கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, March 15, 2024

உள்ளுணர்வு தரும் எச்சரிக்கை

உள்ளுணர்வு தரும் எச்சரிக்கை

சில சமயங்களில் நாம் சில விஷயங்களைத் தொடங்கும் பொழுது நம் உள்ளுணர்வு ‘ஜாக்கிரதை’ என்றோ, ‘வேண்டாம்’ என்றோ எச்சரிக்கை கொடுக்கும். அதை மதிக்க வேண்டும். வெளியே செல்லும் பொழுது குடை எடுத்துக் கொள்ளலாம் என்று உள்ளுணர்வு சொல்லும், மதிக்காமல் சென்றால் மழையில் மாட்டிக் கொள்வோம்.

என் மகளின் வளைகாப்பிற்கு பொன் காப்பு, வெள்ளி காப்பு வாங்க ஜி.ஆர்.டி. சென்றிருந்தோம். அந்த காப்புகளை கையில் வாங்கும் பொழுது, “இதை பத்திரமாக வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்” என்று மனதில் தோன்றியது. “எத்தனையோ முறை நகைகள் வாங்கியிருக்கிறோம், இப்படி தோன்றியதில்லையே?” என்று நினைத்துக் கொண்டேன். பொன் காப்பு,வெள்ளி காப்பு இருந்த சிறிய நகைப்பெட்டியை என் தோள் பைக்குள் வைத்துக் கொண்டு, பையை மாட்டிக் கொண்டேன். பையின் ஜிப்பை திறக்கும் ஹூக், பின் பக்கம் இருந்தது.

அங்கிருந்து வளையல்கள் ஆர்டர் கொடுப்பத்ற்காக ரங்கநாதன் தெரு சென்றோம். அங்கு வளையல்களை செலக்ட் செய்துவிட்டு, மறு நாள் மண்டபத்திற்கு வரச்சொல்லி, அட்வான்ஸ் கொடுக்க வேண்டும். அந்த கடையில் கார்டில் பே பண்ணும் வசதி இல்லாததால், என் கணவர் ஏ.டி.எம்.மிலிருந்து பணம் எடுக்க சென்றார்.

என் சகோதரியிடம் சில சந்தேகங்கள் கேட்க வேண்டியிருந்ததால், சகோதரியை செல்ஃபோனில் அழைத்தேன். கடைக்குள் சிக்னல் சரியாக கிடைக்காததால் வெளியே வந்து அவளோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது நலைந்து பெண்கள் வந்து, கடையின் வாசலில் வைக்கப்பட்டிருந்த ஹேர் கிளிப்புகளை கிளறி, “இது எடுக்கலாம், இது வேண்டாம்..” என்றெல்லாம் சளசளவென்று பேசியபடியே தேடினார்கள். நான் என் சகோதரியோடு ஃபோனில் உரையாடிக்கொண்டே அவர்களை கவனித்தேன். அப்போது என் தோள் பைக்குள் யாரோ கை விட்டு அசைப்பது போல உணர்ந்தேன். “ஏய் யாரது..?” என்று கேட்டபடியே திரும்பியதும், என் பின்னால் நின்று கொண்டு என் தோள் பைக்குள் கையை விட்டு துழாவிக் கொண்டிருந்த ஒரு பெண் கையை எடுத்து விட்டு சட்டென்று நகர்ந்தாள். அவளோடு கிளிப்புகளை பார்த்துக் கொண்டிருந்த பெண்களும் நகர்ந்து விட்டார்கள், அவர்கள் எல்லோரும் ஒரு குழுவாக வந்து, சிலர் ஏதோ வாங்குவது போல பேச்சு கொடுத்து என் கவனத்தை கலைத்திருக்கிறார்கள். நான் செல் ஃபோனில் பேசிக்கொண்டிருந்தது, என் பையின் ஜிப்பின் ஹூக் திறக்க சௌகரியமாக பின் புறம் இருந்தது எல்லாம் அவர்களுக்கு சாதகமாக இருந்திருக்கிறது. ஆனால் அதை முழுமையாக திறக்க முடியவில்லை, மேலும் தோள் பை பெரியதாகவும், நீளமாகவும் இருந்ததால் அவள் கைக்கு எதுவும் சிக்கவில்லை. பொன்காப்பு, வெள்ளிகாப்பு பத்திரமாக இருந்ததை உறுதி செய்து கொண்டதும்தான் நிம்மதியானது. வீட்டிற்கு போய் ஸ்வாமிக்கு முன்னால் வைத்து, நன்றி சொல்லி, நமஸ்கரித்தேன்.

சமீபத்தில்(டிசம்பர் 23) பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட என் ஓர்ப்படியை பார்க்க நானும், என் நாத்தனார் பெண்ணும் ஈரோடு சென்றோம். என் நாத்தனார் மகள் அங்கிருந்து அப்படியே பெங்களூர் திரும்பி விட்டாள். நான் சென்னை சென்று விட்டு திரும்பலாம் என்று அதற்கேற்றார்போல் டிக்கெட் வாங்கியிருந்தேன். ஆனால் மனசுக்குள் சென்னை செல்ல வேண்டாம், பெங்களூரே திரும்பி விடலாம் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. அதை மதிக்காமல் சென்னைக்குச் சென்று, அந்த மழை, வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு, போக நினைத்த இடங்களுக்கு  போக முடியாமல், பார்க்க விரும்பியவர்களை பார்க்க முடியாமல், பெங்களூருக்கு திரும்பும் பொழுது, இறங்கும் அவசரத்தில் என் செல்ஃபோனை தவற விட்டு… இப்படி ஏகப்பட்ட கந்தரகோளங்கள்! இப்போது சொல்லுங்கள் உள்ளுணர்வு தரும் எச்சரிக்கையை மதிக்க வேண்டுமா? வேண்டாமா?

Friday, March 8, 2024

முதல் முதலா..

முதல் முதலா..

என்னுடைய முதல் முதலா அனுபவங்கள் எதுவுமே சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஒரு வேடிக்கையான அனுபவம் இருக்கிறது. 

எங்கள் வீட்டில் என்னுடைய கடைசி அக்கா உபவாசமெல்லாம் இருப்பாள். சங்கடஹர சதுர்த்தியன்று காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல், பட்டினி கிடந்து விட்டு, ராத்திரிதான் சாப்பிடுவாள் எனக்கும், என்னுடைய மூன்றாவது அக்காவுக்கும் பட்டினி கிடக்க முடியாது.”பானு உன்னாலும், என்னாலும் பட்டினியெல்லாம் கிடக்க முடியாது. அப்படிப்பட்ட பூஜையெல்லாம் நமக்கு வேண்டாம்” என்பாள். 

ஷிர்டி பாபா பட்டினி கிடக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். என்று பாபாவை துணைக்கு அழைத்துக் கொள்வேன். எனக்கு பசியே பொறுக்காது. அப்படிப்பட்ட நான் சஷ்டியில் உபவாசம் இருப்பதால் விளையும் நன்மை பற்றி படித்து விட்டு, சஷ்டியில் உபவாசம் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். அப்போது எனக்கு பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதிருக்கும். காலையில் கஞ்சி மட்டும் குடித்தேன். வேறு எதுவும் சாப்பிடவில்லை. வாழ்க்கையில் முதல் முறையாக மதிய உணவு உட்கொள்ளவில்லை. மூன்று மணிக்கு பசிப்பது போல இருந்தது. அதை மற, புத்தியை வேறு எதிலாவது செலுத்து என்று மனதிற்கு ஆணையிட்டேன். நேரம் ஆக ஆக, பசி அதிகரிக்க, புத்தி முழுவதும் பசிதான் இருந்தது. ஏழு மணிக்கு முகம் சுருங்கி, அழுது விடுவேன் போல ஆகி விட்டேன். என் பெரிய அக்கா, “ஏன் என்னவோ போல இருக்கிறாய்?” என்று கேட்டார். “இன்னிக்கு சஷ்டி, விரதம் இருக்கலாம் என்று நினைத்தேன், ஆனால் ரொம்ப பசிக்கிறது” என்று சொல்லும்போதே கிட்டத்தட்ட அழுது விட்டேன். “அட பைத்தியமே! உன்னையெல்லாம் யார் உபவாசம் இருக்கச் சொன்னது? முதலில் சாப்பிடு.” என்றதும், சாப்பிட்டு விட்டேன். அப்பாடா! உயிர் வந்தது. இப்படியாக என்னுடைய முதல் உபவாசம் பாதியில் பணால் ஆனது 

Monday, February 12, 2024

கர்னாடகா யாத்திரை - 2

கர்னாடகா யாத்திரை – 2 

இடகுஞ்சி மஹாகணபதி கோவில் முன்பு


கோகர்ணத்தில் தரிசனத்தை முடித்துக் கொண்டு, அடுத்த இடகுஞ்சி மஹாகனபதி கோவிலை தரிசித்துக் விட்டு முருடேஷ்வர் செல்ல வேண்டும் என்பது ஒரிஜினல் திட்டம். ஆனால், கோகர்ணத்திலிருந்து கிளம்பவே நேரமாகி விட்டதால் நேராக முருடேஷ்வர் சென்று விட்டோம். 

முருடேஷ்வர் கோவில் முகப்பு 




முருடேஷ்வர் கோவில் கோபுரம் இரவில்



முருடேஷ்வர் கோவில் கோபுரம் பகலில்

சக பயணிகள் திருமதி புவனா & திருமதி வசந்தா

பஸ்ஸிலிருந்து க்ளிக்கியது 

முருடேஷ்வர் கோவில் கோகர்ணத்தைப் போல் அவ்வளவு புராதனமானது இல்லை 500 வருட பாரம்பரியம் மட்டுமே உண்டு என்று சிலர் கூறுகிறார்கள், ஆனால் கோகர்ணம் கோவில் தல புராணத்தோடு சம்பந்தப்பட்டிருகிறது.

சிவபெருமானிடமிருந்து பெற்று வந்த ஆத்ம லிங்கத்தை, சிறு பையனாக வந்த விநாயகர் தந்திரமாக கீழே வைத்ததும், அதை பெயர்த்தெடுக்க முயலும் ராவணன் லிங்கத்தின் மேல் இருந்த கவசங்களை கழற்றி வீசி எறிகிறான். அவை விழுந்த இடங்களுள் முருடேஷ்வரும் ஒன்று. சமீப காலத்தில், பெரிய சிவன் சிலை அமைத்த பிறகு, இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக படகு சவாரி, வாட்டர் ஸ்கீய்ங் போன்ற பல விஷயங்கள் இருக்கின்றன. கோவில் பிரும்மாண்டமாகவும், நவீனமாகவும் இருக்கிறது. அதே சமயத்தில் தெய்வீகத்திற்கும் குறைவில்லை. 



நாங்கள் சென்ற பொழுது அர்த்தஜாம பூஜை முடிந்து நடை அடைக்கும் நேரம். அப்போது நடக்கும் சீவேலியை காணும் பாக்கியம் கிடைத்தது. சீவேலி முடிந்து கண்குளிற ஸ்வாமி தரிசனம் செய்து, வெளியே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். ஆனாலும், பெரிய கோபுரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் லிஃப்டில் ஏறி பார்க்க முடியாத குறை பலருக்கு இருந்தது. நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு எதிரில் கடற்கரை. ஆனால் அங்கிருந்து சிவன் சிலையின் பின் புறத்தைதான் பார்க்க முடிந்தது. நேர் தோற்றம் கிடைக்கவில்லையே என்பது என் வருத்தம். 

மறு நாள் அதிகாலையில் இடகுஞ்ஜி விநாயகரை தரிசிக்க கிளம்பினோம். பஸ்ஸை கோவிலுக்கு சற்று தொலைவிலேயே நிறுத்தி விட்டு, நடந்து செல்ல வேண்டும். கோவிலைச் சுற்றியுள்ள இடங்கள் விஸ்தாரமாக இருந்தாலும், பிரதான கோவில் சிறியதுதான். இடம் என்றால் இடது புறம், குஞ்ஜி என்றால் தோட்டம், ஷராவதி நதிக்கு இடது புறம் அமைந்துளதால் இடகுஞ்சி என்று பெயராம். விநாயகரின் தோற்றம் வித்தியாசமாக இருக்கிறது. சாதாரணமாக விநாயகருக்கு நான்கு கரங்கள்(தும்பிக்கையை சேர்த்து ஐந்து) இருக்கும், இங்கு விநாயகருக்கு இரண்டு கரங்கள்தான். இடது கையில் மோதகமும், வலது கையில் தாமரை மலரும் ஏந்தி, நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். வாமன ரூப என்பதற்கு ஏற்ப கால்கள் குட்டையாக இருக்கின்றன. விநாயகர் மிகவும் வரப்பிரசாதியாம். இவரிடம் நாம் எதற்காக வேண்டிக் கொள்கிறோமோ அந்த காரியத்தை கட்டாயம் நிறைவேற்றிக் கொடுப்பாராம், நம் வேண்டுதல் நிறைவேறியதும், அவரை தரிசித்து, ஐந்து ரூபாயோ, பத்து ரூபாயோ காணிக்கை செலுத்தினால் போதுமாம்.

நாங்கள் சென்ற நேரம் காலை அபிஷேகம் துவங்கும் நேரம். எங்கள் குழுவில் எல்லோரும் ஸ்வாமியை தரிசித்துக் கொண்டு வெளியே வந்து விட்டோம். ஒரு தம்பதியினர் மட்டும் வராததால் அவர்களுக்காக காத்திருந்த நேரத்தில் எங்களுக்கும் பால் அபிஷேகம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. மனம் குளிர தரிசித்தோம். 

ஹோட்டலுக்குத் திரும்பி, பகலுணவு முடித்துக் கொண்டு, கடற்கரையில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, கொல்லூர் நோக்கி சென்றோம். 

தல புராணம்: 

துவாபர யுகத்தின் முடிவில் கிருஷ்ணர் இந்த பூவுலகத்தை விட்டு, தன் இருப்பிடத்திற்கு திரும்ப முடிவு செய்திருப்பதை உணர்ந்த முனிவர்கள் கலியுகம் பிறக்கப் போவதை அறிந்து அச்சம் கொள்கிறார்கள். அதன் தீமைகளிலிருந்து விடுபட கிருஷ்ணரின் உதவியை நாடி, வால்கில்ய முனிவர் கர்நாடகாவின் ஷராவதி நதிக்கரையில் குஞ்சவனத்தில் யாகங்கள் செய்யத் தொடங்கினார். ஆனால் அதில் பலவிதமான தடைகள் வரத் தொடங்க நாரதரின் உதவியை நாடுகிறார். அவர் விநாயகரை வழிபடச் சொல்கிறார். வாலகில்ய முனிவரின் வேண்டுகோளை ஏற்று நாரதரும், மற்ற முனிவர்களும் சேர்ந்து தேவதீர்த்தம் என்னும் ஏரியை உருவாக்குகிறார்கள். அவர்கள் விநாயகரை துதித்து, பார்வதியிடம் விநாயகரை அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறார்கள். விநாயகரும் அவர்கள் கோரிக்கையை ஏற்று, அங்கே வர இசைகிறார். அதுவே இடகுஞ்சி ஆகும். அந்த சமயத்தில் மேலும் ஒரு ஏரி உருவாக்கப்பட்டு விநாயக தீர்த்தம் என்று பெயரிடப்படுகிறது. விநாயகர் இன்றும் தன்னை வழிபடுவோரின் இன்னல்களை தீர்த்து வருவது கண்கூடு.

Friday, February 2, 2024

கர்நாடகா யாத்திரை

 கர்நாடகா யாத்திரை

கர்னாடகாவில் இருக்கும் சில முக்கியமான,பிரசித்தி பெற்ற கோவில்களை தரிசிக்க வேண்டும் என்பது பல நாட்கள் ஆசை. ஃபேஸ்புக்கை மேய்ந்த பொழுது, கர்நாடகா யாத்திரை அழைத்துச் செல்வதாக விளம்பரப் படுத்தியிருந்த சில ட்ராவல்ஸ்களில் திருவடி தரிசனம் என்னும் டிராவல்ஸின் அறிவிப்பு என்னைக் கவர்ந்தது. அதில் புக் பண்ணிக் கொண்டேன்.


டிசம்பர் 19 புறப்படுவதாக இருந்தது. டிசம்பரில் சென்னையில் மழை ஏற்படுத்திய பாதிப்பால் அங்கிருந்து வந்தவர்கள்(என்னைத்தவிர எல்லோரும் சென்னைவாசிகள்தான்) பயணத்தை ஒத்திவைக்க கோரிக்கை வைத்ததால், பிரயாணம் ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மற்ற எல்லோரும் சென்னையிருந்து 4ஆம் தேதி மதியம் கிளம்ப, நான் பெங்களூரிலிருந்து பெலகாவி செல்லும் வேறு ஒரு ரயிலில் இரவு புறப்பட்டேன்.  எல்லோரும் ஹூப்ளியில் சந்தித்துக் கொள்வதாக ஏற்பாடு. ஏன் இப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை. சென்னையிலிருந்து கிளம்பும் ரயில் பெங்களூர் வழியாகத்தான் ஹூப்லியை அடையும். அதே ரயிலில் எனக்கும் புக் பண்ணியிருக்கலாம். அவர்கள் ரயிலும் லேட், என்னுடையது அதைவிட லேட். காலை 6:05க்கு ஹூப்ளி செல்லவேண்டிய ரயில் 7:00 மணிக்குத்தான் ஹூப்லியை அடைந்தது. அதற்குள் முன்னால் அங்கு சென்று விட்ட குழுத்தலைவர் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் எனக்கு ஃபோன் செய்து, நான் வந்து விட்டேனா என்று விசாரித்துக் கொண்டிருந்தார். ஒரு வழியாக நான் போய் சேர்ந்ததும், அவருடைய உதவியாளர், என்னிடமிருந்து பெட்டியை பிடுங்கிக் கொண்டு, ஐம்பதடி தூரத்தில் நின்று கொண்டிருந்த பஸ்சுக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றார். இங்கு ஒரு சிறு தகவல். ஹூப்ளி ஸ்டேஷனின் நடை மேடைதான் இந்தியாவிலேயே நீளமான நடை மேடை(1505மீட்டர்). இதற்கு முன் இந்தப் பெருமையை கோரக்பூர் ரயில் நிலைய நடை மேடை பெற்றிருந்தது.


ஹூப்லியில் ஒரு ஹோட்டலில் குளித்து, உடை மாற்றி, சிற்றுண்டி(பூரி மசால், வடை, ஊத்தப்பம் சற்று காரமான சட்னி, காபி/டீ) சாப்பிட்டு விட்டு, கர்னாடகா யாத்திரையின் முதல் தலமான கோகர்ணத்தை அடைந்தோம். வழியில் மதிய உணவிற்காக நிறுத்தினார்கள். அதிலும் சாம்பார் சற்று காரமாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. அங்கு செல்லும்பொழுது மணி பகல் 2:30 இருக்கும். அந்த நேரத்தில் கோவிலின் நடை சாத்தியிருந்தது, மாலை 4:00 மணிக்குத்தான் திறக்கும் என்பதால், நாங்கள் கடற்கரைக்குச் சென்றோம்.


சக பயணி திருமதி வசந்தா




உத்தர(வடக்கு) கர்னாடகாவில் அரபிக் கடற்கரையில் அமைந்திருக்கும் இடம் கோகர்ணம். மிகவும் புராதனமான கோவில். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்கிறார்கள். பாடல் பெற்ற தலங்களில் கர்நாடகாவில் அமைந்திருக்கும் ஒரே ஒரு தலம் இது மட்டுமே. அப்பரும்,சம்பந்தரும் பாடியிருக்கிறார்கள்.


கோவில் இருக்கும் வீதியிலும், கடற்கரைக்குச் செல்லும் வழியிலும் வரிசை கட்டி நிற்கும் கடைகளில் மசாலா பொருள்களும், கலர் கலராக சாம்பிராணியும் குவித்து வைக்கப்பட்டிருந்தன. மஹாபலேஷ்வர் கோவிலுக்குச் செல்வத்ர்கு முன்பாக ஒரு கணபதி கோவில் இருக்கிறது. அதிலிருக்கும் விநாயகர் நாம் சாதாரணமாக பார்க்கும் விநாயகரைப் போல் இல்லாமல் வித்தியாசமாக, நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். அதற்கான காரணத்தை அறிய வேண்டுமென்றால் தல புராணத்தை அறிய வேண்டும்.


நாலு மணிக்குத்தான் நடை திறக்கும் என்றாலும், அதற்கு முன்பே கோவில் திறக்கப்பட்டு விட்டதால், உள்ளே சென்று, வரிசையில் நின்றோம். கேரள பாணியில் அமைந்திருந்த சிறிய கோவில். கேரள கோவில்களைப் போலவே மரத்தில் ஓடுகள் வேயப்பட்ட தாழ்ந்த விதானம். சன்னிதிக்கு எதிரே இரு பக்கங்களிலும் திண்ணைகள். கருவறைக்குள் நாம் சென்றதும் ஆவுடையாருக்கு கீழே புதைந்திருக்கும் மஹாபலேஷ்வர் என்னும் ஆத்மலிங்கத்தை நம்மை தொட்டுப் பார்க்கச் சொல்கிறார்கள். இதுதான் இந்த கோவிலின் சிறப்பு. மற்ற கோவில்களில் கருவறையில் இருக்கும் மூர்த்தங்களை பூஜாரியைத் தவிர மற்றவர்கள் தொட முடியாது. ஆனால் இங்கு எல்லோரும் பூஜிக்கலாம், தொடலாம், தொடுவதற்கு அனுமதிக்கக் காரணம், ஆத்மலிங்கம் அளவில் மிகச்சிறியது. அதை தரிசிப்பது கடினம், தொட்டுதான் உணர வேண்டும்.

ஆதி மஹாபலேஷ்வர் சன்னதி

மஹாபலேஷ்வரை தரிசனம் செய்து விட்டு, கோவிலை வலம் வரும் பொழுது, அருகிலேயே ஆதி மஹாபலேஷ்வர் என்று ஒரு சன்னிதியில் இருக்கும் சிவபெருமானை வணங்கி, நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் தாமிரகௌரி என்றழைக்கப்படும் அம்பாளையும் வணங்கி, அங்கிருந்த ஒரு குளத்தை பார்தோம். அந்த குளத்தின் சிறப்பு, அங்கு இறந்தவர்களின் அஸ்தியை கரைக்கலாமாம். மேலும் இங்கிருக்கும் கடற்கரையில் இரவில் பைசாச ஸ்ரார்தம் என்று ஒன்றும் தேவஸ்தானதால் நடத்தப்படுமாம்.

இதற்குப் பிறகு, அருகில் இருந்த மஹாகணபதி கோவிலுக்குச் சென்று தலையில் கிரீடம் எதுவும் இல்லாமல், நின்ற கோலத்தில் காட்சி தரும் விநாயகரை வணங்கினோம். முறைப்படி வழிபடுவதாக இருந்தால் முதலில் இந்த விநாயகரைததான் முதலில் வணங்க வேண்டும்.


தல புராணம்:


சிவ பக்தையாகிய ராவணனின் தாயார், தன் மகனுக்காக பிரார்த்தித்து ஒரு சிவ லிங்கத்தை வழிபட்டு வந்தார். அவளுடைய கடுமையான பூஜைக்கு இரங்கி, சிவ பெருமான் வரம் தந்து விட்டால் தனக்கு ஆபத்தாகி விடுமோ என்று அஞ்சிய இந்திரன், அவள் பூஜித்த சிவ லிங்கத்தை கடலில் வீசி விடுகிறான். இதனால் மிகுந்த மன வேதனைக்கு உள்ளான தன் தாயாரிடம், தான் கைலாயத்திலிருந்தே சிவலிங்கத்தை பெற்று வருவதாக கூறி கைலாயம் செல்கிறான். கைலாச மலையை அப்படியே பெயர்த்து எடுத்துச் சென்று விட அவன் முயலும் பொழுது சிவபெருமான் தன் கால் கட்டை விரலால் லேசாக அழுத்த, மலைக்கு அடியில் மாட்டிக் கொண்டு நசுங்கி விடுகிறான். ஆனால் அந்த நேரத்திலும் வீணை வித்தகனான அவன் தன் நரம்புகளையே வீணையின் கம்பிகளாக்கி சாம வேதத்தை வாசிக்க, அதில் மயங்கிய சிவ பெருமான் அவன் முன் காட்சி அளித்து, அவன் வேண்டும் வரம் என்ன? என்று கேட்க, தனக்கும், தான் ஆளும் இலங்கைக்கும் அழிவு வரக்கூடாது என்றும், தன் தாயாருக்காக, சிவலிங்கமும் வேண்டுகிறான். சிவபெருமான் தன் பிராணசக்தியையே மிகச் சிறிய வடிவில் ஒரு லிங்கமாக்கி(ஆத்மலிங்கம்), அதை தலையில்தான் சுமந்து செல்ல வேண்டும் என்றும், கீழே வைத்து விட்டால் அந்த இடத்திலிருந்து எடுக்க முடியாது என்னும் இரண்டு நிபந்தனைகளோடு அவனிடம் தருகிறார்.


அவன் அந்த லிங்கத்தை சுமந்து கொண்டு செல்வதைப் பார்த்த தேவர்கள் கவலை கொண்டு மஹாவிஷ்ணுவிடம் சென்று ஆத்மலிங்கம் ராவணனுடன் இலங்கைக்குச் செல்வதை தடுக்க வேண்டுகிறார்கள். ராவணன் திரிகால சந்தியாவந்தனத்தை தவறாமல் செய்பவன் என்பதால், தன்னுடைய சுதர்ஷன சக்கரத்தால் சூரியனை மறைத்து, அதே நேரத்தில் விநாயகரை ஒரு சிறுவன் வடிவில் ராவணன் இருக்கும் இடத்திற்கு செல்லுமாறு பணிக்கிறார். மாலை நேர சந்தியாவந்தனம் செய்ய நேரம் வந்து விட்டது ஆனால் லிங்கத்தை கீழே வைத்து விட்டால் எடுக்க முடியாது, அருகில் யாராவது இருந்தால் அவர்களிடம் கொடுத்து விட்டு, சந்தியாவந்தனம் செய்யலாமே என்று யோசிக்கும் அவன் கண்களில் சிறுவனாக வந்த விநாயகர் படுகிறார். லிங்கத்தை வாங்கிக்கொண்ட விநாயகர், “நான் மூன்று எண்ணுவதற்குள் நீ வந்து விட வேண்டும்,வராவிட்டால் லிங்கத்தை கீழே வைத்து விடுவேன்” என்கிறார். ராவணனும் அந்த நிபந்தனைக்கு கட்டுப்படுகிறான். ஆனால் விநாயகர் அவசர அவசரமாக எண்ணிவிட்டு, ராவணன் வராததால் லிங்கத்தை கீழே வைத்து விடுகிறார். பூமியில் பதிந்து விட்ட லிங்கத்தை ராவணன் எத்தனை பலத்தை பிரயோகித்து முயன்றும் எடுக்க இயலவில்லை. அவனுடைய முயற்சியில் அந்த இடமே பசுவின் காது வடிவிற்கு மாறியதாம். அதனால்தான் அவ்விடம் ‘கோகர்ணம்’ என்னும் பெயர் பெற்றது. கோ என்றால் பசு, கர்ணம் என்றால் காது. மிகப்பெரிய பலம் பொருந்திய லிங்கம் என்பதால் அந்த லிங்கம் மஹாபலேஷ்வர் என்னும் பெயர் பெற்றது.


தன்னை ஏமாற்றிய அந்தச் சிறுவனை துரத்திச் சென்று அவன் தலையில் ஒரு குட்டு வைக்கிறான். விநாயகர் தன் உண்மை ஸ்வரூபத்தை காட்ட, திடுக்கிட்டு அவரை குட்டிய தவறுக்கு பிராயசித்தம் செய்யும் விதமாக தன் தலையில் ரத்தம் வரும் அளவிற்கு குட்டிக் கொள்கிறான். அதனால்தான் இன்று வரை நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கும் வகையில் விநாயகருக்கு முன் தலையில் குட்டிக் கொள்கிறோம்.


கோகர்ணத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு அருகில் இருக்கும் மஹாகணபதி கோவிலில் எழுந்தருளியிருக்கும் விநாயகருக்கு தலையில் கிரீடம் இல்லை. யானகளுக்கு இருப்பது போல நெற்றியில் இரண்டு முண்டுகளுக்கு இடையில் ஒரு பள்ளம் இருக்கிறது. அது ராவணன் குட்டியதால் ஏற்பட்டதாம்.


அம்மனின் பெயர் தாமிரகௌரி. பிரும்மாவின் கையிலிருக்கும் தாமரை மலரிலிருந்து தோன்றிய பெண் சிவபெருமானை மணந்து கொள்ள விரும்பினாள், அதற்காக தவம் செய்து சிவபெருமானை திருமணம் செய்து கொண்டதாக வரலாறு.

Friday, January 26, 2024

கூத்தாடிகள் இல்லை

 கூத்தாடிகள் 

அன்று வெளியில் சென்றுவிட்டு திரும்பிய பொழுது என் சகோதரியின் வீட்டிற்கு அருகில் ஒரு சினிமா ஷூட்டிங் நடப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. கேரவன் ஒன்று, அவுட்டோர் யூனிட் வேன் ஒன்று, காமிராக்கள், ரிஃப்ளெக்டர்கள், ஜீன்ஸ் அணிந்த இளைஞர்கள், சந்தேகமேயில்லை, சினிமா ஷூடிங்தான். என் அக்கா வீட்டு வாசலில் அமர்ந்திருந்த ஒரு இளைஞரிடம், “தமிழ்ப் படமா?” என்றேன். “ஆமாம்” என்றார். “யார் நடிக்கிறார்கள்?” “ஷ்ரத்தா ஸ்ரீ” என்றார்.

“அவங்க வருவாங்களா?”

“வந்துட்டு போய்ட்டாங்க”

எதிரே, ஒருவர் சில முகமூடிகளை தயாரித்துக் கொண்டிருப்பதை பார்த்ததால், “க்ரைம் த்ரில்லரா?” என்று கேட்டதற்கு, “ஆமாம்” என்றார்.

ஓரு காரின் முன்னால் காமிராவை இணைத்து சில காட்சிகளை படமாக்குவதைப் பார்த்தேன். உள்ளே போய் விட்டேன். மாலையில் சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கினார்களாம்.

இரவு ஒன்பது மணிக்கு மேல் என் அக்கா வீட்டு வாசலிலேயே படப்பிடிப்பு நடந்ததால் வேடிக்கைப் பார்த்தோம்.

கதாநாயகியாக நடிக்கும் நடிகை ஒரு சேரில் அமர்ந்திருக்க, அவரோடு ஒரு பெண்(துணை நடிகை?) பேசிக்கொண்டிருந்தார். காமிரா கோணங்களை அமைத்து விட்டு, அவரை அழைத்ததும், எழுந்து சென்றவர் அட! ஷ்ரத்தா ஸ்ரீ! மதியம் அவர் சரியாக சொல்லவில்லையா? நான் சரியாக காதில் வாங்கவில்லையா? படங்களில் தெரிவதை விட ஒல்லியாகத்தான் இருக்கிறார். அதிகம் மேக்கப் இல்லை.

உள்ளே சென்று என் அக்காவை அழைத்து வந்தேன்.

“ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறா”

“யார் அவள்?”

‘விக்ரம் வேதா’வில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தவள், ‘இறுகப்பற்று’வில் விக்ரம் ப்ரபுவிற்கு ஜோடியாக நடித்தாளே..?”

“நான் சினிமாவே பார்ப்பது கிடையாது” என்றாலும் ஷூட்டிங் பார்ப்பதில் என் அக்காவிற்கு எந்த விரோதமும் இல்லை. வாசலுக்கு வந்தாள்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடந்து வரும் பொழுது, அவரைத் தொடர்ந்து வரும் முகமூடியணிந்த இருவர் அவரைப் பற்றி இழுத்துச் செல்வது போல காட்சி.

முதலில் அவர் நடந்து வர, என்ன இப்படி நடக்கிறார்? என்று தோன்றியது. குடித்து விட்டு நடந்து வருவது போல காட்சியோ?, அப்படித்தான் இருக்க வேண்டும், ஏனென்றால், டைரக்டர் அவரிடம் ஏதோ சொல்ல, நடையில் இன்னும் கொஞ்சம் தள்ளாட்டத்தை கூட்டி, ஒரிடத்தில் தடுக்கி விழுவது போல செய்தார். இந்த காட்சியையே ஆறேழு முறை எடுத்திருப்பார்கள்.

பிறகு, அவர் கையில் வைத்திருக்கும் ட்ராஃபியை முகமூடி அணிந்திருக்கும் வேறு ஒருவர், வாங்கிக் கொண்டு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காருக்கு அருகில் செல்ல, ஷ்ரத்தாவை இரு முகமூடிக்காரர்கள் காருக்குள் செலுத்துவது போல காட்சி.

என் சகோதரியின் வீட்டு போர்டிகோவில் ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்கை அணைக்கச் சொன்னார்கள். ட்ராஃபியை வாங்கிக்கொண்டு செல்ல வேண்டிய இளைஞரின் நடை டைரக்டருக்கு திருப்தி தரவில்லை, அவரே செய்து காட்டினார். அதை ஒரு ஆறேழு முறை எடுத்திருப்பார்கள். எங்களுக்கு போர் அடித்ததால் உள்ளே சென்று விட்டோம். இரண்டு காட்சிகளையே இப்படி திரும்பத் திரும்ப எடுக்கிறார்களே, முழு படத்தையும் எத்தனை முறை எடுக்க வேண்டும்? அதுவும் பாடல் காட்சி மற்றும் சண்டைக் காட்சிகளை நினைத்தால் கண்ணைக் கட்டியது. இரவு வெகு நேரம், “காமிரா ரோல், ஆகஷன்..” என்று குரல் கேட்டுக் கொண்டே இருந்தது.

சினிமாவை நாம் வெகு ஈசியாக விமர்சனம் செய்து விடுகிறோம், எத்தனை பேர்கள் உழைக்க வேண்டியிருக்கிறது? நாங்கள் பார்த்த காட்சி புகை மூட்டத்தில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதற்காக ஒரு பெரிய சட்டியை பக்கெட் போல தூக்கிக் கொள்ளும் விதமாக அமைத்து,“ஸ்மோக்” என்று குரல் வந்ததும் அதில் நிறைய புகை வரும்படி சாம்பிராணி போட்டு, முன்னும் பின்னும் ஊஞ்சலாட்டியபடி அந்த தளம் முழுவதும் சுற்றி வருகிறார் ஒருவர். மூன்று காமிராக்கள்,அதன் ஆபரேட்டர்கள், ஒருவர் ஒரு பேடில் என்னவோ எழுதிக் கொண்டே இருந்தார். டச் அப் உமன், என்று நிறைய பேர்கள் இருந்தார்கள். நாங்கள் பார்த்த காட்சி படத்தில் இடம் பெறுமா? இடம் பெற்றாலும் எத்தனை நிமிடங்கள் இருக்கும்? அதற்கு இவ்வளவு உழைப்பு. கூத்தாடிகள் என்று துச்சமாக சொல்லக் கூடாது என்று தோன்றியது.

Monday, January 22, 2024

சங்கப் பலகையில் இடம் பிடித்தேன்

 சங்கப் பலகையில் இடம் பிடித்தேன்


சென்னையில் இருந்தவரை புத்தக கண்காட்சியை தவற விட்டதில்லை. பெங்களூர் சென்ற பிறகு புத்தக கண்காட்சிக்கு செல்ல முடியாத ஏக்கம் வாட்டும். இந்த வருடமும் அந்த வருத்தம் இருந்தது. 

சென்ற வியாழனன்று நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்து விட்டார். பத்தாம் நாள் காரியங்களுக்காக சனிக்கிழமை சென்னை வர வேண்டிய நிர்பந்தம். அந்த வேலைகள் முடிந்து மதியம் வீடு திரும்பினோம். மாலையில், "புக்ஃபேர் போகலாமா?" என்று மகன் கேட்டதும் கிளம்பி விட்டேன். "சனிக்கிழமை மாலை, கும்பல் அதிகமாக இருக்கும்" என்றார்கள். நிஜம்தான். தேர்க்கூட்டம், திருவிழா கூட்டத்தை புத்தகத் திருவிழாவில் பார்த்தது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

என் மகன் நிதானமாக ஒவ்வொரு ஸ்டாலிலும் அலச,  நான் சற்று மேம்போக்காகத்தான் பார்வையிட்டேன். அதிக நேரம் செலவிட்டால், அதிக புத்தகம் வாங்கி விடுவேன் என்று பயம். 

ஒரு  ஸ்டாலில் பார்த்துவிட்டு வெளியே வரும் பொழுதுமணிமேகலை பிரசுரம் ரவி தமிழ்வாணனை சந்தித்தேன். அறிமுகப்படுத்திக் அவரோடு உரையாடிய பொழுது என்னைப் பற்றி விசாரித்தார். நான் இதுவரை நான்கு மின்னூல்கள், குவிகம் மூலமாக ஒரு சிறுகதை திரட்டும் வெளியிட்டிருப்பது கூறியதும், "நீங்கள் ஏன் மணிமேகலை பிரசுரத்திற்காக உங்களுடைய புத்தகம் ஒன்றை தரக்கூடாது?"(பார்ரா) என்று கேட்டு தன்னுடைய பிஸினஸ் கார்டை கொடுத்தார்(பானு.. என்ன நடக்கிறது இங்க?)


அவரிடம் "எங்கள் அப்பாவின் வாழ்க்கையில் ஒரு கடுமையான காலத்தை கடக்க வேண்டியிருந்த பொழுது உங்கள் தந்தை திரு.தமிழ்வாணன் எழுதிய 'துணிவே துணை' என்னும் கட்டுரைகள்தான் மிகப்பெரிய தூண்டுதலாக இருந்ததாம்" என்றதும், "அதனால்தான் நான் என் அப்பாவை எங்கே வைத்திருக்கிறேன் பாருங்கள்" என்று அவருடைய மார்பின் இடது பக்கத்தில் தன் தந்தையின் உருவத்தை(கல்கண்டு லோகோ) பச்சை குத்திக்கொண்டிருந்ததை காண்பித்தார். "என் அப்பாவின் வாசகரின் மகளை சந்தித்ததில் மகிழ்ச்சி" என்று விடை பெற்றார்.

நான் வாங்க நினைத்திருந்த நாராயணீயம் புத்தகத்தை கிரி டிரேடிங்கில் வாங்கிய பிறகு வேறு ஒரு ஸ்டாலில் நம் தோழர் ராய செல்லப்பா அவர்களின் நாராயணீயம் புத்தகம் கண்ணில் பட்டது. "அடடா! இதை வாங்கியிருக்கலாமே என்று தோன்றியது.

அதன் பிறகு சில பல ஸ்டால்களை பார்வையிட்டுவிட்டு  'விருட்சம்'(குவிகம்) ஸ்டாலை அடைந்தேன். அங்கு லா.ச.ரா.வின் புத்தகம் ஒன்றும், சுஜாதாவின் புத்தகம் ஒன்றும் வாங்கினேன். நம்முடைய 'கல்யாண கதைகள்' இருக்காதா? என்று ஒரு நப்பாசை. "வணக்கம்" என்று பின்னால் ஒரு குரல். திரும்பினால், குவிகம் பதிப்பகத்தை சேர்ந்த திரு.கிருபானந்தன்.(அவரோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள தவறி விட்டேன்) "உங்களுடைய புத்தகம் இருக்கிறதே? பார்த்தீர்களா?" என்றார்.  அட! ஆமாம், டிஸ்ப்ளேயில் என் புத்தகத்தையும் கண்டேன்! கண்டேன்! கண்டேன்!

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பானு.. என்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன்."அம்மா பரவாயில்லையே, புக் ஃபேரில் புத்தகங்கள் வாங்குவாய். இந்த வருடம் உன் புத்தகம் இடம் பெற்றிருக்கிறது. Congratulations!" என்று கை குலுக்கினான் மகன். ஆம்,  சங்கப் பலகையில் இடம் பிடித்து விட்டேன்,இல்லையா?

Saturday, January 20, 2024

பெஸ்டோ பாஸ்தா(Pesto Pastha)

பெஸ்டோ  பாஸ்தா(Pesto Pastha)


தேவையான பொருள்கள்:



பாஸ்தா    -  400 கிராம் 

பாலக் கீரை  - 1/2 கட்டு 

கொத்துமல்லி  - 1/4 கட்டு 

பூண்டு  - 7 பல் 

பாதாம்  - 8

முந்திரி பருப்பு - 7

ஆலிவ் ஆயில்  - 2 டேபிள் ஸ்பூன் 

உப்பு  - 2 டீ ஸ்பூன் 

கரம் மசாலா தூள்  - 1 டீ ஸ்பூன் 

சர்க்கரை  - ஒரு சிட்டிகை 

செய்முறை:

ஒரு அகலமான வாணலியில் தண்ணீர் வைத்து, அதில் ஒன்றரை ஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும், தண்ணீர் கொதித்ததும் அதில் பாஸ்தாவை போட்டு வேகவைக்கவும்.

பாஸ்தா வெந்ததும், அதை வடிய வைத்து, குளிர்ந்த நீரில் அலம்பி, சிறிதளவு எண்ணெய் ஊற்றி பிசிறி வைக்கவும். 


சுத்தம் செய்யப்பட்ட பாலக்கீரை,  கொத்துமல்லி, பூண்டு, பாதாம், முந்திரி இவைகளோடு ஆலிவ் எண்ணையையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதில் அரை ஸ்பூன் உப்பை சேர்த்துக் கொள்ளவும். 

பாஸ்தா வேகவைத்த வாணலியிலேயே கொஞ்சம் எண்ணெய்  விட்டு, *சீரகம் சேர்த்து வெடித்ததும், பாஸ்தாவை போட்டு, அதோடு அரைத்து வைத்த கீரை, பூண்டு, பருப்புகள் விழுதையும் சேர்த்து கிளறிவிடவும். அந்த கலவையில் கரம் மசாலா மற்றும் சர்க்கரை ஒரு சிட்டிகையும் சேர்த்து நன்கு கலந்து இரண்டு  அல்லது மூன்று நிமிடங்கள் சின்ன தீயில் வைத்திருந்து இறக்கி விடலாம். 

ஜெயா டி.வி.யில் பார்த்ததை நேற்று முதல் முறையாக செய்தேன். என் மகனுக்கும், மருமகளுக்கும் மிகவும் பிடித்திருந்தது. Quality of pudding is in eating என்பது நிரூபிக்கப்பட்டது. செய்து பாருங்கள் உங்கள் வீட்டிலும் எல்லோருக்கும் பிடிக்கும். டொமேட்டோ கெச்சப்புடன் நன்றாக இருந்தது. 

பெஸ்டோ பாஸ்தா -   பெஸ்டோ என்றால் கீரை, ஆலிவ் ஆயில், மற்றும் பருப்புகள் சேர்த்து செய்யும் சாஸ். இதில் வறுத்த வால்நட் கூட சேர்க்கலாம். அப்போது முந்திரியின் அளவை குறைக்க வேண்டும். பாதம் பருப்பை ஊற வைத்து தோல் உரித்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. 

* அவர்கள் செய்து காட்டியதில் கரம் மசாலா, சர்க்கரை போன்றவை சேர்க்கவில்லை. சப்பென்று இருக்கப் போகிறதே என்று நான் சேர்த்தேன். அதே போல சீரகம் தாளித்ததும் என் விருப்பம்.