கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, May 30, 2023

Mrs Chatterjee vs Norway(திரை விமர்சனம்)

 Mrs Chatterjee vs Norway

(திரை விமர்சனம்)


ராணி முகர்ஜி முக்கிய ரோலில் நடித்து, ஆஷிமா சிப்பெர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம். உண்மை சம்பவங்களை அடிபடையாகக் கொண்ட கதை.

நார்வேயில் வசிக்கும் இந்திய இளம் தம்பதியினர் அனிருத்தோவும், தீபிகாவும். அவர்களுக்கு சுபா என்னும் மகனும், சுசி என்னும் ஐந்து மாத பெண் குழந்தையும் இருக்கின்றன. அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி விஜயம் செய்யும் நார்வீஜிய குழந்தைகள் நல அமைப்பின் உறுப்பினர்கள் திடீரென்று ஒரு நாள் தீபிகா,அனிருத்தாவின் வீட்டில் குழந்தைகள் வளருவதற்கான சரியான சூழல் இல்லை கூறி குழந்தைகளை தூக்கிச் சென்று விடுகின்றனர். அதற்கு காரணமாக அவர்கள் “தீபிகா குழந்தைகளுக்கு கையால் உணவூட்டுகிறாள் அது ஆரோக்கியமான பழக்கம் கிடையாது, அனிருத்தா வீட்டு வேலைகளில் எந்த உதவியும் செய்வது கிடையாது, சுபாவுக்கு ஆடிஸம் பாதிப்பு இருப்பது போலத் தோன்றுகிறது ஆனால் அதை குணப்படுத்த எந்த நடவடிக்கையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை” என்றெல்லாம் குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள். அவர்களுக்காக வாதாடிய இந்திய வக்கீல், முதலில் ஜெயித்தாலும், அவர் இந்தியராக இருப்பதால் இந்த கேஸை உணர்வு பூர்வமாக அணுகுகிறார் என்று ஸ்டே ஆர்டர் வாங்குகிறது குழந்தைகள் நல வாரியம். அதற்குப் பிறகு அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு வக்கீலை அரசாங்கமே நியமிக்கிறது. அந்த சமயத்தில் குழந்தைகள் நல வாரியம் என்ற போர்வையில் இப்படி அப்பாவி தம்பதியரிடமிருந்து குழந்தைகளை பறித்து, குழந்தை இல்லாதவர்களுக்கு விற்று விடுகிறார்கள், அரசாங்கம் நியமிக்கும் வக்கீலும் அதன் கையாள் என்ற விவரங்கள் அவளுக்குத் தெரிய வருகின்றன. ஒரு கட்டத்தில் அவள் கணவனே அவளுக்கு எதிராக திரும்பி விடுகிறான். தீபிகா குழந்தையை மீட்டெடுக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அவளுக்கு வெற்றியை தந்ததா? என்பதே திரைப்படம்.  

தீபிகாவாக ராணி முகர்ஜி. அவரது பூனைக் கண்ணும், கரகர குரலும் எனக்குப் பிடிக்கும். கொஞ்சம் பூசினார்போல் ஆகி விட்டார், அதனால் என்ன? மத்தியத்தர குடும்பத் தலைவி பாத்திரத்திற்கு நன்றாகவே பொருந்துகிறது  அந்த தோற்றம். நடிப்பிலும் குறை வைக்கவில்லை. நீதிபதியிடம் வார்த்தைக்கு ஒரு சார் போட்டு பேசும் இடத்தில் மனதை உருக்குகிறார். அவரது கனவராக அனிர்பன் பட்டாசார்யா, வெளியுறவுத் துறை அமைச்சராக நீனா குப்தா.

கதாநாயகன் பாத்திரம் சற்று வீக்காக இருக்கிறது. கதையில் நந்தினி என்றொரு பாத்திரம், அவள்தான் தீபிகாவிடம் குழந்தை நல வாரியம் என்ற பெயரில் நடக்கும் மோசடியை தெரியப்படுத்துகிறாள், ஆனால் அவள் பெயரைச் சொன்னாலே அநிருத்தோவுக்கு எல்லையில்லா கோபம் வருகிறது. தன் மனைவி அவளோடு பேசக்கூடாது என்று தீவிரமாக தடுக்கிறான். யார் இந்த நந்தினி? அவள் மீது அநிருத்தோவுக்கு ஏன் இத்தனை வன்மம்? என்பதெல்லாம் சரிவர தெளிவு படுத்தப்படவில்லை.

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் ஏதோ புண்ணியம் செய்தவர்கள் என்று ஒரு எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு, வெளிநாட்டு வாழ்க்கையின் கடினமான இன்னொரு பக்கத்தை காட்டியிருக்கும் படம். இப்படி ஒரு கதையை எடுத்துக்கொண்டதோடு அதை சண்டை, நகைச்சுவை போன்ற இடைச்செருகல்கள் இல்லாமல், பெரும்பாலும் வெளிநாட்டில் படமாக்கப் பட்டிருந்தாலும் ஃப்ளாஷ் பேக்கில் கூட ஒரு டூயட்டை சேர்க்காமல் கதையில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கும் இயக்குனரை பாராட்டலாம்.

இந்த ஒரு கேஸ் படமாகி விட்டது. இதைப்போல இன்னும் 150 வழக்குக\ள் நிலுவையில் இருக்கிறதாம். கேட்கவே சங்கடமாக இருக்கிறது.

Saturday, May 20, 2023

ஒடிஷா யாத்திரை – 6

 ஒடிஷா யாத்திரை – 6

கோனார்க், லிங்கராஜ், பிமலாம்பாள் கோவில்கள்  




எங்கள் பயணத்தின் மூன்றாம் நாள், கடைசி நாளும் கூட என்பதால் காலை சிற்றுண்டி சாப்பிட வந்த பொழுதே அறையை காலி செய்து பெட்டிகளை கீழே கொண்டு வந்து விட்டோம். சிற்றுண்டியை சாப்பிட்டு விட்டு எல்லோரும் சொன்னபடி எட்டு மணிக்கெல்லாம் கிளம்பி விட்டோம். அங்கிருந்து கிளம்பி, ஒரு பெட்ரோல் பங்கில் வண்டிக்குத் தேவையான டீசலை நிரப்பிக்கொண்டு ஹைவேயில் விரைந்தது வண்டி. திடீரென்று வண்டியின் அடி பாகத்திலிருந்து ஏதோ சப்தம் வந்தது. டயர் பஞ்சராகியிருக்கும் என்று நினைத்தோம். வண்டியை ஓரம்கட்டி நிறுத்திவிட்டு, டிரைவர் இரங்க, வண்டியிலிருந்த சில ஆண்களும் இறங்கினார்கள். அவர்கள் சொன்ன தகவல் அதிர்ச்சி அளித்தது. டயர் எதுவும் பஞ்சராகவில்லை, டீசல் நிரப்பியிருந்த டீசல் டாங்கை தாங்கி பிடித்திருந்த க்லாம்பின் திருகாணி கழன்று விட்டதால், டீசல் டாங்க் கீழே விழுந்து டீசலை சிந்தியபடியே உருண்டிருக்கிறது. கிட்டத்தட்ட ½கி.மீ. உருண்ட டீசல் டாங்க் தீ பிடிக்காமல் இருந்தது இறையருள்தான். பஸ் கம்பெனிக்கு ஃபோன் பண்ணி வேறு ஒரு பேருந்து வரவழைத்தார்கள். இதில் ஒரு மணி நேரம் வீணானது. வெய்யிலுக்கு முன்னால் கோனார்க் சென்று விடலாம் என்று நினைத்தது நடக்கவில்லை. ஆனால் இங்கும் தலைக்கு குல்லா, செல்ஃபி ஸ்டிக் போன்றவை வாடகைக்கும், விலைக்கும் கிடைக்கின்றன.

 

மெயின் கேட்டிலிருந்து கோனார்க் சூரியன் கோவிலுக்கு செல்லும் வழியில் இரண்டு பக்கங்களிலும் பூங்கா, அழகான சிலைகள்.. ஆனால் அவற்றையெல்லாம் நிதானமாக ரசிக்கவோ, புகைப்படமெடுக்கவோ முடியவில்லை. ஏனென்றால் நல்ல கும்பல், கைடு வந்து விட்டார். எல்லோரும் சேர்ந்து வாருங்கள் என்றார்கள், உள்ளே செல்ல நுழைவு டிக்கெட் உண்டு. அதிலும் இரண்டு பேர் புகைப்படமெடுக்க சற்று நேரம் எடுத்துக் கொண்டதில் எங்களோடு உள்ளே வர முடியாமல் போய் விட்டது. பிறகு எங்கள் குழுவில் ஒருவரை தொடர்பு கொண்டு, டூர் ஆபரேட்டர் போய் அழைத்துக் கொண்டு வந்தார்.

 

சபா மண்டபம் 

சூரியன் கோவிலுக்கு முன்பு ஒரு மண்டபம் இருக்கிறது. அதை சபா மண்டபம் என்கிறார்கள். அந்த காலத்தில் தேவதாசிகள் எனப்பட்ட நடனமாதர்களின் நடனம் இங்குதான் நடைபெறுமாம். அதைத் தாண்டி பிரதானமான சூரியன் கோவில். பன்னிரெண்டு சக்கரங்கள் மற்றும் ஏழு குதிரைகள் பூட்டிய பிரும்மாண்டமான தேர் வடிவ கோவிலின் மத்தியில் உள்ளே சூரிய பகவான் திருவுரு இருக்குமாம். ஆனால் கோவிலுக்குள் நுழையும் வாசல்கள் போர்ச்சுகீசியர்களால் அடைக்கப்பட்டு விட்டதாம். காரணம் இந்தக் கோவில் தஞ்சை பெரிய கோவிலைப் போல  எந்த பூச்சு வேலை இல்லாமல் கற்கள் ஒன்றோடொன்று பொருத்திக் கொள்ளும்படி(inter-locking system) கட்டப்பட்டது. இடையில் இரும்புத் துண்டுகளும், கோபுரத்தின் மேலே 50 டன் எடையுள்ள காந்தமும் பொருத்தப் பட்டிருப்பதால் அந்த காந்தத்தின் ஆகர்ஷணத்தால் கோவில் சிதையாமல் காக்கப்படுகிறதாம். இந்த காந்த சக்தியால் கடலில் சென்ற கப்பல்கள் திசை தவறின. இதனால்தான் போர்ச்சுகீசியர்கள் இந்த கோவிலின் வெளிப்புரத்தை சிதைத்தார்களாம். ஆனால் கருவரைக்கு மேலே இருக்கும் பெரிய 50 டன் காந்தம் அப்புறப்படுத்த பட்டால் கோவில் இடிந்து விடும் என்பதால் அங்கு யாரும் நுழைய்க் கூடாது என்று வாயில்கள் அடைக்கப்பட்டதாம்.

 

கோவில் முழுவதும் கருப்பு நிற கிரானைட் கற்களாலும், சிவப்பு நிற பாறைகளாலும் கட்டப் பட்டிருக்கிறது. கோணம்+அர்க்கன் = கோனார்க் என்று பொருள் கூறுகிறார்கள். அர்க்கன் என்பது சூரியனின் மற்றொரு பெயர். சூரியனுக்கான இந்த கோவில் முழுக்க முழுக்க ஜியானெண்ட்ரி அடிப்படையில் அமைக்கப் பட்டுள்ளதால் இந்த பெயர். சூரியனின் சுழற்சி, அதன் விளைவான நேரம், வாரம், மாதம், அயணம் இவைகளை குறிக்கும் விதமாகத்தான் இங்கு சக்கரங்கள், அதில் இருக்கும் ஆரங்கள் எல்லாம் அமைக்கப்பட்டிருக்கின்றன.



 

தேரின் ஒவ்வொரு பக்கத்திலும் மனித வாழ்க்கை சம்பவங்களை விளக்கும் சிற்பங்கள். ஒரு பக்கத்தில் மனிதனின் வாழ்க்கையில் மூன்று பருவங்களான குழந்தைப் பருவம், இளமைப் பருவம், முதுமைப் பருவ  காலங்களில் அவர்கள் ஈடுபடும் செயல்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டிருக்கின்றன. குழந்தை பருவ விளையாட்டுகளை குறிக்கும் சிற்பங்கள் கீழ் பகுதியிலும், இளமைப் பருவ (காம)கேளிக்கைகள் சிற்பங்கள் நடுப் பகுதியிலும், முதுமைப் பருவ இறை வழிபாடுகளை காட்டும் சிற்பங்கள் மேற் பகுதியிலும் செதுக்கப்பட்டுள்ளன. இவைகளில் இளமைப் பருவ கேளிக்கை சிற்பங்களே சுலபமாக பார்க்கக் கிடைக்கின்றன. இதற்கு அந்த கைட் கூறிய காரணம், கலிங்கப் போரில் நிறைய உயிரிழப்புகள். ஜனத்தொகை மிகவும் குறைந்து விட்டது. மக்களின் உணர்வைத் தூண்டி மக்கள் தொகையை அதிகரிப்பதற்காகவே இந்த சிற்பங்கள் இப்படி அமைக்கப்பட்டிருக்கின்றனவாம்.  

 



இன்னொரு பக்கம் பெண்களின் வாழ்க்கை முறை, அம்மியில் அரைப்பது, உரலில் இடிப்பது, துணி துவைப்பது போன்ற சிற்பங்கள் ஏன் மாமியார் மருமகள் சண்டை கூட சிற்பமாக.

 

கொனார்கிலிருந்து புவனேஷ்வர் செல்லும் வழியில் பிப்பிலி என்னும் கிராமத்தில் ஷாப்பிங் செய்வத்ற்காகவே ஒரு மணி நேரம் நிறுத்துவதாக இருந்தது. அங்கு வரிசையாக கடைகள், எல்லாவற்றிலும் ஒடிஷாவின் கைவினை பொருள்கள். ஆனால் காலையில் டீசல் டாங்க் கீழே விழுந்ததால் ஒரு மணி நேரம் வீணாகி விட்டது. எனவே இங்கு, 15 நிமிடம் மட்டுமே கொடுத்தார்கள். முடிந்த அளவு ஷாப்பிங் செய்து கொண்டோம். வழியில் மதிய உணவை முடித்துக் கொண்டு புவனேஷ்வரில் லிங்கராஜ் கோவிலுக்குச் சென்றோம்.

 

லிங்கராஜ் ஆலயம் 

லிங்கராஜ் கோவில் புவனேஷ்வரில் அமைந்திருக்கும் பழமையான கோவில். இங்கு இருக்கும் சிவலிங்கம் சுயம்பு லிங்கம் எங்கிறார்கள். அது மட்டுமில்லை, சிவனும்,விஷ்ணுவும் சேர்ந்த அம்சம் என்கிறார்கள். பூரியில் பிரசாதம் தயாரிக்க ஏழு பானைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி சமைப்பது போல இங்கு ஐந்து பானைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி சமைப்பார்களாம். அங்கு போலவே இங்கும் மேலே இருக்கும் பானையில் இருக்கும் உணவுதான் முதலில் வேகுமாம். கோவிலில் எக்கச்சக்க கும்பல். ஜெகன்னாதர் கோவிலைப் போலவே இங்கும் கும்பலில் நசுங்கி வெளியே வந்தோம்.



கேதார்நாத்,விமலாம்பாள் கோவில் 



அங்கிருந்து கேதார்நாத் கோவிலுக்குச் சென்றோம். அங்கு குடிகொண்டிருக்கும் அம்மன் விமலாம்பாள், அவர்கள் பிமலாம்பாள் என்கிறார்கள். அது ஒரு சக்தி பீடம். அம்மனின் சுண்டுவிரல் விழுந்த இடமாம். அம்மன் அழகாக சான்நித்தியதோடு விளங்குகிறாள். தரிசனம் செய்து கொண்டோம். வெய்யில், அலைச்சல், லிங்கராஜ் கோவிலின் தள்ளு முள்ளு, எல்லோரும் மிகவும் ஓய்ந்து விட்டோம்.

 

வழியில் ஒரு பாலாஜி கோவில் இருந்தது. தரிசனம் செய்யலாம் என்றால் அங்கு திரை போடப்பட்டிருந்தது. நடை திறக்க காத்திருந்தால் விமான நிலையம் செல்ல நேரமாகிவிடும் என்பதால் கிளம்பி விட்டோம். இரவு உணவை கையில் கொடுத்து விட்டார்கள். விமான நிலையத்தில் ரசகுல்லா வாங்கிக் கொண்டேன். விமானம் ½ மணி நேரம் தாமதம். வீடு செல்ல இரவு 12 மணி ஆகி விட்டது. அக்காவும், அவர் கணவரும் கவலையோடு காத்திருந்தார்கள்.

ஒடிஷா யாத்திரையில் கலந்து கொண்டவர்கள்:


 இந்த குழுவில் பல் டாக்டராக ஹைதராபாத்தில் பணியாற்றும் சேலத்தை சேர்ந்த ஒரு பெண்ணும், பெற்றோர்களோடு வந்திருந்த ஒரு இளைஞனையும் தவிர பெரும்பான்மையோர் 60+, சிலர் 50+. நான் தனியாக செல்லப் போகிறேன் என்றதும் கேட்ட எல்லோரும், “தனியாகவா?” என்றார்கள். ஆனால் அப்படி தனிமையாக உணரவில்லை. இந்த பயணத்திற்குப் பிறகு உறவினர்களோடு செல்வதை விட, இப்படி தெரியாதவர்களோடு செல்வதே மேல் என்று தோன்றியது. யாரும் யாரையும் காக்க வைக்காமல் நேரத்திற்கு ரெடியாகி விட்டோம். எல்லோருக்கும் ஒரு கமிட்மெண்ட் இருந்தது.


இங்கு வந்திருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் அருணாசலம் என்னும் தொழில் முனைவர். நல்ல கலகலப்பாக இருந்தார். அடுத்ததாக திருமதி சுவர்ணா ஜெகன்னாதனும் அவர் கணவர் ஜகன்னாதனும். ஜ்கன்நாதன் பொதுவுடைமை வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணி ஓய்விற்குப் பிறகு நிறைய பயணிக்கிறார்களாம். அதைப் போல கிருத்திகா, சுரேஷ் தம்பதிகளும் நிறைய பயணம் செய்வார்களாம். அதிலும் இந்த யாத்ரிகா டிராவல்ஸ் மூலம்தான் உள் நாடு, வெளி நாடு சுற்றுலாக்கள் செல்வார்களாம். நிர்ப்பவர்களில் நடுவில் நீல நிறத்தில் கட்டம் போட்ட சட்டை  அணிந்தவரும், அவருக்கு அருகில் வெள்ளை நிற டி ஷர்ட் அணிந்தவரும் சகோதரர்கள். ஒருவருக்கு மனைவி இல்லை, இன்னொருவரின் மனைவி வெளியே எங்கேயும் வர மாட்டாராம், எனவே சகோதரர்கள் மட்டும் வந்திருந்தார்கள். மே மாதம் ஆஸ்திரேலியா செல்லப் போகிறார்களாம். ஹைதராபாத்தில் பணிபுரியும் பல் டாக்டர்தான் பேபி ஆஃப் த டீம். அவருடைய தாயாரோடு வந்திருந்தார். சேலத்திலிருந்து வந்திருந்த பவானி என்பவரின் பெண்ணும் இந்தப் பெண்ணும் ஒரே வகுப்பில் படித்தார்களாம். அதைப்போல என்னோடு அறையை பகிர்ந்து கொண்ட பத்மஜா என்பவருக்கு நம் ஆன்சிலாவைத் தெரியும் என்றார்(ஒரே வங்கி). எங்கள் இருவருக்கும் நன்றாக ஜெல் ஆகி விட்டது.

 

அவரவரை அறிமுகபடுத்திக் கொள்ளுங்கள் என்றபோது, நான்,”மத்யமரில் ஆக்டிவ் மெம்பர்” என்றேன், உடனே, சிவகாமி என்பவர், “மத்யமரில் இருக்கிறீர்களா? ராதை சாய்ராமைத் தெரியுமா?” என்றார். நான் உணர்சிவசப்பட்டு, “குஜராத்தில் இருக்கிறாரே, அவர்தானே?” என்றேன், “அது ராதா ஸ்ரீராமாக இருக்கும், இவள் பெங்களூரில் இருக்கிறாள், என் தங்கைதான்” என்றார். “நன்றாக ஓவியங்கள் வரைவாரே, அவர்தானே?” என்றதும் ஆமாம் என்று ஆமோதித்ததோடு என்னோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு தங்கைக்கு அனுப்பினார். அவரிடமிருந்து ராதையின் காண்டாக்ட் நம்பரை வாங்கிக் கொண்ட நான் தற்சமயம் ஃபோனில் பேசிக்கொண்டிருக்கிறேன், விரைவில் நேரில் சந்திப்பேன் என நினைக்கிறேன். சென்னையிலிருந்து வந்திருந்த ஒரு பெண்மணி, அவரது சகோதரி இருவரும் திருச்சி இந்திராகாந்தி கல்லூரியில் படித்தார்களாம். அங்கு பணி புரிந்த என் அத்தை பெண்ணை தெரியும் என்றார்கள். ஒரு நாள் இரவு உணவருந்தும் பொழுது சுரேஷ் என்பவர், மாயவரத்திர்கு அருகில் இருக்கும் பெரம்பூர்தான் எங்கள் பூர்வீகம்” என்றார், “அட! எங்கள் சம்பந்திக்கு அந்த ஊர்தான்” என்றேன். World is small, isn’t?

 

இவ்வளவும் சொல்லிவிட்டு, யாத்ரிகா டூர்ஸ் பற்றி சொல்லாமல் விடலாமா? எல்லா ஏற்பாடுகளையும் நன்றாக செய்து, நல்ல ஹோட்டலில் தங்க வைத்து, அருமையான, வயிற்றை பாதிக்காத சாப்பாடு போட்டு அழைத்துச் சென்ற யாத்ரிகா ட்ராவல்சுக்கு தாராளமாகா ஒரு ஜே போடலாம். சென்னை அண்ணாநகரிலிருந்து இயங்குகிறது இந்த நிறுவனம். இந்த பதிவுகளை தொடர்ந்து வாசித்து கருத்திட்ட அன்பர்களுக்கு நன்றி.  






Tuesday, May 9, 2023

பொன்னியின் செல்வன் -2

 பொன்னியின் செல்வன் -2



ஊர் உலகமே பார்த்து விட்ட பொ.செ.2 ஐ நான் பார்க்காவிட்டால் சாமி குத்தமாகிவிடாதா? அதற்குள் அதைப் பற்றி நெகடிவ் விமர்சனங்கள் வந்து விட்டன, இருந்தாலும் பார்க்க வேண்டும் என்று ஒரு எண்ணம். ரஞ்சனி நாராயணன் அவர்கள்,"நாம் சேர்ந்து போகலாமா?" என்று கேட்டதும் சரி என்று சொல்லி விட்டேன். இத்தனைக்கும் நான் இருப்பது ஒரு இடம், அவர் இருப்பது ஒரு இடம். இரண்டு பேரும் பார்த்துக் கொண்டதும் இல்லை என்பது ஸ்வாரஸ்யம்.  அது இருக்கட்டும், படத்துக்கு வரலாம்.

பொ.செ.1 வந்த பொழுது அது எப்படி இருக்குமோ? என்று சந்தேகம் இருந்தது, ஆனால் படம் பிடித்தது. இரண்டாம் பாகம் நிச்சயம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் எதிர்பார்த்தேன்.. ஹூம்..!

படத்தின் முதல் பகுதியில் என்னை மிகவும் கவர்ந்தவர் கேமிராமேன் ரவிவர்மன். இந்த பகுதியில் அவர் கூட பெரிதாக கவரவில்லை. தோட்டாத்ரணி ஏமாற்றவில்லை. பிரமாதமான செட்டுகள், அருமையான லைட்டிங். விக்ரம் வெளுத்து வாங்கியிருக்கிறார். கதையில் ஆதித்த கரிகாலன் பாத்திரம் ஒரு ஃப்ரீக் என்பது போல படைக்கப்பட்டிருக்கும். ஆனால் படத்தில் அவனை வீரனாகவும், கெட்டிக்காரனாகவும் காட்டியிருக்கிறார். அந்த அளவிற்கு மற்ற கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறதா என்றால், இல்லை என்பது சோகம். கதையில் ஆழ்வார்கடியான் வரும் பகுதிகள் நகைச்சுவையாக இருக்கும். ஆனால் அவன் சாதுர்யம் மிக்கவனாகத்தான் படைக்கப்பட்டிருப்பான். படத்திலோ அவன் கோமாளியாக்கப்பட்டு விட்டான். அவனுடைய பாஸான அனிருத்த பிரும்மராயர் எப்படிப்பட்ட ராஜ தந்திரி! இங்கே இரண்டு காட்சிகளில் வருகிறாரா? வந்தியத் தேவன் டம்மியாக்கப்பட்டு விட்டார். 

மந்தாகினியின் கதா பாத்திரம் மோசமாக சிதைக்கப்பட்டிருக்கிறது. மேக்கப்பை கலைத்த ஐஸ்வர்யாவின் தலையில் நரைத்த முடி விக்கை வைத்து ஒரே ஒரு காட்சியில் இங்கும் அங்கும் ஓடு என்று சொன்னது போல இருக்கிறது. கடைசியில் மதுராந்தகனுக்குப்பதிலாக முடிசூட்டப்பட வேண்டும் என்பதற்காகத்தான் சேந்தன் அமுதன் கதா பாத்திரமே, அப்படி செய்யப் போவதில்லை என்னும் பொழுது எதற்கு அந்தப் பாத்திரம்?  

திரிஷாவிடம் இருக்கும் இயல்பான கம்பீரம் குந்தவையின் பாத்திர படைப்பிற்கு உதவியிருக்கிறது. பார்திபேந்திர பல்லவனாக நடிக்கும் விக்ரம் பிரபு நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா ராயிடம் பேசும் காட்சி, நந்தினியின் மோக வலையில் வீழ்ந்து கிடக்கும் ஒருவன் பேசுவது போல இல்லாமல், அம்மா பிள்ளை பேசுவது போல இருக்கிறது. ஐஸ்வர்யாவை விட அவரது குரல் நன்றாக நடித்திருக்கிறது. பாராட்டுகள் தீபா வெங்கட்!  ஜெயம் ரவியின் தோற்றமும் நடிப்பும் நல்ல கம்பீரம்! 

அகனக பாடலைத் தவிர மற்ற பாடல்கள் படத்தோடு ஒட்டவில்லை. ரவிதாசன்&கோவிற்கு காட்டுவாசி போல ஏன் இப்படி ஒரு ஒப்பனை? குறையையே சொல்ல வேண்டி வருமே என்பதால் விமர்சனமே எழுத வேண்டாம் என்று நினைத்தேன். 

இந்த படத்தால் ஒரு நன்மை என்னவென்றால் இப்போது யூ டியூபில் எக்கச்சக்க சோழர் காலத்தைப் பற்றிய பதிவுகள். 



Monday, May 8, 2023

ஓடிஷா யாத்திரை - 5

 ஓடிஷா யாத்திரை - 5

ஸிலிகா ஏரி, பூரி சங்கர மடம், ப்ளூ ஃப்ளாக் பீச்:

சிலிகா பீச்சில் என்னோடு அறையை பகிர்ந்து கொண்டவர்

ஒரு வழியாக ஹோட்டல் அறைக்கு வந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு சாப்பிடச் சென்றோம். சூப் தொடங்கி, ஐஸ் க்ரீம் வரையான சுவையான உணவு. என் அறைத் தோழி “கோவில் இரவு 11 வரை திறந்திருக்குமாம், மீண்டும் ஒரு முறை செல்லலாமா?” என்றார். எனக்கு தூங்கினால் போதும் என்றிருந்தது.

மறுநாள் காலை 7:30க்கு ப்ரேக்ஃபாஸ்ட் ரெடியாகிவிடும். ரெஸ்டாரெண்ட் வந்து விடுங்கள் என்றதால், குளித்து ரெடியாகி கீழே வந்தோம். ப்ரெட், பட்டர், ஜாம், சாண்ட்விச், கார்ன் ஃப்லெக்ஸ், சாக்கோ ஃப்லெக்ஸ், இட்லி, வடை, சட்னி, சாம்பார், ஆலு பரோடா, வாழைப்பழம், தர்பூசணி துண்டுகள். ஆரஞ்சு மற்றும் திராட்சை பழச்சாருகள், வேகவைத்த முட்டை, காபி, டீ என்று ப்ஃபே முறையில் ராஜபோக காலை உணவு. அதை முடித்துக் கொண்டு சிலிகா ஏரிக்கு கிளம்பினோம்.



சிலிகா ஏரி 1,100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய ஏரி. அங்கு படகு சவாரி செய்யும் பொழுது  வித்தியாசமான பறவைகளை பார்க்கலாம். அதிர்ஷ்டம் இருந்தால் டால்ஃபின்களும் கண்ணில் படலாம் என்றார்கள். போகும் வழி எங்கும் மா, பலா,வாழை தோப்புகள், அதிகமாக பலா மரங்கள் அதிகம் கண்ணில் பட்டதால் தஞ்சை, மாயவரம், கும்பகோணம் பகுதியில் பயணம் செய்கிறோமொ என்று தோன்றியது. பூரியிலிருந்து சிலிகா ஏரி 70கி.மீ. தொலைவில் இருக்கிரது, பயண நேரம் கிட்டத்தட்ட 11/2 மணி நேரம். அந்த நேரத்தில் எல்லோரையும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொன்னார். எல்லோரும் தங்களைப் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்டோம்.

சிலிகா எரியை அடைந்த பொழுது, அங்கிருக்கும் கடைகளில் பறவைகளுக்கு போடுவதற்கு உணவு  சிறிய பாக்கெட்டுகளில் விற்கிறார்கள். அதைத் தவிர படகில் செல்லும் பொழுது அணிந்து கொள்ள தொப்பி வாடகைக்கு கிடைக்கிறது. தொப்பி இல்லாதவர்கள் வாடகைக்கு எடுத்துக் கொண்டார்கள். எங்கள் குழுவினருக்கு மொத்தம் மூன்று படகுகள் தேவையாக இருந்தது. படகில் சென்ற பொழுது பறவைகளுக்கான உணவை நீரில் போட்டதும், அவற்றை சாப்பிட பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து பரவசமூட்டின. டால்ஃபின் எதுவும் எங்கள் கண்களில் படவில்லை.

அங்கிருந்து அந்த ஏரி வங்காள விரிகுடாவில் கலக்கும் முகத்துவாரத்திற்கு அருகில் படகை நிறுத்திய அந்த படகோட்டி ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வந்தான். சிப்பிகள் நிறைந்திருந்த அந்த பாத்திரத்திலிருந்து சிப்பிகளை எடுத்து தட்டி தட்டி உடைத்தான். சில சிப்பிகளுக்குள் முத்து இருப்பது தெரிந்தது. சில முத்துக்கள் வெண்மை நிறத்திலும், சில சிப்பிகளுக்குள் கருப்பு நிற முத்துக்களும் இருந்தன. வெண்மை நிற முத்துக்கள், ரூ.ஐநூறும், கருப்பு நிற முத்துக்கள் ரூ.ஆயிரமும் சொன்னான். நாங்களும் வாங்கினோம். முத்துக்கள் விற்பனையானபின் மண் கட்டி போல ஒன்றை(பவளப்பாறை?) கொண்டு வந்து அதை உடைத்து பவளங்களும், பளபளவென்று கற்களும்(அதை நவரத்தினம் என்றான்) எடுத்தான். அவைகளும் முறையே ரூ.ஆயிரதிற்கும், அயிரத்து ஐநூறுக்கும் விற்க்கப்பட்டன.

அங்கிருந்து அந்த ஏரி கடலில் கலக்கும் முகத்துவாரத்தை பார்க்கச் சென்றோம். நல்ல வெய்யிலில் கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ மீட்டர் மணலில் நடந்து சென்றோம். கடற்கரைக்குச் சென்றோமே தவிர முகத்துவாரம் எது என்று தெரியவில்லை.

பூரி சங்கர மடம் முகப்புத் தோற்றம்

பூரி சங்கர மடத்தில் இருக்கும் பழமையான கிணறு


ஆதி சங்கரர் உறங்கியதாக கூறப்படும் சலவைக்கல் படுக்கை

ஹோட்டலுக்கு திரும்பி, உணவு உண்டு விட்டு, கொஞ்சம் ஒய்வெடுத்துக் கொண்டு மாலை பூரி சங்கர மடம் சென்றோம். சங்கர மடம் என்பது அஜென்டாவில் இல்லாததால் விரும்பியவர்கள் தனித்தனி குழுவாக சென்றோம். செல்லும் வழியில் பூரியின் கடற்கரையைத் தாண்டித்தான் செல்ல வேண்டியிருந்தது. அது பப்ளிக் பீச். எங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டது ப்ளு ஃப்ளாக் பீச் என்ற தனியார் பீச். அதை பார்த்து விட்டு புடவை ஷாப்பிங்க் என்று நினைத்துக் கொண்டிருந்தோம்.


நாங்கள் சங்கர மடத்திற்கு ஒரு ஷேர் ஆட்டோவில் சென்று விட்டோம். அந்த தெரு குறுகலாக இருந்ததால் ஆட்டோ நிற்க முடியாது என்பதால் அனுப்பி விட்டோம். திரும்பும் பொழுது ஆட்டோ கிடைக்காமல் நடக்கத் தொடங்கினோம். எதிரே வந்த சில ஆட்டோக்களை நிறுத்தி, சந்திரபாகா பீச் போக வேண்டும் என்றதும், எல்லோரும் தலை தெறிக்க ஓடி விட்டார்கள். சந்திரபாகா பீச் என்பது பூரியிலிருந்து புவனேஷ்வர் செல்லும் வழியில் இருக்கிறது. மயிலாப்பூரிலிருந்து மெரீனா பீச் போக வேண்டும் என்பதற்கு பதிலாக கோவளம் பீச் போக வேண்டும் என்றால் எந்த ஆட்டோக்காரர் வருவார்?

தப்பாக சொல்கிறோமோ என்ற சந்தேகத்தில் எங்கள் ஐடனரியை செக் பண்ணிய ஒரு பெண் ப்ளூ ஃப்ளாக் பீச் என்று கூற அதன்பின் ஆட்டோ கிடைத்து ப்ளூ ஃப்ளாக் பீச் சென்றோம். அங்கு குளிக்க, நீந்த ஐம்பது ரூபாய் கட்டணம், இல்லாவிட்டால் இருபது ரூபாய் கட்டணம். நாங்கள் இருபது ரூபாய் டிக்கெட் எடுத்துக்கொண்டு சென்றோம். இந்தியாவின் சுத்தமான கடற்கரைகளுள் இதுவும் ஒன்றாம். கோல்டன் பீச் என்றழைக்கப்படும் இந்த கடற்கரை இந்தியாவின் பெருமைக்குரிய ப்ளூ ஃபளாக் சர்டிஃபிகேட் பெற்ற எட்டு கடற்கரைகளில் ஒன்றாம். நாங்கள் சென்றபொழுது இருட்டி விட்டது. கடல் உள்வாங்கியிருபது போல் தோன்றியது. கடலுக்குள் அதிக தூரம் செல்ல வேண்டாம் என்று அங்கிருந்த பணியாளர்கள் எச்சரித்தனர். சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு ஹோட்டலுக்குத் திரும்பினோம்.


சாப்பிடும் பொழுது, “நாளை காலை அறையை காலி செய்து கொண்டு சீக்கிரம் கீழே வந்து விடுங்கள். ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டு விட்டு இங்கிருந்து எட்டு மணிக்குள் கிளம்பினால்தான் வெய்யிலுக்கு முன் கொனார்க் செல்ல முடியும்” என்றார் கைட். அதைப்போலவே எல்லோரும் சீக்கிரம் ரெடியாகி காலை உணவை முடித்துக் கொண்டு, டாணென்று எட்டு மணிக்கெல்லாம் ரெடியாகி விட்டோம். ஆனாலும் எங்களால் வெய்யிலுக்கு முன்னால் கோனார்க் செல்ல முடியவில்லை. ஏன் தெரியுமா?

-தொடரும்

Wednesday, May 3, 2023

பூரி ஜகன்னாதர் தல வரலாறு

 பூரி ஜகன்னாதர் தல வரலாறு

 

சத்ய யுகத்தில் அவந்தி நகரத்தை ஆண்டு வந்த ஒரு அரசன் இந்திரத்துய்ம்னன். மஹாவிஷ்ணுவின் பக்தனான அவர் மஹாவிஷ்ணுவின் மூர்த்தம் ஒன்றை பிரதிஷ்டை செய்ய விரும்பினார். அந்த சமயத்தில் நீலகிரியில் மஹாவிஷ்ணுவின் நீலமாதவ விக்ரகம் பூஜிக்கப்பட்டு வந்தது என்பதை கேள்விப்பட்ட இந்திரதுய்ம்னன் அந்தச் சிலையை தேடி நாலா திசைகளிலும் ஆட்களை அனுப்புகிறார். எல்லோரும் வெறும் கையோடு திரும்புகிறார்கள்.


வித்யாபதி என்பவர் தேடிக் கொண்டே விஷ்வாவசி என்பவரின் வீட்டை அடைகிறார். அங்கு அவர் மகள் லலிதாவின் அழகால் கவரப்பட்டு அங்கேயே சில நாட்கள் தங்குகிறார். அங்கு விஷ்வாவசியின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி அவர் பூஜிக்கும் நீலமாதவன் விக்கிரகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அவர் தன் நாட்டிற்குச் சென்று இந்திரதுய்ம்னனிடம் நீலமாதவன் விக்கிரகம் இருக்குமிடத்தை கூறுகிறார். உடனே இந்திரத்துய்ம்னன் நீல மாதவ விக்கிரகத்தை அடையும்பொருட்டு படை திரட்டிக் கொண்டு அவ்விடத்திற்கு வருகிறார், ஆனால் நீல மாதவன் விக்கிரகம் அங்கில்லை, அப்போது அவருக்கு, “பாங்கி நதிக்கருகில் உங்களுக்கு ஒரு மரக்கட்டை கிடைக்கும் அதை வைத்துக்கொண்டு விக்கிரகத்தை படைக்கவும்” என்று ஒரு அஸரீரி கேட்கிறது.

 

அதன்படியே அவருக்கு ஒரு மரக்கட்டை கிடைக்கிறது. அதைக்கொண்டு பலராமர், கிருஷ்ணர், சுபத்திரா தேவியின் மூர்த்தங்களை வடிவமைக்க சிற்பிகளை அழைக்கிறார். பலரும் மறுத்துவிட வயதில் மூத்த ஒரு சிற்பி தான் இருபத்தோரு நாட்களுக்குள் சிலைகளை வடித்துத் தருவதாக ஒப்புக்கொள்கிறார். அனால், தான் தனியாக ஒரு அறைக்குள் அமர்ந்து கொண்டு சிலைகளை வடிப்பதகவும், இருபத்தோரு நாட்களுக்குப் பிறகுதான் கதவை திறக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார். அரசனும் அதற்க்கு ஒப்புக்கொண்டு அவரை மரக்கட்டையோடு ஒரு தனியறைக்குள் அனுப்புகிறான்.

 

நாட்கள் செல்லுகின்றன. அறைக்குள் வேலை நடக்கும் அறிகுறி எதுவும் தென்படவில்லை. இது அரசிக்கு சந்தேகத்தை கிளப்ப, அவள் தூண்டுதலின்படி அரசன் ஒரு நாள் திடீரென்று அறைக்கதவை திறக்கிறான், உள்ளே சிற்பி யாரும் இல்லை, முழுவதும் முற்றுப் பெறாத பலராமர், கிருஷ்ணர்,சுபத்திரா தேவியின் சிலைகள் மட்டுமே இருக்கின்றன. அரசன் திகைத்து நிற்கும் பொழுது, அந்த சிலைகளையே பிரதிஷ்டை செய்யும்படி அவருக்கு தெய்வ வாக்கு கிடைக்கிறது. அத்ற்குட்பட்டு ஒரு கோவிலை நிர்மாணித்து, அந்த சிலைகளை பிரதிஷ்டை செய்கிறார்.

 

ஆனால், புராண கதையில் குறிப்பிட பட்டிருக்கும் கோவில் அல்ல தற்போது இருப்பது. கி.பி.1200ல் அந்தப் பகுதியை ஆண்ட அனந்தவர்மன் என்னும் அரசர் இந்தக் கோவிலை நிர்மாணிக்கும் பணியை துவங்கியிருகிறார். அது அவருடைய பேரன் மஹாமனா நரபதி அனங்க பீம்தேவ் காலத்தில் முடிவடைந்ததாம். கங்கை முதல் கோதாவரி வரையுள்ள சாம்ராஜியத்தின் வரியை இதற்காக செலவழித்ததாக கூறப்படுகிறது.

 

மரத்தாலான இந்த விக்கிரகங்கள் பழுதடைந்தால் அதை மாற்றுவதை ஜெகன்னாத பகவானின் புதிய தோற்றம் என்கிறார்கள். எந்த வருடத்தில் ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருகிறதோ அந்த வருடம் சித்திரை மாத பௌர்ணமி அன்று வாசேலி தேவியிடம் புதிய விக்கிரகம் அமைக்க உத்தரவு கிடைக்க வணங்குகிறார்கள். புதிய விக்கிரக அமைப்பிற்காக எங்கே வேப்ப மரம் கிடைக்கும் என்று தெரிந்து கொள்வதற்காக மங்கலா மா என்னும் தேவியை வணங்குகிறார்கள். கனவில் தேவியின் கட்டளை கிடைக்கிறது. பிறகு கோவிலைச் சார்ந்தவர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து மரத்தை தேடி புறப்படுகிறார்கள்.

 

பலராமர் விக்கிரகம் செய்ய்ப்படும் வேப்ப மரம் வெண்மையாக இருக்க வேண்டும் என்பது நியதி. அந்த மரத்தில் சங்கு சின்னம் இருக்குமாம். ஐந்து கிளைகளை கொண்ட மரமாக இருக்குமாம்.

 

கிருஷ்ணர் விக்கிரகம் செய்யப் பயன்படும் கிளையில் சக்கரம் சின்னம் இருக்கும் என்றும், அதில் ஏழு கிளைகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.       

 

ஸ்ரீரெங்கம் போலவும், மதுரை மீனாட்சி போலவும் இங்கும் வருடம் முழுவதும் உற்சவங்கள் கொண்டாடப்படுவதோடு, ஜெகன்னாதருக்கு விதம் விதமான அலங்காரங்களும் செய்யப்படுகின்றன.

 

அங்கிருக்கும் அத்தனை சன்னதிகளுக்கும் செல்ல முடியவில்லை. தரிசனத்தை முடித்துக் கொண்டு திரும்பினோம். வழியெங்கும் பிரசாத கடைகள். திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம் போல அந்த ஊரின் சிறப்பு பிரசாதம் காஜா எனப்படும் இனிப்பு. தெருவின் இரண்டு பக்கங்களிலும் கடைகளில் அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருக்கும் காஜா. அதைத்தவிர பெரிய உருளிகளில் கொதிதுக் கொண்டிருக்கும் ரச மலாய் மற்றும் ரசகுல்லா கடைகள். ரஸ்குல்லாவின் பிறப்பிடம் ஒடிஷாதனாம். இங்கிருந்துதான் கொல்கத்தா சென்றிருக்கிறதாம்.

 

கும்பலில் நசுங்கியதோடு, நடை வேறு.. எல்லோருக்கும் டீ குடித்தால் தேவலை என்றிருந்தது. தெருவோர கடையில் சர் சர்ரென்று ஆத்தி கொடுத்துக் கொண்டிருந்தார். அவரிடமே குடித்திருக்கலாம். ஒரு சின்ன ஜூஸ் கடையில் நுழைந்து காபி, டீ கிடைக்குமா? என்று கேட்டதற்கு அங்கிருந்த பெண் இல்லை என்று கூறி விட்டாள். நகர்ந்திருக்கலாம், முதலாளி போன்ற இளைஞன், “கொஞ்சம் வெய்ட் பண்ணுங்கள்” என்றதும், எங்களோடு வந்த ஒருவர் “இருபது டீ” என்று ஆர்டர் கொடுத்து எல்லோரையும் நிற்கச் சொன்னார். நாங்களும் நின்றோம், நின்றோம்.. உள்ளே நான்கு பேர்கள்தான் உட்கார முடியும். நேரம் ஓடிக் கொண்டிருந்தது. என்ன செய்கிறாள்? இதோ பால் டப்பாவை எடுத்து விட்டாள்.. ஐயையோ பால் பவுடர் டீயா? என்ற மைண்ட் வாய்ஸை அடக்கினேன். சும்மா நிற்கிறோமே என்று சாண்ட்விச்சும், ஃபிங்கர் சிப்சும் ஆர்டர் கொடுத்தார். சிலர் பக்கத்து கடையில் ரசமலாய் வாங்கி சாப்பிட்டார்கள். கடைசியில் டீ என்று ஒன்று வந்தது. அதில் சர்க்கரை இருந்தது, பால் இருந்தது, குங்குமப்பூ கூட போட்டிருந்தார்களாம். டீத்தூள்..?? அதை மட்டும் போட மறந்து விட்டார்கள்.

 

டீ குடித்துவிட்டு வாங்கித் தந்தவருக்கு ஒரு நன்றியை கூறிவிட்டு நாங்கள் நகர்ந்து விட்டோம். ஆர்டர் கொடுத்தவர் ஆயிரம் ரூபாயைக் கடைக்காரரிடம் கொடுத்து விட்டு, மிச்சம் கொடுக்கப் போகிறார் என்று எதிபார்த்திருக்க, அவன், “நீங்கள் இன்னும் இரண்டாயிரம் ரூபாய் தர வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார், ஏன் என்று கேட்டதற்கு, “ அந்த டீயில் குங்குமப்பூ போட்டிருக்கிறதே” என்றானாம். அவர் தொழிலதிபராக இருந்ததாலோ என்னவோ கேட்ட தொகையை கொடுத்து விட்டு வந்திருக்கிறார்.

- தொடரும்

Monday, May 1, 2023

ஆம் பன்னா

 ஆம் பன்னா

டில்லி, உ.பி. ஸ்பெஷலான மாங்காய் சர்பத். செய்முறை பார்க்கலாமா?

புளிப்பு மாங்காய் - 1

புதினா இலைகள் - சிறிதளவு.

சர்க்கரை அல்லது

வெல்ல சர்க்கரை - 1/2 கப்

உப்பு - 1 டீ ஸ்பூன்

சீரகம் - 1 டீ ஸ்பூன் 



*மாங்காயை அடுப்பில் சுட்டுக் கொள்ளவும். 

சுட்ட மாங்காயில் தோலை உரித்து விட்டு செதில் செதிலாக சீவிக் கொள்ளவும். 

பின்னர் அதில் சர்க்கரை, உப்பு, புதினா இலைகள் சேர்த்து மிக்ஸியில் கூழாக அரைத்துக் கொள்ளவும். 

அந்த கூழை ஒரு பாத்திரத்தில் ஊற்றி விட்டு அதில் வறுத்து பொடி செய்த சீரகப் பொடியை போட்டு கலந்து ஃபிரிட்ஜில் வைத்து விடவும்.

தேவையான பொழுது 1/4 டம்பளருக்கும் குறைவாக மாங்காய் கூழோடு குளிர்ந்த நீர் சேர்த்து கலந்தால் சுவையான ஆம் பன்னா வை அருந்தலாம்.



*சுட்ட வாசனை பிடிக்காதவர்கள் மாங்காயின் தோலை சீவி, செதில் செதிலாக நறுக்கி வேகவைத்து அரைத்துக் கொள்ளலாம்.





Tuesday, April 25, 2023

ஓடிஷா யாத்திரை - 3 பூரி ஜகன்னாதர்

ஓடிஷா யாத்திரை - 3

பூரி ஜகன்னாதர்



இந்துக்களுக்கு மிகவும் முக்கியமான கோவில்களில் பூரி ஜெகன்னாதர் ஆலயமும் ஒன்று. மஹாவிஷ்ணு வடக்கே பத்ரியில் பத்ரிநாராயணராகவும், தெற்கே ராமேஸ்வரத்தில் ஈஸ்வரனை வழிபடும் ராமனாகவும், மேற்கே துவாரகையில் கண்ணனாகவும், கிழக்கே பூரியில் ஜெகன்னாதராகவும் எழுந்தருளியிருக்கிறார். இந்த நான்கு தலங்களும் சார்தாம்(புண்ணிய தலங்கள்) என்று அழைக்கப்படுவதோடு ஹிந்துக்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய கோவில்கள் என்றும் கருதப்படுகின்றன. இப்போது ஊடகங்களில் இதைப் பற்றியெல்லாம் நிரைய வருவதாலோ என்னவோ எப்போதும் கும்பல் அதிகம் இருக்கிறதாம்.

 

நாங்கள் சென்றபோதும் நல்ல கும்பல் இருந்தது. ஆனால் இது குறைச்சல் என்றார் கைட். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து கோவிலுக்கு ஷேர் ஆட்டோவில் சென்றோம். ஒரு ஆட்டோவில் எட்டு பேர் பயணிக்கலாம். கோவில் வரை ஆட்டோவை அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் சற்று தொலைவிலேயே இறக்கி விட்டு விட்டார்கள். நடக்கத் தொடங்கினோம். கோவிலுக்குள் செல்ஃபோன், காமிரா, தோலால் செய்யப்பட்ட பெல்ட், பர்ஸ் போன்றவைகளை அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் ஹோட்டல் அறையிலேயே வைத்துவிடச் சொன்னார்கள். என்னுடைய பர்ஸ் ரெக்சின்தான், இருந்தாலும் அறையில் வைத்து விட்டு தேவையான பணத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் எடுத்துக் கொண்டேன். முன்பே தெரிந்திருந்தால் வீட்டிலிருந்து ஒரு துணி பர்ஸ் அல்லது சுருக்குப்பை கொண்டு சென்றிருக்கலாம்.  செல்ஃபோன் கண்டிப்பாக வேண்டும் என்றால் கோவிலில் லாக்கர்கள் இருக்கும், வைக்கலாம் என்றார்கள். ஆனால் நமக்காக மற்றவர்கள் காத்திருக்க வேண்டும், எனவே அறையில் வைப்பதே உத்தமம் என்று எல்லோரும் அறையிலேயே வைத்துவிட்டோம்.

 

கோவிலை நெருங்கும் சமயம் கோவில் நடைமுறைகள் தெரிந்த ஒருவரை அறிமுகம் செய்து வைத்து அவர் சொல்வதை கேட்டு நடக்கச் சொன்னார் அந்த ஊர் கைட். அவருக்கு ஹிந்திதான் மாலும். அவரிடம் “ஹிந்தி தெரியாது போடா” என்றா சொல்ல முடியும்? நல்ல வேளை எங்கள் குழுவில் ஹிந்தி தெரிந்த ஒருவர் அவர் சொன்னதை எங்களுக்கு தமிழில் மொழி பெயர்த்தார்.

 


அவர் சொன்ன விவரங்கள்: “கோவிலுக்குள் செல்வதற்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது. யாராவது உங்களை சுவாமியிடம் அழைத்துச் செல்கிறேன், காசு கொடுங்கள், என்று கேட்டாலோ, அன்னதானம் செய்யுங்கள் என்று காசு கேட்டாலோ கொடுக்க வேண்டாம்.  ஏதாவது காணிக்கை தர வேண்டும் என்று நினைத்தால் உண்டியலில் போடுங்கள் அல்லது அன்னதானம் செய்வதற்கான கவுண்டரில் பணம் கட்டுங்கள். பூரியில் அன்னதானம் செய்வது சிறப்பு. எல்லோரும் சேர்ந்து வாருங்கள். என்று கூறி விட்டு எங்களில் உயரமாக இருந்த ஜெகன்நாதன் என்பவரை முன்னால் போகச்சொன்னார். அவர் ஒரு துண்டை தலைக்கு மேல் சுழற்றியபடி செல்ல, அந்த ஜெகன்நாதரை தரிசிக்க இந்த ஜெகன்நாதனை பின்தொடர்ந்தோம். நாங்கள் சென்றது பின்வாசல் வழியாக.

 


பூரி ஜெகன்நாதர் ஆலயத்திற்குள் மொத்தம் பன்னிரெண்டு சன்னதிகள் இருக்கிறதாம். அவைகளை எல்லாம் நாங்கள் பார்க்கவில்லை. நேராக ஜெகன்நாதர் சன்னதி மட்டுமே. நாங்கள் சென்ற நேரம் அந்த ஆலய பிரதான கோபுரத்தின் மேலே பறந்து கொண்டிருந்த சிவப்பு நிறக் கொடியை இறக்கி விட்டு, மஞ்சள் நிறக் கொடியை ஏற்றும் நேரம். பிரகாரம் முழுவதும் பக்தர்கள் சுற்றி நின்று கொண்டு, பக்தியோடு கோஷமிட்டபடி அதை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த கோபுரத்தின் உச்சியில் இருந்து தொங்கிக் கொண்டிருக்கும் சங்கிலியின் வளையத்தில் கால் வைத்து ஏறுகிறார். அந்த கொடிகள் காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும் என்பது பூரியின் ஒரு அதிசயம். தஞ்சை பெரிய கோவிலைப் போல இந்தக் கோவிலின் நிழலும் தரையில் விழாது, இந்த கோபுரத்தின் மேலே கருடன் பறக்காது என்பதெல்லாம் மற்ற சிறப்புகள். இங்கே பிரசாதத்தை பானையில்தான் சமைப்பார்களாம். அதுவும் ஏழு பானைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி சமைப்பார்களாம். அதில் மேல் பானையில் இருக்கும் அரிசி முதலில் வெந்து விடுமாம், பிறகு அதற்கு அடுத்த பானை, என்று வரிசையாக இறங்கு முகத்தில் வந்து, கடைசியில் கீழே இருக்கும் பானையில் இருக்கும் அரிசி வேகுமாம்.

 

முதலில் நான்கு வரிசைகளாக அனுப்பப்படும் பக்தர்கள் பிரதான வாயிலுக்கருகே செல்லும் பொழுது ஒன்றாக சங்கமித்து விடுகிறார்கள். பிரும்மாண்டமான வாயில். இருபுறமும் ஒவியமாக வரையப்பட்டிருக்கும் ஜெய, விஜயீபவர்களின் மீது வெண்ணையை விட்டெரிந்து, அந்த ஓவியத்தின் அழகை சிதைத்திருக்கிரார்கள் மக்கள். இது என்னவிதமான பக்தி என்று புரியவில்லை. ஒரு விஷயத்தை நம்மால் படைக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, சிதைக்காமல் இருக்கலாம் என்பதை நாம் எப்போதுதான் உணரப் போகிறோமோ?

 

பல வருடங்களுக்குப் பிறகு, கும்பலில் சிக்கி, நீந்தி, சன்னதியை அடைகிறோம். நடுவில் சுபத்ரா, அவளுக்கு வலது புறம் பலராமர், இடது புறம் கிருஷ்ணர். இப்படி சகோதரர்களோடு சகோதரி மட்டும் கோவில் கொண்டிருப்பது பூரியில் மட்டும்தான் என்று நினைக்கிறேன். மரத்தால் ஆன திருவுருவங்கள். முழுமை அடையாமல் இருக்கின்றன. அதற்கு காரணம் தெரிய வேண்டுமானால் பூரியின் தல வரலாறு தெரிய வேண்டும். இந்த பதிவு மிக நீளமாகி விட்டது, எனவே அடுத்த பதிவில் பார்க்கலாம்.   

படங்கள் - நன்றி கூகுள்