கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, October 26, 2023

நவராத்திரி அலப்பறைகள்

நவராத்திரி அலப்பறைகள்


எங்கள் குடியிருப்பில் நவராத்திரி நவராத்திரி முதல் நாள் ஒரு சிறப்பு பூஜை இருந்தது லலிதா சகஸ்ரநாம சகஸ்ரநாம பாராயணம், பக்தி பாடல்கள் என்று நடந்த பூஜையில் பிரசாத வினியோகமும் இருந்தது. சர்க்கரை பொங்கல், புளியோதரை, கேசரி, தயிர் சாதம் என்று ஐட்டங்கள். "புளியோதரைக்கு தொட்டுக் கொள்ள ஏதாவது இருக்கிறதா"? என்று கேட்டார் ஒருவர். எனக்கு படித்த ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.

நங்கநல்லூர் ஆஞ்சனேயர் கோவில் கட்டி முடித்த புதிதில் அதன் நிர்வாகி ஒருவர் மஹாபெரியவரை பார்க்கச் சென்றாராம். சென்றவர் மஹா பெரியவரிடம், "நாங்கள்,கோவிலில் , சாம்பார் சாதம், புளியோதரை, தயிர் சாதம் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று போட்டு, வருகிறவர்களுக்கு தாராளமாக வயிறு ரொம்பும் அளவு வினியோகிக்கிறோம்" என்று பெருமையாக சொல்லிக் கொண்டாராம். அதற்கு பெரியவர், "பிரசாதமெல்லாம் நிறைய கொடுக்க கூடாது, கொஞ்சமாகத்தான் கொடுக்க வேண்டும், நீயே புரிந்து கொள்வாய் என்றாராம். இவருக்கு கொஞ்சம் ஏமாற்றமாக போய் விட்டதாம். 

கோவிலில் வழக்கம் போல பிரசாத வினியோகம் தொடர்ந்து கொண்டிருந்ததாம். ஒரு நாள் காலையில் சாம்பார் சாதம், தயிர் சாதம் வழங்கியிருக்கிறார்கள். அதை சாப்பிட்ட ஒருவர், இவரிடம் வந்து, " நீங்க என்ன பண்ணுங்க.. சாம்பார் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள ஒரு பொரியலும், தயிர் சாதத்தோடு ஊறுகாயும் போட்டு விடுங்கள், சாப்பிட சௌகரியமாக இருக்கும்" என்றாராம். அப்போதுதான் அவருக்கு பெரியவா சொன்னது புரிந்ததாம். எல்லோருக்கும் புரிய வேண்டும். 

நேற்று சரஸ்வதி பூஜை, உறவினர் ஒருவர் கிரக பிரவேசம் வைத்திருந்தார். அவர்கள் பூஜை மணி கேட்டதால் கொடுத்தோம். கிரக பிரவேசம் அதிகாலையில் முடிந்து விடும், அதன் பிறகு நம் வீட்டு பூஜைக்கு மணியை கொண்டு வந்து விடலாம் என்று நினைத்தோம், ஆனால் எடுத்து வர மறந்து விட்டோம். நைவேத்தியம் செய்யும் பொழுதும், தீபாராதனையின் பொழுதும் மணி அடிக்க வேண்டுமே..? என்ன செய்வது? என்று யோசித்தேன். இருக்கவே இருக்கிறது யூ ட்யூப், அதில் மணியை ஒலிக்கச் செய்து விட்டேன்.. எ..ப்..பூ..டி..?! எங்களுக்குத் தெரிந்த ஒரு தமிழ் பிராமண பையன் வட இந்தியப் பெண்ணை மணந்து கொண்டான். தென்னிந்திய முறைப்படி திருமணம். ஆனால் திருமணத்தில் நாதஸ்வரம் கிடையாது. கெட்டி மேளம் உட்பட D.J. வைத்தே சமாளித்தார்கள். வாழ்க டெக்னாலஜி!