கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, November 11, 2020

புத்தம் புது காலை(விமர்சனம்)

 புத்தம் புது காலை(விமர்சனம்) 


தமிழின் முதல் அந்தாலஜி(anthology) படமான புத்தம் புது காலை  படத்தை  அமேசான் ப்ரைமில் பார்த்தேன். இது அமேசான்  பிரைம்ல்தான் வெளியிடப் பட்டது. அந்தாலஜி என்பது ஒரே கருவை அடிப்படையாக கொண்ட ஐந்து கதைகள் . இதில்  லாக் டவுன் நாட்களில் நடப்பதை அடிப்படையாக  கொண்ட  கதைகள் படமாக்கப்பட்டுள்ன. 

 
இந்த ஐந்து படங்களில் 'இளமை இதோ இதோ' படத்தை இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கராவும், 
இரண்டாவது படமான அவளும் நானும்/அவரும் நானும்  படத்தை கௌதம் வாசுதேவன் மேனனும் 
மூன்றாவது படமான எனி ஒன் காஃபி படத்தை சுஹாசினி மணிரத்னமும், 
நாகவது படமான ரீ யூனியன் ஐ ராஜீவ் மேனனும், 
ஐந்தாவது படமான மிராக்கிள் படத்தை கார்த்திக் சுப்புராஜும் இயக்கி உள்ளனர்.

இளமை இதோ இதோ: முன்னாள் காதலரான, மனைவியை  இழந்து, தனியாக  வாழும் ஜெயராமை காண அவரது முன்னாள் காதலியான கணவனை இழந்த ஊர்வசி யோகா ரிட்ரீட்டுக்கு பாண்டிச்சேரி  செல்வதாக மகனிடம் சொல்லிவிட்டு வருகிறார். அவர் வந்ததும்  21 நாட்களுக்கு லாக் டவுன் அறிவிக்கப்படுகிறது. 
21 நாட்கள் சேர்ந்து வசிக்கும் அவர்கள் எடுக்கும் முடிவு என்ன? 

ஊர்வசியும், ஜெயராமும் ஊதித்  தள்ளிவிட்டார்கள்.  காதல் வசப்படும் பொழுது வயது குறைந்து போகிறது என்பதை உணர்த்த இளமையான ஜெயராம், ஊர்வசி பாத்திரங்களில் காளிதாஸ் ஜெயராம்(ஜெயராமின் மகன்), கல்யாணி பிரியதர்சனை நடிக்க வைத்திருப்பதையும் காளிதாஸ் அப்பாவை காப்பி அடிக்காமல் தனி பாணியை பின்பற்றியிருப்பதையும் பாராட்டலாம்.  இருவருமே   இயல்பாக நடித்திருக்கிறார்கள். சகஜமாக, சவுகர்யமாக feel good உணர்வு தரும் படம். 

லாக் அவுட் சமயத்தில் தனியாக வசிக்கும் ரிட்டையர்டு சயிண்டிஸ்டான தாத்தாவோடு சேர்ந்து இருக்க வரும் பேத்திக்கும், தாத்தாவுக்கும் இடையே வலுப்படும்  உறவைப் பேசுகிறது  கௌதம் மேனன் இயக்கியிருக்கும் அவரும் நானும்/அவளும் நானும் படம்.  

நகைச்சுவை நடிகராக அறிமுகமான எம்.எஸ்.பாஸ்கர் தான் ஒரு சிறந்த  குணச்சித்திர நடிகன் என்று இதற்கு முன் சில படங்களில்  நிரூபித்திருந்தாலும் இதில் ஒரு தனி பரிமாணம் காட்டுகிறார். பேத்தியாக வரும் ரிது வர்மா  பார்க்கவும் அழகு, நடிப்பும் அப்படியே. நிஜமான தாத்தா,பேத்தியை பார்ப்பது போல்தான் இருக்கிறது. இந்த தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த  படம் இது. 

சுஹாசினி மணிரத்னம் இயக்கியிருக்கும் எனி ஒன் காஃபி? படத்தை ஒரு குடும்பப் படம் எனலாம். சுஹாசினி, அனு ஹாசன், சுருதி ஹாசன், சாருஹாசன் மனைவி கோமளா என்று குடும்ப உறுப்பினர்கள் நிறைந்திருக்கும் படம். இவர்களோடு காத்தாடி ராமமூர்த்தி. 

கோமாவில் இருக்கும் தாயாரை பார்க்க லண்டனிலிருந்தும் துபாயிலிருந்தும், மூத்த சகோதரிகள் வருகை தர, மும்பையில் இருக்கும் கடைசி பெண் மட்டும் அம்மா மீது கோபித்துக் கொண்டு  அக்காக்கள் அழைத்தும் வர மறுக்கிறார். திடீரென்று மனம் மாறி (மன மாற்றத்திற்கு காரணம் சொல்லப் படவில்லை) அம்மாவிடம்   வீடியோ காலில் மன்னிப்பு கேட்டு, அவருக்காக ஒரு பாடலும் பாட, அம்மாவிற்கு நினைவு திரும்பி விடுகிறது. 

மூத்த சகோதரிக்கு டிஸ்லெக்சிக்காக ஒரு குழந்தை, இரண்டாவது சகோதரிக்கு நீண்ட நாட்கள் கழிந்து கர்ப்பம் தரித்திருப்பது தெரிய வருகிறது  போன்றவை  கதையின் ஓட்டத்திற்கு எந்த வகையிலும்  உதவவில்லை. 

அனு ஹாசன் எக்கச்சக்கமாக வெயிட் போட்டிருந்தாலும் இயல்பான நடிப்பு. சுஹாசினி வழக்கம் போல். சுருதி ஹாசன் ஓகே! படம் ஸோ ஸோ!

ரீ யூனியனில், தன் ஸ்கூட்டி பஞ்சரானதால் மருத்துவராக  இருக்கும்  தன்னுடைய பள்ளித் தோழன் வீட்டிற்கு  வருகிறார்  ஆண்ட்ரியா. பள்ளித்  தோழனாக கர்னாடக இசைப் பாடகரான  குருசரண்.  ஜி.என்.பி.,பாலமுரளி,  சேஷ கோபாலனைத் தொடர்ந்து சிக்கில் குருசரணா? நன்றாகவே நடித்திருக்கிறார். அவருடைய அம்மாவாக லீலா சாம்சன். காஸ்டிங், செட்டிங், ஆக்டிங் எல்லாமே நன்றாக இருக்கிறது. ஆனால் கதை?? 

ஆண்ட்ரியா டிரக் அடிக்ட்டாம், அவரை மீட்க ஹீரோவும், அவன் அம்மாவும் முயல்கிறார்களாம். எதிலும் ஒரு ஆழமோ, அழுத்தமோ இல்லை. அளவிற்கு அதிகமாக ஆங்கில வசனங்கள். 

இந்த படத்தில் என்னைக் கவர்ந்தது குருசரண் வீடுதான். இந்த தொகுப்பிலேயே மொக்கையான படம் என்றால் இதுதான். 

அடுத்ததாக வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்! இது வரை எல்லா படங்களுமே மேல் மட்டத்தை மட்டுமே குறி வைத்தன. கார்த்தி சுப்புராஜின் மிராக்கிள் மட்டுமே  கீழ் மட்டத்தை லாக் டவுன் எப்படி பாதித்திருக்கிறது என்று கொஞ்சம் நெகட்டிவாக தொட்டு பார்த்திருக்கிறது . 

மிராக்கிள் நடக்கும் என்று நம்புங்கள் என்று ஒரு ஸ்வாமிஜி டி வி.யில்          பேசுவதோடு படம் தொடங்குகிறது. லாக் டவுனில்  வேலை இல்லாத இரண்டு திருடர்கள் காரை திருட முயற்சிப்பது கடைசியில் மிராக்கிள் நடக்கிறது, யாருக்கு?  என்பது கார்த்திக் சுப்புராஜுக்கே உரிய ஸ்பெஷல். ஆனால் படம் பெரும்பான்மை இருட்டில் நடப்பதாக காண்பித்திருப்பதை  செல்போனில் பார்க்கும் பொழுது முழுமையாக ரசிக்க முடியவில்லை. 

இந்த தொகுப்பில் ஒரு குறை எல்லா கதைகளுமே லாக் டவுனில்  நடப்பதை  காட்டினாலும், எந்த படமும்  லாக் டவுனால் வேலை இழந்தவர்கள், உறவினர்களை இழந்தவர்கள் அவர்களின்  ஈமச் சடங்கிற்கு கூட வர முடியாதது போன்ற விஷயங்களை தொடவே இல்லை என்பதுதான். ஐந்து 
குறும் படங்களை சேர்த்து பார்த்தது போல் இருக்கிறது. 

  




Sunday, November 8, 2020

திருமண திருத்தங்கள்

 திருமண திருத்தங்கள் 


ரெஸ்டாரெண்டில்  தனக்கு எதிர்  நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஆர்த்தியிடம், விஷால் ," நீ உங்க அப்பா,அம்மாவிடம் பேசினாயா?" என்று கேட்டான். 

காபியை ஒரு சிப் அருந்தி விட்டு, "பேசினேன், பட் நோ யூஸ்"  என்றாள்.

எங்க வீட்டிலும் அதே கதைதான் என்ற விஷால் ," "ஸோ, வேற வழியில்லை, நம்ம பிளானை எக்சிகியூட் பண்ண வேண்டியதுதான்" என்றான்.   
 
அவனுக்கு பதில் சொல்லாமல் ஆர்த்தி, ஜன்னல் வழியே தெரிந்த தோட்டத்தை வெறிக்க, டேபிளை தட்டி, "என்னாச்சு? எனி பிராப்லம்?" 

"ஒண்ணுமில்லை, நம்ம அப்பா,அம்மாவுக்கு இது ரொம்ப ஷாக் ஆக இருக்குமோனு தோண்றது"

"வேற வழியில்ல, நம்ம இஷ்டம் என்னனு கேட்காம அவங்களா  ஒன்றை டிசைட் பண்ணி, அதை நம்ம மேல திணிச்சா வேற என்ன பண்ண முடியும்?"

ஆமாம், அப்போ நீ சொல்ற மாதிரி நாம் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக் கொள்வதைத் தவிர வேற வழியில்லை. அதுக்கான அரேஞ்சு மென்ட்ஸ்..?"

"அதையெல்லாம் நான் பார்த்துக்கறேன். உன் சைடுல நீ ஸ்ட்ராங்கா இரு அது போறும். அம்மா, அப்பா செண்டிமெண்டில் நீ கட்சி மாறிடக் கூடாது" 

"நோ! நோ! " என்று அவள் புன்னகைத்ததும் விஷால்,"அப்பா! வந்ததிலிருந்து இப்போதான் சிரிக்கிற.." என்றதும் அவள் மேலும் தன் புன்னகையை விரிவு படுத்தினாள். அந்த புன்னகைக்காக என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று விஷாலுக்குத் தோன்றியது.

அடுத்தடுத்து வேலைகளை விஷால் விரைந்து முடித்தான்.  ஆர்த்தி  அம்மாவுடன்  புடவை  வாங்க கடைக்குச் சென்று, இரண்டு புடவைகள் மட்டும் எடுத்துக் கொண்டாள். அவர்களுக்கு  திருமணப் பதிவில் உதவி செய்த ஏஜென்ட் பெண்மணி ஆர்த்தியிடம், "நாளைக்கு ரிஜிஸ்டர் பண்ண வரும் பொழுது இப்படி ஜீன்ஸில் வராதம்மா, புடவை கட்டிக்கிட்டு வா"  என்றாள்.  

குறிப்பிட்ட நாளில்," அம்மா இன்னிக்கு விஷாலோட அப்பா அம்மா நம்ம வீட்டுக்கு வருவாங்க," என்று ஆர்த்தியும், ஆர்த்தியோட அப்பா அம்மா உங்களை அவங்க வீட்டுக்கு வரச் சொல்லியிருக்காங்க" என்று விஷாலும் கூறி, அவர்கள் எல்லோரையும் ஒரே இடத்தில் கூட்டினர். எதற்காக தாங்கள் அங்கே கூடியிருக்கிறோம் என்று புரியாத பெரியவர்கள் பொதுவாக ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர். அப்போது காரில் பட்டுப் புடவையில் ஆர்த்தியும்  பட்டு வேஷ்டியில் விஷாலும்  மாலையும் ,கழுத்துமாக வந்திறங்கிய பொழுது அவர்களின் பெற்றோர்கள், ஆச்சர்யமா? அதிர்ச்சியா? என்று சொல்லத் தெரியாத உணர்வில் திகைக்க, 

"நாங்க இன்னிக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கொண்டு விட்டோம். எல்லோரும் சேர்ந்து நில்லுங்கோ, நாங்க நமஸ்காரம் பண்றோம்"  

வாட்?
என்ன நடக்கறது இங்க?
என்னடி கூத்து இது?

என்று விதம் விதமாக தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்கள். 

கோபமாக எழுந்த விஷாலின் தந்தை வெளியிடம் என்பதால் தன் கோபத்தை காட்ட முடியாமல் விருட்டென்று எழுந்து வெளிப் பக்கம் நடக்கத் துவங்க, அவருக்கு முன்னாள் ஓடி வாசல் கதவை தாளிட்ட ஆர்த்தி, "அங்கிள் ப்ளீஸ் ,ஒரு நிமிஷம்.. நாங்க சொல்றத கேளுங்க.." என்றதும் திரும்பி வந்து சோபாவில் கோபமாக அமர்ந்தார். 

"ஆர்த்தி, வாட்ஸ் ஹாப்பனிங்?" என்ற ஆர்த்தியின் தகப்பனாரிடம் "அங்கிள், நான் சொல்றேன். கொஞ்சம் எல்லோரும் அமைதியா இருங்கோ" என்ற விஷால் தன் கழுத்திலிருந்த மாலையை கழற்றி டீப்பாயின் மேல் வைத்தான். 

உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நிச்சயம் பண்ணி, அடுத்த மாசம் தேதி குறிச்சிருக்கு, அதுக்குள்ள இப்போ என்ன அவசரம்? 

விஷாலின் அம்மா முதல் முறையாக வாய் திறந்தாள்.

கரெக்ட்! எங்களுக்கு கல்யாணம் நீங்க நிச்சயம் பண்ணி விட்டீர்கள். ஆனால் அதை எப்படி பண்ணப் போறேள்? ஒரே ஆடம்பரம்.,லட்சக்கணக்கா செலவு, அதெல்லாம் எதுக்கு? எங்க ரெண்டு பேருக்குமே அதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்ல. நாங்க எவ்வளவு சொல்லியும் நீங்க கேட்கறதா இல்ல, அதனால்தான் நாங்கள் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு முடிவு எடுத்தோம். 

இன்னிக்கு நல்ல நாளானு பார்க்க வேண்டாமா? 

"இன்னிக்கு நல்ல முகூர்த்த நாள்தான். கிருஷ்ணமூர்த்தி ஜோசியர் கிட்ட கன்சல்ட் பண்ணிதான் இந்த தேதியை பிக்ஸ்  பண்ணினோம்."

"வேற என்ன பாக்கி? தனிக்குடித்தனம் போக வீடு பார்த்தாச்சா?"

"சே! சே! அப்படியெல்லாம் கிடையாதுப்பா..  இந்த ஆடம்பர கல்யாணத்துக்கு ஒரு முடிவு கட்டணும்னு நினைச்சோம். "

"என்னடி ஆடம்பரம்? எங்களுக்கு இருக்கறது நீ ஒரு பொண்ணு, உன்னோட கல்யாணத்தை சிறப்பா பண்ணனும்னு எங்களுக்கு ஆசை இருக்காதா?" என்று ஆர்த்தியின் அம்மாவும்,

"லைஃபில் ஒரு தடவ நடக்கப்போற விஷயம், நம்மால் அஃபோர்ட் பண்ணவும் முடியும், அப்படியிருக்க எதுக்காக சிம்பிளா பண்ணனும்?"  என்று விஷாலின் அம்மாவும் கேட்க,

"இதுதான் பிரச்னை. லைஃபில் ஒரு தடவைத்தானே வரப்போறதுனு ஒரு பேச்சு, அடுத்தது அஃபோர்ட்டபிலிட்டி... நம்மால்  முடியும்னு நினைக்கிறவங்க ஆடம்பரமா செய்வதால் அவர்களை பார்த்து மற்றவர்களுக்கும் அந்த ஆசை வருகிறது. ஒரு பியர் பிரஷரை நாம் கிரியேட் பண்ணிவிடுகிறோம். கல்யாணத்தில் இவ்வளவு ஆடம்பரம் தேவையே இல்லை. இதுக்கு யார் முடிவு கட்டுவது? நாங்க ஸ்டாப் பண்ணலாம்னு நினைச்சோம். ."  பட்டிமன்ற பேச்சாளர் போல் விஷால் பேசி முடித்தான். 

"நீ ஒருத்தன் இதையெல்லாம் நிறுத்தினா, எல்லாரும் நிறுத்திடுவாளா?"

"மற்றவர்களைப் பற்றி எனக்கு கவலை இல்லை, எங்களுக்கு ஆடம்பரத் திருமணம் வேண்டாம்.  தவிர எல்லா நல்ல விஷயங்களையும் யாரோ ஒருத்தர்தான் ஆரம்பித்திருக்கிறார்". 

"இப்படி நீண்ட விவாதம் கொஞ்சம் கொஞ்சமாக சூடு குறைந்து, ஆர்த்தி,விஷால் சொல்வதின் நியாயம் புரிந்து பெரியவர்கள் தங்கள் பிடியைத் தளர விட்டார்கள். " சரி, நடந்தது நடந்து விட்டது. வாங்கோ ரெண்டு பேரும் சுவாமிக்கு முதலில் நமஸ்காரம் பண்ணுங்கோ,  நான் ஒரு பாயசமாவது பண்றேன்.." என்று ஆர்த்தியின் அம்மா எழுந்திருக்க, 

"இல்ல மாமி, நீங்க எதுவும் பண்ண வேண்டாம், நாங்க கேடரிங்கில் சாப்பாடு சொல்லி விட்டோம்."

"மை காட்!.. எங்களுக்கு எதுவுமே விட்டு வைக்கலையா?"

"சாப்பிட்டு விட்டு, ரிசப்ஷன் எங்க வெச்சுக்கலாம்னு டிசைட் பண்ணலாம், ஹனிமூன் எந்த ஊருக்கு போகச் சொல்கிறீர்களோ அந்த ஊருக்கே போகிறோம்"  சிரித்துக் கொண்டே விஷால் கூற,

"ஹனிமூனா? நத்திங் டூயிங். முதலில் குல தெய்வம் கோவில், அப்புறம், திருப்பதி, குருவாயூர்னு ஷேத்ராடனம் எல்லாம் முடி, அப்புறம் யோசிக்கலாம்" என்று அவன் அப்பா அவனை சீண்ட, "பெருமாளே!" என்று அவன் அதிர்ச்சியடைய, "அதையேதான் நானும் சொல்றேன்" என்றார் அவன் தந்தை.   

பி.கு.:
என்னதான் ஆர்த்தியும், விஷாலும் பதிவுத் திருமணம் செய்து கொண்டாலும் அவர்களுடைய பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்ற எளிமையாக ஒரு வைதீக திருமணமும் செய்து கொண்டதாக கேள்வி.