கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, April 17, 2022

மாப்பிள்ளையின் சமையல்

மாப்பிள்ளையின் சமையல்

இந்த வாரம் இங்கே லாங் வீக் எண்ட். குட் ஃப்ரைடே, சனி, ஞாயிறு, ஈஸ்டர் (. சண்டே வரும் ஈஸ்டருக்கு மண்டே விடுமுறை, என்ன லாஜிக்கோ?) என்று நான்கு நாட்கள் விடுமுறை. மகளுக்கு இரண்டு நாட்கள்தான். என் மாப்பிள்ளைக்கு போர் அடித்தது போலிருக்கிறது. நேற்று லன்ச் தான் செய்யப் போவதாக் கூறினார். வெஜிடபிள் பிரியாணி‌யும், ராய்தாவும் மெனு. அவருடைய தயாரிப்பு வித்தியாசமாக இருந்ததால் அதை புகைப்படமெடுத்தேன். 

பிரியாணியில் போட வேண்டிய காய்களையும் (குடை மிளகாய், கேரட். வேண்டுமானால் உருளைக் கிழங்கும், பீன்ஸும் போடலாம்) பனீரையும் சற்று பெரிய துண்டங்களாக நறுக்கி தயிர், காரப்பொடி,. உப்பு சேர்த்த கலவையில் 20 நிமிடங்கள் ஊற வைத்தார். 


இரண்டு ஆழாக்கு பாஸ்மதி அரிசியையும் கழுவி பத்து நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் வேக வைத்து அரை வேக்காடு வந்ததும் தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொண்டார். 



ஒரு பெரிய பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி ஏலக்காய், கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, அனாசிப்பூ, சீரகம், சோம்பு இவைகளை தாளித்து,  பெரிதாக ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி, அதில் சேர்த்து கொஞ்சம் காரப்பொடி, கரம் மசாலா பொடிகளையும், கொஞ்சம் உப்பையும் சேர்த்து வதக்கினார். 


பின்னர் ஒரு பெரிய தக்காளியையும் சேர்த்து வதக்கி, அவை நன்றாக வதங்கியதும் இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்து தயிரில் ஊறிய காய்கறி கலவையை சேர்த்து வதக்கி, பின்னர் அரை வேக்காட்டு அரிசியை அதில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து மூடி விட்டார். பத்து நிமிடங்களில் பிரியாணி ரெடியாகி விட்டது. அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து அடியோடு பிரட்டிக் கொடுத்து வெள்ளரிக்காய் ராய்தாவோடு (இதை மகள் செய்தாள்) சாப்பிட்டோம். கொஞ்சம் காரம் என்றாலும் சுவையாக இருந்தது.