கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, October 2, 2011

சில உறுத்தல்கள்

விநாயக சதுர்த்தி அன்று எங்கள் வீட்டிற்க்கு அருகில் இருக்கும் ஒரு பிள்ளையார் கோவிலுக்குச் சென்றிருந்தேன். நல்ல கும்பல்,அர்ச்சகரோ வயதானவர். களைப்படைந்து விட்டார். விநாயக சதுர்த்தி விழா கொண்டாட்ட கமிட்டி உறுப்பினர் ஒருவர் அர்ச்சகருக்கு உதவியாக இருந்தார். அயர்ச்சியை போக்கி கொள்ள பழச்சாறு வாங்கி வந்த அவர் சுவாமி
சந்நிதியிலேயே எச்சில் செய்து குடித்தார். அவரைத் தொடர்ந்து அர்ச்சகரும்
பழச்சாற்றினை எச்சில் செய்து குடித்து விட்டு கைகளை கழுவிக்கொள்ளமலேயே 
எல்லோருக்கும் விபூதி,குங்குமம் கொடுக்கத் தொடங்கினார். அவருக்கு உதவியாக 
இருந்தவரும் அப்படியே எல்லோருக்கும் பூ கொடுத்தார்.  கோவிலில் எச்சில் 
செய்யக் கூடாது என்னும் சிறிய அளவில் கூட ஆச்சாரத்தை  கடை பிடிக்க முடியாமல் போய் விட்டது... இதை சொன்னால் இதற்கும் ஜாதி
சாயம் பூசி விடுவார்கள்...    
 
தற்பொழுது சமையல் நிகழ்ச்சி ஒளி பரப்பாத சானலே கிடையாது... அதில் ஒரு சானலில் சமையல் கற்று கொடுக்கும் பெண், இந்த வெசலில் மாவு போட்டு, சால்ட் ஆட் பண்ணுங்க, அப்புறம் லிட்டில் வாட்டர் ஆட் பண்ணுங்க,
நல்லா மிக்ஸ் பண்ணுங்க, என்று சகிக்க முடியாமல் தமிழையும் ஆங்கிலத்தையும் 
கலந்து பேசி படுத்துகிறார்.. அதை திருத்துவார் இல்லை..இது மட்டுமில்லை, அந்த 
சானலில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஒரு பெண்,  நீங்கல்  தெரிந்து கொல்ல உதவும் என்று தமிழை தினமும் கொலை  செய்து  கொண்டே  இருக்கிறார்.. சேனல் எது தெரியுமா? தமிழை செம்மொழியாக்கிய கலைஞர் டிவி தான்.     
  

Sunday, September 25, 2011

mangatha - review

மங்காத்தா  


தன்னுடைய ஐம்பதாவது படம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று அஜித் விரும்பியதில் தவறில்லை. அதற்காக இப்படியா?  நாயகனில்  தொடங்கிய anti hero  சகாப்தம்  இன்னும்  முடிந்தபாடில்லை.  நானும் எவ்வளவு நாளைக்குத்தான் நல்லவனாவே  நடிக்கிறது? என்கிறார் 
தல. படம் முழுக்க விஸ்கி ஆறாக ஓடுகிறது. அஜித் புகைக்கும் சிகரெட்டால் 
படம் பார்க்கும் நமக்கு  தொண்டை  கமருகிறது.   கெட்டவனாக  நன்றாகதான்  நடித்திருக்கிறார். பின்பாதியில் ஒலிக்கும் பீப் பீப் ஒலிகள் படத்தில்
இறைந்து கிடக்கும் கெட்ட வார்த்தைகளை அடையாளம்  காட்டுகின்றன. 
அந்த கிளைமாக்ஸ்.... கொடுமைடா சாமி! 

பிரேம்ஜி அண்ணனுடைய  படத்தில்  மட்டும்தான்  தன்  நகைச்சுவை  திறமையை கட்டுவது என்று முடிவு கட்டியிருக்கிறார் போலிருக்கிறது!
சரோஜா பாணியிலேயே இருந்தாலும் படத்தின் முன் பாதி இவரால் கலகலப்பாக செல்கிறது.

அளந்து நடிக்கும் த்ரிஷா, அளவில்லாமல் கவர்ச்சி காட்ட லக்ஷ்மி ராய்,
இரண்டே காட்சிகளில் வந்து போகும் அழகான அஞ்சலி மற்றும் ஆண்ட்ரியா என்று நான்கு நாயகிகள் இருந்தும் ஒருவர்க்கும் முக்கியத்துவம் கிடையாது.
துணை வில்லனாக ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் வேறு!

பாடல்களில் கோட்டை விட்டாலும் பின்னணியில் திறமை காட்டியிருக்கிறார் 
யுவன் ஷங்கர் ராஜா.

செலவழிக்க அஞ்சாத தயாரிப்பாளர், வித்தியாசமாக நடிக்க தயாராக கதாநாயகன்,
கவர்ச்சியும் திறமையும் கொண்ட கதாநாயகிகள், தேர்ந்த தொழில் நுட்ப கலைஞர்கள்
என்று அத்தனயயும் அமைந்திருந்தும் இப்படியா  ஒரு  படத்தை  எடுக்க  வேண்டும்?

வெங்கட் பிரபுவிற்கு கிரிகெட் மீது அலாதி ப்ரியம் என்பது புரிகிறது. ஆனால் போலீஸ்காரர்கள்  மீது  என்ன  கோபம்?  அவருடைய  அடுத்த  படத்திலாவது கிரிகெட்டையும்  காவலர்களை  வில்லனாக  சித்தரிப்பதையும்  விட்டு விட்டு வேறு கதையை  யோசிப்பது  அவருக்கும்  நல்லது  நமக்கும்  நல்லது.

சாதாரணமாக சோஷியல் கமிட்மென்ட் இல்லாத இப்படிப்பட்ட படங்களைப்
பார்த்தால் எனக்கு மிகவும் கோபம் வரும். ஆனால் இந்த படத்தை பார்த்து எனக்கு கோபமோ வருத்தமோ வரவில்லை காரணம் சர்கஸில் பபூன் செய்யும் சேட்டைகள் அருவருப்பாக இருந்தாலும் சிரிப்போம் அல்லது பேசாமல்
இருந்து விடுவோம் அதற்காக கோபமா படுவோம்? உங்களிடம் நேரமும், பணமும், அவற்றை செலவழிக்க மனமும் இருந்தால்
மங்காத்தவுக்கு செல்லலாம்.     





  




Monday, September 5, 2011

தமிழ் நாட்டின் சிறப்பான பிள்ளையார்கள் - II  


திருவலஞ்சுழி ஸ்வேத(வெள்ளை) விநாயகர்:

கும்ம்பகோனத்திலிருந்து ஆறு கிலோ மீடர் தொலைவில் உள்ளது திருவலஞ்சுழி     என்னும் கிராமம்.  காவேரி    இங்கு வலப்புறமாக சுழித்து ஓடுவதால் இவ்விடம் திரு வலஞ்சுழி என்று அழைக்கப்படுகிறது.காவேரி கரையில் அமைந்துள்ள ஆலயங்களுள் முக்கியமான ஒன்று 
ப்ரஹன்நாயகி சமேத கபர்டநீஸ்வரர் கோவில். பிரதான மூர்த்தி சிவா பெருமான்தன் என்றாலும் 
இங்கு   விநாயகருக்கே சிறப்பு.  

புராண பின்னணி:

தேவர்கள்,அசுரர்களையும் சேர்த்க்கொண்டு பாற்கடலை கடைந்த பொழுது, நீண்ட நேரம் அமிர்தம் வராமல் போக, பாற்கடலை    கடைய ஆரம்பிக்கும் முன் தாங்கள் விநாயகரை வழிபடாததால்தான் அமிர்தம்  கிடைக்கவில்லை என்று உணர்ந்த இந்திரன் பாற்கடலில் இருந்த நுரையைக் கொண்டு ஒரு விநாயகர் பிரதிமையை உருவாக்கி இங்கு 
வழிபட்டதாக வரலாறு. கடல் நுரையால்  உருவானவர்  என்பதால்  இவருக்கு அபிஷேகங்கள் கிடையாது. 
இந்தக் கோவிலில் இருக்கும் பலகணி மிகவும் சிறப்பான சிற்ப வேலைபாடுகள் கொண்டது.

அச்சரபாக்கம் அச்சுமுறி விநாயகர்:


சென்னையிலிருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் மேல் மருவத்தூருக்கு அருகே உள்ளது அச்சரப்பாக்கம் அச்சுமுறி விநாயகர் ஆலயம்.

புராண பெருமை:

திரிபுர சம்ஹாரத்திர்க்கு கிளம்பிய சிவ பெருமான் விநாயகரை அலட்சியம் 
செய்து புறப்பட, அவரது ரதத்தின் அச்சினை விநாயகர் முறித்த இடம். அதன் பிறகு விநாயகரின் மகத்துவத்தை புரிந்து கொண்ட சிவ பெருமான் விநாயகரை உரிய முறையில் வழிபட்டு திரிபுர தகனம் செய்ததாக புராணம். இதைத்தான் அருணகிரிநாதர் தன் திருப்புகழில் 'முப்புரம் எரி
செய்த அச்சிவன் உரை ரதம் அச்சது பொடி செய்த அதி தீரா...' என்று பாடி உள்ளார்.

இவரை வழிபட, நாம் தொடுங்கும்  செயல்கள்  தடை இன்றி  நிறைவேறும்  என்பது நம்பிக்கை.   

திரு செங்காட்டங்குடி சிந்தூர விநாயகர்:

தஞ்சை மாவட்டத்தில் திருவெண்காட்டிற்கு அருகில்    இருக்கும்  மற்றொரு  புராண பின்னணி கொண்ட பிள்ளையார்  இங்கிருக்கும்  சிந்தூர  விநாயகர்.  கஜ முகாசுரனை விநாயகர்  சம்ஹாரம் செய்த பொழுது அவன்  உடலிலிருந்து  பீரிட்ட ரத்தம் இந்த காட்டில் இருந்த மரங்களின் மீதெல்லாம் தெளித்து  இந்த  வனப் பகுதியையே சென்னிரமாக்கியதால் இந்தப் பகுதி (திரு)செங்காட்டங் குடி   என்று பெயர் பெற்றது.  


திருநாரையூர் பொல்லாப் (பொள்ளா) பிள்ளையார்:

கடலூர் மாவட்டத்தில்,  காட்டுமன்னார்  கோயிலுக்கு  அருகில்  இருக்கிறது  திருநாரையூர் பொல்லாபிள்ளையார் கோவில். இந்த பழமையான கோவில் தேவார பாடல் பெற்ற  திருத்தலங்களுள் ஒன்றாகும்.


பொள்ளாப்  பிள்ளையார் என்பதற்கு உளி கொண்டு பொள்ளப் படாத அதாவது செதுக்கப்படாத திரு மேனி என்று பொருள். அதாவது இங்கிருக்கும் விநாயகர்  சுயம்பு  மூர்த்தி.  தேவாரத்தை  தொகுத்த  நம்பி  ஆண்டர் நம்பிக்கு பிரத்யட்சமாக  அருள் செய்தவர் இவர்.

இந்த கோவிலுக்குச் செல்ல சிதம்பரத்திலிருந்து பேருந்து வசதி உண்டு.

குறிப்பிடப்பட்ட இந்த   எட்டு விநாயகர் கோவில்களைத் தவிர மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் இருக்கும் முக்குருணி விநாயகர், திருவாரூரில் இருக்கும்  தீக்ஷதரால்  பாடப்பெற்ற  மூலாதார  கணபதி,  திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில்  இருக்கும் பள்ளத்து விநாயகர் ஆகிய இவர்களும் சிறப்பான சக்தி உடையவர்கள். சமயம் கிடைக்கும் 
பொழுது இவர்களைத் தொழுது அருள்    பெறுவோம்.

 








  


Friday, August 19, 2011

தமிழகத்தின் சிறப்பான பிள்ளையார் கோவில்கள்


தமிழகத்தின் சிறப்பான பிள்ளையார் கோவில்கள்

மகாராஷ்டிரத்தில் 'அஷ்ட விநாயக் மந்திர்' என்று  விநாயகருக்கான    புகழ் பெற்ற  எட்டு கோவில்கள் உண்டு. அதைப் போல நம் தமிழகத்தில்  உள்ள எட்டு பிரசித்தி பெற்ற பிள்ளையார் 
கோவில்களைப் பற்றி பார்ப்போமா..?

திருச்சி உச்சி பிள்ளையார் கோவில்:

திருச்சி என்றால் உச்சி பிள்ளையார் கோவில், உச்சி பிள்ளையார்
கோவில் என்றால் திருச்சி என்று  பிரிக்க  முடியாதபடி 
திருச்சியோடு  பின்னி  பிணைந்தது இங்கிருக்கும்  உச்சி பிள்ளையார் கோவில். 

நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த கோவில் இரு கோவில்களை அடக்கியது மேலே தாயுமானவ சுவாமி மற்றும் உச்சி பிள்ளையார்
கோவில், கீழே மாணிக்க விநாயகர் ஆலயம். 

சரித்திரப் பின்னணி :  

திருச்சி உச்சி பிள்ளையார் கோவில் அமைந்திருக்கும் குன்று உலகிலேயே மிகவும் பழமையான பாறை அதாவது சுமார் 
30 லட்சம் வருடங்களுக்கு  முந்தைய பாறை ஆகும். 
புராதனமானதை  கல்  தோன்றி மண் தோன்றா காலத்தே 
என்பார்கள் அப்படி முதல் முதலாக கல் தோன்றிய பொழுதே தோன்றியது இந்த  கோவில் அமைந்திருக்கும்  குன்று.
85 மீடர் உயரமுள்ள இந்த குன்று கோவில் பல்லவர்கள் காலத்தை சேர்ந்தது என்று கூறப்பட்டாலும் முழுமையாக 
கட்டி முடிக்கப்பட்டது மதுரையை  ஆண்ட நாயக்கர்கள் காலத்தில்தான்.

புராண கதை:

ராவண வதம்  முடிந்து  ஸ்ரீ ராம  பட்டாபிஷேகத்தில்  கலந்து  கொண்டு விட்டு  இலங்கை  திரும்பும்  முன்  ராமனின்  நினைவாக  ஏதாவது  ஒரு  பொருள்  வேண்டும் என்று விபீஷணன் கேட்க, ஸ்ரீ இராமசந்திர மூர்த்தி அவர்களின் குல  தெய்வமான  ஆதி  ரெங்கநாதரின்  விக்ரஹத்தை  விபிஷணனிடம் அந்த விக்ரஹத்தை  எங்கேயும் கீழே வைத்துவிடக் 
கூடாது  எனும்  நிபந்தனையோடு  தருகிறார்.  புஷ்பக  விமானத்தில்  திருச்சி  வழியே  இலங்கை  செல்லும்  பொழுது   ஸ்ரீரங்கத்தின்  இயற்கை அழகில் மனதை பறி கொடுத்த  ரெங்கநாதர்  அங்கேயே தங்கி விட முடிவெடுத்து விபீஷணனுக்கு 
இயற்கை  உபாதையை உண்டு பண்ணுகிறார். அந்த நேரத்தில் 
அரங்கனின் விக்ரஹத்தை   என்ன  செய்வது  என்று  யோசித்த  விபீஷணன் முன் ஒரு சிறுவன்  வடிவில் விநாயகர் தோன்றி 
தான்  அந்த விக்ரஹத்தை பத்திரமாக பார்த்துக்  கொள்வதாக  கூறி பெற்றுக் கொண்டு, பின் விபீஷணன்   வரும் முன்
கீழே வைத்து விடுகிறார், இதனால் கோபம் கொண்ட
விபீஷணன் அந்தச் சிறுவனை தலையில் குட்டுவதற்காக 
வரும் பொழுது அவரிடமிருந்து தப்பித்து ஓடி இந்த  மலையில்  
வந்து  அமர்ந்து  கொண்டதாக  புராண  வழி  செய்தி.  

நகரின் மத்தியில் இப்படி ஒரு  அழகான கோவிலை  வேறு  எந்த  
ஊரிலும்  பார்க்க முடியாது. உச்சி பிள்ளையார் சுற்றுலா
பயணிகளுக்கும் மாணிக்க விநாயகர்   சின்ன கடை வீதியில் 
இருக்கும் வியாபாரிகளுக்கும் விருப்பமான கடவுளர்.

கணபதி அக்ரஹாரம்  மஹா கணபதி:

திருவையாறு வழியாக கும்பகோணம் செல்லும் பாதையில் உள்ள சிறிய கிராமம் 
கணபதி அக்ரஹாரம். இங்கிருக்கும் விநாயகரை அகஸ்திய முனிவர் பிரதிஷ்டை 
செய்ததாகவும் கௌதம ரிஷியால் வணங்கப்பட்டவராகவும் கருதப்படும் புராதன 
Maha ganapathy of Ganapathy Agraharam

பெருமை வாய்ந்த கோவில் என்றாலும் அளவில் சிறியதாகவே இருக்கிறது. நன்றாக 
பராமரிக்கப்படுகிறது.

இந்த ஊரில் விநாயக சதுர்த்தி வெகு பிரசித்தமான விழா! மற்ற ஊர்களைப் போல விநாயக சதுர்த்தி அன்று மண் பிள்ளையாரை வாங்கி பூஜிக்கும் பழக்கம் 
இந்த ஊரைச் சேர்ந்தவர்களுக்கு கிடையாது. அந்த ஊர்க்காரர்கள் எல்லோருமே 
கோவிலில்தான் அர்ச்சனை செய்வார்கள். அதோடு மட்டுமல்லாமல் எல்லார் 
வீட்டிலிருந்தும் வரும் பிரசாந்தங்களை  ஒன்றாக  கலந்து  பொதுவாக  பிள்ளையாருக்கு  நிவேதனம்  செய்து   பிறகு  அதனை  விநியோகம்  செய்வது  இந்த  ஊருக்கே உடைய சிறப்பு. முன்பெல்லாம் சொத்து வழுக்குகள், மற்றும் குடும்ப தகராறுகள் போன்றவை பிள்ளையார் சதுர்த்தி அன்று தீர்த்து வைக்கப் படும் அதன் பிறகே பூஜை, பிரசாத விநியோகம் எல்லாம்
என்று என் பாட்டனார் கூற கேட்டிருக்கிறேன்... இப்பொழுதும் அந்த  பழக்கம்
தொடர்கிறதா என்று தெரியவில்லை.

கணபதி அக்ரஹாரத்தை பூர்விகமாக கொண்டவர்களுக்கு (என்பிறந்த வீட்டைப் போல) பிள்ளையார் என்றால்  அங்கிருக்கும்   மகாகணபதிதான்,   வேறு விநாயக   மூர்தங்களைக் கூட வணங்க மாட்டோம் என்னும்  தீவிர  பக்தி  உடையவர்கள் ஆதலால், வீட்டில் பிள்ளையார்  படம் வைத்துக்கொள்ள மாட்டார்கள்.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்:

ப்ராசீனமான கோவிலாக இருந்தாலும் சமீபத்தில் பிரபலமடைந்த கோவில்களில் 
பிள்ளையார்பட்டியும் ஒன்று. தமிழகத்தின் பழமையான குடைவரை கோவில்களில்  
ஒன்றான இது பல்லவர்கள் காலத்தையது.  புதுகோட்டைக்கும்  காரைகுடிக்கும்  இடையே  திருகோஷ்டியூறைத்  தாண்டி  அமைந்துள்ளது  இவ்வூர். அழகான கோவில். சிறியகோவில் என்று கூற முடியாது.   நகரத்தார்களால்  நன்கு  பராமரிக்கப்படுகிறது. 

ஆறு அடி உயரமுள்ள குடைவரை சிற்பம்.  இங்கிருக்கும்  பிள்ளையாருக்கு   எல்லா விநாயகர் மூர்த்தங்களைப் போல   நான்கு  கரங்கள்   இல்லாமல்  இரண்டு கரங்கள்மட்டுமே உள்ளன. அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்து இடது கையை இடுப்பில் ஊன்றி    லிங்கத்தை ஏந்தியிருக்கும் அபூர்வ  திருக் கோலம்.  பகதர்களின் கோரிக்கைகள் அணைத்தையும் நிவேற்றுவதால் கற்பக விநாயகர் என்று வழங்கப்படும் இவருக்கு தேசி விநாயகர் என்றும்
ஒரு பெயர் உண்டு.

வலது   கையில் சிவ சிவ லிங்கத்தை தாங்கி இருப்பதால் இங்கு யாரோ ஒரு சித்தர் ஜீவ சமாதி அடைந்திருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. வலது பக்கம் சுழித்த தும்பிக்கை மற்றும் ஒரு விசேஷம்! கற்பக விநாயகர் தேசி விநாயகர் தேசி விநாயகர் என்றும்
அழைக்கப்படுகிறார்!

பிள்ளையார் பட்டியில் இருக்கும் கற்பக விநாயகருக்கே சிறப்பு என்றாலும் 
இங்கிருக்கும் மற்றொரு சிறப்பு   வாடா மலர் மங்கை  அம்மன்  உடனுறை   திருவீசர்,சிவகாமி அம்மன் உடனுறை மருதீசர்,  சௌந்தர நாயக அம்மன் உடனுறை செஞ்சடேஸ்வரர் எனும்  அனைவரும்  ஒரே  இடத்தில் காட்சி  அளிப்பதாகும்.   

இங்கிருக்கும் மருதீஸ்வரரை பசு ஒன்று பூஜித்ததாகவும், செல்வத்திற்கு 
அதிபதியான குபேரன் பூஜித்ததாகவும்  வரலாறு.          

புதுச்சேரி மணக்குள விநாயகர் :

புதுவை நகரில் அரவிந்தர் அன்னை ஆஸ்ரமத்திற்கு அருகில் இருக்கும் இக்கோவில் முந்நூறு வருடங்களுக்கு முந்தையது. புதுவை கடற்கரைக்கு அருகே குளம் போல மணல்  தேங்கி  இருந்த  பகுதியில் அமைந்திருந்ததால்  மணக்குள விநாயகர்  ஆலயம் என்ற பெயர் பெற்றது. பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சி நடந்து கொண்டிருந்த பொழுது இவ்வாலயத்தை இங்கிருந்து அப்புறப்படுத்த நினைத்த  அவர்கள்  பல  முறை  விநாயகர்  விக்ரஹத்தை  கடலில் வீசி எறிந்த பிறகும்  மறு நாளே அந்த விக்ரகம் மீண்டும் கோவிலில் 
காட்சி அளிக்க, விநாயகரின்   மகத்துவத்தை  புரிந்து  கொண்ட  அவர்கள்   கோவில்  இதே இடத்திலேயே   இருக்க உதவி புரிந்தனர்.



சிறிய ஆலயம் என்றாலும் நன்றாக பராமரிக்கப்படுகிறது. கோவிலின் உள்
சுவற்றில் விநாயகரின்  வெவ்வேறு  வடிவங்கள்  அழகான  ஓவியங்களாக  தீட்டப்பட்டுள்ளன. பிரகாரத்தில்  சுப்ரமணிருக்கும்  தனி  சந்நிதி  உள்ளது.  நீண்ட நாட்கள் உற்சவர் விக்ரகம் இல்லாமல் இருந்து 1964 ம் ஆண்டுதான் 
காஞ்சி பரமாச்சாரியாரின் ஆசியோடு உற்சவர்   சிலையும் பிரதிஷ்டை 
செய்யப்பட்டது. 

புதிதாக வாங்கும் வாகனங்களுக்கு இங்கே  பூஜை போடுவது சிறப்பாக
கருதப்படுகிறது.




Sunday, July 31, 2011

கசக்காத வேப்பிலை! மத்தூர் மகிஷாசுரமர்தினி



கசக்காத வேப்பிலை!  மத்தூர் மகிஷாசுரமர்தினி 



 
சென்னையிலிருந்து திருத்தணி வழியாக திருப்திக்கு செல்லும் வழியில் 
திருத்தணி தாண்டி   வரும்  ஒரு  சிறிய  கிராமம்  மத்தூர்.  பிரதான  சாலையிலிருந்து  இடது புறம் திரும்பி    ரயில்வே  லைனை  தாண்டி 
உடனே  வந்து  விடுகிறது  மஹிஷாசுரமர்தினி   கோவில்.

சிறிய கோவில். அலங்கார வளவைத் தாண்டி உள்ளே நுழைந்தால் 
இடது புறம் அர்ச்சனை  பொருள்களும்  பிரசாதங்களும்  விற்கும்  இரு  சிறிய கடைகள். வலது புறம் பெரிய அரச   மரத்தின்  கீழ் விநாயகர் சந்நிதி. அதைத்தாண்டி   நான்கு  படிகள்  ஏறினால்   ஒரு  பெரிய  மண்டபம் அதன் முடிவில் அம்பாள் சந்நிதி. 

இப்போது கோவில் இருக்கும் இடம் முன்பொரு  காலத்தில் மேடாக  விளங்கி இருக்கிறது. இங்கு வரும் சிலர் உணர்வு மேலீட்டு மயங்கி
விழ இங்கு   ஏதோ தெய்வீக அருள் இருக்கிறது என்று கருதிய கிராமத்தினர் இந்த இடத்தை 'சக்திமேடு'  என்று  அழைத்து  வந்தனர். 
1954  ம்  வருடம்  இரண்டாவது  இருப்பு பாதை போடும்  பணிக்காக  இங்கு  தோண்டிய  பொழுது 'டங் டங்'  என்று  ஒலி  எழும்ப  மேலும்  தோண்டி  அம்மனின்  திரு  உருவச்  சிலையை  அப்படியே  முழுவதுமாக  எடுத்து  அங்கேயே பிரதிஷ்டை செய்து   வழிபட  தொடங்கி  இருக்கிறார்கள்.  மெல்ல மெல்ல அம்மனின் மகத்துவம் பரவ இப்பொழுது தினசரி அன்னதானம் நடைபெறும் அளவிற்கு கோவில் விரிவடைந்துள்ளது.          

எட்டு கரங்களோடு காலடியில் மகிஷனை வதைத்தபடி ஆனால்
அதே சமயத்தில் கருணையும்  சௌந்தர்யமும்   வழியும்  திரு
முகத்தினளாய்  கிட்டத்தட்ட  ஐந்தரை  அடி  உயர  திரு  உருவம்.  மேல் இரண்டு கரங்களில் சங்கு,  சக்கரம்,  அடுத்த  இரு  கரங்கள்  மகிஷன் உடலில் பதிந்திருக்கும் சூலத்தை  பற்றியிருக்க   அடுத்த
இரு கரங்களில் வில்லும் அம்பும் ஏந்தி, கீழ் இரு கரங்களில்  கத்தியும்,  வாளும்  தாங்கி, "பார் மகிஷனை  அழித்து விட்டேன், உனக்கு வேறு  என்ன வேண்டும்?  என்று  கேட்பது  போல  எழுந்தருளி  இருக்கும் அம்பிகையை காணக் காண  நம்  மனதில்  படரும்  சாந்தியை அனுபவித்தே உணர  வேண்டும்.  தரிசனம்  முடிந்து  வெளியே  வந்ததும் அந்தக் கோவிலின் ஸ்தல விருக்ஷமான வேப்ப மரத்தின் வேப்பிலையை சிறப்பு பிரசாதமாக கொடுத்து சாப்பிடச் சொல்கிறார்கள்....  என்ன அதிசயம்! வேப்பிலையில் சிறிது   கூட  கசப்பு  இல்லை..!  மத்துரின்  மகத்துவம் இது என்கிறார்கள். அது மட்டுமா   அதிசயம்?  அன்னையை  வழிபட வழிபட நம் கர்ம  வினைப்பயன்கள்  என்னும்  கசப்பே  மாறி விடுகிறதே..!   அம்பிகையை துதித்து   அருள் பெறுவோம்!    
     
குறிப்பு: அம்மனுக்கு உகந்த ஆடி  மாதத்தில்  அம்மனைப்  பற்றி  எழுத  வேண்டும் என்றெல்லாம் எண்ணவே இல்லை, ஆனாலும் மத்தூர்   மகிஷாசுரமர்திநியைப்பற்றி எழுத நேர்ந்தது அவள் அருளே! அவள் நிகழ்த்திய அற்புதமே!      
        
         
     

Friday, June 24, 2011

innum konjam kavidhai!

புற நகர் குடியிருப்பு! 



 
 
அளவற்ற காற்று அருகாமையில் அங்காடி
பத்து நிமிட நடையில் பேருந்தில் பயணிக்கலாம்
நிலத்தடியில் நீருக்கு பஞ்சமில்லை
என்று பல கூறி அடுக்கு மாடி குடியிருப்பொன்றில்
வீடொன்றினை  விற்று விடும் வித்தகன் 
சொல்வது  மிகையில்லை சொல்லாமல் விடுவது:
இசை என்ற பெயரில் இரைச்சலாய்  ஓசை
விரும்பினாலும் வெறுத்தாலும் வறுபடும் மீன்வாசம்
உங்கள் வீட்டு வாசலில் அடுத்த வீட்டு காலணிகள்
பால் பாக்கெட் திருட்டு, பறிபோகும் செய்தித் தாள்
இன்னும் 
ஜாதிச் சண்டை, மொழிச் சண்டை, இனச் சண்டை 
இத்தனையும் உண்டு எல்லா குடியிருப்புகளிலும்...!