கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, August 2, 2021

வாழ்க்கையும் கிரிக்கெட்டும்

 வாழ்க்கையும் கிரிக்கெட்டும் 


ஜெயராம சர்மா தன்னுடைய உபந்யாஸத்தில் வாழ்க்கையை கிரிக்கெட்டோடு ஒப்பிட்டு  வேதாந்த கிரிக்கெட் என்று ஒன்று கூறுவார். சமீபத்தில் நான் கேட்ட யூ டியூப் ஒன்றில் சுகி சிவம் அவர்களும் வாழ்க்கையை கிரிக்கெட்டோடு ஒப்பிட்டு பேசியிருந்தது சிறப்பாக இருந்தது. 


முதலில் ஒருவன் பேட்டை எடுத்துக் கொண்டு வருகிறான், அவனை அவுட் ஆக்க இன்னொருவன் பந்தை எடுத்துக் கொண்டு வருகிறான், இது ஒத்தைக்கு ஒத்தை சரி,  அவனை ஒழித்துக் கட்ட சுற்றி ஒரு பதினோரு பேர்கள்  நிற்கிறார்களே..? நாம் வெற்றி அடையக் கூடாது என்று பலபேர் முயற்சி செய்வார்கள். 

நம்மோடு சேர்ந்து ஆட வந்திருக்கும்  இன்னொரு பேட்ஸ்மேன் நம்மை அழைக்கிறானே என்று ஓடத் துவங்குவோம், அவன் ஓடி வராமல் திரும்ப போய் தன்னிடத்தை  ஸ்திரப்படுத்திக்  கொண்டு விடுவான், நாம் அவுட் ஆகி விடுவோம். நம் எதிரிகளால்தான் நமக்கு தோல்வி என்று கூறி விட முடியாது, சில சமயங்களில் நம்மைச் சேர்ந்தவனே நம்மை கவிழ்த்து விடுவான்  என்பதற்கு உதாரணமாக இதைச் சொல்லலாம். 

இந்த பதினோரு பேர் வந்தது இருக்கட்டும், ஒரு பத்தாயிரம் பேர்கள் வந்திருக்கிறார்களே? அவர்கள் நான்கு ரன்கள் அடித்தாலும் ஆரவாரம் செய்கிறார்கள், அவுட் ஆனாலும் ஆரவாரம் செய்கிறார்கள். 'வாழ்ந்தாலும் பேசும், தாழ்ந்தாலும் ஏசும்..'  என்று ஒரு திரைப்பட பாடல் உண்டு. அதற்கு உதாரணம் இதுதான். நாம் என்ன செய்தாலும் கருத்து சொல்ல காத்திருப்பார்கள்.  ஆனால் அந்த பத்தாயிரம் பேர்களும் சேர்ந்து அவுட் என்று கத்தினாலும், அம்பயர் என்ற ஒற்றை ஆள் நாட் அவுட் என்று சைகை காட்டி விட்டால் அந்த பத்தாயிரம் பேர்களின் கூச்சலும் அடங்கி விடும். அசத்தியத்தின் குரல் எத்தனை வலிவுடையதாக  இருந்தாலும்,சத்தியத்தின் மெல்லிய குரல் அதை அடக்கி விடும் என்னும் அருமையான தத்துவம் இங்கே நிலை கொள்கிறது.