கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, July 25, 2024

அண்ணாமலையாருக்கு அரோகரா

திருவண்ணாமலைக்கு செல்ல வேண்டும் என்று கொஞ்ச நாட்களாக ஆசை. இந்த முறை சென்னை வந்திருந்த பொழுது "திருவண்ணாமலைக்கு போகலாமா?" என்று அக்காக்களிடம் கேட்டேன், அவர்களும் ஒப்புக் கொள்ள 23ஆம் தேதி செல்லலாம் என்று முடிவு செய்தோம். 

23ஆம் தேதி,செவ்வாயன்று காலை 6:45க்கு கிளம்பிய நாங்கள், வழியில் 'ஒன்லி காபி'யில் சிற்றுண்டி யை முடித்துக் கொண்டு 10:25க்கு(காலை என்று கூறா விட்டால் காலையா? இரவா? என்ற சந்தேகம் யாருக்காவது வரும்)திருவண்ணாமலையை அடைந்து விட்டோம். 

பெளர்ணமி முடிந்து இரண்டு நாட்களாகி விட்டதே, கும்பல் இருக்காது என்று நினைத்ததற்கு மாறாக நல்ல கும்பல். பிரதான கிழக்கு கோபுரம் வாயில் வழியாக விடாமல், வடக்கு கோபுரம்  வழியாகத்தான் அனுமதித்தார்கள். எங்களை அழைத்துச் சென்றிருந்த எங்கள் பெரிய அக்கா மகனுக்கு தெரிந்தவர் ஒருவர் மூலம் வி.ஐ.பி. வரிசையில் சென்றதால் சீக்கிரம் பார்க்க முடிந்தது.  ஆனால் எங்களைப் போல  பல வி.ஐ.பி.க்கள்!!

அண்ணாமலையார் பாதம் 

அண்ணாமலையார் சன்னதியை சுற்றி வரும் பொழுது பின் பக்கத்தில், அண்ணாமலையார் பாதம், அம்மையப்பன் சன்னிதி, அதற்கு அருகில் இருக்கும் கிணறு போன்றவைகளை முதல்முறையாக தரிசித்தோம். அந்த கிணற்றில் ஊரும் நீர் கங்கை என்று நம்பிக்கையாம்.

அதைப்போல உண்ணாமுலையம்மனை தரிசித்துவிட்டு வெளியே வரும்பொழுது இடது கைப்புறத்தில் அரச மரம், வில்வ மரம் இரண்டும் சேர்ந்து அதாவது அரச மரத்தின் மத்தியில் வில்வமரம் முளைத்திருக்கிறது.  அந்த மரத்தில் இரவில் சூட்சும வடிவில் சித்தர்கள் வந்து தவம் செய்கிறார்கள் என்பதும் நம்பிக்கை என்றார்கள் அதையும் முதல் முறையாக பார்த்தேன்.

உண்ணாமலையம்மன் சன்னதிக்கு வெளியே நவகிரக சன்னதிக்கு அருகில் சித்ரகுப்தருக்கு தனி சன்னதி இருக்கும். சித்திரகுப்தரை நேரில் பார்க்கக் கூடாது,  பக்கவாட்டில் இருக்கும் ஜன்னல் வழியேதான் தரிசிக்க வேண்டும் என்பார்கள். அன்று அங்கு barricade வைத்திருந்தார்கள். வெகுசிலர் அதை சற்று நகர்த்தி வழி ஏற்படுத்தி சித்ரகுப்தன் பக்கவாட்டில் தரிசித்தோம்.

இதன் பிறகு கொடிமரத்தருகில் நமஸ்கரித்துவிட்டு, சிவகங்கை குளத்திற்கு எதிரே இருக்கும் இடைக்காட்டு சித்தர் ஜீவ சமாதியையும் முதல்முறையாக தரிசித்தோம். இந்த முறை திருவண்ணாமலை பயணம் சிறப்பானது என்றுதான் கூற வேண்டும்.

Friday, June 21, 2024

மசாலா சாட்

மசாலா சாட்  

வில்லனான ஹீரோ!:


அனேகமாக தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் செய்த லட்சுமிகாந்தன் கொலை வழக்கிற்கு அடுத்து பரபரப்பாக பேசப்படும் கொலை வழக்கு தர்ஷன் என்னும் கன்னட நடிகர் தன்னுடைய காதலிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ரேணுகாசாமி என்பவரை கொடூரமாக கொலை செய்திருப்பது.

லட்சுமிகாந்தனாவது ஒரு மஞ்சள் பத்திரிகையாளர். தியாகராஜ பாகவதைரையும், என்.எஸ்,கேயையும் பிளாக் மெயில் செய்திருக்கிறார். ரேணுகாசாமியோ தர்ஷனின் ரசிகர். அவர் செய்த தவறு தன்னுடைய அபிமான நடிகருக்கு ஒரு குடும்பம், மனைவி, மகன் இருக்கும்பொழுது இன்னொரு பெண்ணிடம்(நடிகை) தொடர்பு வைத்திருந்தது பிடிக்கவில்லை. அதனால் அந்தப் பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியிருக்கிறார்.

இங்கு ஒரு விஷயம்தான் வருத்தமளிக்கிறது. ரேணுகாசாமியைப் பொருத்தவரை ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தையோடு வாழும் தர்ஷனுக்கு எந்த குருஞ்செய்தியும் அனுப்பவில்லை. பெண்தான் தவறுக்கு காரணம் என்று தவறான எண்ணத்தில் செயல்பட்டு, அவரை நம்பி வந்த பெண்ணையும், குழந்தையையும் நடுத்தெருவில் விட்டு விட்டு சென்றிருக்கிறார். என்னத்தை சொல்வது?

ராசிபலனால் பாதிக்கப்பட்ட ஜோதிடர்:


டி.வி.யில் ஜோதிடம் சொல்லும் பலருள் முக்கியமானவர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் அவர்கள். அவருடைய நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு இவர் என்ன எல்லோருக்கும் பிரமாதமாக இருக்கிறது என்கிறாரே? என்று தோன்றும். அதற்கு ஒரு சுவையான காரணம் சொல்கிறார்.

துபாயில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு ஆள், காலையில் தொலைகாட்சியில் ராசி பலன் கேட்டிருக்கிறார். அவருடைய ராசிக்கு மோசமான பலங்களை கூறியிருக்கிறார் அந்த ஜோதிடர். ஏற்கனவே வாழ்க்கையில் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருந்த அந்த தொழிலாளி, மனமுடைந்து, தனக்கு நல்ல காலம் வராது என்று ஜோதிடர் கூறிவிட்டதால், தான் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டுவிட, அந்த ஜோதிடரை கைது செய்து விட்டார்களாம். அதனால் தொலைகாட்சியில் மோசமான பலன்களை சொல்ல மாட்டாராம். தனிப்பட்ட முறையில் ஜோதிட ஆலோசனை கேட்பவர்களிடம் சரியான பலனை கூறி விடுவாராம். எப்படி இருக்கிறது?

மாற்றப்பட்ட நர்சரி ரைம்:

தொலைகாட்சி என்றதும் ஒரு நல்ல விஷயம் நினைவுக்கு வருகிறது. ‘ரெய்ன் ரெய்ன் கோ அவே, கம் அகெய்ன் அனதர் டே..’ என்று ஒரு நர்சரி ரைம் உண்டு. இங்கிலாந்தில் அடிக்கடி மழை பெய்யும், அதனால் அங்கு இருக்கும் குழந்தைகள் அந்தப் பாடலை பாடுவதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் வருடத்தில் இரண்டு மாதங்கள் மட்டும் மழை பெய்யும், மழை மிகவும் அவசியமான நம் நாட்டு குழந்தைகள் அந்தப் பாடலை பாடக்கூடாது, மழை வேண்டும் என்று நோன்பு இருப்பவர்கள் நாம் என்று பலரும் பரவலாக சொல்ல ஆரம்பித்தது வீண் போகவில்லை. இப்போது அந்த ந்ர்சரி ரைம் ‘ரெய்ன் ரெய்ன் இட்ஸ் ஓகே!, வீ வில் ப்ளே ஆன் அ சன்னி டே..’ என்று மாற்றி விட்டார்கள்.

எந்த விஷயம் மாற வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதைப் பற்றி பொது வெளியில் அதிகம் பேச வேண்டும். அப்படி பேசிப் பேசிதான் பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன.



Sunday, June 2, 2024

அலைகடலும்,ஆராவமுதனும்

அலைகடலும்,
ஆராவமுதனும்




சென்ற மாதம் சென்னை வந்திருந்த பொழுது மெரீனா பீச் சென்றிருந்தேன். ஓடி வந்து நம் கால்களில் மோதும் அலைகளில் நனைவது எப்போதுமே மிகவும் பிடிக்கும். ஏதோ சத்தியம் செய்து கொடுத்ததைப் போல எல்லை மீறாமல் நிற்கும் சமுத்திரத்தின் கட்டுப்பாடு எப்போதுமே வியக்க வைக்கும். ஒரு முறை மீறிய பொழுது நிகழ்ந்த பாதகங்களை பார்த்தோமே! வங்க கடலுக்கு கொஞ்சம் ஆக்ரோஷம் அதிகம்தான். அமைதியாக எழும்பி அடங்கும், ஆர்ப்பரித்து பயமுறுத்தும் அந்த அலைகள் எப்போதோ கேட்ட ஜெயராம சர்மா அவர்களின் உபன்யாசத்தை நினைவூட்டின. திருமாலின் பத்து அவதாரங்களை கடலின் அலைகளோடு அழகாக ஒப்பிடுவார்.

கடலின் நடுவில் தோன்றி, எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், கரைக்கும் வராமல், தோன்றிய இடத்திலேயே மறைந்து விடுபட போன்றவை மச்ச, கூர்ம, வராக அவதாரங்கள்.

சில அலைகள் நடுக்கடலில் தோன்றி அங்கேயே உயர்ந்து ஆர்ப்பரித்து அங்கேயே அடங்கி விடும். அதைப் போன்றது நரசிம்ம அவதாரம்.

சில அலைகள் வரும்பொழுது சிறியதாக வந்து, கரையைத் தொடும் பொழுது திடீரென்று உயர்ந்து நம்மை நிலைகுலையச் செய்யும். அதைப் போன்றது வாமனனாக வந்து, திரிவிக்கிரமனாக வளர்ந்த அவதாரம். 

சில அலைகள் பெரிய அலையோடு வந்து கரையைத் தொட்டுவிட்டுச் சென்றாலும் பெரிய பாதிப்பு இருக்காது. அவை போன்றவை ராம,கிருஷ்ண அவதாரங்களோடு சேர்ந்து வந்த பரசுராம, பலராமா அவதாரங்கள். 

சில அலைகள் நிதானமாக, கரையின் வெகுதூரம் வந்து நனைத்துவிட்டுச் செல்லும். இந்தியாவின் வடக்கே அயோத்தியில் பிறந்து, இந்தியாவின் தென்கோடி வரை நடந்த ராம அவதாரம் அதைப் போன்றது.

சில அலைகளோ கரையில் நிற்பவர்களை அப்படியே இழுத்து மூழ்கடித்து தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொண்டுவிடும். அதைப்போல கிருஷ்ணனோ தன்னை சரணடைபவர்களை தன்னிடமே ஐக்கியப்படுத்திக் கொண்டு விடுவான்.

ராதே கிருஷ்ணா!


Saturday, May 11, 2024

மூன்று படங்கள் JML


ஹாட் ட்ரிக் அடிப்பது போல அடுத்தடுத்து மூன்று நல்ல படங்களை பார்த்தேன்.


ஜெ.பேபி, மஞ்சுமல் பாய்ஸ், லாப்பட்டா லேடீஸ். இதில் ஜெ.பேபிக்கு ஏற்கனவே விமர்சனம் எழுதி விட்டேன்.

மஞ்சுமல் பாய்ஸ் நிறைய பாராட்டுதல்களையும், கொஞ்சம் விமர்சனத்தையும் சந்தித்தது. இந்த படத்திற்கு ஜெயமோகனின் கண்டனத்தை படித்த பிறகு பார்க்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் இருந்தது. ஒரு வழியாக ஹாட்ஸ்டாரில் பார்த்தேன்.  படத்தை பார்த்த பிறகு ஜெமோ ஏதோ கோபத்தை பட விமர்சனம் என்ற பெயரில் ஆற்றிக் கொண்டிருக்கிறார் என்றுதான் தோன்றியது.

படத்தின் கதை என்னவென்று எனக்குத் தெரியும். இருந்தாலும் க்ளைமாக்ஸ் நெருங்க,நெருங்க சோஃபாவில் சாய்ந்து உட்கார முடியாமல், நுனிக்கு வந்து விட்டேன்.
அதிலும், நண்பனை காப்பாற்றச் சென்றவன், நண்பனோடு சேர்ந்து மேலே வர முடியாமல், பாறை இடுக்கில் சிக்கிக் கொள்ளும் பொழுது, "கயிறை கொஞ்சம் லூசாக கீழே இறக்கி, பிறகு மேலே இழுங்கடா" என்று கத்த தோன்றுகிறது. அதைப்போலவே செய்து இருவரும் மேலே வரும்பொழுது தியேட்டரில் எப்படிப்பட்ட அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் என்பது புரிகிறது. அதோடு படத்தை முடிக்காமல், அதன் பின் விளைவுகளையும் காட்டியிருப்பது சிறப்பு. 

அறம் படத்தையும், இதையும் சிலர் ஒப்பிடுகின்றனர்.  அதில் குழந்தை,  தெரியாமல் கிணற்றில் விழும். இதில் எல்லோரும் விவரம் அறிந்தவர்கள். தடை செய்யப்பட்ட பகுதிக்கு ஏன் செல்ல வேண்டும்? என்று ஒருவர் கேட்டிருந்தார். அது மாஸ் மெண்டாலிட்டி(குழு மனப்பான்மை) அதை சிறப்பாக இயக்குனர் கையாண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. தவற விட்டவர்கள் டிஸ்னி ஹாட் ஸ்டாரில். தமிழ் டயலாக்கோடு கிடைக்கிறது பாருங்கள், worth watching!

'லாப்பட்டா லேடீஸ்' இந்த படத்தைப் பற்றி மத்யமரில் நிறைய விமர்சனங்கள் வந்து விட்டன.  எண்பதுகளில் நடப்பதாக சித்தரிக்கப்பட்ட கதை. திருமணமாகி புகுந்த வீட்டிற்கு முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டியில் செல்லும் இரண்டு மணமகள்கள் மாறிப்போய் விடுகிறார்கள். அதில் ஒருத்தி பால்மணம் மாறாத முகம் கொண்ட, தன் ஊர், கணவன் ஊர் பெயர் கூட சொல்லத் தெரியாத அப்பாவி. இன்னொருத்தி நன்றாக படிக்கக் கூடியவள், கல்வியைத் தொடர விரும்பினாலும், அது மறுக்கப்பட்டு,  ஒரு மூர்க்கனுக்கு இரண்டாம் தாரமாக கட்டிக்கொடுக்கப் படுகிறாள். முதலாம் பெண் கணவனோடு சேர்ந்தாளா? அடுத்தவள் என்னவானாள்? அவள் ஆசைப்படி கல்வியைத் தொடர முடிந்ததா? என்பதை ஸ்வாரஸ்யமாக சித்தரிக்கும் படம்.

இந்த மூன்று படங்களுக்கும் இருக்கும் ஒற்றுமை, இந்தப் படங்களில் பெரிய ஸ்டார் வேல்யூ கிடையாது. அதனால் ஹீரோவுக்கு இண்ட்ரோ சாங் கிடையாது.  நோ வில்லன், சோ, நோ வயலன்ஸ். ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் கிடையாது.  இந்தப் படங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் எல்லோரும் சினிமா பூச்சு இல்லாமல், நம் அக்கம் பக்கத்தில் நாம் பார்க்கும் மனிதர்களைப் போலவே இருக்கிறார்கள். மிக மிக இயல்பான காட்சிகள், வசனங்கள். இப்படிப்பட்ட படங்களும் ஜெயிப்பது ஆரோக்கியமான விஷயம்தானே?


Friday, May 3, 2024

மத்யமர் கதைகள் - சுஜாதா

இன்று சுஜாதாவின் பிறந்த நாளாம். அவருடைய மத்யமர் கதைகளைப்பற்றி பார்க்கலாம்


சுஜாதாவின் சிக்னேச்சர் இலக்கிய படைப்பு என்று 'மத்யமர்' கதைகளையும், 'ஸ்ரீரங்கத்து தேவதைகளையும்' கூறலாம்.

மத்யமர் என்பதற்கு பொருளாதார அடிப்படையை கருத்தில் கொள்ளாமல், அவர்கள் மனப்பான்மையை கருத்தில் கொண்டு வடிக்கப்பட்ட கதைகள்.

"இங்கேயும் இல்லாமல், அங்கேயும் செல்ல முடியாமல் ஒரு வர்க்கமே உண்டு. இவர்கள் ஏறக்குறைய நல்லவர்கள். பெரும்பாலும் கோழைகள். பணக்கார சௌகர்யங்களுக்கு தொட்டும் தொடாத அருகாமையில் இருப்பவர்கள்.

பக்தி,காதல், பரிவு, பாசம்,தியாகம், நேர்மை போன்ற குணங்களை தேவைக்கும், அவசரத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்வார்கள். சமூகம் வாசல் கதவை தட்டுவதை கேட்காதவர்கள். இந்த மௌனப் பெரும்பான்மையினருக்கு ஒரு பெயர் உண்டு, மத்யமர். என்று முன்னுரையில் கூறியிருப்பார்.

இதில் பெரும்பான்மையான கதைகளில் பெண்களின் பொறுமையும்,  தியாகமும்,  சுயநலமும் சுஜாதாவுக்கே உரிய நுணுக்கத்தோடு வெளிப்பட்டிருக்கின்றன. 
இவற்றில் எனக்கு பரிசு, அறிவுரை போன்ற கதைகளோடு 'தாய்' என்ற தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் இரண்டு கதைகளில் தாய்-2 என்னும் கதை பிடித்தது. 

முதல் கதையான 'ஒரு திருமண ஏற்பாடு' கதையில் அமெரிக்காவில் வசிக்கும் மகனுக்கு இந்தியாவில் வரன் தேடும் ஐயங்கார் பெற்றோர்கள்.  

ஆங்கிலப் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து, பதில் வந்தவற்றில் ஒன்றிர்க்கு  பையன் ஓகே சொல்ல, பெண் பார்க்க கிளம்புகிறார்கள். அதை சுஜாதா எப்படி வர்ணிக்கிறார் பாருங்கள்

'பல நாட்கள் கிளப்பாமல் ஷெட்டில் வைத்திருந்த காருக்கு கேனில் பெட்ரோல் வாங்கி ஊற்றி, கார்பரேட் துடைத்து மாட்டி, ஆடி ஆடி  அடையாறிலிருந்து சென்றார்கள்:))

பெண்ணின் தாயார் தலைக்கு டை போட்டுக் கொண்டு, லாக்கரில் நகைகளை எடுத்து மாட்டிக் கொண்டாள்.

நரசிம்மன் புத்தக அலமாரியில் ஹெரால்ட் ராபின்சன்களை எடுத்து விட்டு ஜே.கிருஷ்ணமூர்த்திகளை அடுக்கினார்.'

பிள்ளையின் பெற்றோர்களான ராமநாராயணனும், கஸ்தூரியும் பெண் வீட்டிற்கு வந்ததும் அவர்களை குழைந்து வரவேற்கிறார்கள் பெண்ணைப் பெற்றவர்கள்.

"ஏன் இவ்வளவு லேட்டாயிடுத்து?  அட்ரஸ் கண்டுபிடிக்க முடியலையா?"
என்று நரசிம்மன் கேட்க, கஸ்தூரி,"இல்லை, வழியில் கார் நின்னு போயிடுத்து. இதை குடுத்துட்டு வேற புது கார் வாங்கணும்னு பாக்கறோம், அதுக்கு இன்னும் வேள வரல" என்கிறாள்.

புதுக்காரா? என்பது போல ராமநாராயணன் பார்க்க, அதை கவனிக்காமல் "ஷூவை அவிழ்த்துடுங்கோ" என்கிறாள்.

'அவர் ஷூவை அவிழ்த்து விட்டு சாக்ஸ் ஓட்டைகளோடு உள்ளே நுழைந்தார். அவருடைய சாக்ஸ் வாடைக்கு உள்ளே ஜுடி குலைத்தது' என்று அப்பட்டமான மிடில்க்ளாஸை நகைச்சுவையோடு அறிமுகப்படுத்துகிறார்.

கதையின் இறுதியில் இரண்டு குடும்பங்களுக்கும் பிடித்துப்போய், திருமணத்தை நிச்சயித்து விடுகிறார்கள். "சிம்பிள் மேரேஜ் போதும். எங்களுக்கு கும்பல் அதிகம் வராது, உட்லண்ட்ஸில் வைத்துக் கொள்ளலாம்" என்றெல்லாம் பேசி விட்டு, வீடு திரும்பும் பொழுது, ராமநாராயணன் மனைவியிடம்," அதை அவர்களிடம் சொல்ல வேண்டாமா" என்று கேட்கிறார்.
"எதை?"
"அமெரிக்காவில் உன் பிள்ளை ஒரு நீக்ரோவை கல்யாணம் பண்ணிக்கொண்டு ஒரு வருடம் கழித்து டைவர்ஸ் பண்ணியதை"
"நீங்க பேசாம இருங்கோ, அது முடிஞ்சு போன கதை"

அதே சமயத்தில் பெண் வீட்டில் உரையாடல் இப்படி செல்வதாக கதையை முடித்திருப்பார்
"இதை விட நல்ல சம்பந்தம் நமக்கு கிடைக்காது. நந்தினி ஒத்துப்பாளா?"
"அமெரிக்கானா ஒத்துப்பா"
" ஒம் பொண்ணு ஒரு பஞ்சாபி பையனோடு ஒருமாதம்.."
"நீங்க சும்மா இருங்கோ, அது முடிஞ்சு போன கதை"

பரிசு கதையில்  பத்திரிகை ஒன்றில் ஸ்லோகன் எழுதியதற்காக டில்லி, ஆக்ரா போன்ற இடங்களுக்கு விமானத்தில் பயணம், ஸ்டார் ஹோட்டல்களில் தங்குதல் போன்றவற்றை தம்பிக்கு கிடைத்திருக்கும் வேலைக்கு காஷன் டெபாஸிட் கட்டவும், அம்மாவின் அறுவை சிகிச்சைக்காகவும் துறந்து, அதற்கு பதிலாக பணமாக வாங்கி வந்து விட்டதாக கணவன் கூறியதை "அடுத்த முறை கிடைத்தால் பார்த்துக் கொள்ளலாம்" என்று பூர்ணிமா ஏற்றுக் கொள்ளும்பொழுது நமக்கே மனது பாரமாகி விடுகிறது. டில்லி யாத்திரைக்கு அவள் தயாராவதை சாங்கோபாங்கமாக விவரித்திருப்பார்.

'அறிவுரை'யில் நியாயமாக இருந்து எதையும் சேர்க்க முடியாத அப்பா, அவரைப் போலவே நியாயமாக, லஞ்சம் வாங்காமல் இருப்பதால் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் மகன்.  ஒரு பெரிய தொகை லஞ்சமாக ஆசை காட்டப் படும் பொழுது, அதை பெற்றுக்கொள்ள வற்புறுத்தும் மனைவி, அவனுடைய சான்றான்மை இரண்டிற்கும் இடையே மாட்டிக் கொண்டு தவிப்புடன், தந்தையிடம் அறிவுரை கேட்க வருகிறான்.

வாழ்நாள் முழுவதும் ஒரு பைசா லஞ்சம் வாங்காத அப்பா, "லஞ்சம் வருதுன்னா வாங்கிடு" என்கிறார்.
"என்னப்பா சொல்றீங்க?" என்று மகன் அதிர்ச்சி அடைய,
"ஆமாண்டா, லஞ்சம் வாங்காமல் நான் என்னத்தை கண்டேன்? நகையை வித்து, பரம்பரை வீட்டை வித்து, புதுசா கட்டின வீட்டை முடிக்க முடியாம ஒழுகுது. ஒங்கம்மாவுக்கு வைத்தியம் பார்க்க முடியல.. இத்தனை பொண்ணுங்க, பசங்க இருந்தும் யாரும் சீந்தல.. நீயே கடைசியா என்ன எப்போ பாக்க வந்த? மூணு வருஷம்? நான் லஞ்சம் வாங்கி கையில் காசு வெச்சிருந்தா பசங்களும், பொண்ணுங்களும் இப்படி உதாசீனம் பண்ணுவாங்களா? என் நிலமை உனக்கு வராம இருக்கணும்னா உன் பொண்டாட்டி சொல்றது சரி.  லஞ்சம் வாங்கிடு" சொல்லிவிட்டு கிழவர் திரும்பி படுத்துக் கொண்டார். என்று முடிகிறது.

லஞ்சம் வாங்கச் சொல்லும் சுஜாதாவின் கதை என்று வெளியான காலத்திலேயே விமர்சனத்திற்கு உள்ளான கதை.

நீலப்புடவை ரோஜாப்பூ

இதே கருத்தில் அவர் ஏற்கனவே ஒரு கதை எழுதி, அதை ரேவதி, அமெரிக்காவை நிலைக்களனாக கொண்டு 'மித்ர my friend' என்று படமாக எடுத்திருந்தார். 

திருமணமாகி பதினெட்டு வருடங்கள் கழிந்து, குழந்தைகளும் இல்லாத ஒரு தம்பதியரிடையே  உரையாடல் வெகுவாக குறைந்து, ஒரு திரை விழுந்து விடுகிறது. அந்த வெறுமையை பேனா நட்பு மூலம் நிரப்பிக் கொள்ள முயற்சிக்கும் அவனை வினு என்ற பெயரில் கடிதம் போடும் பெண் கவர்கிறாள். நேரில் சந்திக்கக் கூடாது என்று எச்சரிக்கும் ஏஜென்சியை மீறி சந்திக்கச் செல்லும் அவனுக்கு கிடைப்பது எப்படிப்பட்ட அதிர்ச்சி!

சாட்சி என்னும் கதையில் அதிகாலையில் நூறு கிராம் கடுகு வாங்க பாய் கடைக்குச் செல்லும் சரளா, பக்கத்து பெட்டிக்கடையில் அமர்ந்திருக்கும் வாசுவை, பைக்கில் வந்த இரு இளைஞர்களில் ஒருவன் பிடித்துக் கொள்ள, மற்றவன் கத்தியால் சதக்கென்று விலாவில் குத்தி சாக அடிப்பதை பார்த்து பயந்து வீட்டிற்கு ஓடி வருகிறாள்.

கொலை செய்தவன் பெயர் கிருஷ்ணா என்பதும், அவன் பக்கத்து வீட்டிற்கு வருகிறவன், அரசியல் செல்வாக்குள்ள ரௌடி என்பதால் வீட்டு மனிதர்கள் எல்லோரும் சரளாவிடம் போலீஸ் கேட்டால், "எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லிவிடு" என்று படித்து படித்து சொல்லியும், போலீஸிடம் தான் பார்த்த அத்தனையையும் ஒரு வரி பிசகாமல் சொல்லி விடுகிறாள்.

'ஜாதி இரண்டொழிய' என்னும் கதையில் ரிசர்வேஷன் பொருளாதார அடிப்படையில் அமைய வேண்டும் என்கிறார்.

தாய் - 2
வயதான, மாதம் ரூ.600/- மட்டும் ஃபேமிலி பென்ஷன் வாங்கும் ஒரு விதவைத் தாயை யார் வைத்துக் கொள்வது? என்று போட்டி போடும் இரண்டு மருமகள்கள், அவர்களை சமாளிக்கத் திணறும் மகன்கள்.

பெரியவன் ஓரளவு நல்ல நிலையில் இருந்தாலும் அம்மாவை ஒன்றரை மாதங்களுக்கு மேல் வைத்துக் கொள்வதில்லை. வெளிநாட்டிற்கு டெபுடேஷன் என்று காரணம் காட்டுகிறான்.

இரண்டாவது மகனுக்கு அண்ணா செய்வது தவறுதான்  என்றாலும், அதற்காக தாயை நடுத்தெருவில் நிறுத்தி விட முடியுமா என்று தோன்றுகிறது. ஆனால் மனைவி மசிய மறுக்கிறாள்.

எப்படியோ பேசிப் பார்த்தும் மனைவி வழிக்கு வராததால், அம்மா வழி உறவினரான வெங்கடேசன் மாமாவை பஞ்சாயத்துக்கு அழைக்கிறான்.

அவரை தனியாக வீட்டில் விட்டு விட்டு மனைவி, குழந்தைகளோடு கோவிலுக்குச் சென்று விட்டது இவனுக்கு கோபமூட்டுகிறது.

"உள்ளே, ஃபிளாஸ்கில் உனக்கு காபி வைத்திருக்கிறாளாம்" என்றார் மாமா சகஜமாக.

கை,கால், முகம் கழுவி, உடை மாற்றிக் கொண்டு மாமாவிடம்,"சித்ரா ஏதாவது சொன்னாளா?" என்று கேட்க,

சொன்னாள், சுதாகர் லெட்டர் மேல லெட்டர், ஃபோன் மேல ஃபோன் போடறானாம் அம்மாவை அழைச்சிண்டு போக"

"ஆமாம் மாமா, இவ ஓத்துக்க மாட்டேங்கறா. எப்படி கன்வின்ஸ் பண்றதுன்னே தெரியல. எங்கம்மா பாவம் எங்க போவா? சுதாகர் பண்றதும் சரியில்ல, ஏதாவது சாக்கு சொல்லி அனுப்பிடறான். நான், குழந்தைகள், அம்மா எல்லாரையும் சமாளிக்க இவ திணற்ரா"

"தினா உன்னுடைய பிரச்சனை இப்போ இந்த தேசத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கு.  இது ட்ரான்சிஷன் ப்ராப்ளம். கூட்டுக் குடும்பங்கள் சிதைஞ்சு போச்சு, வீடுகள் சின்னதாயுடுத்து, மனிதர்களுக்கு சுயநலம் அதிகமாகி விட்டது. பல காரணங்கள்" என்று சோஷியாலஜியை அலசி விட்டு, திவாகரின் அம்மாவுக்கு இத்தனை நாட்களாக லிட்டிகேஷனில் இருந்த  பிறந்து வீட்டு சொத்தில்  தீர்ப்பு வந்து விட்டது என்றும், அதன் மூலம் எட்டு லட்சம் கிடைக்கும், அதை வைத்துக் கொண்டு திருச்சியில் ஒரு வீடு வாங்கிக் கொண்டு, சமையலுக்கும், உதவிக்கும் ஆள் போட்டுக் கொண்டு தனியாக இருக்கலாம், சுதாகர்  டெபுடேஷனில் வெளிநாடு செல்லலாம், திவாகர் நிம்மதியாக இருக்கலாம் என்கிறார்.

"இந்த விஷயம் சுதாகருக்குத் தெரியுமா?" என்று கேட்க,"நான் இன்னும் சுதாகருக்கு லெட்டர் போடல, நேத்திக்குதானே தீர்ப்பு வந்தது. ஒரு வேளை நரசு சொல்லியிருக்கலாம், அவன் டெல்லியில்தான் இருக்கான்" என்கிறார்.

"நான் நாளைக்கு சுதாகருக்கு விவரமா லெட்டர் போடறேன். நீங்க சொன்னது நல்ல ஐடியா" என்று திவாகர் கூற, இவர்கள் இருவரும் பேசுவதை வெளியிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த திவாகர் மனைவி சித்ரா,"என்ன நல்ல ஐடியா?" என்கிறாள்.

அன்று இரவே  திவாகர் மவுண்ட்ரோடு தபாலாபீசுக்குச் சென்று அண்ணனுக்கு,

Starting by grand trunk express tomorrow to take mother Divakar
என்று தந்தி கொடுத்துவிட்டு திரும்புகிறான்.

Changed plans regarding deputation. Mother stays with us Sudhakar

என்று அவனுக்கு வீட்டில் ஒரு தந்தி காத்திருக்கிறது.

சுஜாதாவுக்கே உரிய நச் முடிவு!

Saturday, April 27, 2024

ரா.கி.ரங்கராஜனின் சிறுகதையும், கத்தரிக்காய் மோர்குழம்பும், நானும்

ரா.கி.ரங்கராஜனின் சிறுகதையும், கத்தரிக்காய் மோர்குழம்பும், நானும்:

நான் ஒன்பது வயதிலிருந்தே தொடர் கதைகள் படிக்க ஆரம்பித்து விட்டேன். எங்கள் வீட்டில் ஆனந்த விகடன் வாங்குவார்கள், எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த ஐயங்கார் மாமி வீட்டில் கல்கி வாங்குவார்கள், எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் பிச்சா பாட்டி என்று ஒருவர் இருந்தார். அவர்கள் வீட்டில் குமுதம் வாங்குவார்கள். பிச்சா பாட்டியின் மாப்பிள்ளை ரமணி என்பவருக்கு அத்தனை சின்ன வயதில் நான் புத்தகங்களை அவ்வளவு சீரியஸாக படித்தது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது போல.  ஞாயிரன்று  குமுதம் வந்ததும், அவர், “பானு குமுதம் வந்தாச்சு" என்று அழைப்பார். அவர்கள் வீட்டில் ஒவ்வொரு ஞாயிறும் காலையில் மசால் தோசை செய்வார்கள். சில நாட்கள் எனக்கும் கிடைக்கும். ஒவ்வொரு வாரமும் அவர்கள் வீட்டிற்குச் சென்று மசால் தோசை சாப்பிடக் கூடாது  என்று அம்மா திட்டுவாள்.

ஒரு வாரம் குமுதத்தில் ரா.கி.ரங்கராஜன் கதை ஒன்று படித்தேன். அதில் பத்து வயதான பாலு என்னும் சிறுவனின் தந்தை இறந்துவிட, அவனுடைய அம்மா ஒரு உறவினர் வீட்டில் இருக்க, அவனை அவன் சித்தப்பா அழைத்துக் கொண்டு வருவார். அவன் வந்ததும் அவனுடைய சித்தி வேலைக்காரியை நிறுத்தி விடுவாள். அதனால் வீட்டு வேலைகள் எல்லாம் பாலுவின் சின்னத் தலையில் இறங்கின என்று ரா.கி.ரா எழுதியிருப்பார். ஒரு நாள் அவர்கள் வீட்டில் கத்தரிக்காய் மோர்க்குழம்பு செய்ய வேண்டி வரும். பாலு அதற்காக கத்தரிக்காயை நறுக்கும் பொழுது, தன் விரலை நறுக்கிக் கொண்டு விடுவான். அதோடு மோர்க்குழம்பிற்காக தேங்காய் மற்றும் மிளகாய் வற்றலை அம்மியில் அரைக்கும் பொழுது, வெட்டுப்பட்ட விரல் எரியும். அதை பொறுத்துக் கொண்டு பிறகு கைக்கு கட்டுப் போட்டுக் கொள்வான். அடுத்த நாள் அவனுடைய அம்மா வருவாள். அம்மாவிற்கு எதிரே மிகவும் பாசமாக இருப்பது போல சித்தி நடிப்பாள். அம்மாவை பஸ் ஏற்றிவிட செல்லும்பொழுது, தன் கை காயம் அம்மா கண்ணில் பட்டுவிடக் கூடாது என்று தன் கையை ட்ரெளசர் பாக்கெட்டில் விட்டு மறைத்துக் கொள்வான். அவனிடம் அம்மா, பாடங்களில் எத்தனை மார்க் வாங்குகிறான் என்று கேட்பாள், தான் வாங்கிய மார்க்குகளை கூறிய பாலு படிக்க முடிந்திருந்தால் இன்னும்  அதிகம் மார்க்குகள் வாங்கியிருப்பேன் என்று நினைத்துக் கொள்வான். இப்படிச் செல்லும் அந்தக் கதை என்னை அதிகம் பாதித்து விட்டது.

வீட்டிற்கு வந்தால், சாப்பாட்டு நேரம். சாப்பிட உட்காரச் சொன்னார்கள். எதேச்சையாக எங்கள் வீட்டிலும் அன்று கத்தரிக்காய் மோர்க்குழம்பு. அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் சமையல் காரமாக இருக்கும். காரமான அந்தக் குழம்பை சாப்பிட்ட எனக்கு, இதை சாப்பிடும் பொழுதே இவ்வளவு எரிகிறதே, பாவம் அந்த பாலு, வெட்டுப்பட்ட விரலோடு, இதற்காக மிளகாயை அரைத்திருக்கிறான், அவனுக்கு எப்படி எரிந்திருக்கும்? என்று தோன்றியது, அவ்வளவுதான், கண்களிலிருந்து பொல பொலவென்று நீர் கொட்டியது. என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த என் மாமா, “ஏன் அழற?” என்றார். அம்மாவும்,”ஏண்டி அழற?” என்றார். கதை படித்துவிட்டு அழுகிறேன் என்றால் அவ்வளவுதான், திட்டு கிடைக்கும், ஏற்கனவே எப்போது பார்த்தாலும் கதை புத்தகம் படிக்கிறேன் என்று திட்டு வாங்கிக் கொண்டிருந்தேன். அதனால் எதுவும் பதில் சொல்லவில்லை.

சமையலில் காரத்தை குறைக்க வேண்டும் என்று பாட்டியிடம் வலியுறுத்திக் கொண்டிருந்த மாமா, மோர்குழம்பின் காரம்தான் என் கண்களில் நீரை வரவழைத்து விட்டது என்று நினைத்து, “குழம்பு காரமா இருக்கா?” என்று கேட்டதும் நான் ஆமாம் என்று தலை ஆட்டி விட்டேன். அவ்வளவுதான், “குழந்தை கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு இப்படியா காரமாக சமைப்பீர்கள்?” என்று பாட்டியை திட்ட ஆரம்பித்து விட்டார். அதன் பிறகு பல வருடங்களுக்கு கத்தரிக்காய் மோர்க்குழம்பு சாப்பிட நேரும் பொழுதெல்லாம் எனக்கு அந்த பாலுவின் நினைவு வந்து தொண்டை அடைக்கும்.  

Friday, April 19, 2024

பெருகி வரும் நுகர்வோர் கலாசாரம்

பெருகி வரும் 

நுகர்வோர் கலாசாரம்

வேடிக்கையாக, ‘அம்மா வேணுமா? அப்பா வேணுமா? என்றுதான் தெருவில் விற்றுக்கொண்டு வரவில்லை, மற்றபடி எல்லாம் கிடைக்கிறது” என்பார்கள். இப்போது சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கும் சில பொருள்கள் ஆச்சர்யப்பட வைக்கின்றன.

அன்று என் மகன் குட்டி குட்டியான பாட்டில்கள் அடங்கிய பாக்(Pack)ஒன்றை வாங்கி வந்து குளிர்சாதன பெட்டியில் வைத்தான். என்ன என்று கேட்டதற்கு ப்ரோ ப்யோடிக் ஃபெர்மென்டெட் மில்க், “குட் ஃபார் கட் ஹெல்த்” என்றான் சரி ஏதோ  என்று விட்டு விட்டேன்.

சில நாட்களுக்கு முன்னர் முகநூலில் ஒரு பெண்மணி ப்ரோ பயோடிக் ஃபெர்மென்டெட் கர்ட் ரைஸ் என்று ஒரு ரெசிபி எழுதியிருந்தார். அதன் செய்முறை:

சாதத்தை வெடித்து, ஆற வைத்து, பின்னர் அதில் சுத்தமான பச்சைத் தண்ணீரை ஊற்றி, ஆறிலிருந்து, எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். இப்போது அது நொதித்திருக்கும். அதில் உப்பு போட்டு, நன்றாக பிசைந்து, அதில் தயிர் அல்லது மோர் சேர்த்து வேண்டுமானால் கடுகு தாளிக்கலாம். சுவை அள்ளும். இந்த ப்ரோ பயோடிக் ரைஸ் வைட்டமின் பி1. பி12, கால்ஷியம்,பொட்டாஷியம் எல்லாம் நிறைந்த சத்தான உணவு. குடலுக்குமிக மிக நல்லது, அசிடிடி தொல்லை இருப்பவர்கள் இதை உட்கொள்ள, அசிடிடி, ரிஃபெக்ளெக்ஸ் போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடலாமாம்.

அடங்கொக்கமக்கா! இதை நாங்கள் பழையது என்போம். கோடை விடுமுறையில் இதுதான் எங்கள் ப்ரேக்ஃபாஸ்ட். காலையில் குழந்தைகளுக்கு பழையது போடுவதற்காகவே சாதம் நிறைய வடிப்பார்கள். எங்கள் வீடுகளில் பழையது மேடை என்றே ஒன்று இருக்கும். இப்போ அது ப்ரோ ப்யோடிக் ஃபெர்மென்டெட் ரைசாம்!, அதை காசு கொடுத்து வாங்கணுமாம்.

இதைவிட இன்னொரு கொடுமை, நான் அரிசி களைந்த நீரை(கழுநீர்) வீணாக்காமல் செடிகளுக்கு விடுவேன். இதை கவனித்த என் மருமகள்,  இது கூந்தலுக்கு கூட நல்லது” என்றாள். நான், "கழுநீரால் கூந்தலை அலம்ப முடியுமா என்று தெரியாது, நாங்கள் சாதம் வடித்த கஞ்சியை தலைக்கு தேய்த்துக் கொள்வோம், கூந்தல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்” என்றேன். அதற்கு என் மருமகள், “கஞ்சியெல்லாம் நம்மால் வீட்டில் வடிக்க முடியாது, என்பதால் இப்போது அது ஒரு பேஸ்டாக விற்பனைக்கு வந்திருக்கிறது” என்றாள். சரிதான்!


இன்னும் என்னவெல்லாம் வந்திருக்கின்றன? சமைப்பதற்கு கூட மெஷின் வந்து விட்டதே. என்னதான் மெஷினை வாங்கி வீட்டில் வைத்தாலும் அது பாட்டுக்கு ஒரு ஓரத்தில் இருக்கும், நாம் ஸ்விகியில் வரவழைப்போம். அப்படித்தானே?