பக்தவத்சல பெருமாள் கோவில் - திருநின்றவூர்
ஒரு முறை கணவராகிய திருமால் மீது ஊடல் கொண்ட திருமகள் கீழே இறங்கி வந்து நின்றதால் இந்த இடம் திரு நின்றவூர் எனப்படுகிறது.
அறிந்தது,தெரிந்தது,அறிந்து கொள்ள ஆசைப்படுவது எல்லாம் இங்கே
பக்தவத்சல பெருமாள் கோவில் - திருநின்றவூர்
ஒரு முறை கணவராகிய திருமால் மீது ஊடல் கொண்ட திருமகள் கீழே இறங்கி வந்து நின்றதால் இந்த இடம் திரு நின்றவூர் எனப்படுகிறது.
ஹ்ருதயாலீஸ்வரர் கோவில் -- திருநின்றவூர்
கோவிலின் கட்டுமான பணிகள் முடிந்து விட்டன. தான் நினைத்தபடியே சிறப்பாக கோவில் அமைந்து விட்டதில் மகிழ்ந்த மன்னன் கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்து விட்டு மகிழ்ச்சியோடு உறங்கச் சென்றான் பல்லா அரசனான ராஜ சிம்மபல்லவன். அவன் கனவில் வந்த சிவ பெருமானோ அவன் கும்பாபிஷேகத்திற்கு குறித்திருக்கும் நாளில் பூசலார் என்னும் தன்னுடைய பக்தன் திருநின்றவூரில் கட்டியிருக்கும் கோவிலில் தான் எழுந்தருளப் போவதால் இங்கே காஞ்சிபுரத்தில் அவன் கட்டியிருக்கும் கோவிலில் அன்று எழுந்தருள இயலாது என்று கூறி விடுகிறார்.
மறந்தே போச்சு..
ஒரு காலத்தில் கொழுப்பு என்பதே உடல் நலத்திற்கு கேடானது என்ற எண்ணம் இருந்தது,ஆனால் இப்போதோ கொழுப்பு என்பதும் உடலுக்கு தேவையான ஒன்றுதான் என்பதோடு கொழுப்பில் இரண்டு வகை உண்டு,ஒன்று நல்ல கொழுப்பு, இன்னொன்று கெட்ட கொழுப்பு என்கிறார்கள். அதைப் போலவேத்தான் மறதியிலும் நல்ல மறதி,கெட்ட மறதி என்று இரண்டு உண்டு.
நமக்கு இழைக்கப்பட்ட துரோகங்களை மறந்து விட்டால் அவைகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள முடியுமா? துரோகங்களை மன்னிக்கலாம், மறக்கக்கூடாது.
இயக்குனர் சேரன், "என் உதவியாளர்களிடம் செய்த தவற்றையே மறுபடியும் செய்யாதீர்கள், புதிதாக செய்யுங்கள்" என்று கூறுவேன் என்றார். தவறுகளிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் அதை மறந்தால் எப்படி இயலும்?
ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ளும் பொழுது மீண்டும் மீண்டும் அதை செய்யச் சொல்வதற்கு(பயிற்சி) காரணம் கற்றுக் கொண்டதை மறக்க கூடாது என்பதற்காகத்தானே?
நம் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களில் நம் கையை மீறி நடப்பவை, நம்மால் மாற்றவே முடியாது என்ற விஷயங்களை மறப்பதுதான் நலம்.
குடும்பத்திலும், நட்பிலும் சில விஷயங்களை மறக்கும் பொழுதுதான் சந்தோஷமாக வாழ முடியும். சிலர் சிறு வயதில் பட்ட கஷ்டங்களை மறக்காமல் ஆயுள் முழுவதும் வருந்திக் கொண்டே இருப்பார்கள்.
எக்ஸாஸ்ட் ஃபேனை நிறுத்த மறந்ததால் தீ விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன.
மனைவியின் பிறந்த நாளையும், தங்கள் திருமணநாளையும் மறப்பதால் குடும்பத்தில் சலசலப்பு நிச்சயம்.
மறதியால் கிடைத்த ஒரு நன்மை, ஞாபகமறதிக்காரர்களைப் பற்றிய ஜோக்குகள்.
திருச்சி.கே.கல்யாணராமன் தன் உபன்யாசங்களில்,"உங்களுடைய மறதிதான் எங்கள் பலம். நீங்கள் ராமாயணத்தையும், மஹாபாரதத்தையும் மறப்பதால்தான் நாங்கள் கதை சொல்லி பிழைக்க முடிகிறது" என்பார்.
நமக்கு ஈடுபாடு இருக்கும் விஷயங்களை நாம் மறப்பதில்லை. நெட் பாங்கிங் கடவுச்சொற்களையும், பின் நம்பர்களையும் மறக்கும் நான் லைப்ரரி மெம்பர்ஷிப் எண்ணை மறக்க மாட்டேன். எப்போதோ படித்த கதை, கவிதை வரிகள் நினைவில் இருக்கும். உறவிலும், நட்பிலும் எல்லோருடைய பிறந்த நாள், திருமண நாள் போன்றவைகளை மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டு வாழ்த்துவேன். பிரபலங்கள் உட்பட பலரின் ஜாதகங்கள் கூட எனக்கும் என்னுடைய இன்னொரு சகோதரிக்கும் மனப்பாடம், காரணம் ஈடுபாடு.
மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தன் நண்பர்களோடு திருச்சி உறையூரில் இருக்கும் குடமுருட்டி ஆற்றுக்கு குளிக்கச் செல்வாராம். எல்லோரும் பல் தேய்த்து விட்டு ஆற்றில் துளைத்து நீராடி விட்டு திரும்பி வந்தால் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அப்போதும் பல் தேய்த்துக் கொண்டே இருப்பாராம். அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், "இன்னுமா பல் தேய்த்து முடிக்கவில்லை?" என்று கேட்டால், "சங்கப் பாடலின் ஒரு வரியை யோசித்துக் கொண்டேயிருந்ததில் மறந்து விட்டது" என்பாராம்.
சர்.சி.வி. ராமன் வாக்கிங் சென்று வருகிறேன் என்று கூறி விட்டு நடக்க ஆரம்பித்தால் நடந்து கொண்டே இருப்பாராம், வீட்டிற்கு திரும்பி வர வேண்டும் என்பதே மறந்து விடுமாம் உடன் செல்பவர்கள் யாராவது நினைவூட்ட வேண்டுமாம். ஆனால் இவையெல்லாம் மறதி என்பதில் வராது, ஓவர் தி்ங்கிங் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
ஞாபகமறதியுள்ள மற்றொரு பிரபலம், பாடகர் உன்னி கிருஷ்ணன். அவருடைய ஞாபக மறதியைப் பற்றி அவருடைய தாயாரும், மனைவியும் காஃபி வித் அனு நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்கள். பொள்ளாச்சிக்கு கச்சேரிக்கு சென்ற பொழுது, ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் கலெக்டரிடம் சென்னை−பொள்ளாச்சி டிக்கெட்டை கோடுப்பதற்கு பதிலாக, பொள்ளாச்சியிலிருந்து சென்னைக்கு வர வேண்டிய ரிடர்ன் டிக்கெட்டை கொடுத்து விட்டாராம். ரூமுக்குச் சென்று ரிடர்ன் டிக்கெட் இல்லாததை பார்த்த அவருடைய அம்மா, நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களிடம் சொல்லி, அந்த டிக்கெட்டை மீட்டெடுத்தாராம்.
ஹனிமூன் சென்ற பொழுது மனைவியின் பெட்டியை லிஃப்டிலிருந்து எடுக்கவே மறந்து விட்டாராம், மனைவி உடை மாற்றிக்கொள்ள பெட்டியை தேடிய பொழுதுதான் பெட்டியை லிஃப்டிலேயே விட்டு விட்டது நினைவுக்கு வந்து சென்று பார்த்ததில், நல்ல வேளை பெட்டி லிஃப்டிலேயே இருந்திருக்கிறது.
கச்சேரிகளில் பாடல் வரிகள் மறந்து விடுவாராம். வயலின் வாசிப்பவர் எடுத்துக் கொடுத்தால் உண்டு என்று அவரே சிரித்தபடி கூறினார்.
எழுபது வயதாகும் ஒரு முதியவர் தன் மனைவியை "ஹனி","டார்லிங்" என்றெல்லாம் அழைப்பதை பார்த்த ஒரு இளைஞர், "உங்களுக்கு திருமணமாகி இத்தனை வருடங்கள் ஆகியும் மனைவியை, ஹனி,டார்லிங் என்றே அழைக்கிறீர்களே, அவ்வளவு காதலா?" என்று கேட்டானாம்.அதற்கு அந்த முதியவர்,"என் மனைவியின் பெயர் என்ன என்பது பத்து ஆண்டுகளுக்கு முன்பே மறந்து விட்டது,அதை அவளிடம் கேட்க பயம், அதனால்தான் இப்படி கூப்பிட்டு சமாளிக்கிறேன்" என்றாராம். எப்பூ..டி?
மசாலா சாட் - 23
இந்த குழு இப்படி என்றால் இன்னொரு குழு டில்லியை சுற்றிப் பார்க்கச் செல்கிறார்கள் போலிருக்கிறது. முதல் விமானப் பயணம் என்று தோன்றியது. விமானத்திற்குள் நுழைவதிலிருந்து, கேபின் பேகேஜ் வைப்பது, இறங்கியதும், வாக்கலேட்டரில் நடப்பது என்று அத்தனையையும் வீடியோ எடுத்துக் கொண்டே வந்தார்கள். நிச்சயம் இன்ஸ்டாக்ராமில் பகிர்வார்கள் என்றுதான் தோன்றியது.
டில்லியிலிருந்து சென்னை திரும்பியவுடன் கொரோனா தடுப்பூசி விஜயா ஹெல்த் சென்டரில் போட்டுக் கொண்டேன். எல்லோருக்கும் கோவிஷீல்டுதான் போடுகிறார்கள். பெங்களூரில் வசிக்கும் நான் சென்னையில் போட்டுக் கொள்ள முடியுமா? என்னும் தயக்கம் இருந்தது. டில்லியில் வசிக்கும் வெங்கையா நாயுடு சென்னையில் போட்டுக் கொண்டது ஒரு நம்பிக்கையை தந்தது. முதல் ஊசியை எங்கு போட்டுக் கொள்கிறோமோ அதே இடத்தில் இரண்டாம் ஊசியையும் போட்டுக் கொண்டால்தான் சான்றிதழ் தருவார்களாம். எங்கள் வீட்டிலும், நட்பு வட்டாரத்திலும் ஊசி போட்டுக் கொள்ள சிலருக்கு ஏதோ தயக்கம் இருப்பது தெரிகிறது. எங்கள் குடும்பத்தில் நான்தான் முதல் ஆளாக தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறேன்.
சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்ல வேண்டியிருந்தது. மார்ச் 10,11 வேலை இருந்தது. 9ஆம் தேதி காலை காரில் பயணப்பட்டோம். அந்த டிரைவர் மாஸ்க் அணிந்து கொள்ளவில்லை. கேட்டதற்கு கொரோனாவெல்லாம் முடிந்து விட்டது மேடம் என்கிறார். முதலில் நாங்கள் இன்னும் இரண்டு நாட்கள் திருச்சியில் தங்கி அருகில் இருக்கும் கோவில்களுக்கு சென்று, திருச்சி பதிவர்களை சந்தித்து விட்டு வரலாம் என்று நினைத்தேன். ஆனால் இனொரு அக்காவின் மகன் சென்னை சி.ஐ.டி. காலனியில் 'பவுல்டு'(BOWLD) என்னும் உணவகத்தின் கிளையை துவங்கியதால் வியாழனன்றே திரும்ப வேண்டிய நிர்பந்தம். கிடைத்த கொஞ்ச நேரத்தில் திரு.ரிஷபன் அவர்களையும், திருமதி. ஆதி வெங்கட்டையும் மட்டும் சந்தித்தேன்.
திரு ரிஷபன் அவர்களின் எழுத்தைப் போலவே அவரும் எளிமையாக இருக்கிறார். மனைவி அருமையான டீ கொடுத்தார். அவர் தந்தையும் எங்கள் உரையாடலில் அவ்வப்பொழுது கலந்து கொண்டார். ஆதி வெங்கட் வீட்டை கண்ணாடி போல் பளிச்சென்று வைத்திருக்கிறார். அவரோடு அதிக நேரம் செலவிட முடியவில்லை. இந்த முறை கீதா அக்காவையும் பார்க்க முடியவில்லை.
![]() |
கூரத்தாழ்வார் சன்னதி |
![]() |
கமலவல்லி சமேத அழகிய மணவாளன் சன்னதி நுழை வாயில் |
எப்போதும் செல்லும் மலைக்கோட்டை விநாயகர், திருவானைக்கோவில், ஸ்ரீரங்கம் தலங்களை தரிசனம் செய்து விட்டு, உறையூரில் இருக்கும் வெக்காளி அம்மன் கோவில், நாச்சியார் கோவில்களுக்கும் சென்றோம். எந்த கோவிலிலும் நமஸ்கரிக்க அனுமதியில்லை. பெருமாள் கோவில்களில் தீர்த்தம், சடாரி சாதிப்பது போன்றவை இல்லை. அதற்காக நாச்சியார் கோவிலில் இருந்த அர்ச்சகர்கள் இரண்டு பேரும் வெகு அலட்சியமாக கால்களை நீட்டியபடி அமர்ந்து கொண்டிருந்ததும், எங்கள் கேள்விகளுக்கு அசிரத்தையாக பதில் சொன்னதும் வருத்தமாக இருந்தது. சாதாரணமாக வைணவ கோவில்களில் தீபாராதனை காட்டும் பொழுது அங்கு உறையும் பெருமாளின் சிறப்பை எடுத்துக் கூறுவார்கள். இங்கோ பெருமாள் கையில் இருக்கும் சக்கரம் பிரயோக சக்கரம் என்பதை நான் கவனித்து, கேட்டேன் அப்போதும் அலட்சியமான பதில்தான்.. பெருமாளின் சக்கரம் பிரயோக சக்கரமாக இருக்கும் தலங்கள் மிகவும் சிறப்பானவை.
ஏற்கனவே டி.நகரிலும், மடிப்பாக்கத்திலும் கிளைகள் உள்ள பவுல்டு என்னும் உணவகத்தின் கிளையை சென்னை சி.ஐ.டி. காலனியில் துவக்கியுள்ளார் என்னுடைய சகோதரியின் மகன். ஹோட்டல் என்றாலே நான்,பரோட்டா, மட்டர் பனீர், குருமா, பிரியாணி என்ற எண்ணத்தை மாற்றி வீட்டில் கிடைக்கும் ஆனால் இப்போது பெரும்பாலானோர் செய்யாத மோர்க்கூழ், உப்புமா கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை போன்ற ஐட்டங்களை கொடுப்பது நோக்கம். தற்சமயம் டேக் அவே ஆர்டர்களில் கவனம் செலுத்துகிறார்கள். ஸ்விகி மூலம் ஆர்டர் கொடுக்கலாம்.
ரைஸ் பவுலில் பருப்பு சாதம், ரசம் சாதம், மோர் குழம்பு சாதம், வற்றல் குழம்பு சாதம், மிளகு குழம்பு சாதம், புளியோதரை, தயிர் சாதம் போன்றவைகள் இருக்கின்றன. ஹோட்டல் சாப்பாடு பிடிக்காத, வீட்டில் சமைக்கவும் முடியாத பெரியவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
சுந்தர் நர்சரி & ஹுமாயூன் டோம்ப்
டில்லியில் இருந்த சொற்ப நாளில் பதிவர் வெங்கட் நாகராஜ் அவர்களின் டில்லி உலாவை படித்து விட்டு, சுந்தர் நர்சரிக்கு செல்ல முடிவெடுத்தோம்.
நடந்து கொண்டிருந்த பொழுது கண்களை மூடி அமர்ந்திருந்த ஒரு சீக்கியர் கண்ணில் பட்டார். அவரை ஓவியமாக இரண்டு பேர் வரைந்து கொண்டிருந்தார்கள்.
வெளியேறும் வழியில் ஒரு மரத்தடியில் முதியவர்கள் கூட்டம்... ரீ யூனியனாக இருக்கும் என்று நினைத்தேன்.
இறந்து போன தங்கள் உறவினர்கள் நினைவாக பார்க்குகளில் பெஞ்சுகள் அமைக்கும் பழக்கம் லண்டனில் உண்டு என்று ஏஞ்சல் ஒரு முறை தன் வலை தளத்தில் எழுதியிருந்தார். அதைப் போல சுந்தர் நர்சரியிலும் சில பெஞ்சுகளை பார்க்க முடிந்தது.
அங்கு வந்த பெரும்பாலானோர் ஒரு பெரிய பை, பாய் இவைகளோடு வந்தனர். பாயை விரித்து கொண்டு சாப்பாட்டு கடையை விரிகின்றனர். நமக்கு சோறு முக்கியம். மஸ்கெட்டில் ஒரு முறை டீப் சீ டைவிங் சென்றிருந்தோம். நடுக்கடலில் நாங்கள் சென்ற படகை நிறுத்தி, "லைஃப் ஜாக்கெட் இருக்கிறது, அதை அணிந்து கொண்டு நீங்கள் கடலில் குளிக்கலாம் என்றதும், அந்தப் படகில் இருந்த ஒரு ஐரோப்பிய குடும்பம் மட்டுமே கடலில் இறங்கியது. இந்தியர்கள் எல்லோரும் குறிப்பாக வட இந்தியர்கள் சாப்பாட்டு கடையை விரித்து விட்டார்கள்.
அழகழகான பூக்கள். ரோஜாக்களின் சைஸ் மிரட்டியது. ஹை ப்ரடாக இருக்குமோ?
சுந்தர் நர்சரியை முடித்து விட்டு ஹுமாயூன் டோம்ப் சென்றோம். இதை முன் மாதிரியாக வைத்துதான் தாஜ் மஹால் கட்டப்பட்டிருக்குமோ என்று தோன்றியது. மொகலாய மன்னர்கள் கட்டிய கட்டிடங்களின் சிறப்பு என்னவென்றால் பிரதான வாயிலிருந்து குறிப்பிட்ட கட்டிடத்தை அடைவதற்கே நீண்ட தூரம் நடக்க வேண்டும். தாஜ் மஹாலும் சரி, ஹுமாயுன் டோம்பும் சரி, அதன் தோற்றத்தை கெடுக்கும் வண்ணம் இடையில் வேறு எதுவும் வர முடியாது. நம்முடைய கோவில்களை நாம் அப்படியா வைத்திருக்கிறோம்? சுற்றி கடைகள். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலய கோபுரத்திற்கு அடுத்த பெரிய கோபுரம் திருவண்ணாமலை கோபுரம். ஆனால், அதன் முழு தோற்றமும் நம்மால் பார்க்க முடியாது. முன்னால் இருக்கும் கடைகளின் கூரைகள் அந்த தோற்றத்தை மறைத்து விடும்.
![]() |
ஹுமாயூன் கல்லறை |
![]() |
கல்லறையின் மேல் விதானம் |
ஹுமாயூன் டோம்பிலிருந்து கன்னாட் பிளேஸ் சென்று ஒரு பஞ்சாபி உணவகத்தில் உணவருந்தி விட்டு, ஜன்பத் மார்க்கெட்டில் குட்டியாக ஒரு ஷாப்பிங் செய்து விட்டு, இந்தியா கேட் சென்றோம்.
இந்தியா கேட் அருகே அனுமதிக்கவில்லை. அதற்கு எதிரே இருந்த பெரிய திடலில் ஏதோ திருவிழா போல் கும்பல். பெரும்பாலானோர் மாஸ்க் அணிந்திருக்கவில்லை. அங்கு இருந்த ஒரு நீர்நிலை சரியாக பராமரிக்கப் படாமல் ஒரே குப்பையும், கூளமுமாக இருந்தது. ஸ்வட்ச் பாரத் என்று பிரதமர் சொல்லிக் கொண்டிருக்க, தலைநகரின் பிரதான இடம் இப்படி இருப்பது யார் கண்ணிலும் படாதது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
![]() |
தாயின் மிகப்பெரிய மணிக்கொடி பாரீர் |
பெயர் சூட்டும் வைபவம்
என் மருமகளுக்கு பேறு காலம் பிப்ரவரி கடைசி வாரத்திலிருந்து, மார்ச் முதல் வாரத்திற்குள் என்றுதான் முதலில் கூறினார்கள். ஆனால் ஜனவரியில், பிப்ரவரி 16லிருந்து எப்போது வேண்டுமானாலும் எதிர்பார்க்கலாம் என்று சொல்லி விட்டதால், நானும் என் மகனும் பிப்ரவரி 14 பெங்களூரிலிருந்து, டில்லிக்கு பயணப்பட்டோம். அதன்படியே பிப்ரவரி 17 காலை அவளுக்கு பனிக்குடம் உடைந்துவிட, மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கு அவளை அப்சர்வேஷனில் வைத்து, ட்ரிப் ஏற்றி, இயற்கையான முறையில் பிரசவம் நிகழுவதற்காக வலி வரவழைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யத் தொடங்கினார்கள்.
ஆஸ்பத்திரிக்கு கிளம்பும் பொழுது நான் குளித்து விட்டுதான் கிளம்பினேன். ஆனால் என் மருமகளின் தாயார் குளிக்காமல் வந்து விட்டார். அவரிடம்,"குழந்தை பிறப்பதற்கு எப்படியும் இன்று இரவு, அல்லது நாளைக் காலை ஆகி விடும்,ஆகவே நீங்கள் வீட்டிற்குச் சென்று குளித்து விட்டு வாருங்கள்" என்றேன். அவர் குளித்து, சமையல் செய்து விட்டு வருவதாக கூறிச் சென்றார். மாடியில் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் நானும், கீழே வெளியே போடப்பட்டிருந்த ஷாமியானாவில் என் மகனும் காத்திருந்தோம். நான் கீழே சென்று என் மருமகளை பார்த்து விட்டு மேலே வந்து பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும், என் மகன் கைபேசியில் அழைத்தான். குழந்தையின் இதயத்துடிப்பு குறைந்து கொண்டே வருகிறது, இந்த நிலையில் சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுப்பதுதான் நல்லது. வெய்ட் பண்ணி பார்ப்பது கொஞ்சம் ரிஸ்க், உங்கள் மனைவியோடு டிஸ்கஸ் செய்து விட்டு கூறுங்கள் என்றார்களாம். டிஸ்கஸ் பண்ண என்ன இருக்கிறது? சிசேரியன் செய்து விடுங்கள் என்றார் கூறி விட்டேன்" என்றான். நான் உடனே கீழே இறங்கி வந்தேன். சற்று நேரத்தில் எங்களை உள்ளே அழைத்தார்கள். "பெண் குழந்தை, பாருங்கள்"என்று ஹிந்தியில் கூறி துணியை விலக்கி காண்பித்து, "உங்களுக்கு வேண்டுமென்றால் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்" என்றார்கள். என் மகன் தன் மகளை செல் போனில் படமெடுத்து செல்(ல) மகளாக்கினான்.
என் மருமகளுக்கு பிள்ளைதான் பிறக்கும் என்று எல்லோரும் கூறியதால் அவர்கள் ஆண் குழந்தைக்கான பெயர்களை மட்டும் யோசித்து வைத்திருக்கின்றனர். இப்போது பெண் என்றதும் என்ன பெயர் வைப்பது என்று யோசிக்க ஆரம்பித்தோம். என் ஒரு அக்கா, "சியாமளா நவராத்திரியில் பிறந்திருக்கிறாள், சியாமளா நவராத்திரி சரஸ்வதி தேவிக்கானது எனவே சரஸ்வதியின் பெயர் ஏதாவது வையுங்கள்" என்றார். இன்னொரு அக்கா, "சியாமளா நவராத்திரியில் பிறந்திருப்பதால் பெயரில் ஸ்ரீ வரும்படி பார்த்துக் கொள்ளுங்கள்" என்றார்.
என்னை பொறுத்தவரை "எங்கள் ஊர் பெண் தெய்வம் ஹேமாம்பிகா, அதை அப்படியே வைத்தாலும் சரி, ஹேமா என்று சுருக்கமாக வைத்தாலும் சரி, என்று கூறி விட்டேன். அவர்கள் ஹேமாம்பிகா என்பதை தேர்ந்தெடுத்தார்கள். "உன்னுடைய கோட்டா முடிந்து விட்டது, ஒதுங்கிக்கொள்" என்றாள் மகள்.
சரஸ்வதி அஷ்டோத்திரத்தை டவுன்லோட் செய்து பார்த்தோம். அதில் 'ரிதன்யா' என்னும் பெயர் எனக்குப் பிடித்தது. இப்போ இருக்கும் ட்ரெண்ட் ,"பெயரை ஒரு முறை கேட்டால் புரியக் கூடாது, அந்த வகையில் ரிதன்யா ஓகே" என்று மகன் கிண்டலடித்தான். இருந்தாலும் ஷார்ட் லிஸ்ட் செய்தார்கள்.
அம்பாளின் பெயர்களில் எனக்கு மிகவும் பிடித்த பெயர் 'த்ரயீ' விசேஷமான பொருள் கொண்டது. ஆனால் மருமகளின் பெரியப்பா பேத்திக்கு த்ரயீ என்றுதான் பெயர். எனவே மறுதலிக்கப்பட்டது. 'வாகீஸ்வரி' என்று நான் கூறியதும், என் மகன்,"நான் வைத்து விடுவேன், கொஞ்ச நாள் கழித்து, தந்தையே ஏன் எனக்கு இப்படி ஒரு பெயரை வைத்தீர்கள்? என்றால் என்ன செய்வது?" என்றான். மருமகளோ, "இப்படியெல்லாம் பெயர் வைத்தால் அவள் மாற்றிக் கொண்டு விடுவாள்" என்றாள். "நித்யஸ்ரீ?" நல்ல பெயர்தான். ஆனால் பழசு" நித்யஸ்ரீயே பழசு என்பவர்கள் மருமகளின் பாட்டி கூறிய ஸ்ரீவித்யாவை ஏற்பார்களா?
மிதாலி என்று என் மருமகள் கூறிய பெயர் ரொம்பவும் வட இந்திய வாடை வீசியதால் எனக்குப் பிடிக்கவில்லை. வேறு சில பெயர்கள் ஆந்திர பெயர்கள் போலவும், சில பெயர்கள் மலையாள பெயர்கள் போலவும் தோன்றின. என் சம்பந்தி 'அக்ஷரா' என்னும் பெயரை பரிந்துரைத்தார். என் மகன்,"பெயர் நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் கமலஹாசன் மகள் பெயரை வைக்க வேண்டுமா?" என்றான். இது அம்பாள் பெயர் என்று அவனை கன்வின்ஸ் செய்தோம். அதுவும் ஷார்ட் லிஸ்டில் சேர்ந்தது.
நிரஞ்சனா என்று ஒரு பெயர் சஜஸ்ட் செய்யப்பட்டது. "நான் இந்த புனை பெயரில்தான் ஆரம்பத்தில் எழுதி கொண்டிருந்தேன். இந்த பெயர் வைத்தால் ஒரு வகையில் பாட்டி பெயரை வைத்தது போல்" என்றேன். அதனாலோ என்னவோ அதை ஏற்கவில்லை. நிஹாரிகா என்று என் மகன் கூறியதும் நாங்கள் யாரும் பதில் பேசவில்லை.
ஒரு பெயருக்கு இவ்வளவு யோசனையா? முன்பெல்லாம் வீடுகளில் பெரியவர்கள் இருப்பார்கள், அவர்கள் என்ன பெயர் சொல்கிறார்களோ அந்த பெயரை மறு வார்த்தை பேசாமல் ஏற்றுக் கொள்வார்கள். அது பெரும்பாலும் குல தெய்வத்தின் பெயராக, அல்லது அவர்கள் ஊர் கோவிலில் குடி கொண்டிருக்கும் சாமியின் பெயராக, அல்லது குடும்பத்தில் இருந்த யாராவது பெரியவர்களின் பெயராக, இருக்கும். இப்படி மண்டையை உடைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
எப்படியோ பல பெயர்களை அலசி, ஆராய்ந்து சாமியின் பெயரான ஹேமாம்பிகா, சியாமளா நவராத்திரியை முன்னிட்டு அக்ஷரா, தாயும், தந்தையும் சேர்ந்து தேர்ந்தெடுத்த நவ்யா என்னும் பெயரோடு ஸ்ரீ சேர்த்து நவ்யாஸ்ரீ என்னும் பெயர்களை சூட்டினோம். இதில் நவ்யாஸ்ரீ என்னும் பெயர்தான் பிறப்பு சான்றிதழுக்கு கொடுக்கப் போகிறார்கள். நவ்யா என்றால் இளமையானவள், போற்றத்தகுந்தவள் என்று பொருளாம்.
இந்த பெயர் சூட்டும் வைபவத்திற்கு என் அழைப்பை ஏற்று நம் வெங்கட் அவர்கள் வந்து கௌரவித்தார்.
மந்திரச்சொல்