கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, January 28, 2025

பத்மினி(மலையாளம்) திரை விமர்சனம்

பத்மினி(மலையாளம்)

 


அன்று நெட்ஃப்லெக்ஸில் ப்ரௌஸ் பண்ணிய பொழுது ‘பத்மினி’ என்ற படம் கண்ணில் பட்டது. 2023ல் வந்த் படம். அதில் அபர்ணா முரளி இருப்பதை பார்த்ததும் பார்க்க முடிவு செய்தேன்.

ரமேஷன்(குஞ்சாக்கோ போபன்) என்னும் மொழியாசிரியருக்கு திருமணமாகிறது. முதலிரவில் தன்னுடைய கவிதைகளை மனைவிக்கு வாசித்துக் காட்டுகிறான். அப்போது திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட, ஜன்னலருக்கருகில் நிற்கும் மனைவி நிலவொளியை ரசித்து, அந்த நிலவொளியில் ஒரு வாக் போகலாமா? என்று கேட்க, இருவரும் வெளியே வந்து நடக்கிறார்கள். சற்று தூரத்தில் ஹெட் லைட் வெளிச்சத்தை பாய்ச்சியபடி ஒரு பிரீமியர் பத்மினி கார் நிற்கிறது.

இந்த நேரத்தில் யார் இது? என்று அவன் குழம்ப, அவன்தான் தன்னுடைய காதலன், தங்கள் காதலை தன் வீட்டில் ஒப்புக்கொள்ளாததால் தனக்கு வேறு வழி தெரியவில்லை, என்னை மன்னித்து விடு என்று கூறி காதலனோடு அவள் பிரீமியர் பத்மினி காரில் ஏறி சென்று விடுகிறாள். அவன் திகைத்து நிற்க, அதை இரண்டு பேர் பார்த்து விடுகிறார்கள். அதன் பிறகு அந்த ஊரில் அவனை பத்மினி என்று அழைத்து கலாய்க்கிறார்கள்.

இந்த சமயத்தில் அவனுடைய கல்லூரிக்கு பத்மினி என்ற பெயரில் ஒரு ஆசிரியை(மடோனா செபாஸ்டியன்) வருகிறார். ரமேஷனுக்கும், பத்மினிக்குமிடையே காதல் அரும்புகிறது. அவளை பெண் கேட்டுச் செல்லும்போது அவளுடைய தாய் மாமன், “எல்லாம் சரி, நீங்கள் உங்கள் மனைவியை விவாகரத்து செய்து விட்டு வருவது நல்லது, பின்னால் பிரச்சனைகள் வராது” என்று கூற விவாகரத்து வாங்க வக்கீல் ஸ்ரீதேவியை (அபர்ணா பாலமுரளி) அணுகுகிறார். ஸ்ரீதேவிக்கு அப்போதுதான் மிகவும் மெட்டீரியலிஸ்டான பிசினெஸ்மேனும், சந்தேகப்பிராணியுமான ஜெயனோடு(ஸாஜின் செருகாயில்) திருமணம் நிச்சயமாகியிருக்கிறது.

விவாகரத்து கேஸை விசாரிக்கும் நீதிபதி, ரமேஷனின் மனைவியை ஆஜர்படுத்த உத்தரவிட, ரமேஷனும், ஸ்ரீதேவியும் ரமேஷனின் மனைவி சென்னையில் இருப்பதை கண்டுபிடித்து, அவள் வீட்டின் அழைப்பு மணியை அழுத்த, ஓடிவந்த காதலனோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கும் ஸ்மிருதி, கதவைத் திறந்து, வாசலில் நிற்கும் ரமேஷனைப் பார்த்ததும், “பார்த்தாயா, என்னை அழைத்துச் செல்ல, என் ரமேஷன் வந்து விட்டான்” எங்கிறாள். அதன் பிறகு என்ன ஆனது? ரமேஷனுக்கு அவளிடமிருந்து விவாகரத்து கிடைத்ததா? என்பது மீதி கதை.

படம் சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாகவும் செல்கிறது. அபர்ணா பாலமுரளியும், மடோனா செபாஸ்டியனும் கச்சிதம். அபர்ணா தோற்றத்திலும் கச்சிதமாக இருந்தால் நன்றாக இருக்கும். ரமேஷனின் நண்பனாக வருபவரும், சாஜின் செருகாயிலும் சிறப்பு! குஞ்சாக்கோ போபன் அதிர்ச்சி, கோபம், சங்கடம் எல்லாவற்றிர்க்கும் ஒரே மாதிரி முக பாவம்.

ரத்தம் தெறிக்கும் வன்முறை, நம்ப முடியாத சண்டை காட்சிகள், இரைச்சலான இசை இதெல்லாம் இல்லாத குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படம். மலையாளத்தில் மட்டும் எப்படி வித்தியாசமாக, எளிமையாக யோசித்து படம் எடுக்கிறார்கள் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை

 

Saturday, January 11, 2025

படித்ததில் பிடித்த கதாபாத்திரம்

 படித்ததில் பிடித்த கதாபாத்திரம் 

சின்ன வயதில் முத்து காமிக்ஸில் 'இரும்புக் கை மாயாவி' என்று ஒன்று வரும். அதில் சி.ஐ.டி யாக வரும் ஒருவர்(பெயர் மறந்து விட்டது) வலது கை மணிக்கட்டு பகுதியிலிருந்து இரும்பால் ஆனதாக இருக்கும். அதை பேட்டரியை சார்ஜ் செய்வது போல சார்ஜ் செய்து கொண்டால் உடல் மற்றவர்கள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடும். பார்ப்பவர்களுக்கு இரும்புக் கை மட்டும் நகர்வது போல தோன்றும். அதனால் வில்லன்களுக்கு அவரை தாக்குவது கடினமாக இருக்கும். அவர் அப்படி மறைந்து வில்லன்களை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று பேட்டரியில் சார்ஜ் குறைந்து உருவம் புலப்படத் தொடங்கும், படிக்கும் நமக்கு 'ஐயையோ' என்று படபடப்பாக இருக்கும். இந்த மாறுபட்ட கற்பனை பாத்திரம் அதிகம் கவர்ந்தது.

அதற்குப்பிறகு நான் வாசித்த கதைகளில் முக்கியமானது 'பொன்னியின் செல்வன்' அதில் வந்தியத் தேவனையும், ஆழ்வார்க்கடியானையும் பிடிக்காமல் போகுமா? ஆனால் மிகவும் கவர்ந்த கதாபாத்திரம் நந்தினிதான்.



நந்தினியை வர்ணிக்கும் கல்கி,"அவளைப் பார்க்கும் ஆண்கள் எல்லோரும் புத்தி பேதலித்து போவார்கள்' என்று எழுதியிருப்பார். நந்தினி பற்றி படிக்கும் நமக்கே புத்தி பேதலித்து, அவள் மீது கோபம் வராது. இரக்கமும்,பரிதாபமும் தான் வரும். ஒரு வேளை கல்கி அவர்களுக்கே நந்தினி மீது ஒரு பச்சாதாபம் இருந்ததோ?

நான் அதுவரை படித்த நாவல்களில் வரும் பெண்களெல்லாம் தியாகிகளாக, சுகமான உணர்வை தூண்டுபவர்களாக இருந்திருக்க, முதல் முறையாக ஒரு பெண் அரசியல் மாற்றங்களை நிகழ்த்துபவளாக இருந்தது பெரும் வியப்பை ஏற்படுத்தியது.  

அதே நேரத்தில் நந்தினி பாத்திரத்தை மிகவும் பிடிக்கும் என்று வெளியே சொல்ல பயம். ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தை விரும்புகிறேன் என்று சொன்னால் என்னை தவறாக நினைக்க மாட்டார்களா என்ற அச்சம். பின்னாளில் தெரிந்தது என்னைப் போலவே பலருக்கும் நந்தினியைப் பிடிக்கும் என்பது. இந்த காரணத்தினால் என் நண்பர் ஒருவர் தன் மகளுக்கு நந்தினி என்று பெயர் வைத்தார். எனக்கும் பெண் பிறந்தால் நந்தினி என்று பெயரிட வேண்டும் என்றுதான் ஆசை, ஆனால் சில காரணங்களினால் அந்தப் பெயரைச் சூட்ட முடியவில்லை. என் மைத்துனருக்கு பெண் பிறந்த பொழுது "என்ன பெயர் வைக்கலாம் நீ சொல்" என்று என்னிடம் கேட்டதும் நான் வேறு எந்தப் பெயரை சொல்லியிருப்பேன்? என் மைத்துனரும் அந்நிய பெண் குழந்தை எல்லாரடமும் ,"என் பெரியம்மாவின் எனக்கு நந்தினினு பேர் வெச்சா" என்று சொல்லும். ஏன் அவள் திருமணத்தில் அவள் கணவரிடமும் அதைச் சொன்னாள்.

பொன்னியின் செல்வனில் பிடித்த மற்றொரு கதாபாத்திரம் பூங்குழலி. அந்தப் பெண்ணின் துணிச்சல், ஆற்றல், சாகசம் அதோடு நேர்மை...இப்படி அத்தனையின் கூட்டாகவும் ஒரு பெண் இருக்க முடியுமா?

சிட்னி ஷெல்டனின் 'ரேஜ் ஆஃப் ஏஞ்சல்ஸ்' நாவலின் நாயகியான ஜெனிஃபர் பார்க்கர்...! எப்படிப்பட்ட போராளி! வாவ்!

ஆர்தர் ஹெய்லியின் பாத்திரப்படைப்புகள் எல்லாமே கனமானவை. அவருடைய 'Strong medicine' கதாநாயகி சீலியா ஜோர்டனும் மறக்க முடியாத கதாபாத்திரம்.

என்னடா இவள் எல்லாம் பெண் கதாபாத்திரங்களாகவே சொல்லிக் கொண்டிருக்கிறாளே? ஆண் பாத்திரங்களே இல்லையா? என்று நினைக்காதீர்கள். முதலில் குறிப்பிட்டது ஆண் கதாபாத்திரம்தான். 

கல்லூரி நாட்களில் படித்த சுஜாதாவின் கணேஷ் வசந்த் கதைகளில் வரும் வசந்தை காதலிக்காமல் இருக்க முடியுமா? விடலைத்தனமாக சில சமயங்களில் நடந்து கொண்டாலும், சாதுர்யம், புத்தி கூர்மை, செயல் திறனோடு நல்ல நகைச்சுவை உணர்வும் கொண்ட வசந்தை இளம் பெண்களுக்கு பிடிக்காமல் போகுமா?

ஒரு கதையில் டில்லி சுப்ரீம் கோர்டில் வசந்தை வழக்கு விஷயமாக சந்திக்கும் ஒரு வட இந்தியப் பெண்," ஐ ஆம் மித்ரா வசிஷ்ட்" ஐஎன்று அறிமுகப்படுத்திக் கொண்டதும் வசந்த்,"ஐ ஆம் வசந்த் பரத்வாஜ்" என்பான். அவள் குழம்பி, "நீங்கள் சவுத் இண்டியன் இல்லையா?" என்று கேட்பாள் அதற்கு வசந்த்,"சவுத் இண்டியன்ஸ்தான், உங்கள் பெயருக்கு பொருத்தமாக இருக்கட்டுமே என்று சொன்னேன்" என்பான், இந்த நகைச்சுவை உணர்ச்சியும், 

இன்னொரு கதையில் வில்லன் கூட்டத்தில் மாட்டிக் கொண்ட வசந்திடம் அந்த கூட்டத் தலைவன்,"யார் நீ?" என்பான், அதற்கு வசந்த்,"கரெக்ட்! இதே கேள்வியைத் தான் உபநிஷதமும் கேட்கிறது, யார் நீ?" என்பான். இந்த பிரசன்ஸ் ஆஃப் மைண்டும்தான் இளம் பெண்களுக்கு பிடித்ததோ? அதனால்தான் வசந்திற்கு திருமணம் செய்யலாம் என்று சுஜாதா முடிவு செய்த பொழுது என்னைப் போன்ற (அந்தக்கால)இளம் பெண்கள் 'கூடாது' என்று தந்தியடித்து தடுத்து விட்டார்களாம்.

கல்லூரிக் காலத்தில் எனக்கும் என் தோழிகளுக்கும் மிகவும் பிடித்த கதாபாத்திரம் இந்துமதி எழுதிய 'மணல் வீடுகள்' கதையின் நாயகன் கிருபாகர். . "அவனைப் போல நமக்கு வரும் கணவன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்" என்று பேசிக் கொள்வோம். 

அந்தக் கதைக்கு படம் வரைந்தது மணியன் செல்வன்... கேட்க வேண்டுமா? அந்த ஓவியங்கள் இன்னும் கண்ணுக்குள் இருக்கின்றன. 

இப்படி எத்தனையோ கதா பாத்திரங்கள் நம்மில் ஒருவராகவே இருந்தார்கள். 




Thursday, January 2, 2025

ஓ.டி.டி. மகிமை!

ஓ.டி.டி. மகிமை!

ஓ.டி.டி.யில் நாளொரு திரைப்படம் அல்லது சீரிஸ், பொழுதொரு யூ ட்யூப் சேனல் என்று பொழுது கழிகிறது. காலை வேளையில் ஸ்லோகங்கள், பஜன், சுதா சேஷய்யன், துஷ்யந்த் ஸ்ரீதர், வேளுக்குடி கிருஷ்ணன் போன்றவர்களின் உபன்யாசன்கள் என்று கேட்கும் நான் மாலையில் அப்படியே நேர் எதிராக Dr.காந்தராஜ், கிருஷ்ணவேல், ஸ்ரீவித்யா, Dr.ஷாலினி போன்றவர்களின் யூ டியூப் கேட்கத் தொடங்கி விடுவேன். இதில் Dr. ஷாலினி சற்று தெளிவு. 

திருப்பாவையில் குறிப்பிடப்படும் நப்பின்னை யார்? என்று ஒரு குழப்பம் இருந்தது. ரேவதி சங்கரன் அதை தெளிவித்தார். நல்+பின்னை=நப்பின்னை. அதாவது பாற்கடல் கடையப்பட்ட பொழுது பின்னால் வந்த தேவி. முதலில் வந்தவள் ஜேஷ்டா தேவி என்னும் மூத்த தேவி. நாம் அவளை மூதேவி என்கிறோம். பின்னால் வந்த இளையவள் நப்பின்னை என்னும் மகாலட்சுமி என்று அற்புதமாக விளக்கினார். மதுரை கோவிலை எப்படி தரிசிக்க வேண்டும் என்ற அவருடைய வீடியோவும் சிறப்பாக இருந்தது. 

சமீபத்தில் மிகவும் ரசித்துப் பார்த்த நிகழ்ச்சி அஸ்வின் ரவிச்சந்திரன் கோபிநாத்திற்கு அளித்த பேட்டி. மிகவும் இயல்பாகவும், யதார்த்தமாகவும் பேசினார். 

"உங்கள் திருமணம் லவ் கம் அரேஞ்ச்ட் மேரேஜா?" என்று கோபிநாத் கேட்டதற்கு, " என்ன லவ் கம் அரேஞ்ச்ட்? லவ் மேரேஜ்தான்" என்றார். 

பள்ளி நாட்களில் இவர் பெரும்பாலும் பேட்டை தூக்கிக் கொண்டு விளையாட போய்க் கொண்டிருந்ததால் இவருடன் படித்த சில மாணவர்களின் பெற்றோர்கள் "அஸ்வினோடு சேராதே, சேர்ந்தால் அவன் உன்னையும் மைதானத்திற்கு அழைத்துச் சென்று விடுவான்" என்று கூறியிருக்கிறார்களாம்!! தோடா! 

அவர் தந்தை அவருக்காக பட்ட சிரமங்களை சொல்லும் பொழுது,"இப்பொழுது நாம் மிகவும் சுயநலமாக வாழ்கிறோம், என் பெற்றோர்கள் எனக்காக நிறைய தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்கள் எனக்கு செய்ததை என்னால் என் குழந்தைகளுக்கு செய்ய முடியாது" என்று கூறிய அதே நேரத்தில் தந்தையோடு நிறைய சண்டை போடுவதாகவும் கூறினார். :)) அம்மாவின் அறிவுரையை கேட்டுதான் ஸ்பின் பெளலிங் போட ஆரம்பித்தாராம்.

டெஸ்ட் மாட்சிற்கான தயாரிப்புகளை அவர் விவரித்ததை கேட்டபொழுது இதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? என்று தோன்றியது. 

"நான் சின்ன வயதில் என் அப்பாவின் காலடியில் உட்கார்ந்து கொண்டுதான் டி.வி.யில் கிரிக்கெட் மாட்ச் பார்த்தேன். அப்போது நானும் மேட்ச் விளையாடுவேன் என்று நினைத்தேனா? கிரிக்கெட் பார்க்க பிடித்தது பார்த்தேன், கிரிக்கெட் விளையாடினால் இவ்வளவு ரூபாய் சம்பாதிக்கலாம் என்றோ, ஐ.பி.எல். ஏலத்தில் என்னை இத்தனை ரூபாய்க்கு எடுப்பார்கள் என்றோ நினைத்தது கிடையாது. கிரிக்கெட் விளையாட பிடிக்கும் விளையாடினேன்" என்றார் கீதையின் சாரம்!


Wednesday, January 1, 2025

Review of 2014

 2024ஆம் வருடத்தை திரும்பி பார்க்கும் பொழுது நிறைய பயணங்கள். "சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையே பயணிக்க சீஸன் டிக்கெட் வாங்கி வைத்துக்கொள்" என்று சிலர் கூறும் வண்ணம் ஷட்டில் சர்வீஸ் போல பெங்களூர்-சென்னை-பெங்களூர் என்று பயணித்தேன்.  

ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த மூன்று பயணங்கள். அவற்றில்திருப்பதியில் ஸ்ரீவாரிி தரிசனம் பெற்றதையும், அமிர்தபுரியில் அம்மாவுக்கு ஆரத்தி எடுத்ததையும் பற்றி ஏற்கனவே எழுதி விட்டேன். 

மூன்றாவது பயணம் புட்டபர்த்திக்கு சென்றது. கனடாவில் வசிக்கும் என் மகள்,மாப்பிள்ளை,பேத்தி இவர்கள் புட்டபர்த்தியில் கிருஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்கள். அதற்காக டிசம்பர் 20 முதல், 27 வரை அங்கே தங்கினேன். அது ஒரு அற்புத அனுபவம். எட்டு நாட்களும் இறை சிந்தனை தவிர வேறு இல்லை. 

2024 ஜனவரி ஐந்தாம் தேதி கர்நாடகா யாத்திரையில் தொடங்கி, டிசம்பரில் புட்டபர்த்தியில் முடித்தேன். கர்னாடகா யாத்திரையில் அறிமுகமான ஹேமா சுந்தரம் என்பவர் நாராயணீயம் வகுப்புகள் எடுப்பது அறிந்து, அவரிடம் நாராயணீயம் கற்றுக் கொள்ள துவங்கினேன். முகநூல் தோழி ஒருவர் கீதா குஞ்சன் மூலம் பகவத் கீதா கற்றுக் கொண்டதை எழுதியதை படித்து விட்டு பகவத் கீதையும் கற்றுக் கொள்கிறேன். சில நல்ல விஷயங்கள் நடக்கின்றன எனலாமா?


Saturday, December 21, 2024

2024 ல் முக்கிய நிகழ்வுகள்:

2024 ல் முக்கிய நிகழ்வுகள்

இந்த ஆண்டின் சிறந்த நிகழ்வு என்றால் நான் ஒன்றை மட்டும் சொல்ல முடியாது. இரண்டை சொல்லுவேன். முதலாவது, பிரேக் தரிசனம் எனப்படும் ஸ்ரீவாணி தரிசனத்தில் திருப்பதி பெருமாளை மிக அருகில் தரிசித்ததும், இரண்டாவது மாதா அமிர்தானந்தமயிக்கு ஆரத்தி எடுக்கும் பாக்கியம் வாய்த்ததுமே. ஆனால் அந்த நிமிடங்களில் நான் எப்படி உணர்ந்தேன் என்பதை விவரிக்கும் திறமை எனக்கிருக்கிறதா? என்பது சந்தேகமே. முடிந்த அளவு என் உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறேன்.

பல வருடங்களுக்கு முன்பு திருப்பதியில் அங்க பிரதட்சினம் செய்த பிறகு பெருமாளை அருகே தரிசித்தேன். அதன் பிறகு சென்ற பொழுதெல்லாம் பெருமாளை எட்டி இருந்துதான் தரிசிக்க முடிந்தது. அதிலும், ஜருகண்டி விரட்டல், நமக்கு முன்னால் இருப்பவர் உயரமாக இருந்து விட்டால் வரிசையில் நகரும்பொழுதே பெருமாளை தரிசிக்கும் சான்ஸ் அவுட்! எல்லா கோவில்களிலும் சுவாமியை பார்ப்பது போல் திருப்பதி பெருமாளை தரிசிக்க முடியுமா? என்ற ஏக்கம் உள்ளுக்குள் கணன்று கொண்டிருந்தது. நாம் எதற்காவது அடி மனதில் ஆசைப்பட்டால் அதை இந்த பிரபஞ்சம் நிறைவேற்றும் என்பார்களே அப்படி என்னுடைய இந்த ஆசையும் 2024 ஜூலையில் நிறைவேறியது.

என்னுடைய பெரிய அக்காவின் மகளுக்கு திருமணமாகி ஜூலையில் 25வது வருடம்,வெள்ளிவிழா ஆண்டு. இந்த வருடம் அவளுக்கு 50 அகவை முடிகிறது. இவை இரண்டிற்காகவும் அவளுடைய மகனும்,மகளும் இந்த ஸ்ரீவாணி தரிசனதிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டதும், என் அக்கா பெண்ணிடம், “எனக்கும் டிக்கெட் கிடைக்குமா? என் மகனும் மகளும் எனக்காக ஸ்பான்ஸர் செய்ய ரெடி, என்றதும், அவள் அவர்கள் ஏஜெண்டிடிடம் கேட்டு "எட்டாம் தேதிதான் கன்ஃபர்ம் பண்ண முடியும்” என்றாள். எட்டாம் தேதி மதியம் “உங்களுக்கும் டிக்கெட் கிடைத்து விட்டது, சென்னைக்கு கிளம்பி வாருங்கள், பத்தாம் தேதி திருப்பதிக்கு காரில் போகலாம் என்றாள்”

நான் ஜூலை ஒன்பதாம் தேதி பெங்களூரிலிருந்து பஸ்ஸில் புறப்பட்டு சென்னை சென்று பத்தாம் தேதி திருப்பதிக்கு கிளம்பினோம். அங்கு ஸ்ரீவாணி சேவைதாரர்களுக்கு தங்கும் இடம் ஒதுக்குகிறார்கள். அறை விஸ்தாரமாகவும்,சுத்தமாகவும் இருந்தது. 11ஆம் தேதி காலை, எழுந்து, குளித்து, அருகில் இருந்த ஒரு ரெஸ்டாரெண்டில் சிற்றுண்டியை சாப்பிட்டு விட்டு கிளம்பினோம்.

வழக்கமாக செல்லும் பாதைதான், ஆதார் கார்ட், ஸ்ரீவாணி டிக்கெட் செக்கிங் போன்ற ஃபார்மாலிடிகளை முடித்துக் கொண்டு கூண்டுகளிள் அமர்ந்து கொண்டோம். சிறிது நேரத்தில் காபி, பால் போன்றவை வழங்கப்பட்டன. அதை அடுத்து பொங்கலும், தயிர் சாதமும். நாங்கள் ஏற்கனவே சிற்றுண்டி சாப்பிட்டு விட்டதால் காபியோடு நிறுத்திக் கொண்டோம்.

சற்று நேரத்தில் கூண்டுகளை திறந்து விட்டார்கள். நீளமாக நடந்து, ஏறி, இறங்கி, கோவிலின் பிரதான வாயிலில் காலை நனைத்துக் கொண்டு, பலி பீடத்தை தாண்டி, இதோ பெருமாள் சன்னதியை நெருங்கி விட்டோம். கருடாழ்வாரை சேவித்துக் கொண்டோம். கொஞ்சம் கொஞ்சமாக சன்னதியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். மனது கோவிந்தா, கோவிந்தா என ஸ்மரிக்க, கோவிந்தனை நெருங்கி விட்டோம். பச்சை பட்டாடை உடுத்தி அந்த மாதவன் நம்மை உற்றுப் பார்க்கிறான். ‘தோள் கண்டார் தோளே கண்டார்’ என்பது போல அந்த அழகு முகத்தைப் பார்த்த நமக்கு வேறு எதையும் பார்க்கத் தோன்றவில்லை. எப்படியோ உற்சவரையும் சேவித்துக் கொண்டேன். பெருமாளுக்கு காட்டிய தீபாராதனையை ஒத்திக் கொள்ளச் சொல்கிறார் அர்ச்சகர். பிறகு வாழைப்பழ பிரஸாதம், தீர்த்தம், சடாரி எல்லாம் சாதிக்கப்படுகின்றன. வெளியே வந்த பிறகுதான் பெருமாளின் சங்கு, சக்கரங்கள் நம் கண்ணில் படவேயில்லையே? என்று தோன்றியது. மற்றுமொரு வாய்ப்பு வாய்க்காமலா போய் விடும்? பெருமாளின் அந்த அழகு முகம் நிறை கொண்டது என் நெஞ்சினில்.

 




அமிர்தபுரியில் ஆரத்தி:

ஒரு வேண்டுகோள்: மாதா அமிர்தானந்தமயி மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தயவு செய்து கடந்து போய் விடுங்கள். 







ஜூலையில் தன் திருமண நாளுக்கு திருப்பதி சென்ற என் அக்கா மகள் செப்டம்பரில் அவளுடைய பிறந்த நாளுக்கு அமிர்தபுரி சென்று மாதா அமிர்தானந்தமயியிடம் ஆசி பெற விரும்பினாள். இப்போதும் நான் அவளோடு சேர்ந்து கொண்டேன். இரண்டு அக்காக்கள், ஒரு அக்கா பெண், ஒரு அக்காவின் பேத்தி இவர்கள் சென்னையிலிருந்து கொச்சிக்கு விமானத்தில் வர, நான் பெங்களூரிலிருந்து விமானம் மூலம் கொச்சியை அடைந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். அங்கிருந்து இன்னோவா காரி்ல் அமிர்தபுரியை அடைந்தோம்.  

என்னுடைய பெரிய அக்கா அடிக்கடி அமிர்தபுரி செல்பவர் என்பதால் அங்கு நிறைய பேர்களைத் தெரியும். எங்களுக்கு ரூம் ஒதுக்கிய பெண் அக்காவை வரவேற்றார். அன்று இரவு தொலைபேசியில் அக்காவை அழைத்து மறுநாள் மாலை அம்மாவிற்கு (அமிர்தானந்தமயி) ஆரத்தி எடுக்க ஒரு ஸ்லாட் இருப்பதாகவும், எங்களில் ஒருவர் அதற்கு வரலாம் என்றும் கூறினார். அமிர்தபுரிக்கு முதல் முறை வந்திருந்த என் கடைசி அக்காவிற்கு அந்த வாய்ப்பை கொடுத்தோம். 

சாதாரணமாக அம்மாவிற்கு ஆரத்தி எடுக்க வேண்டுமென்றால் முன்னாலேயே பதிவு செய்து கொள்ள வேண்டும். இப்படி திடீரென்று கிடைப்பது அதிர்ஷ்டம்தான். 

அடுத்த நாள் முன்பே பதிவு பண்ணி வைத்திருந்த என் அக்கா பெண் அம்மாவிற்கு ஆரத்தி எடுத்தாள். அவர்கள் என்னையும் பதிவு பண்ண சொன்னார்கள். நான் நம்பிக்கை இல்லாமல்தான் பதிவு பண்ணினேன். அதற்கு அடுத்த நாள் காலை ஆரத்திக்கு ஒருவர் தேவைப்படுவதாகவும், என்னால் வர முடியுமா என்றும் தொலைபேசியில் கேட்ட பொழுது ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. 

ஆரத்தி எடுக்கப் போகிறவர்களுக்கு சிறிய பயிற்சி கொடுத்தார்கள். அந்த பயிற்சியின் பொழுதே என்னோடு ஆரத்தி எடுத்த பெண்மணிக்கு உணர்ச்சி வசப்பட்டதால் கைகள் நடுங்கின. ஆரத்தி எடுத்த பொழுது அந்தப் பெண்ணின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் பெருகியது. எனக்கும் கூட, ஏன் ஆரத்தி எடுத்த அத்தனை பேருக்கும். ஒருவர்கூட அழாமல் இல்லை. அதை அழுகை என்பது தவறு, நம் உள்ளுக்குள் ஏதோ உடைந்து கண்களின் வழியே வழிகிறது என்றுதான் தோன்றுகிறது. ஆரத்தி எடுக்கும் பொழுது நாம் அம்மாவை பார்க்காமல் இருக்கலாம், நம்மை அம்மா பார்த்துக் கொண்டே இருக்கிறாரே, அது எவ்வளவு பெரிய பாக்கியம்! குரு பார்க்க கோடி பாவம் தீரும். 



Tuesday, December 10, 2024

லப்பர் பந்து (சினிமா விமர்சனம்)

பழைய எம்.ஜி.ஆர். படங்களில் நல்லவனும், ஏழையுமான கதாநாயகனை அந்த ஊரின் பணக்காரரான பெண் விரும்புவாள். அவளுடைய தந்தை தன் குடும்பத்தின் பரம வைரி என்பதை அறியும் கதாநாயகனின் தாய் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பாள். கதாநாயகனும், கதாநாயகியின் தந்தையும் ஒருவரை ஒருவர் வெறுப்பார்கள். இறுதியில் இதெல்லாம் மாறி கதாநாயகனும், நாயகியும் எப்படி இணைகிறார்கள் என்பதுதான் முடிவாக இருக்கும்.

இதை அப்படியே வைத்துக்கொண்டு, கதை நடக்கும் களத்தை மட்டும் கிரிக்கெட் மைதானத்திற்கு கொண்டு சென்றால் அது 'லப்பர் பந்து'

பூமாலை(அட்டக்கத்தி தினேஷ்) ஒரு பெயிண்டர். ஆனால் அதை விட அவர் அதிகம் நேசிப்பது கிரிக்கெட்டை. வேலைக்கு மட்டம் போட்டு விட்டு மாட்ச் விளையாட போகிறார். அவர் அடிக்கும் சிக்ஸர்கள் பனைமரம் உயரத்திற்கு  பறக்கின்றன. அதனால் 'கெத்து' என்னும் பெயர்.

அவரைப்போலவே கிரிக்கெட்டை வெறித்தனமாக நேசிக்கும் அன்பு(ஹரீஷ் கல்யாண்) அவருடைய மகள் துர்காவை(சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி) நேசிக்கிறார். ஒரு மாட்சிற்குப்பின் பூமாலை பேட்டிங்கை அன்பு குறைவாக பேசுவதை கேட்ட பூமாலையின் தோழர் அவரிடம் போட்டுக் கொடுத்துவிட, அவருக்கு அன்பு மீது வெறுப்பு வருகிறது.

அடுத்த மாட்சில் அன்புவின் பந்து வீச்சால் பூமாலையின் அணி தோற்கிறது. அதுவும் பூமாலையின் வீக் பாயிண்டை புரிந்து கொண்டு அன்பு பந்து வீச, பூமாலையால் வழக்கம்போல் சுழற்ற முடியவில்லை.
இதற்கிடையில் இந்த விவகாரங்கங்கள் எதுவும் தெரியாத அன்புவின் தாய்(தேவ தர்ஷினி) பூமாலை வீட்டிற்கு பெண் பார்க்க வருகிறார், இரண்டு வீட்டார்களுக்கும் பரஸ்பரம் திருப்தியாக, திருமணத்தை நிச்சயிக்க முடிவெடுக்கிறார்கள்.

மறுநாள் காதலி வீட்டிற்கு வரும் அன்புவிற்கு தன் மாமனாராக வரப்போவது யார் என்று தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். பூமாலையின் மனைவி யசோதாவிற்கு(ஸ்வஸ்திகா) மாப்பிள்ளையும் தன் கணவனைப் போல கிரிக்கெட் பைத்தியம் என்று தெரிந்து விடுகிறது. இவனை மணந்து கொண்டால் தன்னைப் போலவே தன் மகளும் கஷ்டப்படுவாள் என்று பெண்ணைக் கொடுக்க மறுக்கிறாள். (எம்.ஜி.ஆர். படங்களில் எதிரியின் மகளை மருமகளாக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கதாநாயகனின் அம்மா தடை போடுவார், இதில் பெண்ணின் அம்மா மறுக்கிறார்).

இன்னொரு மாட்சில் இருவருக்கும் கைகலப்பாக எதிர்கால மாமனாரும், மாப்பிள்ளையும் மைதானத்தில் கட்டிப் புரள்கிறார்கள். யசோதா  கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விடுகிறாள். பூமாலையும், அன்பும் திருந்தினார்களா? அன்பு காதலியை கைப்பிடித்தாரா? என்பது மீதிக்கதை.

படம் பார்ப்பது போல் இல்லாமல், நிஜமாக ஒரு கிராமத்தில்  நடப்பதை பார்ப்பது போல இருக்கிறது. படத்தில் வரும் அத்தனை கதை மாந்தர்களும் ரத்தமும், சதையுமாக நம் கண் முன்னே உலவுகிறார்கள். அதிலும் தினேஷின் மனைவியாகவும், மகளாகவும் நடித்திருக்கும் பெண்கள் அபாரமான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக தினேஷ் மனைவியாக வரும் ஸ்வஸ்திகா இளம் வயதில் அம்மா ரோலில், அதுவும் திருமண வயதில் இருக்கும் பெண்ணிற்கு அம்மாவாக பாத்திரம் ஏற்று மிக அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

துர்காவாக நடித்திருக்கும் சஞ்சனா பார்க்கவும் அழகு, நடிப்பும் அழகு. இந்த இரு பெண்களையும் தமிழ் திரையுலகம் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அட்டகத்தி தினேஷ் அப்பாவா? அதுவும் இத்தனை பெரிய பெண்ணுக்கு? என்று வியப்பாக இருக்கிறது. ஆனால் பாத்திரத்தின் கனத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

ஹரீஷ் கல்யாணுக்கு 'பார்க்கிங்' படத்தை அடுத்து நடிக்க வாய்ப்புள்ள நல்ல ரோல். வாய்ப்பை தவற விடவில்லை ஹரீஷ். அவசரப்படாமல் நல்ல பாத்திரங்கள் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். பாராட்டுவோம். ஹரீஷின் தோழனாக வரும் பாலா சரவணன், காளி வெங்கட், அம்மாவாக வரும் தேவதர்ஷினி, தினேஷின் தாய் கீதா கைலாசம் எல்லோருமே ஏற்ற பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.

சாதாரணமாக திரைப்படங்களில்  கதாநாயகன் டீம் ஜெயிப்பது போலத்தான் முடியும், இந்த படத்தில் கதாநாயகர்கள் இருக்கும் டீம் தோற்கிறது. அதற்கு செல்லப்படும் காரணமும் சிறப்பு.

வசனங்கள் இயல்பாகவும், நன்றாகவும் இருக்கின்றன. பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. பின்ணனி இசை மிக நன்றாக இருக்கிறது. இயல்பான நகைச்சுவை.

கிரிக்கெட் மாட்ச் கொஞ்சம் அதிகம் என்றாலும், குடும்பத்தோடு  ரசிக்கக்கூடிய நல்ல படம்.

நீதி: எம்.ஜி.ஆர் பட ஃபார்முலா எவர்கிரீன்!

Tuesday, October 29, 2024

பாட்டி GOAT!

பாட்டி GOAT!

சீருடை அணிந்து கொண்டு, காலில் ஷூவையும், முதுகில் பையையும் மாட்டிக் கொண்டு, பள்ளிக்கு கிளம்பிய என் பேத்தி, டி.வி. ரிமோட்டை என் கையில் கொடுத்து, "நௌ இட்ஸ் பாட்டி டைம்(டி.வி. பார்க்க என்பது தொக்கி நிற்கும் பொருள்)" என்றாள். அவள் வீட்டில் இருக்கும் பொழுது கார்ட்டூன்தான் ஓடிக் கொண்டிருக்கும். "ஆனால் பாட்டி ஷூட் நாட் வாட்ச் கிருஷ்ணா கார்டூன்" 

"ஏன்? பாட்டிக்கும் கிருஷ்ணா பிடிக்கும், ஷீ ஆல்சோ வாட்ச் கிருஷ்ணா கார்ட்டூன்" என்றான் என் மகன்.

"நோ, தட்ஸ் மை கிருஷ்ணா கார்டூன்.." என்றவள் கொஞ்சம் இடைவெளி கொடுத்து, "பாட்டி வில் வாட்ச் குக்கிங்" என்றதும், என் மகனும், நானும் அடக்க முடியாமல் சிரித்தோம்.

'வாசலில் கிடக்கும் 

பால் பாக்கெட்டை அம்மாவிடமும்

செய்தித்தாளை அப்பாவிடமும்

கொடுக்க வேண்டுமென்று

குழந்தைக்கு 

யார் சொல்லிக் கொடுத்தார்கள்?'

என்னும் புதுக்

கவிதை நினைவுக்கு வந்தது.'

எப்படியோ பேத்தியை சரிகட்டி GOAT(உம்) பார்த்து விட்டேன்.  அதற்கு வந்த விமர்சனங்கள் பயமுறுத்தின, ஆனால் அத்தனை மோசமான இல்லை. கிளைமாக்ஸ் இழுவை சகித்துக் கொள்ள வேண்டும். வெங்கட் பிரபுவின் படங்கள் அத்தனை மோசமாக இருக்காதே என்ற என் நம்பிக்கை பிழைத்தது. 

தங்கப்பதக்கத்தில் விஜய் நடித்தது போலிருந்தது என்று நான் கூறினால் சிவாஜி ரசிகர்களுக்கு கோபம் வரலாம். ஏன் எனக்குள் இருக்கும் சிவாஜி ரசிகையே ஏற்றுக்கொள்ளவில்லை. "எதை எதோடு ஒப்பிடுகிறாய்? என்ற கேள்வி வந்தது.  

நல்ல படம் வேறு, நல்ல பொழுதுபோக்கு படம் வேறு. GOAT இரண்டாம் ரகம்.

பி.கு: பாட்டி goat(greatest of all time) என்று நான் சொல்லவில்லை. பாட்டியும் கோட்டும் என்று புரிந்து கொள்ளுங்கள்.