கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, May 3, 2026

ஃபர்ஹானா

 ஃபர்ஹானா




சிறிய அளவில் செருப்புக் கடை வைத்திருக்கும் கிட்டி, அவரது மனைவி, மகள் ஃபர்ஹானா, மருமகன் கரீம், குழந்தைகள் எல்லோரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். வருமானம் போதவில்லை. ஒவ்வொரு மாதமும் பள்ளியில் பணம் கட்டாதவர்கள் லிஸ்டில் குழந்தைகளின் பெயர் வாசிக்கப்படுகிறது. இதையெல்லாம் முடிவுக்கு கொண்டுவர ஃபர்ஹானா வேளைக்குச் செல்ல முடிவெடுக்கிறாள். அதில் அவள் தந்தைக்கு விருப்பம் இல்லை.

ஒரு வங்கியின் கஸ்டமர் சர்வீஸ் கால் சென்டரில் வேலைக்குச் சேரும் ஃப்ர்ஹானா அதே கால் சென்டரின் வேறு ஒரு பிரிவில் வேலை பார்ப்பவர்கள் அதிக இன்சென்டிவ் பெறுவதைப் பார்த்து, இன்சென்டிவிற்காக அந்த பிரிவுக்கு மாறுகிறாள். அது ஃப்ரண்ட்ஷிப் சாட் கால் சென்டர். சிநேகிதத்தை விரும்புகிறவர்கள் பேசுகிறோம் என்ற பெயரில் உள்ளாடைகளின் சைஸ் கேட்கிறார்கள். அதில் அவளோடு பேசும் ஒருவனோடு அவளுக்கு நட்பு ஏற்படுகிறது. அந்த சமயத்தில் அவளோடு பணி புரிந்த ஒரு பெண் கஸ்டமர்களோடு உறவு கொண்டு, ஒருவரோடு வெளியே செல்லும்பொழுது கொலை செய்யப் படுவதைபபார்த்த ஃபர்ஹானா பயந்து போய் தன் நட்பை முறித்துக் கொள்ள அவன் அவளை விடாமல் பயமுறுத்த தொடங்குகிறான். இதனிடையில் அவள் கணவனுக்கும் அவள் மீது சந்தேகம் வருகிறது. இவற்றை அவள் எவ்விதம் எதிர்கொண்டு மீள்கிறாள் என்பதுதான் மீதிக்கதை. 

ஃபர்ஹானாவாக ஐஸ்வர்யா ராஜேஷ், அவள் கணவனாக ஜித்தன் ரமேஷ், வில்லன் பாத்திரத்தில் பெரும்பாலும் முகத்தை காட்டாமல் குரலால் மட்டும்(குரல் காட்டிக் கொடுத்து விடுகிறது) நடித்திருக்கும் செல்வராகவன், ஐஸ்வர்யாவின் அப்பாவாக கிட்டி நடித்திருக்கிறார்கள். அலுவலகத்தில் ஐஸ்வர்யாவின் தோழியாக வரும் பெண் உட்பட எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். 

மனைவியை சந்தேகிக்கும் பொழுதும், கடைசியில் "உனக்கு இவ்வளவு கஷ்டம் இருக்குனு ஒரு தடவ கூட என்னிடம் சொல்லத் தோணல இல்ல" என்று மனைவியிடம் கேட்கும் பொழுதும் ஜித்தன் ரமேஷ் நிற்கிறார். அவருடைய அப்பாவி முகமும், குரலும் அந்த ரோலுக்கு பெரும் உதவி செய்திருக்கின்றன. 

குடும்ப அழுத்தம், வேலை தரும் விடுதலை, பின்னர் பயம் எல்லாவற்றையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். படம் ஒரு இடத்தில் கூட தொய்வடையவில்லை. சிறப்பான திரைக்கதை மற்றும் இயக்கம்(நெல்சன் வெங்கடேசன்). இயக்குனர், இசையமைப்பாளர், காமிராமேன் எல்லோரும் பாராட்டுக்கிரியவர்கள்.

2023 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் வெற்றி பெற்றிருக்க வேண்டும், ஒரு வேளை படத்தின் பெயர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படம் என்பதால் கதாநாயகியை முன்னிறுத்தும் படமாக இருக்குமோ என்ற அச்சத்தில் பெரும்பான்மையோர் தவிர்த்திருக்கலாம். ஓ.டி.டி.யில் பார்க்க முடிந்தவர்கள் கண்டிப்பாக பாருங்கள்.  


Monday, April 27, 2026

ஆசை முகம் மறந்தாயோ வித்யா சுப்ரமண்யம்

ஆசை முகம் மறந்தாயோ

வித்யா சுப்ரமண்யம்



அமெரிக்காவுக்கு படிக்கச் சென்ற நிருபமாவும், பிரணவும் காதல் வயப்பட்டு நண்பர்கள் முன்னிலையில் மோதிரம் மாற்றி, மாலை மாற்றிக் கொண்டு கணவன், மனைவியாக வாழ்கிறார்கள். ஆனால் அந்த வாழ்கை ஏழு நாட்கள் மட்டுமே நீடிக்கிறது.

இவர்களில் நிருபமா தாய், தந்தை, சகோதரன் எல்லோரையும் இழந்தவள். பிரணவின் தந்தை ஓய்வு பெற்ற ஆசிரியர்.இரண்டு இளைய சகோதரிகள். அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய கடமை அவனுக்கு இருக்கிறது. அதனால் முதல் இளைய சகோதரிக்கு திருமணம் நடக்கும் வரை தங்கள் திருமண செய்தியை அவனுடைய பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டாம், குழந்தைகளும் பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்கள்.

அவர்கள் தேனிலவுக்குச் செல்ல திட்டமிடும்பொழுது பிரணவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு பைபாஸ் செய்ய வேண்டிய நிர்பந்தம். அதற்காக இந்தியா பயணப்படுகிறான் பிரணவ். ஆனால் மும்பை வரை சென்றவன் அவன் பெற்றோர்கள் இருக்குமிடமான ஸ்ரீரங்கத்திற்கு செல்லவில்லை. அவனுக்கு என்ன ஆனது என்று நிருபமா இயன்றவரை தேடியும் அதற்கு பலன் இல்லை. அவன் குடும்பத்தை தன் குடும்பமாக கருதிய நிருபமா அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டியது தன் கடமை என்று கருதுகிறாள். அவளை பிரணவ் குடும்பம் ஏற்றுக் கொண்டதா? பிரணவ் கிடைத்தானா? அவள் வாழ்க்கை என்னவாகிறது? என்பதையெல்லாம் துள்ளலாகவும், தீவிரமாகவும் அலசியிருக்கும் நாவல்தான் ஆசை முகம் மறந்தாயோ?

நிருபமாவும் பிரணவும் திருமணம் செய்து கொள்ளும் முதல் பாகம் விறுவிறுப்பாகவும் ரசிக்கும் படியாகவும் இருக்கிறது. நிருபமா ஸ்ரீரங்கம் வரும் பகுதியில் தொடங்கி கதை முற்றிலும் வேறு பாதையில் ஆன்மீக வழியில் பயணித்தாலும் அதுவும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

கதையில் எல்லோரும் நல்லவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக நிருபமாவின் பாத்திரப் படைப்பு - இப்படி ஒரு பெண் இருக்க முடியுமா? என்று தோன்றினாலும், இருக்கத்தான் செய்கிறார்கள் என்று நம்பிக்கை ஊட்டும் விதமாக அமைந்திருப்பதை வரவேற்கிறேன். மேலும் அது செயற்கையாகவும் இல்லை.

பிரணவிற்கு என்ன நேர்ந்தது என்பதை அதிகம் விவரிக்காமல் திறமையாக கையாண்டிருப்பது பாராட்டுக்குரியது.

அமெரிக்கா முதல் கைலாசம் வரை அவர் பார்த்த இடங்கள் முதல் ராமானுஜரின் வாழ்க்கை, மல்லன் வில்லிதாசன் வரலாறு என்று ஆன்மீக தகவல்கள் வரை எல்லாவற்றையும் எந்தவித பிசிறும் இல்லாமல் அழகான மாலையாக் தொடுத்திருக்கிறார். நல்ல வாசிப்பனுபவத்தை தரும் புதினம்.


Saturday, April 18, 2026

படித்ததும், பார்த்ததும்

 படித்ததும், பார்த்ததும்

இன்றைய பதிவில் இரண்டு விமர்சனங்கள். ஒன்று புத்தக விமர்சனம், மற்றொன்று திரைப்பட விமர்சனம். மெர்க்குரிப் பூக்கள் சாவியில் தொடராக வந்த பொழுது படிக்கவில்லை, அதற்குப் பிறகும் படிக்கத் தோன்றவில்லை. யாரோ ஒருவர்," பாலகுமாரனனின் சிறந்த புதினங்கள் என்றால் மெர்க்குரி பூக்களும், அகல்யாவும்தான் என்றார். புஸ்தகாவில் இரண்டுமே உள்ளன. மெர்குரிப் பூக்கள் படித்தேன். 

மெர்குரிப் பூக்கள்



டிராக்டர் யாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் உற்பத்தியை பெருக்குவதற்காக ஓவர் டைம் செய்ய தொழிலாளர்கள் கேட்டுக்   கொள்ளப்படுகிறார்கள்தொழிலாளர்கள் ஒவர்டைம் கூலியைத்  தாண்டி இன்னும் அதிகமாக கூலி கேட்கிறார்கள்நிர்வாகம் மறுக்க தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். 

லாக் அவுட் அறிவித்த நிர்வாகம் தொழிலாளர்களை அடக்க கூலிப் படையை ஏவுகிறதுஅதில் ஒரு அப்பாவி தொழிலாளி கணேசன்  கொல்லப்படுகிறான்.தொழிற்சங்க தலைவன் கோபாலன் தலை   மறைவு வாழ்க்கையை மேற்கொள்ள நேரிடுகிறது. ஒரு கட்டத்தில்   கணேசன் மனைவி சாவித்திரி அவனுடைய தலைமறைவு வாழ்க்- கைக்கு உதவுகிறாள். 

அதே கம்பெனியில் ஸ்டெனோவாக பணிபுரியும் சங்கரன் தன்  அண்ணா,மன்னியோடு வசிக்கிறான்கம்பெனி லாக் அவுட் ஆனதில் வீட்டோடு இருக்கும் அவனுக்கும்அந்த வீட்டில் குடியிருக்கும் தண்டபாணியின் மனைவி சியாமளிக்கும் முறைகேடான உறவு பூக்கிறதுசியாமளி மனதில் எத்தனையோ நிறைவேறாத ஆசைகள்அவள் தன் பெண் குழந்தையைக் கூட விட்டு விட்டு சங்கரனோடு ஓடிப்போக  முடிவெடுக்கிறாள்.

கம்பெனி முதலாளியான ரங்கசாமி தொழிலாளர்கள் தன் தொழிற் சாலையை நாசமாக்கியதில் மனசு நொந்து அதை விற்று விட்டு  வெளிநாட்டில் தங்கி விடலாம் என்று முடிவுசெய்கிறார்.

இதைத்தவிர பிற்படுத்தப்பட்ட குலத்திலிருந்து வந்து போலீஸ்  அதிகாரியான துரைசிங்கம்கணேசனை குத்தி கொலை செய்த  பாவாடை என்னும் அறிவரசன் அவனைப் பழி தீர்க்கும்  தொழிலாளி சுப்பையாரங்கசாமியின் தாய்சங்கரனின் அம்மா என்று சின்ன  ஆனால் கதையில் முக்கிய திருப்பங்களை கொண்டு வரும் பாத்திரங்களைக் கொண்டு மிக அழகாக கதையைப் பின்னியிருக்கிறார் பாலகுமாரன்இது அவருடைய முதல் நாவல்முதல் நாவலிலேயே புகுந்து விளையாடியிருக்கிறார்.

 ‘கெட்டாலும் ஆண் மக்கள்’ என்ற சிறுகதையில் வந்த சியாமளி கதா பாத்திரம் இதில் விரிவடைந்திருக்கிறது.  அதில் சியாமளி றந்து  போவாள்இதில் கணவனையும்குழந்தையையும் உதறி காதல னோடு ஓடத் துணிந்துசங்கரன் அண்ணியால் தடுக்கப்பட்டு மனம் மாறுகிறாள்ஆனாலும் அவள் மீது ஏனோ பரிதாபம் வரவில்லைநல்ல வேளை இதை ாலகுமாரன் நியாயப்படுத்தவில்லை.

//இத்தனை நாள் சியாமளியிடம் சொன்ன ‘லவ் யூ’ அர்த்தமற்றது. ‘லவ்’ என்பதே என்ன என்று தெரியாமல் சொன்னது தான்இரண்டு   பேருக்கும் ஒரே சினிமாப்பாட்டு பிடித்திருக்கிறதுஇரண்டு பேருக்கும்ஒரே ராகத்தில் ஈடுபாடு இருக்கிறதுஇரண்டு பேருக்கும் கொஞ்சம்    இலக்கியம் தெரிந்திருக்கிறதுஇவை போதுமா லவ் பண்ணஈடுபாடு ஒன்றாய் இருந்தால் அடுத்த வார்த்தை லவ் தானோஇதே சியாமளி ஆணாய் இருந்தால் நல்ல நண்பனாய் ‘ஹலோ’ என்ற சொல்லும்  ஆளாய் இருந்திருப்பாள் இல்லையாபெண்ணாகிப் போனதால்   ஈர்ப்பு வந்துவிட்டது.// 

சாவித்திரியின் பாத்திரப் படைப்பு அற்புதம்எனக்கு தெரிஞ்சு எல்லாபோராட்டமும்யுத்தமும் ஒரு கட்டத்துல ஏன் எதுக்குனு காரணம்  புரியாமல் முழிக்கத்தான் செய்கிறது”. என்று சாவித்திரி கூறுவது  இன்றைக்கும் பொருந்துமே.  வளிடம் கோபாலன் “ஐ லவ் யூ” என்று  சொல்லும் பொழுது காதலின் பரிமாணம் மாறி உயர்கிறது.

"கெஞ்சறவாளை பொம்மனாட்டிக்குப் பிடிக்காது சங்கர்மதிக்கறவாளைத்தான் பிடிக்கும்.” இப்படியெல்லாம் எழுதியதுதான் அவருக்கு  பெண் ரசிகைகளை குவித்ததோ?

ரங்கசாமியும் அவர் அம்மாவும் உரையாடும் இடம் மிகவும் அழகு. மறந்து போனது நீ ரங்குஉனக்குத்தான் மரந்து போச்சுநாலணா  காசு ூட கேட்டாசரின்னு சந்தோஷமா சொல்லத் தெரியாம போச்சு

காசு மட்டும்தான் முக்கியமா?”

இல்லாதவாளுக்கு காசுதான் முக்கியம்உனக்கு என்ன தெரியும் காசு பத்தி?” ரங்கசாமியின் அம்மா தொழிலாளர்களுக்காக பரிந்து பேசி அவர் மனதை மாற்றுகிறாள்

சாவித்திரி, கோபாலன் மனதை மாற்றுகிறாள்மன்னி, சியாமளி  மனதை மாற்றுகிறாள்அதனால் சங்கரன் மனம் மாறுகிறதுசங்கரன் முதலில் மன்னி மீது கோபப்பட்டாலும்அவன் அலுவலகத்தில் பணி புரியும் நாராயணசாமியின் மகளைஏற்கனவே ஒரு இடத்தில்  நிச்சயிக்கப்பட்டவதட்சணை தர முடியாததால் திருமணம் நின்று போன  பெண்ணை மணந்து கொள்கிறான். எல்லாமே விரும்பத் தகுந்த மாற்றங்கள். 

கதையை படித்து முடிக்கும்பொழுது நம் மனதிலும் பளிச்சென்று  மெர்க்குரிப் பூக்கள் பூக்கின்றன.

நான் புஸ்தகாவில் படித்தேன்.

தாய் கிழவி


நிறைய பேர் பார்த்து பாராட்டி விட்டார்கள். நானும் பார்த்தேன். ராதிகாவை பொறுத்தவரை இப்படிப்பட்ட ரோல்கள் ஜுஜுபி. ஆனால் நிஜமான ஒரு கிராமத்துக் கிழவியை போலவே வாழ்ந்திருக்கிறாரே அங்குதான் ராதிகா நிற்கிறார். அது ராதிகாதான் என்பதை குரல்தான் காட்டிக் கொடுக்கிறது.  (இந்தக் காலத்திலும் இப்படி காது வளர்ப்பவர்கள் இருக்கிறார்களா?).

ராதிகா மட்டுமல்ல படத்தில் வரும் அத்தனை பேரும் ரொம்ப இயல்பாக, நிஜமான கிராமத்து மனிதர்களாகவே இருக்கிறார்கள். நடை, உடை பாவனை எல்லாமே அசல் கிராமம். 

பொதுவாக விமன் சென்ட்ரிக் படங்கள் என்றால் அவளை தியாக சீலியாக காண்பித்து, படம் முடியும் பொழுது நம் கண்கள் குளமாகி, மனசு பாரமாகி விடும். ஆனால் இந்தப் படத்தில் நெகடிவ் ஹீரோயினிஸம், தவிர படம் முழுவதும் இயல்பான நகைச்சுவை. குறை சொல்லித்தான் தீர வேண்டுமென்றால் ப்ராஸ்தடிக் மேக்கப்பிற்காக அத்தனை மெனக்கெட்டிருக்கும் ராதிகா மதுரைத் தமிழுக்காகவும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். தாய்கிழவி லேசுப்பட்டவள் இல்லை!

ஒரு சின்ன சந்தேகம், மெர்க்குரி பூக்கள், தாய்கிழவி இரண்டிலுமே ஒற்றெழுத்து விட்டுப்போய் விட்டதோ?