வைகுண்ட ஏகாதசி
போகிப் பண்டிகையாகிய இன்றுதான் அதாவது 13.01.2022 தான் வைகுண்ட ஏகாதசி. ஆனால் ஸ்ரீரங்கத்தில் சென்ற ஏகாதசியையே வைகுண்ட ஏகாதசி யாக கொண்டாடி விட்டதால் சிலருக்கு குழப்பம் வந்தது. சென்ற ஏகாதசி குருவாயூர் ஏகாதசி அல்லது கைசிக ஏகாதசி எனப்படும். திருக்குறுங்குடி ஏகாதசி என்றும் சொல்வார்கள்.
நம் நாட்டில் பின்பற்றும் எல்லா கேலண்டர்கள் அல்லது பஞ்சாங்கங்கள் படியும் ஒரு மாதத்திற்கு வளர்பிறையில் ஒன்று, தேய்பிறையில் ஒன்று என இரண்டு ஏகாதசிகள் வரும். மார்கழி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி.
ஸ்ரீரங்கத்தை பொறுத்தவரை ஒவ்வொரு மாதமும் ஒரு திருவிழா உண்டு. அந்த கோவிலின் மிகச் சிறப்பான விழா வைகுண்ட ஏகாதசி. ஏகாதசிக்கு முன்னால் பகல் பத்து என்று பத்து நாட்கள், ஏகாதசிக்கு பின்னர் ராப்பத்து என்று பத்து நாட்கள் என்று மிகவும் விமரிசையாக இருபது நாட்கள் நடக்கும். இந்த வருடம் வைகுண்ட ஏகாதசி மார்கழி மாதத்தின் கடைசி நாளான போகியன்று வருகிறது. அதை கடைபிடித்தால் தை மாதத்தில் வரும் உற்சவம் நடத்துவதில் பிரச்சனை வரும்.
அதனால் கோவில் ஒழுகுமுறைக்காக கார்த்திகை மாதம் வந்த ஏகாதசியையே வைகுண்ட ஏகாதசியாக ஸ்ரீரங்கம் கோவிலில் மட்டும் அனுஷ்டித்து விட்டார்கள். மணவாள மாமுனிகள் செய்த ஏற்பாடாம் இது. பதினெட்டு வருடங்களுக்கு ஒரு முறை இப்படி நிகழும் என்கிறார்கள்.
சித்திரை தொடங்கி பங்குனி வரை வளர்பிறையிலும், தேய்பிறையிலும் வரும் ஏகாதசிகள்
காமதா, பாபமோசனிகா
மோகினி, வரூதினி
நிர்ஜலா, அபரா
சபனீ, யோகிணி
காமிகா, புத்திரதா
பத்மநாபா, அஜா
பாபாங்குசா, இந்திரா
ப்ரபோதினி, ரமா
மோக்ஷ, உற்பத்தி
புத்ரதா, சபலா
ஜயா, ஷட்திலா
ஆமலகி, விஜயா
சில வருடங்களில் மட்டும் கமலா ஏகாதசி என்று இருபத்தைந்தாக ஒன்றும் வரும்.
ஹிந்து வாக பிறந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக அனுஷ்டிக்க வேண்டிய விரதம் ஏகாதசி விரதம் என்று நம்பப்படுகிறது. எட்டு வயது பூர்த்தியானவர் முதல் எண்பது வயது நிறைந்தவர் வரை கடைப்பிடிக்க வேண்டும். எந்த நிலையிலும் கடைபிடிப்பதை நிறுத்தி விடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.
இதில் ஒரு ஸ்வாரஸ்யமான விஷயம் வைகுண்ட ஏகாதசி என்று அறியப்படும் ஏகாதசிக்கு மோக்ஷ ஏகாதசி என்றுதான் பெயர். வைகுண்ட ஏகாதசி என்னும் பெயர் பின்னாளில் வந்திருக்கும்.
ஏகாதசி விரதத்தை முறையாக அனுஷ்டித்து முக்தி அடைந்த அரசன் அம்பரீஷன் என்பது பலருக்கும் தெரியும்.
நாங்கள் கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி அன்று கனடாவில் இருக்கும் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்குச் சென்றிருந்தோம்.
பெயர் என்னவோ திருப்பதி வெங்கடாசலபதி கோயில் என்றிருந்தாலும், அங்கு விநாயகர், முருகன், சிவன், துர்க்கை, நவகிரகங்கள் என எல்லா சன்னதிகளும் இருந்தன. மூலவர் திருப்பதி பெருமாள். அன்று அங்கு ஏதோ சிறப்பு பூஜை இருந்ததால் நல்ல கும்பல். செல்லும் வழியில் பூசை சாமான்கள் என்று தமிழில் பெயர் பலகையோடு கடை கண்ணில் பட்டது. கும்பலாக இருந்ததால் அருகில் சென்று புகைப்படம் எடுக்க முடிவதில்லை.