ரிச்மாண்ட்ஹில்(கனடா) சித்திவிநாயகர் கோவில்
நேற்று மாலை கனடாவின் ரிச்சமாண்ட் ஹில் என்னும் இடத்தில் இருக்கும் சித்திவிநாயகர் கோவிலுக்கு சென்றிருந்தோம். சித்திவிநாயகர் கோவில் என்று அழைக்கப்பட்டாலும் விநாயகர், முருகன், சிவன், வெங்கடாசலபதி பெருமாள், துர்க்கை என்று எல்லா தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன.
இங்கே இப்போது நல்ல குளிர் போகும் வழியெங்கும் மலை மலையாக குவிக்கப்பட்டிருந்த பனி எனக்கு திருவிளையாடல் படத்தை நினைவூட்டியது.
இந்த ஊரில் கோவில்களிலும், பொது கூடங்களிலும் நுழைந்ததும் நம்முடைய ஓவர் கோட்டை கழற்றி மாட்ட ஹாங்கர்கள் இருக்கும். மற்றவர்கள் ஓவர் கோட் டை அவிழ்த்தார்கள். நான் அவிழ்க்க வில்லை, காலில் சாக்ஸையும் அணிந்து கொண்டுதான் உள்ளே சென்றேன். எனக்கு இணையாக சிலர் இருந்தனர்.
வடக்கத்திய பாணியில் சலவைக் கல் விக்கிரகங்களை எதிர்பார்த்துச் சென்ற எனக்கு முற்றிலும் தென்னிந்திய பாணியில் அமைந்திருந்த அந்த கோவில் இனிய ஏமாற்றத்தை தந்தது.
உற்சவர் விநாயகர் |
உற்சவர் முருகன் |
பிரும்மாண்டமாண கூடத்தில் விநாயகர், முருகன், வெங்கடாசலபதி சன்னதிகளுக்கு தனித்தனியாக கொடிமரத்துடன் தோரணவாயில். பாண்டிச்சேரி கற்பக விநாயகரை நினைவுபடுத்தும் விநாயகர், டில்லி மலையகத்தின், பெங்களூர் திப்பசந்திரா பாலமுருகன் கோவில்களில் இருப்பதை போன்று நின்ற கோலத்தில் மேலிரண்டு கரங்களில் வேல், மயில், கீழ் வலது கரத்தில் தாமரை மலரோடு பிரும்மாண்ட முருகன். எதிரில் வள்ளிக்கு தனி சன்னதி.
பெருமாள் உற்சவர் |
வெங்கிடாசலபதி சன்னதிக்கு நேரே தனி சன்னதியில் அமர்ந்த கோலத்தில் மஹாலட்சுமி. பெருமாளுக்கு அருகில் சக்கிரத்தாழ்வார்.
ராம,லட்சுமண்,சீதாவோடு ஆஞ்சநேயர் மற்றும் ஆழ்வார்கள் தனியே எழுந்தருளியிருக்கிறார்கள்.
இதைத்தவிர அமர்ந்த கோலத்தில் சரஸ்வதி, நின்ற கோலத்தில் துர்க்கை, சிவலிங்கத்திற்கு அருகில் நடராஜர், திரிபுரசுந்தரி, பைரவருக்கு தனி சன்னதிகள் மற்றும் நவக்கிரகங்களும் இருக்கின்றன.
நேற்று (சனி)பிரதோஷம் என்பதால் சுவாமி புறப்பாடு முடிந்து நந்திக்கும், ஸ்வாமிக்கும் பூஜை நடந்து கொண்டிருந்தது. தீபாராதனை பார்த்து விட்டு கிளம்பினோம். மிகவும் திருப்தியாக இருந்தது.
பிரதோஷ பூஜையில் பக்தர்கள் |
சேஷ வாகனம் |
ஹனுமந்த, கருட வாகனங்கள் |
கோவில் வாசலில் பேத்தியோடு நான் |