கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, February 12, 2022

திரை விமர்சனங்கள்

நரை எழுதும் சுயசரிதம் 

ஜெய் பீம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மணிகண்டன் எழுதி இயக்கியிருக்கும் படம். 

ஒரு அலுவலகத்தில் பணியாற்றிய, ரிடையர்மெண்ட் வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒருவரை (டெல்லி கணேஷ்) கம்பெனியை கம்ப்யூடரைஸ் செய்யப் போகிறோம் என்ற காரணம் கூறி நிர்வாகம் கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்பி விடுகிறது. ஓய்விற்குப் பிறகு வீட்டில் தான் புறக்கணிக்கப்படுவதாக புழுங்கும் அவர் ஒரு நாள் தான் பணியாற்றிய அலுவலகத்திற்குச் செல்கிறார். அங்கும் அவமானப் படுத்தப்பட விரக்தியில் முதல்  முறையாக குடித்து விட்டு, மணிகண்டன் மீது டூ வீலரை மோதி இருவருக்கும் கைகலப்பாகிறது. பின்னர் அவர்களிடையே பூக்கும் நட்பால்  அவர்கள் அணுகுமுறையிலும், வாழ்க்கையிலும் ஏற்படும் மாறுதல்கள்தான் திரைப்படம். 

அதுவரை சிடுமூஞ்சியாக, பேத்தியோடு கூட பேசாதவராக இருந்தவர் கலகலப்பாக மாற முயற்சிக்கிறார். பேத்தியோடு விளையாடி, நெருங்குகிறார். 'ஓட ஓட ஓட பாதை முடியல..' என்னும் பாடலை மகன் ரசிக்கும் பொழுது திட்டியவர் அதே பாடலை மிகவும் ரசித்து பாடத்துவங்குகிறார்.

அதே போல் பரட்டை தலை, தாடி, மீசையோடு இருக்கும் மணிகண்டன் டெல்லி கணேஷ் உதவியோடு பளிச்சென்று மாறுகிறார். இந்த மாற்றங்களால் விளைவது என்ன? குடும்பத்தின் ரியாக்ஷன் என்ன? என்பது க்ளைமாக்ஸ்.

படத்தில் பாடல் கிடையாது, தனி காமெடி ட்ராக் கிடையாது. சண்டை கிடையாது ஏன் கதாநாயகியே கிடையாது. டெல்லி கணேஷ்தான் படம் முழுக்க. எப்போதும் போல கிடைத்த வாய்ப்பை செம்மையாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். மனைவி மீது கோபித்துக் கொண்டு நான்கு நாட்களாக பேசவில்லை என்றவரை மணிகண்டன் திட்டி மனைவியோடு பேசச் சொன்னதும், "பேசி விட்டேன்" என்று மணிகண்டனிடம் வெட்கப்பட்டுக் கொண்டே சொல்லும் இடம் ரசனைக்குரியது. 

இந்த படத்தில் ஒரு குறை இது திரைப்படமா? குறும்படமா? என்ற சந்தேகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. ஓ.டி.டி.யில் வெளியாகி விருதுகளை குவித்திருக்கிறது இந்தப்படம்.

Bro Daddy(மலையாள திரைப்படம்)

மலையாள நடிகரான பிருத்விராஜ் நடித்து இயக்கியிருக்கும் 'ப்ரோ டாடி' என்னும் நகைச்சுவை படத்தில் மோகன்லால், மீனா, லாலு அலெக்ஸ், கனிகா, கல்யாணி பிரியதர்ஷன் என்று பலரும் நடித்திருக்கிறார்கள். 

பெங்களூரில் ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலை பார்க்கும் பிரித்விராஜுக்கும், ஐ.டி. ஊழியரான கல்யாணி பிரியதர்ஷனுக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று குடும்ப நண்பர்களான அவர்களுடைய பெற்றோர்கள் பேசுகிறார்கள். அவர்களிடம் பிடி கொடுக்காமல் பேசும் பிரித்வியும், கல்யாணியும் மூன்று வருடங்களாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது பெற்றோர்களுக்குத் தெரியாது. 

திருமணமாகமலேயே கருவுறம் கல்யாணிக்கு கருவை கலைக்க மனம் வரவில்லை, இதற்கிடையில் பிரித்வியை அவசரமாக ஊருக்கு வரச்சொல்லும் மோகன்லால் தன் மனைவி மீனா அதாவது பிருத்வியின் தாயார் கருவுற்றிருப்பதாக கூறுகிறார். அவரிடம் தன்னுடைய காதல் கதையை பிரித்வி கூற மகன் காதலியை கை பிடிக்க லாலேட்டன் எப்படி உதவுகிறார் என்பதை நகைச்சுவையாக கொண்டு சென்றிருக்கிறார்கள்.

நடிப்பில் யாருமே குறை வைக்கவில்லை. மோகன்லாலுக்கு இதெல்லாம் ஜுஜுபி!. ஊதி தள்ளிவிட்டார். வில்லனாக நான் அறிந்திருந்த லாலு அலெக்ஸ் இதில் காமெடியிலும் கலக்கியிருக்கிறார். மீனாவுக்கும், கனிகாவுக்கும் பெரிதாக வேலை இல்லை. சின்ன ரோலாக இருந்தாலும் சார்லி நிறைவாக செய்திருக்கிறார். அதைப்போல வெட்டிங் இவெண்ட் மேனேஜ்மென்ட் செய்பவராக வருபவரும் சிறப்பாக செய்திருக்கிறார். கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.

இப்போது வரும் படங்களில் பெண்கள் குடிப்பது போலவும், லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் காண்பிப்பது கவலை அளிக்கிறது. நம் நாட்டில் மதிப்பீடுகள் அத்தனை குறைந்து விட்டதா? அல்லது எனக்கு வயதாகி விட்டதா?