கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, July 2, 2026

மின்சாரக் கண்ணா!

மின்சாரக் கண்ணா!

வெளிநாட்டில் இருக்கும் வசதிகளித்தான் பெரும்பான்மையோர் பகிர்ந்து கொள்வார்கள். நேற்று 30.6.26 கனடாவில் நாங்கள் வசிக்கும் ஏரியாவில் கரெண்ட் கட்டாகிய பொழுது எங்கள் அனுபவத்தை இங்கே பகிர்கிறேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு வெதர் ஃபோர்காஸ்ட் பார்த்தபொழுது, 30.6.26 செவ்வாய் அன்று காலை ஒன்பது மணி வரை மழை இருக்கும் என்றும், அதற்கு ப் பிறகு வெய்யில் 35 - 40 C வரை செல்லும் எனவே வெளியே செல்ல வேண்டாம் என்றூ ஆரஞ்சு அலர்ட் கொடுத்திருந்தார்கள். அது பொய்யாகவில்லை, மதியம் வெய்யில் கொளுத்தியது.

துபாயிலிருந்து கனடா வந்திருந்த எங்கள் விருந்தினர்கள் 30.6.26 அன்றுதான் துபாய் திரும்ப டிக்கெட் புக் பண்ணியிருந்தார்கள். காலை 9:30 மணி முதல் 11:30 வரை எமகண்டம் இருந்ததால்(கனடா பஞ்சாகத்தை ஒட்டி), 11:30க்கு கிளம்ப நினைத்தார்கள்.  முதல் நாளே வெப் செக்இன் செய்து விட்டார்கள்.

செவ்வாய் அன்று காலை ஆறு மணிக்கு எழுந்த நான் காபி கொட்டையை அரைத்து டிகாஷன் போட்டு விட்டு, பாலை காய்ச்ச அடுப்பில் வைத்தேன். ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காது, கரெண்ட் கட்டானதால் மின்சார அடுப்பு அணைந்து விட்டது. வெளியே நல்ல மழை. மழை பெய்யும் சமயங்களில் எப்போதாவது இப்படி பவர் கட் ஆகும். ஆனால் உடனே பவர் வந்து விடும். ஆனால் நேற்று காலை பதினோரு மணிக்குதான்பவர் திரும்ப வரும் என்று செல்ஃபோனில் மெசேஜ் வந்திருந்தது. இதற்கு முன் இதை விட மோசமான பனிப்புயலடித்த பொழுதும், பயங்கரமான காற்று வீசிய பொழுதும் கூட இப்படி இத்தனை நேரம் பவர் போனதில்லை.  

ஊருக்குச் செல்ல வேண்டியவர்கள், "பதினோரு மணிக்கு மேல்தான் பவர் வரும் என்றால், அதற்கு மேல் குளித்து, சாப்பிட்டு கிளம்ப அதிக நேரமாகி விடும் என்பதால் நாங்கள் 9:30க்கு முன்னால் கிளம்பி விடுகிறோம்" என்றார்கள். விருந்தினர்களை வழியனுப்புவதற்காக என் மகள் வீட்டிலிருந்து வேலை செய்ய அலுவலகத்தில் அனுமதி பெற்றிருந்தாள். ஆனால் மின்சாரம் இல்லாததால் இணையம், இணையவில்லை. டேட்டா துரிதமாக வேலை செய்யவில்லை. அலுவலகத்தில் நிலைமையைச் சொன்ன பொழுது அலுவலகத்திற்கு வரச்சொல்லி விட்டார்கள். நெல்ல வேளை காரை கராஜில் நிறுத்தாமல் வெளியே நிறுத்தியிருந்ததால் அவளால் காரை எடுக்க முடிந்தது. இல்லாவிட்டால் மின்சாரத்தால் இயங்கும் கராஜ் கதவை எப்படி திறப்பது?

ஊருக்குச் செல்ல வேண்டியவர்களை விமான நிலையத்தில் விடுவதற்காக என் மாப்பிள்ளை விடுமுறை எடுத்திருந்தார். இப்போது மகள் அலுவலகம் செல்வதற்காக காரை எடுத்துச்சென்று விட்டதால். அதுவும் இயலாது என்ற நிலையில் அவர்கள் ஊபரின் உதவியை நாடினார்கள். டேட்டாவில் சிக்னலே கிடைக்கவில்லை. கிடைத்தபொழுது ஒரு வண்டி புக் பண்ணினார்கள். ஐந்து நிடங்களில் வருவதாக சொன்ன ஊபர் அரை மணி நேரம் கடந்தும் வரவில்லை. அதை கேன்சல் பண்ணிவிட்டு வேறு ஒரு ஊபர் புக் பண்ணி சிறிது நேரத்தில் அந்த கேன்சல் செய்யப்பட்ட வண்டி வந்தது. அந்த டிரைவரிடம் நிலைமையை விளக்கியதும், "இட்ஸ் ஆல்ரைட்" என்று கூறி சென்று விட்டார். அதன் பிறகு வந்த இரண்டாவதாக புக் பண்ணிய ஊபரில் அவர்கள் கிளம்பினார்கள். 

இப்போது நாங்கள் குளிக்க முடியாது(தண்ணீர் ஜி..ல்..) சமைக்க முடியாது. நல்ல வேளையாக முதல் நாள் கொஞ்சம் அதிகமாக வார்த்து வைத்த இட்லி இருந்தது. அதை சாப்பிட்டு, ஜூசைக் குடித்து வயிற்றை ரொப்பிக் கொண்டோம். நான் மட்டும் இரண்டு கோல்ட் காஃபி குடித்தேன். கோல்ட் காஃபி போடும் சூட்சுமம் தெரிந்தது. பாலை காய்ச்சக் கூடாது(pasteurized milk தானே? எனவே பாதகமில்லை) குளிர்சாதன்பெட்டியிலிருந்து எடுத்து, அதில் டிகாஷனைக் கலந்து சர்க்கரைப் போட்டு நுரைக்க ஆற்றி குடித்தால் நன்றாகத்தான் இருக்கிறது. 

நோ டி.வி., நோ செல்ஃபோன், என்ன செய்வது? நான் ஒரு தூக்கம் போட்டேன், ஊரிலிருந்து வந்திருந்த தீபாவளி மலர்களில் ஒன்றை முக்கால்வாசி முடித்தேன். குழந்தைகளோடு ஸ்னேக்&லாடர் விளையாடினேன். அவர்களுக்கு கல்லாங்காய் ஆட கற்றுக் கொடுத்தேன். 

கரெண்ட் திரும்ப வரும் நேரம் 11, 3, 5, 8 என்று மாறிக்கொண்டே இருந்தது. இரவு உணவிற்கு வெளியே செல்லலாம் என்று முடிவெடுத்தோம். எங்கள் ஏரியாவில் எல்லா உணவகங்களும் மூடப்பட்டு விட்டதால் பக்கத்து ஊரில் இருந்த 'ட்ரூலி பெங்களூர்' என்னும் ரெஸ்டாரெண்டுக்குச் சென்றோம். அங்கு நான் மைசூர் மசாலா தோசை, என் மகள் நெய் பொடி மசாலா தோசை, மாப்பிள்ளை சாளுக்கியா தோசை, குழந்தைகள் பேப்பர் ரோஸ்ட் ஆர்டர் செய்தார்கள். அதைக்கொண்டு வந்தவர் மாற்றி மாற்றி கொடுத்து குழப்பினார். ஆக இன்று நாம் நினைத்தது ஒன்று, நடப்பது ஒன்றாக இருக்கப்போகும் நாள் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டோம். 

வீட்டிற்கு திரும்பி போகும்பொழுது கரெண்ட் வந்திருக்கலாம் என்ற எங்கள் எதிர்பார்ப்பு பொய்யானது. நம் ஊராக இருந்தால் மெழுகுவர்த்தியை ஏற்றி தரையில் கொஞ்சம் சொட்டவிட்டு அதில் நிற்க வைத்து விடலாம். இங்கு தரை மரமாக இருப்பதால் அப்படி செய்ய முடியாது. கிண்ணங்களில் வரும் மெழுகு வர்த்திகளை ஏற்றி வைத்தோம். ஆளுக்கு இரண்டு பாடல்கள் வீதம் பாடி குட்டியாக சாயி பஜன் செய்தோம். தரையிலேயே பாயை விரித்து படுத்து விட்டோம். 

அக்கம் பக்கம் வீட்டிலிருந்தவர்கள் எதிர் வீட்டு லானில் ஒன்று மூன் லைட் டின்னர் போல கூடி ஒன்றாக உணவருந்தினார்கள். அவர்கள் குழந்தைகள் வெளியில் விளியாடிக் கொண்டிருந்தார்கள். இரவு மணி 11:45க்கு திடீரென்று "ஹோ." வென்ற ஆனந்தக் கூச்சல் கேட்டது. பவர் வந்து விட்டது. அப்பாடா! முதலில் செல்ஃபோனை சார்ஜில் போட்டேன்.  மறக்க முடியாத நாளாகி விட்டது 30.6.26! ஐந்து வயதாகும் என் பேத்தி, "திஸ் இஸ் த பெஸ்ட் டே இன் மை லைஃப்" என்றாள் தோடா!  


பின் குறிப்பு: இதற்கு கருத்து தெரிவிப்பவர்கள் தங்கள் பெயரை குறிப்பிடும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி


      

  

 

Saturday, June 20, 2026

சாப்பாட்டு ராமன்

 சாப்பாட்டு ராமன்

புராணங்களில் கிருஷ்ணன்தான் சாப்பாட்டு பிரியனாக சித்தரிக்கப்பட்டிருக்கிறான். கோகுலத்தில் இருந்த எல்லா வீடுகளிலும் புகுந்து பால்,வெண்ணெய், தயிர் என்று எல்லாவற்றையும் கபளீகரம் செய்தவன் அவன்தான். ராமன் அப்படியெல்லாம் செய்யவில்லை. நாமே கூட கோகுலாஷ்டமிக்குத்தான் சீடை, முறுக்கு, தேங்குழல்,அப்பம்,வடை, பாயசம் தவிர நிறைய பழங்கள் வேறு நைவேத்தியம் செய்கிறோம். இவற்றோடு இனிப்பு வகைகளும் உண்டு. ராமனுக்கோ சிம்பிளாக பானகம்,நீர் மோர்.  ஆனால் ராமனைத்தான் சாப்பாட்டு ராமன் என்கிறோம். இது ஏன் என்று யோசித்தபொழுது ஒன்று தோன்றியது. 



ராமனுடைய வாழ்க்கையில் அவன் சாப்பிட்ட மூன்று சாப்பாடுகள் மிகவும் சிறப்பானவை. முதல் சாப்பாடு கங்கை கரையில் அவனைப் பார்க்க ஓடோடி வந்த குகன் கொண்டு வந்த தேனையும், மீனையும் அன்போடு ஏற்றுக் கொள்கிறான்.  தேன் அவனுடைய பக்தியின் உயர்வையும், மீன் அன்பின் ஆழத்தையும் உணர்த்துகிறது என்பது ஆன்றோர்கள் கருத்து. அந்த எளிய வேடன் அளித்த உணவை அன்போடு ஏற்றுக் கொண்டது ராமனின் எளிமை.



இரண்டாவது வனவாசத்தில் சபரி கொடுத்த கனிகளை உண்டது. சீதையைப் பிரிந்த துக்கத்தில் சரியாக சாப்பிடாத ராமன், சபரி கொடுத்த கனிகளைத்தான் பிரியமாக உண்கிறான். அதைப்பார்த்த தம்பி லட்சுமணனுக்கோ  இத்தனை நாட்களாக சாப்பிடாத தன் அண்ணன் இன்று சாப்பிடுகிறாரே என்பதில் ஆனந்தம். தன் குருவின் வார்த்தையை ஏற்றுக் கொண்டு வருடக் கணக்காக ராமனுக்காக காத்திருந்து சபரி அளித்த கனிகளை உண்டது ராமனுடைய கருணை.

யுத்தம் முடிந்து அயோத்திக்கு திரும்பும் வழியில் பாரத்வாஜரின் ஆஸ்ரமத்தில் அவர்களுக்கு விருந்து உபசாரம். சமைத்த உணவை இலை போட்டு எல்லோருக்கும் பறிமாறியாகிவிட்டது ஆனால் ராமன் உண்ணத் தொடங்கவில்லை, யாருக்கோ காத்திருக்கிறான். 

வனவாசம் தொடங்கி சித்திரகூடத்தில் அவர்களை காண வந்த பரதன், தன்னால் அயோத்தி அரியணையில் அமர முடியாது என்று அண்ணனின் பாதுகைகளை வாங்கிச் சென்று அவற்றை ராமனின் பிரதிநிதியாகக் கருதி அரியணையில் வைத்து  ஆட்சி புரிகிறான். அப்போது பரதன் ராமனிடம், பதினான்கு வருட வனவாசம் முடிந்த உடனேயே ராமன் அயோத்தி திரும்பி விட வேண்டும், அப்படி செய்யாவிட்டால் தான் தீ மூட்டி உயிரை மாய்த்துக் கொண்டு விடுவேன் என்று உறுதி வாங்கிக் கொள்கிறான். 

நந்திகிராமத்தில் ராமனுக்காக நாட்களை எண்ணியபடி காத்திருக்கும் பரதன் ராமன் வருவதற்கு சிறிது தாமதமானால் கூட தன் உயிரை மாய்த்துக் கொண்டு விடுவான் என்பதால், தன்னுடைய அங்குலியத்தை ஹனுமனிடம் கொடுத்து, தன்னுடைய வருகையை பரதனுக்கு அறிவித்து, பரதன் நிலையை தன்னிடம் வந்து தெரிவிக்க வேண்டும் என்று ஹனுமனுக்கு கட்டளையிட்டு, ஹனுமனின் வருகைக்காக சாப்பிடாமல் காத்திருக்கிறான்.

அதைப் போலவே நந்திகிராமத்தில் பதினாங்கு வருடங்கள் கழிந்த பின்னாலும் ராமன் வராததால், தீ மூட்டி, அதில் குதிக்கத் தயாரான பரதனிடம் ராமனின் மோதிரத்தைக் காட்டி, ராமனின் வெற்றியையும், அவன் விபீஷணன், சுக்ரீவன் போன்றவர்களோடு அயோத்திக்கு வந்து கொண்டிருப்பதையும், பரத்வாஜர் அளிக்கும் விருந்தை ஏற்றுக் கொள்ள அங்கு தங்கியதால் அவர்கள் வருகை சற்று தாமதமாவதையும் கூறி பரதனின் உயிரை காப்பாற்றுகிறான் ஹனுமான்.  பிறகு பரதனைப் பற்றிய செய்தியை கூறுவதற்காக பரத்வாஜரின் ஆஸ்ரமத்திற்கு திரும்பி வருகிறான். 

ராமனுக்கும், அவரோடு வந்த வானர சேனைகளுக்கும் விருந்தை தயார் செய்த பரத்வாஜர் எத்தனை பேர்கள் இருக்கிறார்களோ அத்தனை பேர்களுக்கு மட்டும் தலைக்கு ஒரு இலை என்று கணக்காக இலை போட்டு பறிமாறி இருக்கிறார். இலை போடும் பொழுது ஹனுமன் இல்லாததால் அவருக்கு இலை இல்லாமல் போய் விட, ராமன் தன் இலையை ஹனுமனோடு பகிர்ந்து கொண்டு அவரை, அவருடைய சேவையை கௌரவப்படுத்தினானே அது அவனுடைய பேரன்பு.



மேலும் வனவாசத்தில் முனிவர்கள் கொடுத்த கனிகளையும், கிழங்குகளையும் அன்போடு சாப்பிட்டான்.

இப்படி யார் சாப்பிடக் கொடுத்தார்கள், என்ன கொடுத்தார்கள் என்று பார்க்காமல், எப்படி கொடுத்தார்கள் என்று பார்த்து சாப்பிட்டு அந்த சாப்பாட்டிற்கே கௌரவத்தை சேற்த்ததால்தான் அவன் சாப்பாட்டு ராமனோ?  

 


Monday, June 15, 2026

நிஜ கல்யாணமும் ராதா கல்யாணமும்

நிஜ கல்யாணமும் ராதா கல்யாணமும்

சென்ற வருடம் இங்கு ஒரு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இந்த வருடம் ஒரு திருமணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இது ஒரு ஃப்யூஷன் வெட்டிங். தமிழ் ஐயர் பையன், ஸ்ரீலங்காவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணை மணந்து கொண்டான். இரண்டு வீட்டு சம்பிரதாயங்களையும் கலந்து நடந்த கல்யாணம். 

Marriage hall

காசியாத்திரைக்கு(கனடாவிலிருந்து காசிக்கு..??!!) கிளம்பிய மணமகனை தடுத்து மணமகளின் அப்பா அழைத்து வர அவன் மாலை மாற்றுவதற்காக காத்திருக்க, மணமகள் கைகளில் விளக்கேந்தி, அதைப்போலவே விளக்கேந்திய உறவுப் பெண்கள் புடை சூழ நடந்து வர, அவளைத் தொடர்ந்து பெண் வீட்டைச் சேர்ந்த பெண்கள் சீர் வரிசை தட்டுகளை சுமந்து ஊர்வலம் போல வந்தது பார்க்க மிக அழகாக இருந்தது. 

தமிழ் ஐயர் கல்யாணங்களில் இப்படி மணமகள் பிரவேசிப்பது பழக்கம் இல்லை. ஆனால் இந்த மணமகள் அவர்கள் பழக்கப்படி இப்படித்தான் மணமகளுக்கு பிரத்யேக பிரவேசம் இருக்க வேண்டும் என்று விரும்பியதால் இந்த ஏற்பாடு. அதைப் போல ஊஞ்சல் முடிந்து அவர்கள் இருவரும் மணமேடைக்குச் சென்றபொழுது காலடியில் டிரை ஐஸ் கொண்டு புகை வரவழைத்ததில் ஏதோ மேகக்கூட்டத்தில் நடந்து வந்ததைப் போல இருந்தது. அம்மி மிதிப்பதற்காக சிறு க்ரானைட் கல்லை வைத்திருந்தார்கள்.

மணமகள் மடிசார் கட்டிக் கொண்டு வர ஒரு மணி நேரத்திற்கும் மேலானது. அந்த இடைப்பட்ட நேரத்தில் மணமக்களுடைய தோழர்கள், தோழிகள் எல்லோரும் சாயி பக்தர்கள், நன்றாக பாடக் கூடியவர்கள், அவர்கள் பாடினார்கள். செவிக்குணவு அற்புதம்! இதற்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக ஒத்திகை நடந்தது. 

திருமண சடங்குகளை கவனித்த இலங்கைப் பெண்மணி ஒருவர் என்னிடம்,"என்ன இவ்வளவு நேரம் எடுக்கிறது? நிறைய சடங்குகள், டயர்டாகிவிட மாட்டார்களா?" என்று கேட்டார். 



 

பெண் வீட்டார் ஸ்ரீலங்காவை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் சாப்பாட்டில் பூண்டு,வெங்காயம் இல்லாமல் இருக்காதாம். பிள்ளை வீட்டார் அது ஆகாது என்று சொல்லி விட்டதால் பூண்டு,வெங்காயம் சேர்த்த உணவு  தனியாகவும், அவை இல்லாத உணவு தனியாகவும் இருந்தன. நமக்கு கல்யாண சாப்பாடு என்றால், அதுவும் முகூர்த்தம் முடிந்த பிறகு இலையில் பரிமாறி சாப்பிட்டுதானே பழக்கம், இங்கு பஃபே..! வித்தியாசமாக இருந்தது. நம் ஊர் சாப்பாட்டில் இருக்கும், பருப்பு உசிலி, அவியல், லட்டு அல்லது ஜாங்கிரி போன்ற இனிப்பு, பச்சடி போன்றவை மிஸ்சிங். டெசர்டாக வழங்கப்பட்ட ஃப்ரூட் சால்ட், ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம், கஸ்டர்ட் வித் ஜெல்லி எல்லாம் மிகவும் நன்றாக இருந்தன. 




காலை ப்ரேக்ஃபாஸ்டில் கூட கிச்சடி, இட்லி, வடை, பைனாப்பிள் கேசரி தவிர குழிப்பணியாரம் ஆப்பம், சம்பல், சொதி போன்ற ஸ்ரீலங்கா ஐட்டம்களும் இருந்தன. 

பிளாக் டீ. பிளாக் காபி, மில்க் டீ, மில்க் காபி என்று தனித்தனியாக இருந்தன. அதைத் தவிர சிறிய பிளாஸ்டிக் குப்பைகளில் கொழுப்பு அதிகமுள்ள பால், கொழுப்பு குறைவான பால், வெள்ளை சர்க்கரை, ப்ரவுன் சர்க்கரை என்று தனித்தனியாக இருந்தன. 

நான் முதலில் மில்க் காபியை எடுத்துக் கொண்டேன். அதில் பால்தான் இருந்தது. எனவே அப்படியே வைத்து விட்டு தனியாக டிகாஷனை எடுத்துக் கொண்டு பால், சர்க்கரையை சேர்த்துக் கொண்டேன்.

முதல் வாரம் இந்த கல்யாணம், அடுத்த வாரம் ராதா கல்யாணம். 1976 ஆம் ஆண்டு ஹரிதாஸ்கிரி சுவாமிகள் கனடா வந்தபொழுது தொடங்கி வைத்த ஞானானந்தா பஜன் மண்டலியினர் 18 வருதங்களாக ராதா கல்யாண மஹோத்ஸவத்தை நடத்தி வருகின்றனர். இந்த வருடம் ஞானானந்தா பஜன் மண்டலி தொடங்கி 50வது வருடம் என்பதால் இன்னும் சிறப்பாக சுவாஸினி பூஜை, தம்பதி பூஜை, அஷ்ட வடுக்கள்(பூனூல் போடப்பட்ட சிறுவர்கள்) பூஜை, நவ கன்யா பூஜை போன்ற பூஜைகளும் செய்யப்பட்டன. சுவாசினிகளுக்கு ஒரே டிசைனில், வேறு வேறு நிறத்தில் வழங்கப்பட்ட புடவைகள் மிகவும் அழகாக இருந்தன.  எல்லோருக்கும் மாட்சிங்காக பிளவுஸ் அமைந்ததில் எல்லோருக்கும் மகிழ்ச்சி.

ராதா கல்யாணத்தை நடத்தி வைக்க கலிஃபோர்னியாவிலிருந்தும், பஃபெல்லோவிலிருந்தும் பாகவதர்கள் வந்திருந்தனர். அவர்களோடு கனடாவிலிருக்கும் பாகவதர்களும் சேர்ந்து கொள்ள சிறப்பாக நடந்தது.


ராதா கல்யாணத்தில் வைக்கப்பட்ட
சீர் வரிசை







மணமக்களுக்கு பரிசளிக்க என் மகள் செய்த லிப்பன் ஆர்ட் வால் ஹாங்கர்.

Tuesday, June 2, 2026

கனடா டைரி

 கனடா டைரி

இங்கு வசந்த காலத்தில் மேப்பில்  ஃபெஸ்டிவல் என்று ஒன்று கொண்டாடப்படும். அதைப் பற்றி சென்ற வருடமே எழுதி விட்டதால் இந்த வருடம் அதைப் பற்றி எழுதவில்லை. 

அங்கிருக்கும் கடைகளை பார்வையிட்டபொழுது இரண்டு கேரவன் களைப் பார்த்தேன். ஒரு கேரவன் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாமே என்று உள்ளே சென்று பார்த்தேன். நீங்களும் பாருங்கள்.


உட்கார சோஃபா, பின்னால் தெரிவது பெட்







இந்த கேரவன் சிறியது, நம் ஊரில் நடிக, நடிகையர் பயன்படுத்தும் கேரவன் கள் இன்னும் பெரியதாக இருக்கும் என்று நினைக்கிறேன். 
 
தேன் மெழுகால் செய்யப்பட்ட மெழுகுவர்த்திகள்




Glass paintings for sale

I would rather love roses in my garden than diamonds round my neck 


மேலே இருக்கும் இரண்டுமே தோட்டத்திற்கான பொருள்கள்



Monday, May 18, 2026

ஃப்ரீ செல்

 ஃப்ரீ செல்      

எனக்கு  பதட்டமாகத்தான் இருந்தது. அலுவலகத்தில் எனக்கும் என் மேலதிகாரிக்கும் கொஞ்ச நாட்களாகவே உரசல். ஓரு கட்டத்தில் அலுவலகத்திற்குச் செல்வதற்கே வெறுப்பாக இருந்தது. எனக்கு கிடைக்க வேண்டிய பதவி  உயர்வின் மீது அந்த ஆள் உட்கார்ந்து கொண்டிருந்தார்.  வேறு வேலைக்குச் செல்லலாம் என்றால் அதுவும் அத்தனை சுலபமாக இல்லை. இருந்தாலும் துணிந்து பேப்பர் போட்டு விட்டேன்.    

ஆச்சு, வேலையை விட்டு விளையாட்டுப் போல் ஆறு மாதங்களாகி விட்டது. புது வேலை எதுவும் கிடைக்கவில்லை. இண்டர்வியூவில் இரண்டு ரவுண்டுகள் வரை செல்வேன், அதற்குப் பிறகு ஏனோ எந்த பதிலும் வராது.    முதல் முறையாக வாழ்வில் பயம் வந்தது. தவறு செய்து விட்டோமோ என்று தோன்றியது. அன்றைக்கும் ஒரு இண்டர்வியூ ஆன்லைனில் அட்டெண்ட் பண்ணினேன், திருப்தியாக இருந்தது, அவர்கள் ஒரு வாரத்தில் பதில் சொல்வதாகக் கூறினார்கள்.    எனக்கு ஏனோ நம்பிக்கை வரவில்லை. கிடைக்க வேண்டுமே என்ற ஆசையும், கிடைக்குமா? என்ற சந்தேகமும் போட்டி போட்டன. 

இந்த மாதிரி சமயங்களில் என் ரூம் மேட் சுதர்ஷன் செய்வதை செய்யலாம் என்று தோன்றியது.    இந்த மாதிரி சந்தேகங்கள், மற்றும் குழப்பங்கள் எழும் சமயங்களில் அந்தக் காலங்களில் ஏன் இந்தக் காலத்தில் கூட சிலர் திருவுளச்சீட்டு போட்டு பார்ப்பார்களே அந்த மாதிரி ஒன்று செய்வான். கம்ப்யூட்டரில் ஃப்ரீசெல் விளையாடுவான், அதில் ஜெயித்து விட்டால் சக்சஸ் என்று முடிவு செய்வான். அதைப் பார்க்கும் நாங்கள் அவனை கேலி செய்வோம். ஆனால் அவனளவில் அந்த ஃப்ரீசெல் ஜோசியம் பலிக்கவே செய்தது.    இன்று எனக்கும் அப்படித்தான் தோன்றியது. நானும் ஃப்ரீசெல் ஆடிப்பார்க்க முடிவு செய்தேன். இப்படிப்பட்ட நம்பிக்கைகளுக்கு பயம்தான் மூல காரணமோ?   

என்னுடைய மடிக்கணினியில் ஃப்ரீசெல்லை திறந்தேன். அதிகம் கவனத்தோடு விளையாடினேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. சில சமயங்களில் அடுத்து மூவ் இல்லையோ என்று தோன்றும், ஆனால் வெற்றிகரமாக கிளியர் செய்தேன். மனதிற்குள் நிம்மதி பரவியது. அடுத்த ஆட்டத்தை துவங்காமல் வெளியே வந்து, என்னுடைய மெயில் பாக்ஸைத் திறந்தேன்.   என்ன ஆச்சர்யம்! நான் சென்ற வாரம் கலந்து கொண்ட நேர்முகத் தேர்வில் தேர்வாகியிருப்பதாகவும், என்னைத் தேர்ந்தெடுத் திருப்பதாகவும் மெயில் வந்திருந்தது. வாவ்!   

அதில் சேர்ந்தது என் நல்ல காலம் என்றுதான் கூற வேண்டும். அங்குதான் நித்யாவை சந்தித்தேன். காதல் கொண்டோம். படித்த,  வேலைக்குப் போகும்,  வெளிநாடுகளுக்கு பயணம் செய்த, என் பெற்றோர்களுக்கும், நித்யாவின் பெற்றோர்களுக்கும் எங்கள் காதலை ஏற்றுக் கொள்வதில் பிரச்சனை இருக்காது என்று நான் நம்பியதற்கு மாறாக, என் பெற்றோர்கள் அதை எதிர்த்தார்கள். 

எங்கள் வீட்டிற்கு வந்த நித்யாவின் பெற்றோர்களிடம் சரியாக பேசவில்லை. தங்களை அவமதித்து விட்டதாக நித்யாவின் பெற்றோர் கருத, நித்யாவிற்குமே வருத்தமும், கோபமும் வந்தது. அதை நான் கேட்கப் போக, அம்மா என்னோடு பேசுவதை நிறுத்தினாள்.   அம்மாவோடு பேசி ஆறு மாதங்களாகி விட்டது.  நித்யாவும் என்னைத் தவிர்க்கத் தொடங்குகிறாளோ என்று தோன்றியது.  அவ்வளவுதான், ப்ரேக் அப் தான் என்று நினைத்தேன்.  

அன்று நான் அலுவலக கார் பார்க்கிங்கில் என்னுடைய வண்டியை நிறுத்திவிட்டு,லிஃப்டை நோக்கி நடக்கத் தொடங்கிய பொழுது நித்யா வந்து கொண்டிருப்பதை பார்த்தேன். வெளிர் நீல சூடிதார், வெள்ளையில் நீல பூக்கள் போட்ட குர்தா, காதில்  நீல நிற முத்துக்கள் பதிக்கப்பட்ட பெரிய வளையம் அசைந்தாட, தோள் வரை வெட்டி விடப்பட்ட கூந்தல்  லேசாக பறக்க,  நடந்து வந்தாள்.   அவளுக்கு முன்னால் அவளுடைய பெர்ஃப்யூம் வாசம் என்னைத் தாக்கியது. 

ஒரு காதில் இருந்த இயர் ஃபோனை எடுத்து என்னப் பார்த்து “ஹாய்” என்றாள்.   “கார்ஜியஸ்” என்றேன். என் பாராட்டிற்கு முறுவலித்து, “ உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்னு நினைச்சேன்,நல்ல வேளை உன்னை இங்கேயே பார்த்துட்டேன்” என்றவள் தொடர்ந்து “இன்னிக்கு பேப்பர் போடப்போறேன்” என்றாள்   

“ஏன்?”  

 “வேற கம்பெனி போறேன்”   

“ஏன்?”என்றேன் மீண்டும். என்னைத் தவிர்க்கத்தானோ? என்று தோன்றியது. அதற்குள் லிஃப்டை அடைந்து விட்டோம். லிஃப்டிற்குள் நுழைந்து எங்கள் தளத்திற்கான பொத்தானை அழுத்தினேன். அதுவரை பேசாமல் வந்தவள்,   “ஸ்பௌசஸ் ஒரே கம்பெனியில் வேலை செய்யக் கூடாது என்பது நம் கம்பெனி பாலிசியாச்சே?” என்று கூறி விட்டு, சற்று இடைவெளி விட்டு, “நாம  கல்யாணம் பண்ணிக்க போறோம்தானே?” என்றாள்.    

இத்தனை நேரம் அடைபட்டுக் கிடந்த என் மனசுக்குள் ஜில்லென்று தென்றல் வீசியதைப் போல உணர்ந்தேன். “ஷ்யூர்” என்று அவள் கையைப் பற்றுவதற்கும் ‘டிங்க்’ என்ற ஓசையோடு லிஃப்ட் கதவு திறப்பதற்கும் சரியாக இருந்தது.     

என் கையை உதறி, “அதுக்கு ஏதாவது பண்ணனும், அம்மாவோட பேசாமல் இருந்தால் போதாது” என்று கூறியவள், இன்னிக்கு நைட் ஃபோன் பண்ணுவேன், ரிசல்ட் சொல்லணும், ஒண்ணு பண்ணேன், நீதான் எல்லாவற்றுக்கும் ஃப்ரீ செல் விளையாடி பார்ப்பாயே? இதற்கும் பார்த்து விடேன்”  என்று கிண்டலாக  சொல்லி விட்டுச் சென்றாள்.    

அவள் கிண்டல் செய்திருந்தாலும் எனக்கு வொய் நாட்? என்று தோன்றியது. வீட்டிற்கு வந்து என்னுடைய லேப்டாப்பில் ஃப்ரீசெல் விளையாடி ஜெயித்தேன். சந்தோஷம் பீறிட நித்யாவிற்கு மெசேஜ் அனுபியதற்கு “புல் ஷிட்’ என்று பதில் அளித்தாள்.    ஆனால் மறுநாளே வானிலை மாறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.  

 ஊரிலிருந்து ஹேமா பெரியம்மாவும், அவர் மகன் ஸ்ரீநாத்தும் வந்திருந்தாரகள். ஸ்ரீநாத்திற்கு அலுவலக விஷயமாய் சென்னையில் 15 நாட்கள் வர வேண்டியிருந்ததாம். பெரியம்மா வர ஆசைப்பட்டதால் உடன் அழைத்து வந்திருந்தான். 

பெரியம்மாவும், அம்மாவும் ரொம்ப க்ளோஸ்.    பெரியம்மாவிடம் அம்மா எங்கள் காதல் விவகாரத்தை சொல்லியிருக்க வேண்டும். நித்யாவைப் பற்றி என்னிடமும், அப்பாவிடமும் விசாரித்தாள். தான் நித்யாவை பார்க்க வேண்டும் என்றாள். நான், ஸ்ரீநாத், பெரியம்மா, நித்யா நால்வரும் டின்னருக்கு வெளியே சென்றோம். பெரியம்மாவிற்கு நித்யாவை பிடித்திருந்தது. அம்மாவிடம் என்ன பேசினாள், எப்படி கன்வின்ஸ் செய்தாள் என்று தெரியாது. அம்மா இறங்கி வந்தாள்.    என்னுடைய பிடிவாதமும், அப்பாவின் கோபமும் சாதிக்காததை பெரியம்மாவின் சாதுர்யம் சாதித்தது. 

அடுத்த மாதமே எனக்கும், நித்யாவுக்கும் திருமணம் நிச்சயமாகி,  மூன்றாவது மாதம் நாங்கள் தம்பதிகளாகி விட்டோம்.       

 “பாத்தியா? ஃப்ரீ செல் பொய் கிடையாது” என்று நான் சொன்னதற்கு,”வெவ்வெவ்வே” என்று அழகு காட்டினாள்.   இதற்குப் பிறகும் அவ்வப்பொழுது நான் ஃப்ரீசெல் ஜோசியம் பார்ப்பதும்,நித்யா என்னை கேலி செய்வதும் தொடர்ந்து  கொண்டுதான் இருந்தது.    

நேற்று தன்னுடைய டூ வீலரில் மார்க்கெட்  சென்ற பொழுது ஒரு திருப்பத்தில் வேகமாக வந்த ஒரு காரால் தூக்கி எறியப்பட்டு மோசமாக அடிபட்ட அவள் மருத்துவமனையில் சிசியூவில் இருக்கிறாள்.   முப்பதாறு மணி நேரங்கள் கடக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி விட்டார்கள். இரவு பத்து  மணி வரை  நான், என் பெற்றோர்கள், நித்யாவின் பெற்றோர்கள் எல்லோரும் வெய்டிங் ஏரியாவில் காத்துக் கிடந்தோம். 

இரவு பத்து மணிக்கு அங்கு யாரும் இல்லை. ஒன்றிரண்டு பேர்கள் காத்திருப்பு பகுதியில் இருந்த ஸ்டீல் நாற்காலிகளில் போர்வையை போர்த்திக் கொண்டு படுத்திருந்தார்கள்.    ஆஸ்பத்திரியில், “நீங்கள் வீட்டிற்குச் செல்லலாம், ஏதாவது முக்கியமான தகவல் இருந்தால் நாங்கள் அழைக்கிறோம்” என்றார்கள். மனமில்லாமல்தான் வீட்டிற்குச் சென்றேன்.   

தூக்கம் கண்ணைச் சுழற்றினாலும் தூங்க முடியவில்லை. என்னையும் அறியாமல் எப்போதோ கண்ணயர்ந்திருக்கிறேன். எழுந்து, பல் விளக்கி, முகம் கழுவி, வந்த பொழுது அம்மா தலைக்கு குளித்து, சுவாமி விளக்கேற்றி, ஒரு மஞ்சள் துணியில் ஏதோ காசு முடிந்து வைப்பதை பார்த்தேன்.  

குளித்து விட்டு ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டும். நேற்று ஆஸ்பத்திரிக்குச் செல்லும் அவசரத்தில் லாப்டாபை அப்படியே வைத்து விட்டு சென்றிருக்கிறேன். அதை மூடப் போகும் பொழுது, மனசுக்குள் ஃப்ரீசெல் என்று தோன்றியது.   

 “சீ! இந்த நேரத்தில் இது என்ன பைத்தியக்காரத்தனம்? என்று அறிவு அதட்டியது. இருந்தாலும் மனசின் தூண்டுதலுக்கு முன் அறிவு தோற்று, மடிக்கணியை ஆன் செய்து, ஃப்ரீ செல்லைத் திறந்தேன். இந்த கேமில் நான் ஜெயித்தால் நித்யா மீண்டு வருவாள் என்று நினைத்துக் கொண்டு, விளையாடத் தொடங்கினேன். அவசரப்படாமல், நிதானமாக விளையாடினேன். பக் பக்கென்று  மனது அடித்துக் கொண்டது.    

இல்லை, நான் ஆடப் போவதில்லை, நித்யா நிச்சயம் மீண்டு வருவாள் என்று ஆட்டத்தை பாதியில் நிறுத்தி கணினியை மூடினேன். என் கைபேசி அழைத்தது. நித்யாவின் தந்தை. காலையிலேயே ஆஸ்பத்திரிக்குச் சென்று விட்டாராம். “ஆபத்து கட்டத்தை தாண்டி விட்டாள், ஷி இஸ் ஸ்டேபிள்” என்றார்.     

Sunday, May 3, 2026

ஃபர்ஹானா

 ஃபர்ஹானா




சிறிய அளவில் செருப்புக் கடை வைத்திருக்கும் கிட்டி, அவரது மனைவி, மகள் ஃபர்ஹானா, மருமகன் கரீம், குழந்தைகள் எல்லோரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். வருமானம் போதவில்லை. ஒவ்வொரு மாதமும் பள்ளியில் பணம் கட்டாதவர்கள் லிஸ்டில் குழந்தைகளின் பெயர் வாசிக்கப்படுகிறது. இதையெல்லாம் முடிவுக்கு கொண்டுவர ஃபர்ஹானா வேளைக்குச் செல்ல முடிவெடுக்கிறாள். அதில் அவள் தந்தைக்கு விருப்பம் இல்லை.

ஒரு வங்கியின் கஸ்டமர் சர்வீஸ் கால் சென்டரில் வேலைக்குச் சேரும் ஃப்ர்ஹானா அதே கால் சென்டரின் வேறு ஒரு பிரிவில் வேலை பார்ப்பவர்கள் அதிக இன்சென்டிவ் பெறுவதைப் பார்த்து, இன்சென்டிவிற்காக அந்த பிரிவுக்கு மாறுகிறாள். அது ஃப்ரண்ட்ஷிப் சாட் கால் சென்டர். சிநேகிதத்தை விரும்புகிறவர்கள் பேசுகிறோம் என்ற பெயரில் உள்ளாடைகளின் சைஸ் கேட்கிறார்கள். அதில் அவளோடு பேசும் ஒருவனோடு அவளுக்கு நட்பு ஏற்படுகிறது. அந்த சமயத்தில் அவளோடு பணி புரிந்த ஒரு பெண் கஸ்டமர்களோடு உறவு கொண்டு, ஒருவரோடு வெளியே செல்லும்பொழுது கொலை செய்யப் படுவதைபபார்த்த ஃபர்ஹானா பயந்து போய் தன் நட்பை முறித்துக் கொள்ள அவன் அவளை விடாமல் பயமுறுத்த தொடங்குகிறான். இதனிடையில் அவள் கணவனுக்கும் அவள் மீது சந்தேகம் வருகிறது. இவற்றை அவள் எவ்விதம் எதிர்கொண்டு மீள்கிறாள் என்பதுதான் மீதிக்கதை. 

ஃபர்ஹானாவாக ஐஸ்வர்யா ராஜேஷ், அவள் கணவனாக ஜித்தன் ரமேஷ், வில்லன் பாத்திரத்தில் பெரும்பாலும் முகத்தை காட்டாமல் குரலால் மட்டும்(குரல் காட்டிக் கொடுத்து விடுகிறது) நடித்திருக்கும் செல்வராகவன், ஐஸ்வர்யாவின் அப்பாவாக கிட்டி நடித்திருக்கிறார்கள். அலுவலகத்தில் ஐஸ்வர்யாவின் தோழியாக வரும் பெண் உட்பட எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். 

மனைவியை சந்தேகிக்கும் பொழுதும், கடைசியில் "உனக்கு இவ்வளவு கஷ்டம் இருக்குனு ஒரு தடவ கூட என்னிடம் சொல்லத் தோணல இல்ல" என்று மனைவியிடம் கேட்கும் பொழுதும் ஜித்தன் ரமேஷ் நிற்கிறார். அவருடைய அப்பாவி முகமும், குரலும் அந்த ரோலுக்கு பெரும் உதவி செய்திருக்கின்றன. 

குடும்ப அழுத்தம், வேலை தரும் விடுதலை, பின்னர் பயம் எல்லாவற்றையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். படம் ஒரு இடத்தில் கூட தொய்வடையவில்லை. சிறப்பான திரைக்கதை மற்றும் இயக்கம்(நெல்சன் வெங்கடேசன்). இயக்குனர், இசையமைப்பாளர், காமிராமேன் எல்லோரும் பாராட்டுக்கிரியவர்கள்.

2023 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் வெற்றி பெற்றிருக்க வேண்டும், ஒரு வேளை படத்தின் பெயர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படம் என்பதால் கதாநாயகியை முன்னிறுத்தும் படமாக இருக்குமோ என்ற அச்சத்தில் பெரும்பான்மையோர் தவிர்த்திருக்கலாம். ஓ.டி.டி.யில் பார்க்க முடிந்தவர்கள் கண்டிப்பாக பாருங்கள்.  


Monday, April 27, 2026

ஆசை முகம் மறந்தாயோ வித்யா சுப்ரமண்யம்

ஆசை முகம் மறந்தாயோ

வித்யா சுப்ரமண்யம்



அமெரிக்காவுக்கு படிக்கச் சென்ற நிருபமாவும், பிரணவும் காதல் வயப்பட்டு நண்பர்கள் முன்னிலையில் மோதிரம் மாற்றி, மாலை மாற்றிக் கொண்டு கணவன், மனைவியாக வாழ்கிறார்கள். ஆனால் அந்த வாழ்கை ஏழு நாட்கள் மட்டுமே நீடிக்கிறது.

இவர்களில் நிருபமா தாய், தந்தை, சகோதரன் எல்லோரையும் இழந்தவள். பிரணவின் தந்தை ஓய்வு பெற்ற ஆசிரியர்.இரண்டு இளைய சகோதரிகள். அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய கடமை அவனுக்கு இருக்கிறது. அதனால் முதல் இளைய சகோதரிக்கு திருமணம் நடக்கும் வரை தங்கள் திருமண செய்தியை அவனுடைய பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டாம், குழந்தைகளும் பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்கள்.

அவர்கள் தேனிலவுக்குச் செல்ல திட்டமிடும்பொழுது பிரணவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு பைபாஸ் செய்ய வேண்டிய நிர்பந்தம். அதற்காக இந்தியா பயணப்படுகிறான் பிரணவ். ஆனால் மும்பை வரை சென்றவன் அவன் பெற்றோர்கள் இருக்குமிடமான ஸ்ரீரங்கத்திற்கு செல்லவில்லை. அவனுக்கு என்ன ஆனது என்று நிருபமா இயன்றவரை தேடியும் அதற்கு பலன் இல்லை. அவன் குடும்பத்தை தன் குடும்பமாக கருதிய நிருபமா அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டியது தன் கடமை என்று கருதுகிறாள். அவளை பிரணவ் குடும்பம் ஏற்றுக் கொண்டதா? பிரணவ் கிடைத்தானா? அவள் வாழ்க்கை என்னவாகிறது? என்பதையெல்லாம் துள்ளலாகவும், தீவிரமாகவும் அலசியிருக்கும் நாவல்தான் ஆசை முகம் மறந்தாயோ?

நிருபமாவும் பிரணவும் திருமணம் செய்து கொள்ளும் முதல் பாகம் விறுவிறுப்பாகவும் ரசிக்கும் படியாகவும் இருக்கிறது. நிருபமா ஸ்ரீரங்கம் வரும் பகுதியில் தொடங்கி கதை முற்றிலும் வேறு பாதையில் ஆன்மீக வழியில் பயணித்தாலும் அதுவும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

கதையில் எல்லோரும் நல்லவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக நிருபமாவின் பாத்திரப் படைப்பு - இப்படி ஒரு பெண் இருக்க முடியுமா? என்று தோன்றினாலும், இருக்கத்தான் செய்கிறார்கள் என்று நம்பிக்கை ஊட்டும் விதமாக அமைந்திருப்பதை வரவேற்கிறேன். மேலும் அது செயற்கையாகவும் இல்லை.

பிரணவிற்கு என்ன நேர்ந்தது என்பதை அதிகம் விவரிக்காமல் திறமையாக கையாண்டிருப்பது பாராட்டுக்குரியது.

அமெரிக்கா முதல் கைலாசம் வரை அவர் பார்த்த இடங்கள் முதல் ராமானுஜரின் வாழ்க்கை, மல்லன் வில்லிதாசன் வரலாறு என்று ஆன்மீக தகவல்கள் வரை எல்லாவற்றையும் எந்தவித பிசிறும் இல்லாமல் அழகான மாலையாக் தொடுத்திருக்கிறார். நல்ல வாசிப்பனுபவத்தை தரும் புதினம்.