கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, July 6, 2019

எண்ணச்சிதறல்

எண்ணச்சிதறல்

கல்வி சிறந்த தமிழ் நாடு என்பது பாரதியின் வாக்கு. பங்களூர் வந்த பிறகு அது உண்மைதானோ என்று தோன்றுகிறது. இங்கே புத்தகங்கள் தொங்கும் பொட்டி கடைகள் கண்களில் படவே இல்லை. இந்த ஊர்காரர்கள் புத்தகமே படிக்க மாட்டார்களா? பஸ் ஸ்டாண்டில் கூட புத்தகக் கடை இல்லை. 


நம் ஊரில் இப்படியா இருக்கும்? எத்தனை பொட்டி கடைகள்? அவற்றில் எத்தனை புத்தகங்கள்? ஒரு திருமண ரிசப்ஷனில் பஞ்சு மிட்டாய், பாப்கார்ன்


 இவைகளோடு பொட்டி கடையும் வைத்திருந்தார்கள். அதில் கூட பேப்பர், நக்கீரன், ஜுனியர் விகடன் போன்றவைகளை தொங்க விட்டிருந்தார்கள்.

பெங்களூர் வந்த புதிதில் புத்தகங்களை தேடி நான் அலைந்ததை ஒரு பதிவாக போட்டிருந்தேன்.  பிறகு புத்தக கடையை கண்டு பிடித்தேன் அதற்குள் வீட்டிலேயே ம.மலரும், குமுதம் சினேகிதியும் கொண்டு வந்து போட ஆள் கிடைத்தார். புது வீட்டில் பேப்பர் போடுகிறவர் தமிழ் புத்தகங்கள் கிடையாது என்று கூறி விட்டார். மீண்டும் தேடல். சப்ஸ்கிரிப்ஷன் கட்டி விடலாம் என்று தோன்றுகிறது.

புது வீடு வந்து ஒரு மாதமாகி விட்டது. சின்ன சின்னதாய் ஏதேதோ வேலைகள். இப்போதுதான் ஒரு வழியாய் முடிவுக்கு வந்தன. அதனாலோ என்னவோ, எதையும் கோர்வையாக சிந்திக்கக்கூட இயலவில்லை.  எண்ணங்கள் சிதறுகின்றன(அப்பாடா டைட்டிலை ஜஸ்டிஃபை பண்ணி விட்டேன்).

சென்ற வெள்ளியன்று இரவு அமசான் பிரைமில் எஸ்.ஜே. சூர்யா நடித்த 'மான்ஸ்டர்'  படம் பார்த்தேன். எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்று நினைக்கும், வள்ளலாரின் தீவிர பக்தரான,  தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும், திருமணத்திற்கு பெண் தேடி எதுவும் தகையாத எஸ்.ஜெ.சூர்யா வாடகை வீட்டில் தண்ணீர் கஷ்டத்திலும் தவிக்கிறார். சொந்தமாக ஒரு வீடு வாங்கி விட்டால் வீட்டு ஓனரின் தொந்தரவிலிருந்தும் தப்பிக்கலாம், பெண் கிடைத்தாலும் கிடைக்கும் என்று நண்பன் கருணாகரன் ஆலோசனை கூற ஒரு அபார்ட்மெண்ட் வாங்கி, கொஞ்ச காலம் சந்தோஷமாக இருக்கிறார். அழையா விருந்தாளியாக அங்கு குடியேறும் ஒரு எலி அவரை ஆட்டி வைப்பதுதான் கதை. 


சும்மா சொல்லக்கூடாது எஸ்.ஜே. சூர்யா பிரமாதப்படுத்தியிருக்கிறார். அவர் நண்பனாக வரும் கருணாகரன், கதாநாயகி பிரியா பவானி சங்கர் இருவருமே தங்கள் பங்கை செவ்வனே செய்திருக்கிறார்கள். பிரியா பவானி சங்கரை சீரியலிலும், ஒரு சில விளம்பரங்களிலும் பார்த்திருக்கலாம். அழகான, திறமையான நடிகை. ஆனால் தமிழ் சினிமாவில் தாக்கு பிடிப்பாரா என்று தெரியவில்லை. படம் முழுவதும் புடவையும், சூடிதாரும் மட்டுமே அணிந்து வருகிறார். நோ கவர்ச்சி. எஸ்.ஜே.சூர்யாவோடு நடித்தும், கடைசி காட்சியில் கையை கோர்த்துக் கொள்வதைத் தவிர தொடாமல் நடித்திருக்கிறார்!!. இவையெல்லாம் போணி ஆகுமா?  இப்போதைய இளம் இயக்குனர்கள் புதிது புதிதாக கதைகளை யோசிப்பதும் அதை திறம்பட எடுப்பதும் சந்தோஷமான விஷயம். 

சாய் சங்கரா மேட்ரிமோனியல் சர்வீஸுக்கான விளம்பரத்தில் ரிஜிஸ்டர் செய்யும் மணமகனின் குறைந்த பட்ச வருமானம் ரூ.30000/-  என்று குறிப்பிடுகிறார்கள்.  

இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் தன் முதல் பட்ஜெட்டை சமர்ப்பித்து விட்டார். இதுவரை இப்படிப்பட்ட ஒரு வீராவேசமான பட்ஜெட் உரையை கேட்டதில்லை. பட்ஜெட்டின் சாதக, பாதகங்களை நிபுணர்கள் அலசட்டும். நான் விடை பெறுகிறேன். பிறகு சந்திக்கலாம்.