கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, July 31, 2020

மசாலா சாட் - 19

மசாலா சாட் - 19

எப்பொருள் யார்யார் கை பெற்றாலும் 
அப்பொருள் சானிடைஸ் செய்வதறிவு 

மாஸ்க் என்ப சானிடைசரென்ப இவ்விரண்டும் 
கண்ணென்ப கோவிட் காலத்திற்கு 

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை மாஸ்க் 
அணியாதான் நலம்போல் கெடும் 

என்னது உன் மகனும் மருமகளும் உன்னை வெளியில் தள்ளி கதவை சாத்திட்டாங்களா?
ஆமாம், ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு ரூமில் உட்கார்ந்து, கதவை சாதிக் கொண்டு ஒர்க் ஃப்ரம்
ஹோம் பண்ராங்க , நான் ஹாலில்... :(( 

கீழே இருக்கும் ஓவியங்கள் என் மருமகளின் சித்தி மகள் வரைந்தவை:



பழைய கல்கி ஒன்றில் ராஜாஜி எழுதிய கடிதம் ஒன்று

60, பஸ்ஸுல்லா ரோட்

தியாகராய நகர்

சென்னை – 17                                                                                      14-12-56

வணக்கம்,

உங்கள் கடிதம் படித்தேன். .வெ.ரா. அவர்கள் கட்டுரை பத்திரிகையில் வந்ததை நான்
படிக்கவில்லை. உங்கள் கடிதத்தில் எடுத்து எழுதியிருக்கும் வாசகங்களைப் படித்தேன்
என்னுடைய கட்டுரையில் நான் எழுதியிருப்பதில் குழப்பதற்கு இடமில்லை.

நான் சொன்னதாய் பிறர் சொல்வதை வைத்துக் கொண்டு குழப்பம் ஏற்படுத்திக் கொள்வது

சரியல்ல, நான் சொன்ன கருத்தை மட்டும் வைத்துக் கொண்டு பார்க்கவும். படிப்புக்கு தமிழ் நாட்டில் தமிழ் வாயில் சொல்லித் தர வேண்டும். விஞ்ஞானப் பெயர்ச் சொற்களும்,பரிபாஷை மட்டும் ஆங்கிலமாக இருக்கலாம். விளக்கமும், பேச்சும் தமிழாக இருக்க வேண்டும். ஆட்சிமொழி, இந்திய மத்திய-நிர்வாகம்,ராஜ்யாந்த்ர

மொழி, இது ஹிந்தி மட்டுமாக இருக்கலாகாது. ஆங்கிலத்தில் நடைபெற வேண்டும்..

                                                                                                          இராஜகோபாலாச்சாரி


திரு.பி.எஸ்.விஸ்வநாதன்

36 நாராயண விலாஸ்
ரயில்வேஸ்டேஷன் ரோடு
தெப்பக்குளம், திருச்சி

Monday, July 27, 2020

கடலைக் கடந்து - 4

கடலைக் கடந்து - 4

பெயர் குழப்பம்:

நான் படித்தது கி.ஆ.பெ.விஸ்வனாதம் உயர் நிலைப் பள்ளியில். (K.A.P.VISWANATHAM HIGH SCHOOL) எஸ்.எஸ்.எல்.சி. சர்டிஃபிகேட்டிலும் அப்படித்தான் இருக்கும். ஆனால் அந்த பர்சனல் ஆஃபிசர் அதை ஒப்புக்கொள்ள மறுத்து K.A.P. என்பதை விரித்து எழுத வேண்டும் என்றார். அதன் விரிவாக்கமெல்லாம் யாருக்குத் தெரியும்? “வாட் இஸ் திஸ்? யூ டோண்ட் நோ யுவர் ஸ்கூல் நேம்?” மீண்டும் எள்ளல். என் ஸ்கூலின் பெயரே இதுதான் என்றால் ஏற்றுக் கொள்ளவில்லை. “உங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் யாரிடமாவது கேள்” என்றார். திருச்சியைச் சேர்ந்தவர்கள் சிலரிடம் கேட்டேன், யாருக்கும் தெரியவில்லை. திருச்சியைச் சேர்ந்த ஒரு உயரதிகாரி, “கரியமாணிக்கம், ஆராவமுதன், பிச்சமூர்த்தி என்று ஏதாவது எழுதுங்கள்” என்றார். அப்படியெல்லாம் செய்ய முடியுமா? கடைசியில் அந்த பெர்சனல் ஆஃபிசர் கே.ஏ.பி. என்பதை அடித்து விட்டு விஸ்வனாதம் உயர் நிலைப் பள்ளி என்று எழுதச் சொன்னார்.

அப்பொதைக்கு வேலை முடிந்து விட்டாலும் என் மண்டைக்குள் இந்த கேள்வி குடைந்து கொண்டே இருந்தது. பின்னாளில் கி.ஆ.பெ. விஸ்வநாதம் அவர்களின் பேத்தி எனக்கு நட்பானார். அவரிடம் அந்த கி.ஆ.பெ. எதைக் குறிக்கிறது என்று கேட்டு தெரிந்து கொண்டேன். அவர்கள் குடும்பத்தில் மூன்று தலைமுறை பெரியவர்களின் பெயரை இனிஷியலாக வைத்துக் கொள்வார்களாம். அதன்படி கிருஷ்ணன்.ஆறுமுகம்.பெரியண்ணா என்பதுதான் கி.ஆ.பெ. என்றார்.   

இந்த சமயத்தில் நம் ஊர் பெயர்கள் அவர்களை படுத்தி வைக்கும் பாட்டையும் சொல்லலாம் என்று தோன்றுகிறது. நான் வேலைக்கு சேர்ந்து கொஞ்ச நாளில் எங்கள் டிபார்ட்மெண்டின் டைரக்டர் என்னிடம் ஊர் பிடித்திருக்கிறதா? வேலை பிடித்திருக்கிறதா? என்றெல்லாம் கேட்டு விட்டு என் பெயரைக் கேட்டார். நான் என் பெயரைக் கூறியதும் ,”ஓ டிஃபிகல்ட், இண்டியன் நேம்ஸ் ஆர் டிஃபிகல்ட்” என்றார் அஹமது பின் அப்துல் காதர் அல் கசானி என்னும் பெயர் வைத்துக் கொண்டிருப்பவர்.

என்னுடைய பெயரில் இருக்கும் பானு என்பது அவர்களும் வைத்துக் கொள்ளும் பெயராக இருப்பதால் மதி தேவையில்லை என்று முடிவு செய்து விட்டார்கள். பானுமதியே கஷ்டம் என்றால் என் கணவரின் பெயராகிய கோவிந்தராஜபுரம் கிருஷ்ணமூர்த்தி வெங்கடேஸ்வரன் என்னும் பெயர் அவர்களை என்ன பாடு படுத்தியிருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள். அதில் அவர்களுக்கு உச்சரிக்க தோதாக இருந்த மூர்த்தி என்னும் பெயரை மட்டும் எடுத்துக் கொண்டு மூர்த்தி என்றுதான் அழைப்பார்கள். நான் சில சமயங்களில் என்னுடன் பணியாற்றிய எகிப்தியர்களிடம்,”மூர்த்தியின் முழுமையான பெயரான கோவிந்தராஜபுரம் கிருஷ்ணமூர்த்தி வெங்கடேஸ்வரன் என்னும் பெயரை சரியாக சொல்லிவிடு, உனக்கு 100 ரியால் தருகிறேன் என்று விளையாடுவதுண்டு.

நான் வேலையில் சேர்ந்த சில நாட்களில் என்னுடன் பணியாற்றிய ஒரு எகிப்திய பெண்மணி,”பானு ஸ்பீக் டெலிஃஃபோன், ராகு காலிங்” என்றாள். நான் அதிர்ச்சி அடைந்தேன். மஸ்கட் வருவதற்கு முன் என் ஜாதகப்படி கேதுவுக்கு ப்ரீதி பண்ண வேண்டும் என்றார்கள், நானும் செய்தேன். அதனால் தன்னை புறக்கணித்ததாக கோபம் கொண்டு ராகு அழைக்கிறாரோ? என்று பயந்தபடி ஃபோனை எடுத்தேன். பேசியது ராஜு என்னும் ஒரு நண்பர். பிறகுதான் எனக்குத் தெரிந்தது எகிப்தியர்கள் ‘ஜ’ என்பதை ‘க’ என்றும், ‘க’வை ‘ஜ’ என்றும் உச்சரிபார்கள் என்று. இதை வேடிக்கையாக ராஜு என்னும் நண்பர், “ராஜு என்னும் என்னை ராகு என்கிறார்கள், கீதா, ஜீதா ஆகிவிடுவாள், அங்கே வராத ஜ இங்கே வந்து விடும்" என்பார்.

அவர்கள் மட்டும் தவறு செய்வதில்லை, நாமும் செய்கிறோம். அவர்கள் தந்தையின் பெயரை குறிப்பிட்டு அவர் மகன் என்று பொருள்பட பின்(Bin) என்று குறிப்பிட்டு தன் பெயரை குறிப்பிட்டுக் கொள்வார்கள். மகள் என்றால் பின்ட்(Bint)என்று குறிப்பிடுவார்கள். உதாரணமாக ஒசாமா பின் லேடன் என்றால் ஒசாமவின் மகன் லேடன் என்று பொருள். ஆனால் இதை அறியாத நம் ஊர் பத்திரிகைகள் அவரை பின் லேடன் என்றே குறிப்பிடும்.