கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, August 3, 2024

திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் (திருகோவிலூர் திவ்ய தரிசனம்)

 


திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் 
(திருகோவிலூர் திவ்ய தரிசனம்)


அன்று திருகோவிலூரில் நல்ல மழை. தங்க ஒரு இடம் தேடிய அந்த வைணவருக்கு ஒரு வீட்டின் இடை கழியில் இடம் கிடைத்தது. அங்கேயே படுத்துக் கொண்டார். சற்று நேரத்தில் கதவு தட்டப் பட்டது. திறந்தால்,  மழைக்கு ஒதுங்க இங்கே இடம் கிடைக்குமா? என்று கேட்டபடி வாசலில் ஒரு அந்தணர்! நான் ஒருவன் இங்கே படுத்துக் கொண்டிருந்தேன், நாம் இருவர் உட்கார்ந்து கொள்ளலாம் உள்ளே வாருங்கள் என்று அழைத்தார். அந்த இருவரும் அமர்ந்து கொண்டனர். மீண்டும் பட பட படபடவென்று கதவு தட்டப்பட்டது. திறந்தால் இம்முறையும் ஒரு வைணவர் நிற்கிறார். "வெளியே நல்ல மழை. அது நிற்கும் வரை இங்கே தங்கி விட்டு செல்லலாமா"? என்று வந்தவர் கேட்க, தாரளமாக... உள்ளே வாருங்கள், நாங்கள் இருவர் அமர்ந்து கொண்டிருக்கிறோம், நாம் மூவர் நிற்க முடியும் உள்ளே வாங்கள், என்று அவரையும் வரவேற்றனர். இருக்கும் இடத்தில் மூன்று பேரும் நெருக்கி அடித்து நின்று கொண்டிருந்தனர்,மழை சாரலைத் தவிர்க்க கதவையும் சாற்றியாகி  விட்டது. அகவே கும்மிருட்டு! இந்த நிலையில் அந்த மூவருக்கும் இடையே இன்னும் ஒருவர் புகுந்தது போல இட நெருக்கடி...சற்று தள்ளிதான் நில்லுங்களேன் ஏன் இப்படி நெருக்குகிரீர்கள்? நான் எங்கே ஐயா நெருக்குகிறேன்? நீங்கள் அல்லவா என்னை நெருக்குகிறீர்கள்? என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்கின்றனர். அந்த மூவருக்கும் இடையே இன்னும் ஒருவரும் நிற்கிறார் என்பது எலோருக்கும் தெரிகிறது, ஆனால் அவருடைய உருவம் தென்படவில்லை. ஒரு விளக்கு இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது ஆனால் விளக்கிற்கு எங்கே போவது? முதலாமவர்க்கு சட்டென்று ஒரு எண்ணம் உதிக்க ஒரு பெரிய விளக்கை ஏற்றினார். ஆம் இந்த உலகத்தையே ஒரு விளக்காக்கி அதில் சமுத்திரத்தை எண்ணையாக ஊற்றி, கதிரவனையே விளக்காக ஏற்றிய விளக்கு.. அதில் அந்த மூவருக்கும் இடையே புகுந்தது யார் என்று ஓரளவுக்கு புலப்பட்டது என்றாலும் தெளிவாக தெரியவில்லை. இன்னொரு விளக்கு இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்த இரண்டாமவர் மற்றொரு விளக்கை ஏற்றினார் அன்பை விளக்காகவும் ஆர்வத்தை நெய்யாகவும் தம் சித்தத்தை திரியாகவும் கொண்ட விளக்கு.. அதை ஏற்றியவுடன் மூன்றாமவருக்கு பளிச்சென்று புலப்பட்டுவிட்டது. "திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்" என்று தொடங்கி தங்களுக்கு இடையே புகுந்திருப்பது சங்கும் சக்கரமும் ஏந்திய தடக்கையினனாகிய நாராயணனே என்று அறிவித்தார். இப்படித்தான் நாலாயிர திவ்ய ப்ரபந்தம் பிறந்தது. அந்த மூவரும் வேறு யாரும் இல்லை, பன்னிரெண்டு ஆழ்வார்களில் முதல் மூவரான பொய்கை ஆழ்வார் பூதத்தாழ்வார், மற்றும் பேய் ஆழ்வார், ஆகும். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த திருத்தலமான திருகோவிலூருக்கு  மீண்டும் செல்லும் பாக்கியம் கிடைத்தது.


புராதனமான கோவில். 192 அடி  உயரமுள்ள கிழக்கு கோபுரம் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் உயரமான  கோபுரத்தை உடைய ஒன்று. கருடாழ்வாரை சேவித்துக் கொண்டு மூலவரை தரிசிக்க உள்ளே செல்கிறோம். எந்த வைணவ கோவிலிலும் இல்லாத வழக்கமாய் அர்த்த மண்டபத்தில் விஷ்ணு துர்க்கை காட்சி அளிக்கிறாள். உலகளந்த அண்ணனுக்கு காவலாம் தங்கை!!  சுயம்பு உருவம் என்றார் பட்டாச்சாரியார். கிருஷ்ணன் அவதரித்த பொழுது அவனோடு அவதரித்த மாயாதான் இங்கே விஷ்ணு துர்கையாக எழுந்தருளியிருக்கிறாள் என்றார். தன்னைவணங்கும் பக்தர்களுக்கு கல்வி, உத்யோக ப்ராப்தி, திருமண பேறு, குழந்தை பாக்யம் என அணித்தையும் தருகிறவளாம். 

அவளை வணங்கி உள்ளே செல்கிறோம். பெருமாளின் த்ரிவிக்ரம கோலத்தை தரிசிக்க விரும்பிய ம்ருகண்டு முனிவருக்கு அவரின் தவத்தை மெச்சி பெருமாள் அளித்த தரிசனம்.  அடடா! என்ன திருக்கோலம்! பிரும்மாண்டமாய், இடது திருவடியை தரையில் ஊன்றி, வலது திருவடியை உயர்த்தி, வலது கையில் சங்கும் இடது கையில் சக்கரமும் ஏந்தி புன்னகை தவழும் திருமுகத்தோடு 20 அடி உயர மேனி பார்க்க பார்க்க பரவசமூட்டுகிறது! உயர்த்திய திருவடிக்கருகே மஹாலட்சுமி, உயர்த்திய திருவடியின் கீழே மஹாபலி, ஆதிசேஷன்,இடது திருவடியை பூஜிக்கும் பிரும்மா என்று அற்புத கோலம்!  அதைத்தவிர முதல் மூன்று ஆழ்வார்கள் மற்றும் மிருகண்டு முனிவர் பெருமாளுக்கு இடது புறம் இருக்கிறார்கள். பிரகாரத்தில் தனி சந்நிதியில் புஷ்பவல்லி தாயார். மற்ற கோவில்களில் பார்க்க முடியாத ஒரு அதிசயம், கொடி மரத்திற்கு எதிரே சற்று உயரத்தில் ஒரு சாளரம் போன்ற அமைப்பில் கையில் வெண்ணெய் ஏந்தியபடி நிற்கும் கண்ணனையும் காண முடியும். பின்புறத்தில் வாமன மூர்தியையும்தரிசிக்கலாம். பின்புறம் வாமன மூர்த்தி காட்சியளிக்கிறார். 
இந்த கோவிலின் மற்ற சிறப்புகள், 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்று. அதே போல பஞ்ச கிருஷ்னாரண்ய ஷேத்ரங்களுள் ஒன்று. திவ்ய ப்ரபந்தம் தோன்றிய இடம். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. சாதாரணமாக எல்லா கோவில்களிலும் இருப்பதை போல வலது கையில் சக்கரம், இடது கையில் சங்கு என்றில்லாமல்,மாற்றி வலது கையில் சங்கை ஏந்தியிருப்பதால் ஞானத்தை அருளக் கூடியவர் என்று நம்பிக்கை. 

புன்னகை தவழும் பெருமாளின் மலர்ந்த முகத்தை தரிசனம் செய்தால் நம் கவலைகள் மறையும் என்று கோவில் தலபுராணம் தெரிவிக்கிறது. உண்மைதான்! உலகளந்த பெருமாளின் அழகை காணும் போது ,
மையோ, மரகதமோ, மறி
     கடலோ, மழை முகிலோ, 
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர்
     அழியா அழகு உடையான். 

என்னும் கம்ப ராமாயணப் பாடல் நினைவுக்கு வருகிறது.  ராமனின் அழகை வர்ணிக்க முயன்ற கம்பர் முடியாமல் தோற்றுப்  போய்  "ஐயோ! இவன் அழகை எப்படி சொல்வேன்?" என்று முடித்திருப்பார். அதுதான் நினைவுக்கு வருகிறது. இந்தக் கால இளசுகளின் பாஷையில் சொன்னால்,"சான்சே இல்ல, அல்டிமேட்!"

பெருமாளின் திருமுகத்தைப் பார்க்கப் பார்க்க நம் மனதில் ஆனந்தம் பெருகுகிறது. எங்கே ஆனந்தம் இருக்கிறதோ அங்கே கவலைகள் இருக்குமா என்ன? ஒரு முறை திருகோவிலூர் சென்று உலகளந்த பெருமாளை தரிசித்து ஆனந்தம் அடையுங்கள்! விழுபுரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் திருக்கோவிலூருக்கு விழுப்புரதிலிருந்து ஏராள பேருந்துகள் உள்ளன! திருவண்ணாமாயிலிருந்தும் செல்லலாம். 

ஒரே ஒரு குறை, மூலவரை முழுமையாக தரிசிக்க முடியாமல் அவருக்கு முன்னால் ஒரு பெஞ்ச் போட்டு, அதில் உற்சவரை எழுந்தருள செய்திருக்கிறார்கள். திருவடியை குனிந்து தரிசிக்க வேண்டும். பெருமாளுக்கு வலது புறம் இருக்கும் மஹாலட்சுமி, மற்றும் பிரும்மாவையும்,  இடது புறம் இருக்கும் முதலாழ்வார்களையும், மிருகண்டு முனிவரையும் நாம் நமக்கு இரண்டு புறங்களிலும்  இருக்கும் தூண்களுக்கு 
அருகில் சென்று தரிசிக்க வேண்டும்.   அர்ச்சகர் காட்டும் அரை நிமிட தீபாதாரணைக்குள் கருவறையின் இருட்டிற்கு நம் கண்கள் பழகி, தரிசனம் செய்வது கஷ்டமாக இருக்கிறது, இதற்கு ஏதாவது செய்யலாம்.

Wednesday, July 31, 2024

ஆதி திருவரங்கம்

ஆதி திருவரங்கம்


திருவண்ணாமலை கோவிலில் தரிசனத்தை முடித்துக்கொண்டு, எங்களுக்கு தரிசனம் செய்வித்த அன்பர் வீட்டிற்குச் சென்று விட்டு வந்ததில் ஆஸ்ரமங்கள் எல்லாம் மூடி விட்டன, அதனால் நேராக ஆதி திருவரங்கம் சென்றோம். ஆதி திருவரங்கம் கோவில் காலை ஆறு மணிக்கு திறந்தால் இரவு எட்டு மணி வரை திறந்துதான் இருக்கும். நடுவில் நடை சாத்த மாட்டார்கள்.

இந்த கோவில் ஸ்ரீரெங்கத்திற்கும் முற்பட்டது. அதனால்தான் ஆதி திருவரங்கம் என்று பெயர். பாம்பணை மேல் பள்ளிகொண்ட பிரும்மாண்டமான ரங்கனாதர். 29 அடி நவபாஷண திருமேனியாம்! தாயாரின் மடியில் தலை வைத்து சயனித்திருக்கிறார். அவருடைய கால்மாட்டில் பூமா தேவி. தலைக்கு கீழே அவரை வணங்கியபடி கருடன். வலது கரத்தை தலைக்கு அணையாக கொடுத்து, இடது கை சற்று உயர்த்தி, நான்கு விரல்களை மடக்கியபடி உள்ளன. இது பிரம்மாவிற்கு உபதேசம் செய்யும் கோலம் என்றும், நான்கு விரல்கள் நான்கு வேதங்களை குறிக்கின்றன என்றும் கருத்துகள் உண்டு. கைக்கு அருகில் பிரும்மா.

சோமுகன் என்னும் அசுரன் பிரும்மாவிடமிருந்து வேதங்களை அபகரித்து சென்றுவிட, அவனை மத்ஸ்ய(மீன்)அவதாரம் எடுத்து, சோமுகனை அழித்து வேதங்களை மீட்டுக் கொடுத்து விட்டு ஓய்வெடுத்துக் கொள்ள, தாயாரின் மடிமீது தலை வைத்து படுத்ததாக ஐதீகம். தனி சன்னிதியில் கோவில் கொண்டுள்ள ரங்கநாயகி தாயார் படிதாண்டா பத்தினி. பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால்தான் இந்தக் கோவிலுக்கு வர முடியுமாம்.

தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்த கோவில் பராந்தக சோழனால் திருப்பணி செய்யப்பட்டதாம். பின்னர் விஜயநகர மன்னர்களால் விரிவு செய்யப்பட்டதாம். தற்பொழுது கும்பாபிஷேகத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.


கோவில் வாசலில் செங்கலால் கட்டப்பட்ட ஒரு பெரிய குதிர்(பத்தாயம்) இருக்கிறது. அந்தக் காலத்தில் தானியங்களை இதில் சேமித்து வைத்து, பஞ்சகாலத்தில் எடுத்து மக்களுக்கு வழங்குவார்களாம். இது உள்ளுக்குள் மூன்று அடுக்குகளாக அமைந்திருக்கும், கீழே நெல், நடுவில் கம்பு, மேலே கேழ்வரகு சேமிப்பார்கள் என்றும் கூறுகிறார்கள்.  

இப்படிப்பட்ட புராதன பெருமை வாய்ந்த கோவில்களுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று காட்ட வேண்டும்.