்மாவாக சரண்யா, சமந்தாவின் பாட்டியாக லக்ஷ்மி, என்று நிறைய தெரிந்த முகங்கள். அப்பாக்களாக சச்சின் கேடேகர், முரளி ஷர்மா என்று எல்லோருமே தங்கள் பகுதியை குறைவின்றி செய்திருக்கிறார்கள். சரண்யா அப்பாவி, அம்மா என்னும் டெம்ப்ளேட்டிலிருந்து வெளி வந்தால் நல்லது. கண்ணுக்கினிய லொகேஷன், காதுக்கினிய பாடல்கள், படத்தோடு இணைந்த நகைச்சுவை, விஜய் தேவரகொண்டா, சமந்தாவின் நெருக்க்க்கமான காட்சிகள் படம் ஓடாமல் இருக்குமா? ரசிகர்களுக்கு குஷிதான்!

Sunday, September 24, 2023

போனேனே ஊர்கோலம் பேத்தியோடு – 4 (அரங்கன் ஆலயம்)

 போனேனே ஊர்கோலம் பேத்தியோடு – 4 (அரங்கன் ஆலயம்)

படம் உபயம் கூகுள் 

என் பேத்தியோடு திருச்சி கோவில்களுக்குச் சென்றதை மூன்று பகுதிகளாக எழுதினேன். நிறைவுப் பகுதியானா ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்றதை எழுதுவதற்கு ஏனோ இத்தனை நாட்களாகி விட்டது

ஸ்ரீரங்கத்தில் பல வருடங்கள் இருந்திருந்தாலும் ஒவ்வொரு முறை அந்தக் கோவிலுக்குச் செல்லும்பொழுதும் மனம் விகசிக்கும். எத்தனையெத்தனை மகான்கள் இங்கு வந்து அரங்கனை தொழுதிருக்கிறார்கள்! இங்குதானே ஆண்டாளும், திருப்பாணாழ்வாரும் அரங்கனோடு கலந்தார்கள்! பன்னிரு ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில் அல்லவா? இங்கிருப்பது சாட்சாத் ராமபிரானின் முன்னோர்கள் வழிபட்ட, அவர்களின் குலதெய்வம் அல்லவா? என்றெல்லாம் நினைவுகள் அலைமோதும். என் பேத்தியோ முதல்முறையாக திருவரங்கம் வருகிறாள்.


இதை எடுத்தது என் பேத்தி 

நாங்கள் முதலில் 21 கோபுரங்களை தரிசித்து, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, கருடாழ்வாரை தரிசித்தோம். பிரும்மாண்டமான கருடாழ்வாரை பார்த்த அவள், “ஆ..! இவ்ளோ பெரிய கருடனா?” என்று வியந்தாள். “ஆமாம் இங்கு எல்லாமே பெரிசு. பெரிய கோவில், பெரிய பெருமாள், பெரிய திருவடி” என்றேன். அங்கிருந்த கோவில் யானையிடம் ஆசி வாங்க வேண்டும் என்றாள். ஆசி வாங்கிக் கொண்டு, கட்டண சேவைக்காக நுழைவு சீட்டு வாங்க காத்திருந்த நேரத்தில் அவளுக்கு ஸ்ரீரங்கம் கோவில் தல புராணம் சுருக்கமாக சொன்னேன். அப்போது பெருமாளுக்கு தைலக்காப்பு சாற்றியிருந்ததால் முகமண்டலம் மட்டுமே தரிசனம் செய்ய முடிந்தது. சன்னதியை விட்டு வெளியே வந்தவள் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டிருந்தாள். என்ன காரணம் என்று கேட்டதற்கு, “ஐ குட் நாட் சீ த ஸ்னேக், தே புஷ்ட் மி” என்றாள். “நெக்ஸ்ட் டைம் பார்க்கலாம்” என்று கூறி சமாதானம் செய்து விட்டு, தாயார் சன்னதிக்ககுச் சென்றோம்.

தாயார் சன்னதியில் பூ வாங்கிக் கொண்டோம். அங்கிருந்த வயது முதிர்ந்த அர்ச்சகர் ஒருவர், இவளிடமிருந்து பூவை வாங்கிக்கொண்டு, “இங்கு மூன்று பேர்கள் இருக்கிறார்கள், ரங்கநாயகி, பூமாதேவி, மஹாலக்ஷ்மி, இந்த மூவரில் யாருக்கு இந்த பூவை சாற்ற வேண்டும்? ஒன்? டூ? திரி?” என்றார். அவள் டூ என்றதும், மத்தியில் இருந்த தாயாருக்கு சாற்றி, எங்களுக்கு பிரசாதம் கொடுத்தார்.

*அங்கிருந்து கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றிய இடத்திற்கு வந்ததும், கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றிய பொழுது அவர் ராமாயணத்தில் நரசிம்ம அவதாரத்தை விவரித்திருந்த விதம் சரியில்லை என்று அங்கிருந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் கூறினாலும் மேட்டழகியசிங்கராகிய நரசிம்மர் கர்ஜனை செய்ததால் ஸ்ரீவைஷ்ணவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள்” என்று நான் சொன்னதும், “அரங்கேற்றம் என்றால் என்ன?” என்று கேட்டாள். “புக் பப்ளிஷ் பண்ணி, அதை லான்ச் பண்ணுவது” என்றேன். உடனே, எனக்கு அந்த நரசிம்மரை பார்க்கணும்” என்றாள்.

அந்த படிகளில் ஏறிச் சென்றால் அவரை தரிசிக்கலாம். நீ போய் தரிசனம் செய்து விட்டு வா. நேற்று மலைக்கோட்டையில் ஏறியதில் எனக்கு கால் வலிக்கிறது. நான் கீழே நின்றபடியே தரிசித்துக் கொள்கிறேன்” என்று அவளை மேலே அனுப்பினேன். மேட்டழகிய சிங்கரை தரிசித்துவிட்டு வந்தவள், “வென் ஐ ரோட் அ புக் அண்ட் பப்ளிஷ், யூ ஷுட் ஹெல்ப் மீ” என்று அவரிடம் சொல்லிவிட்டு வந்தேன்” என்றவள் தொடர்ந்து, “வில் ஹீ அண்டர்ஸ்டாண்ட் இங்க்லிஷ்? பிகாஸ் ஐ பிரேட் டு ஹிம் இன் இங்கிலிஷ் ஒன்லி” என்றாளே பார்க்கலாம்.

எனக்கு சிரிப்பு வந்தது. “தமிழ் கடவுள், சமஸ்கிருத கடவுள், என்றெல்லாம் நாம் பிரித்து பேசும் பொழுது கடவுளுக்கும் இப்படித்தான் சிரிப்பு வருமோ?  

*கம்பர் ராமாயணத்தை திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்ததற்கு முன் அவருக்கு ஏற்பட்ட தடைகள் பற்றியெல்லாம் நான் கூறவில்லை.






 "

Wednesday, August 23, 2023

தாயுமானவராகிய ஜவந்தீஸ்வரர் தரிசனம்

முன்குறிப்பு: இது கோவில் பற்றிய பதிவு. இதில் ஈடுபாடு இல்லாதவர்கள் தயவு செய்து நகர்ந்து விடவும். நன்றி.


தாயுமானவராகிய ஜவந்தீஸ்வரர் தரிசனம்


காலையில் முத்தரசநல்லூர் குருவாயூரப்பன் கோவிலுக்குச் சென்று விட்டு, மாலையில் மலைகோட்டை சென்று தாயுமானவரையும், உச்சிப்பிளையாரையும் தரிசிக்கலாம் என்று பேத்தியை அழைத்துக் கொண்டு புறப்பட்டேன். தாயுமானவர் சன்னதியில் வாழைத்தார் கட்ட வேண்டிய பிரார்த்தனை இருந்தது.


முதலில் மலையேற வேண்டும் என்றதும், அந்த பாறையில் ஏற வேண்டும் என்று நினைத்தாளோ என்னவோ, வருவதற்கு கொஞ்சம் முரண்டு பிடித்தாள். “அங்கு படிகள் இருக்கும், உன்னால் முடிந்தால் ஏறு, இல்லாவிட்டால் போக வேண்டாம்” என்று என் மன்னி, அவளை கன்வின்ஸ் செய்தார். ஆட்டோகாரர், நேராக தாயுமானவர் சன்னிதிக்கு செல்ல படிகள் துவங்கும் இடத்திலேயே நிறுத்தினார். இருந்தாலும், மாணிக்க விநாயகரை தரிசிக்காமல் செல்ல மனம் வரவில்லை. கீழே சென்று மாணிக்க விநாயகரை தரிசித்து விட்டு, மலையேறத் துவங்கினோம். கிடுகிடுவென்று படிகளில் ஏறியவள், “பாட்டி யூ ஆர் ஸ்லோ” என்றுஅலுத்துக் கொள்வாள். “நாங்களும் இப்படி வேகமாக ஏறியிருக்கிறோம், இப்போது வயதாகி விட்டது” என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டேன். உள்ளுக்குள் இன்னொரு முறை தாயுமானவரை தரிசிக்க முடியுமா? என்று ஏக்கமும் வந்தது.


தாயுமானவர் சன்னிதியில் அபிஷேக நேரம். அதற்குள் அம்பாள் சுகந்த கூந்தலாம்பாளை தரிசித்து விட்டு வந்தோம். தாயுமானவரை தரிசிக்கும் பொழுதெல்லாம் மனம் நெகிழும். ரத்னாவதிக்கு பிரசவம் பாரப்பதற்காக தாயாக வந்தவர் அல்லவா? என் மகளின் இரண்டாவது பிரசவம் கொரோனா காலத்தில் நிகழ்ந்ததால், என்னால் உதவிக்கு போக முடியவில்லை. அவளிடம், “தாயுமானவரை நினைத்துக்கொள்”என்றுதான் சொல்லிக் கொண்டே இருந்தேன். பேத்திக்கும் அந்த கதையைக் கூறினேன். தாயுமானவர் சன்னிதியில் வாழைத்தாரை வைத்து,அர்ச்சனை செய்து, வழிபட்டுவிட்டு, உச்சி பிளையாரை தரிசிக்கச் சென்றோம். வழியில் குளிர் பானங்கள், சிப்ஸ் போன்றவை விற்கும் சிறிய கடை வைத்திருப்பவர் ஐநூறு ரூபாய்க்கு சில்லறை இருக்கிறது என்று கூறி ஆச்சரியமூட்டினார். பே.டி.எம். வைத்திருந்தாலும், “சில்லறை இல்லை என்று கூறினால், வியாபாரம் பண்ண முடியாது, தினசரி இரவு பெட்ரோல் பங்கில் சில்லறை மாற்றிக் கொண்டுவிடுவேன்” என்றார். உச்சிப் பிள்ளையாரை வணங்கி, கீழே இறங்கினோம்.

ஊர்த்துவ தாண்டவ சிற்பம்

இந்த சங்கிலி இரும்பினால் ஆன தில்லை, கருங்கல் சங்கிலி!


கீழே இறங்கும் பொழுது, என் பள்ளி பருவத்தில் தோழிகளொடு பெட் வைத்து கீழே இறங்கியபொழுது கால் தடுக்கி விழுந்து, சுளுக்கிக் கொண்டு, கால் புசுபுவென்று வீங்கிக் கொண்டு, பள்ளிக்கு ஒரு வாரம் லீவு போட நேர்ந்ததை சொன்னதைக் கேட்டு, பயந்து விட்டாள். “யூ ஆர் டெல்லிங் ஸ்கேரி ஸ்டோரி” என்று மெதுவாக இறங்கினாள். சாரதாஸில் கொஞ்சம் பர்சேஸ் செய்து கொண்டு(திருச்சிக்கு போய் விட்டு சாரதாஸ் போகாமல் வர முடியுமா?), அவளுக்கு ஒரு பட்டர் ஸ்காட்ச் ஐஸ் க்ரீமும், நான் ஜிகிர் தண்டாவும் சாப்பிட்டு விட்டு வந்தோம். ஜிகிர் தண்டா சென்னையில் ஒரு மாதிரியாகவும் திருச்சியில் வேறு மாதிரியாகவும் இருக்கிறது. மதுரையில் எப்படி இருக்கிறது என்று சுவைத்து பார்க்க வேண்டும்.

தல புராணம்:

இப்போது தாயுமானவர் என்று அறியப்பட்டாலும், ஆதி காலத்தில் இவருக்கு ஜவந்தி நாதர், அல்லது ஜவந்தீஸ்வரர் என்றுதான் திருநாமம். ஜவந்தி பூக்கள் நிறைந்த காடாக இருந்ததால் அந்தப் பெயர். அம்பாள் மட்டுவார் குழலம்மை அல்லது, சுகந்தி கூந்தலாம்பாள். இந்த ஜவந்தீஸ்வரரிடம் பக்தி பூண்ட ரத்னாவதி என்னும் செட்டிப் பெண் தினசரி அவரை வந்து தரிசனம் செய்வாள். அவள் கருவுற்றபொழுது அவளுடைய தாயார் பிரசவ நேரத்தில் உதவி செய்வதற்காக புறப்பட்டு வருகிறாள். ஆனால், அந்த சமயம் கொள்ளிடத்தில் வெள்ளம் வந்துவிட, அவளால் வர முடியவில்லை. ரத்னாவதிக்கு பிரசவ வலி எடுத்து விடுகிறது. அவள் தினசரி சென்று வணங்கிய ஜவந்தீஸ்வரர் தானே ரத்னாவதியின் தாயாரைப் போல வந்து, பிரசவம் பார்த்து, அதற்குப் பிறகு அவளுக்கு பத்தியம் வடித்து போடுவது, குழந்தையை குளிப்பாட்டுவது போன்றவைகளை செய்கிறார்.

வெள்ளம் வடிந்த பிறகு, மகள் வீட்டிற்கு வருகிறாள் தாய். தூளியில் குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறது. ஏதோ வேலையாக இருந்த மகள் வீட்டிர்க்குள் நுழையும் அம்மாவிற்கு முகமன் கூறி வரவேற்கவில்லை. தன்னை மகள் வரவேற்காததை விட, மகளின் வடிந்த வயிரும், தூளியில் தூங்கும் குழந்தையும் அதிர்ச்சி அளிக்கின்றது. “ என்னடி இது? குழந்தை பிறந்து விட்டதா? என்ன குழந்தை? எப்போது பிறந்தது?” என்று தாயார் கேட்டது மகளுக்கு ஆச்ச்ரயமாக இருந்தது. “ என்னம்மா? நீதானே பிரசவம் பார்த்தாய்? இப்போது புதுசா, எதுவும் தெரியாத மாதிரி கேட்கிறாய்?” “நான் வந்தேனா? ஆற்றில் வெள்ளம் வந்ததால், என்னால் வர முடியவில்லை, வெள்ளம் வடிந்த பிறகு இப்போதுதான் வருகிறேன்” என்று அம்மா சொன்னதும் அதிர்ச்சியடைந்த ரத்னாவதிக்கு தனக்கு தாயாக வந்து உதவியது அந்த ஜவந்தீஸ்வரர்தான் என்பது புரிய, “எனக்காக இறங்கி வந்தீர்களா?” என்று புளகாங்கிதம் அடைந்து கேட்கிறாள். சிவ பெருமானோ,  நீ தினசரி என்னைப் பார்க்க மேலே ஏறி வந்தாயே? அதனால்தான் நான் உனக்காக இறங்கி வந்தேன்” என்றாராம். அது முதற்கொண்டே பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்பதற்காக நேர்ந்து கொண்டு தாயுமானவர் சன்னிதியில் வாழைத்தார் சமர்ப்பிக்கும் வழக்கம் உண்டு.  



திருச்சி மலைக்கோட்டை இமயமலையை விட மூத்தது. கல் தோன்றி மண் தோன்றா காலத்து..’என்பார்களே அப்படி உலகில் முதலில் தோன்றிய கல் மலை இது. இதன் மேலிருக்கும் கோவில் மகேந்திரவர்மன் காலத்து குடைவரை கோவில். இங்கிருக்கும் லிங்கத் திருமேனி திருவுடைமருதூர் மஹாலிங்கத்திற்கு இணையாக பெரிதானது. பின்னாளில்தான் இவைகளை விட பெரிய தஞ்சை பெருவுடையார் கோவில் கட்டப்பட்டது. மூன்று முழமும் ஒரு சுத்து,முப்பது முழமும் ஒரு சுத்து என்னும் சொலவடைக்கு காரணமான கோவில்கள் இவை. அதாவது இறைவனுக்கு சாற்றும் ஆடை மூன்று முழமாக இருந்தாலும் ஒரு சுற்றுதான் வரும், முப்பது முழமாக இருந்தாலும் ஒரு சுற்றுதான் வரும் என்பது பொருள்.

தாயுமானவர் மீது அதீத பக்தி பூண்டவர் ஸ்ரீதர ஐயாவாள் அவர்கள். தாயுமானவரை தரிசிக்கும் பலர் தங்கள் தாயை நினைவு கூர்ந்து கண் பனிப்பதுண்டு.


நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே

றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்

சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்

குன்றுடையானைக் கூறஎன்னுள்ளங் குளிரும்மே