ஜனநாயக கடமை
ஏப்ரல் 17ம் தேதி குடும்ப நிகழ்ச்சிக்காக சென்னை வரவேண்டியிருந்தது. அதில் கலந்து கொண்டு விட்டு, அப்படியே ஓட்டும் போட்டு விட்டு வரலாம் என்ற எண்ணத்தில் கிளம்பினோம்.
பெங்களூரிலிருந்து மதியம் பன்னிரெண்டு மணிக்கு பேருந்து. காலை பத்து மணியிலிருந்து ஓலா புக் பண்ண முயற்சித்து கொண்டேயிருந்தோம். மைக்ரோ, மினி, ப்ரைம், ஆட்டோ எதுவுமே இல்லை. எங்கள் நாத்தனார் பெண் மூலம் ஊபர் முயற்சித்தால் அதிலும் பலன் இல்லை. கடைசியில் அவளுக்கு தெரிந்த ஒரு டிராவல்ஸில் ஏற்பாடு செய்து கொடுத்தாள். வீட்டிலிருந்து 10:30க்கு கிளம்பினோம், 11:50க்கு மடிவாலாவை அடைந்தோம். அதற்குள் என் கணவர் ஏகத்திற்கு டென்ஷனாகி விட்டார்.
பஸ்ஸில் கொஞ்சம் நகைச்சுவை காட்சிகள் போட்டார்கள். பின்னர் சாமி 2 வில் கொஞ்சம் வயதான தோற்றத்தில் விக்ரம் தான் போலீஸ் இல்லை பொறுக்கி என்றார். திரிஷா ஏற்ற ரோலில் ஐஸ்வர்யா ராஜேஷ். என்னதான் டான்ஸெல்லாம் ஆடினாலும், கவர்ச்சி கோஷண்ட் கம்மி என்பதால் ரசிக்க முடியவில்லை. சாமி(1)ல் இருந்த பாடல், நகைச்சுவை, விறுவிறுப்பான திரைக்கதை எதுவுமே இதில் இல்லை. அதனால்தான் படம் ஓடவில்லை. நம் ரசிகர்கள் தெளிவுதான்.
அக்கா மாமியாரை ஓட்டு போட அவர்கள் வீட்டுக்கு மிக அருகில் இருக்கும் அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அழைத்துச் சென்றேன். மாமியால் நடக்க முடியாது என்பதால் காரில் சென்றோம். வாகனங்களை பள்ளி அருகே செல்ல அனுமதிக்கவில்லை என்றாலும் மாமியின் உடல் நிலையை கருதி பள்ளி வாசலில் இறங்கிக் கொள்ள அனுமதித்தனர். ஆனாலும் என்னை உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என்று ஒரு காவலர் தடுத்தார் இன்னொருவர் அனுமதித்தார். எனவே உள்ளே சென்று மாமியை பூத்திற்குள் செல்லும் வரிசையில் சேர்த்து விட்டு அருகில் காத்திருந்தேன்.
பள்ளி வளாகம் சுத்தமாக இருந்தது. நோ பிளாஸ்டிக் ஏரியாவாம். எல்லா சுவர்களிலும் பொன் மொழிகள் எழுதப்பட்டிருந்தன. அதில் என்னைக் கவர்ந்த வாசகம் அப்துல் கலாமுடையது. பெண்கள் பள்ளியில் பெண்களுக்காக ஒரு வாசகம்
அந்த பள்ளியில் மொத்தம் எட்டு பூத்துகள் இருந்தன. எந்த ஏரியாவுக்கு எந்த பூத் என்று தெரியாமல் வந்தவர்கள் கொஞ்சம் குழம்பினர். ஒரு காவலர்," ஒரு சாக் பீஸ் கொண்டாப்பா, எழுதிடலாம். இல்லன்னா நமக்கு தான் சாயந்திரம் அஞ்சு மணி வரைக்கும் கஷ்டம்" என்று எப்படியோ ஒரு சாக்பீஸை வரவழைத்து, எந்தெந்த தெரு எந்த பூத்தில் என்று எழுதிப் போட்டார்.
எந்த பத்திரிகையை சேர்ந்தவர் என்று தெரியவில்லை, காமிராவை தோளில் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒருவர் காவலரிடம் வந்து, ஓட்டு போட்டு விட்டு வருகிறவர்களை புகைப்படம் எடுக்க அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று புகார் கூறினார். "வெளியிலிருந்து எடுங்கள்" என்று அவர் கூறியதற்கு, "கையில் மை வைப்பதை எல்லாம் எப்படி சார் வெளியிலிருந்து எடுக்க முடியும்? பூத்திற்குள் வரக்கூடாது என்கிறார், அஜீத்தையெல்லாம் எடுக்கிறோம்.." என்றதும், அந்த காவலர், இந்த பூத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அனுமதி அளித்தார். "உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடப்போகிறது" என்றேன், " ஓட்டு போடுவதைத்தான் எடுக்கக்கூடாது, மை வைப்பதை எல்லாம் எடுக்கலாம் என்றார்.
"ரொம்ப நேரமா இங்கேயே நிக்குறீங்களேமா?" என்று என்னிடம் ஒரு காவலர் வினவினார். நான் துணைக்கு வந்திருக்கிறேன் என்றதும்,"இங்கு நிற்க கூடாதுமா, வெளியே போய்டுங்க" எனறார். சரி என்று வெளியே வந்து காத்திருந்தேன்.
அங்கு தன் தாயோடு துணைக்கு வந்திருந்த ஒரு பையனிடம், காவலுக்கு நின்ற ஆந்திர ராணுவ வீரர் ஹிந்தியில் பேச்சு கொடுத்து கொண்டிருந்தார்.
"ஐ.பி.எல்.லில் ஏன் சி.எஸ்.கே.யை பிடிக்கும்?"
"உங்கள் ஊரில் ஆங்கிலம் பேசுகிறீர்கள், ஹிந்தி பேசுகிறீர்கள், தமிழ் பேச
மாட்டீர்களா?" போன்ற கேள்விகள். தமிழ் தெரியாத அவரோடு அந்தப் பையன் எப்படி தமிழில் பேச முடியும்?
நடிகை தேவயானியும், அவர் கணவரும் ஓட்டு போட்டு விட்டு சென்றார்கள். ஓட்டு போட்டு விட்டு வந்த ஒரு பெரியவர் செல் ஃபோன் வைத்திருந்தார். "செல்ஃபோனை அனுமதிக்கிறார்களா?" என்று கேட்டேன், "யாரும் எதுவும் கேட்கவில்லை" என்றார். பெரும்பான்மையோர் செல்போன் வைத்துக் கொண்டிருந்தனர். அசோக் நகரில் ஓட்டு போட வந்தவர்களில் பெரும்பான்மையினர் முதியவர்களாக இருந்தனர். ராமாபுரத்தில் இதற்கு மாறாக பெரும்பான்மையினர் இளைஞர்களாக இருந்தார்கள்.
எங்கள் பெயர் ஓட்டர்ஸ் லிஸ்டில் இருக்கிறதா என்பதை அங்கிருந்த தேர்தல் அதிகாரி பொறுமையாக அறுபத்தேழு பக்கங்களிலும் தேடிக் கொண்டிருந்த பொழுது வரிசையில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை இன்னொரு பெண் நடுவில் புகுந்து விட்டதாக குற்றம் சாட்ட, அந்தப் பெண் மறுக்க, இருவருக்கும் குழாயடி போல சண்டை வந்தது. ஒரு பெண் காவலர் வந்து விலக்கி விட்டார். எங்கள் பெயர் வாக்காளர்கள் பட்டியலில் இல்லாததால் ஓட்டு போடாமல் தான் வந்தோம். காத்திருந்த நேரத்தில் பழைய நண்பர்கள் சிலரை சந்தித்தேன்.
இதேபோல் பெயர் விடுபட்டிருந்தாலும் நடிகர்கள் ரமேஷ் கண்ணாவும், ஶ்ரீகாந்தும் மற்ற ஆதாரங்களை காண்பித்து ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர் என்று தொலைக்காட்சி செய்தியில் காண்பித்தார்கள். நாமெல்லாம் சாமானியர்கள்தானே? எனவே ஜனநாயக கடமை ஆற்ற முடியவில்லை