கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, November 1, 2023

பெற்றால்தான் பிள்ளையா?

 பெற்றால்தான் பிள்ளையா?

"உன் மகளிடமிருந்து செய்தி" என்றது வாய்ஸ் மெஸேஜர்.
"என்னவாம்?" என்றாள் தீக்ஷா.
"அம்மா, உன் ஆசை விரைவில் நிறைவேறப் போகிறது, நீ பாட்டியாகப் போகிறாய், உடனே எக்ஸைட் ஆகி அழைக்காதே, ஐயாம் பிஸி. ஐ வில் கால் யூ லேட்டர்"என்றது மகள் நீதாவின் குரல்.
தன் கணிணியை மூடிய தீக்ஷாவுக்கு உடனே மகளோடு பேச வேண்டும் என்று தோன்றியது. ஆனால் இப்போது அழைத்தால் பதிலளிக்க மாட்டாள்.
திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகி விட்டது. முப்பது வயதில் திருமணம் செய்து கொண்டவள் ஏதேதோ காரணங்களைச் சொல்லி பிள்ளை பேற்றை தள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தாள்.
வயதாகி முதல் குழந்தையை பெற்றுக் கொள்வது ஆரோக்கியமான விஷயம் இல்லை என்பதையெல்லாம் நவீன மருத்துவம் பொய்யாக்கி விட்டது.
மாலையில் நீதா வீடியோ காலில் வந்ததும், " டாக்டரை பார்த்தியா? எவ்வளவு நாட்கள் ஆகிறது?" என்றதும் நீதா கொஞ்சம் யோசித்து ஐ திங்க் ஃபைவ்மன்த்ஸ்"என்றாள்.
"திங்கா? என்னடி. ?" என்றதும் கொஞ்சம் யோசித்து, செல்போனில் எதையோ தேடி, ஆ.. ஐஞ்சு மாசங்கள் முடிஞ்சாச்சு.." என்றாள் நீதா.
"மை காட்!" இத்தனை நாள் எங்கிட்ட சொல்லவேயில்லை..?" கொஞ்சம் தள்ளி நில், உன்னை முழுமையாக பார்க்கிறேன்" என்றதும், காமிராவை விட்டு தள்ளி நின்று கையாட்டினாள்.
"என்னடி இது? ஐஞ்சு மாசம் முடிஞ்சாச்சு என்கிறாய், வயிறே தெரியலை..?"
"எனக்கு ஏன் வயிறு தெரியனும்?" என்று நீதா கேட்டதும், தீக்ஷாவுக்கு குழப்பமாகியது.
"நீ கர்பமாக இருப்பதாக சொன்னாயே..?"
நான் எங்கே அப்படி சொன்னேன்? நீ அப்படி புரிந்து கொண்டிருக்கிறாய்"
" நான் பாட்டியாக வேண்டும் என்றால் நீ கர்ப்பமாக இருக்கிறாய் என்றுதானே அர்த்தம்?"
தீக்ஷா இப்படி கேட்டதும்,"வெயிட் வெயிட், எங்களுக்கு குழந்தை பிறக்கப் போகிறது, ஆனால் நான் கர்ப்பமாக இல்லை.. எங்கள் குழந்தையை சுமக்க ஒரு வாடகைத் தாயை புக் பண்ணி விட்டோம்"
"உன் குழந்தையை உன்னால் சுமக்க முடியாதா?"
"கஷ்டம் மா..இப்போது என் கேரியர் ரொம்ப க்ரூஷியல் ஸ்டேஜில் இருக்கு. ஃபர்ஸ்ட் நானே பெத்துக்கலாம்னு தான் நினைச்சேன், ஆனால் என் ஃப்ரண்டு வாமிட்டிங்,நாஸியானு பட்ட கஷ்டத்தை பார்த்ததும் வேண்டாம், சர்ரகஸி இஸ் பெட்டர்னு தோணிடுத்து. ரகு ஆல்ஸோ ஓகே வித் திஸ்."
"வளர்க்கவாவது செய்வியா..?"
"கண்டிப்பா.. பட் இனிஷியலா பார்த்துக்க நானி புக் பண்ணியாச்சு"
யாரோ பெத்து குடுக்க போறா, யாரோ வளர்க்க போறா..நீ என்ன அம்மா..?"
"பட் ஸ்டில் அது எங்களோட குழந்தை. கொஞ்சுவோம், விளையாடுவோம், படிக்க வைப்போம்.."
அம்மா அலுத்துக் கொண்டதற்கு சமாதானமாக பதில் சொன்னாள்.
"இதுக்கு பேசாமல் ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாமே..?"
"அம்மா உனக்கு புரியவில்லையா? தத்து குழந்தை எங்கள் குழந்தை கிடையாது. இது எங்கள் குழந்தைதான், எனக்கு கர்ப்ப கால தொந்தரவுகள் கிடையாது. எவ்வளவு சௌகரியம்!"
"ம் ம், என்னவோ போ.. அந்த வாடகைத் தாய் எப்படிப் பட்டவள்?"
"அதெல்லாம் நல்ல பெண்தான். நல்ல ஏஜென்சி மூலம் தான் ஏற்பாடு செய்திருக்கிறோம்". என்று நீதா சொன்னதும், 2023க்கு முன்பாகவே வாடகைத் தாய் கான்செப்ட் வந்து விட்டாலும், 2053ல் இது மிகவும் பிரபலமாகி விடும் என்று அப்போது தோன்றவேயில்லையே..? என்று தீக்ஷா நினைத்துக் கொண்டாள்.

Tuesday, October 31, 2023

மாற்றம்

'இன்னும் முப்பது வருடங்களுக்குப் பிறகு எப்படிப்பட்ட மாற்றங்கள் வரும்?' என்று மத்யமரில் வீக்லி டாபிக் கொடுத்திருந்தார்கள். அதற்கு என் பங்களிப்பு.

மாற்றம் ஒன்றே மாறாதது. உலகம் தோன்றியதிலிருந்தே பலவித மாற்றங்களை சந்தித்து கொண்டுதான் இருக்கிறது. 

வேட்டையாடிக் கொண்டிருந்த மனிதன் விவசாயம் செய்யத் தொடங்கியது முதல் மாற்றம்.  கடலைக் கடந்தது,  அடுத்த பெரிய மாற்றத்திற்கு வித்திட்டது. 

சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டதும் தொழில் வளர்ச்சியும், மாற்றமும் ஒரு கங்காரு ஜம்ப் அடித்தது என்றால் கணினியின் வரவால் பூதாகாரமாக வளர்ந்தது. இப்போது ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் எங்கே கொண்டு நிறுத்துமோ..?

நம் நாட்டை பொறுத்தவரை நூறு ஆண்டுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால் கடந்த முப்பது ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் மிக அதிகம். 1980களில் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவோம் என்று நினைத்திருப்போமா?  சாலையில் இத்தனை வெளிநாட்டு கார்கள் விரையும் என்று கற்பனை செய்தோமா? இன்னும் என்னவெல்லாம் மாற்றங்கள் வரலாம்..?

பணப் பரிமாற்றம் ஏன் அச்சிடப்பட்ட பணம் என்பது இல்லாமல் போகலாம்.

விவசாய நிலங்கள் குறைவதால் விவசாயம் செய்பவர்கள் செல்வந்தர்கள் ஆவார்கள். 

குறைந்த நிலத்தில் நிறைய மகசூல் செய்யும் வழிமுறைகள் கண்டுபிடிக்கப் படும்.

இயற்கை வளங்களான சோலார் எனர்ஜி, விண்ட் எனர்ஜி போன்றவை அதிக பயன்பாட்டிற்கு வரும். அதனால் மேற்கத்திய நாடுகளை விட கிழக்காசிய நாடுகள் தொழில் வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும்.

கடல் நீரை குடி நீராக்கும் முயற்சியை மேற்கொண்டு தண்ணீர் பஞ்சம் தீர்க்கப்படும்.

பயண நேரங்கள் கணிசமாககுறையும். விமானத்தில் பயணிப்பவர்கள் அதிகமாவார்கள்.

கான்சர் உட்பட பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும். அதனால் மக்களின் சராசரி ஆயுட்காலம் நீட்டிக்கப்படும். இதனால் பூமி பாரத்தை குறைக்க பூகம்பம், புயல் போன்ற நிறைய இயற்கை உற்பாதங்கள் நிறைய நிகழும்.

கூட்டுக் குடும்பம் சிதைந்தது போல குடும்பம் என்னும் அமைப்பே குறையலாம், சிதையாது.

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, விவாகரத்து, மறுமணம் போன்றவை அதிகரிக்கும். 

கல்வி கற்பிப்பது டிஜிட்டல் மயமாகும், ஆகவே எழுத வேண்டிய தேவை இருக்காது எனவே எழுத படிக்கத் தெரிந்தவர்கள் குறைந்து போவார்கள். அதாவது படிக்கத் தெரிந்தவர்களுக்கு எழுதத் தெரியும் என்று கூற முடியாது.

புத்தகங்கள் இல்லாமல் போகலாம். அதனால் நிறைய மரங்கள் பிழைக்கும்.

அரசு நிறுவனங்கள் தனியார் வசம் செல்லும்.

இப்பொழுது கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள். இதனால் ஏற்படும் சங்கடங்களை உணர்ந்து யாராவது ஒருவர் வேலைக்குச் சென்றால் போதும் என்று நினைக்கலாம்.

இப்பொழுது பலர் ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்கின்றார்கள், ஆனால் இரண்டு தலைமுறைகளுக்குப் பிறகு மூன்று குழந்தைகளாவது வேண்டும் என்று அரசாங்கமே குழந்தைகள் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும்.

காவடி எடுப்பது, மொட்டை அடித்துக் கொள்வது போன்ற நம்முடைய மத நம்பிக்கைகள் அப்படியே தொடரும். 

வீட்டு பூஜைகளுக்கு ரோபோ புரோகிதர் வருவார். 

நம் நாட்டை பொறுத்தவரை என்ன மாற்றங்கள் வந்தாலும் சாலையில் எச்சில் துப்புவதும், சிறுநீர் கழிப்பதும் மாறாது.