கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, June 4, 2020

நூல் விமர்சனம்

நூல் விமர்சனம் 




புஸ்தகா மூலம் இரண்டு மின் நூல்களை படித்து முடித்தேன். ஒன்று சாவியின் 'கனவுப் பாலம்' மற்றது  கடுகு சாரின் 'கேரக்டரோ கேரக்டர்' . 

நான் 'வாஷிங்டனில் திருமணம்' தவிர சாவியின் எழுத்துக்களை அதிகம் படித்ததில்லை. அது கூட மிகவும் சிறு வயதில் படித்தது. அவருடைய விசிறி வாழையை நிறைய பேர் சிலாகித்து கேட்டிருக்கிறேன். சமீபத்தில் பசுபதிவுகளில் 'பெங்களூர் மெயில்' படித்து வியந்தேன். கல்கி பாணியில் அருமையான நகைச்சுவை சிறு கதை. 

கனவுப் பாலம் க்ரைம் த்ரில்லர். சாவியின் அபிமான தேசமான ஜப்பானில் நிகழ்வதாக கதை அமைக்கப்பட்டிருக்கிறது.  காதலும், க்ரைமும் கலந்த கதையில் நகைச்சுவைக்கு இடம் இல்லை. சம்பவங்களும் அத்தனை த்ரில்லாக இல்லாதது ஒரு குறைதான். நடையில் ஆங்காங்கே சுஜாதாவின் சாயல் தெரிவது ஒரு ஆச்சர்யம்.



கேரக்டரோ கேரக்டர் கடுகு என்னும் அகஸ்தியன் அவருக்கே உரிய நகைச்சுவை எல்லா கட்டுரைகளிலும் இழையோடுகிறது. முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கும் பாட்ஸ்மானைப்  போல முன்னுரையிலேயே விளாசித்தள்ளுகிறார்.

 "இந்தப் புத்தகத்தை படிக்காதவர்கள் பாராட்டுகிறார்கள், புத்தகம் அபாரம் போங்கள்"

"எப்பவும் 200 மில்லி போட்ட மாதிரி ஆடிக்கொண்டேயிருந்த என் வீட்டு மேஜையின் கீழ் உங்கள் புத்தகத்தை வைத்தேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள் மேஜை ஆடுவது நின்று விட்டது"   

கடுகு சாரின் நகைச்சுவை போட்டு உடைக்கும் ரகமோ, அல்லது மற்றவர்கள் மனதை காயப்படுத்தும் ரகமோ இல்லை. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போன்ற நாசூக்கான நகைச்சுவை. 

ராவ் பகதூர் ராமேசம் பற்றி, இவர் மாத்ருபூதத்திடம் பேசுவதும் ஒன்றுதான், தன்  கருத்துக்களை தன்னிடமே உரக்க பேசிக் கொள்வதும் ஒன்றுதான். மாத்ருபூதத்தின் பங்கு 5% என்றால்,மீதி 95% இவருடையதுதான்!

மாணிக்கம் என்னும் கொல்லத்துக்காரர் பற்றி பாவம் மாணிக்கம், நாலடி உயரத்துக்கு இவர் மேடை கட்டினால் அது அரை அடி சாய்ந்து இருக்கும்.அதைச் சரி செய்ய வேறு ஒரு கொல்லத்துக்காரர் தேவைப்படுவார். 

ஜெயம் என்னும் கேரக்டரைப் பற்றி, "ரைட்டர் லட்சுமி வந்திருக்காங்க,பை தி பை அவர் கவிதை எழுதுகிறவரா? நான் எங்கப்பா மேகசீன் படிக்கிறேன்?" என்பது மாதிரி பலரைப் பற்றி பல சமயங்களில் கேட்பார். சீர்காழியிடம், "ஓரம் போ பாட்டு பாடினது நீங்கள்தானே?" என்று கேட்பார். ஏன் சிவாஜியிடமே, 'என்ன சார் ஒரு அம்பது படத்திலாவது நடித்திருப்பீங்களா?' என்று கேட்டிருக்கிறார்.

கனகாம்பரம் என்னும் கேரக்டரைப் பற்றி எழுதும் பொழுது, இவரது நகைச்சுவை உணர்வு கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறது.  எப்படியாவது ஒரு பிரபல எழுத்தாளராகிவிட வேண்டும் என்ற துடிப்பில் கனகாம்பரம் செய்யம் காரியங்களை எப்படி விவரிக்கிறார் பாருங்கள். "அந்த இலக்கிய பத்திரிகையில் வரும் அர்த்தமற்ற வாக்கியங்களை படித்து ரசிப்பார். (இந்த உத்வேகத்தின் எழுச்சியின் பரிணாம ஆழத்தில் உள்ள யதார்த்த வேகத்தில் உள்ள தளை பிரதிபலிப்பாக எழும் பாசிடிவிசமே இடை நிலவரத்தின் கருத்தாகும்.) சந்தடி சாக்கில் ஸோ கால்டு இலக்கிய பத்திரிகைகளுக்கும் ஒரு குத்து. 

பத்திரிகை ஜோக்குகளில் எழுத்தாளரை ஜில்பா, ஜிப்பா ஆசாமியாக யாரோ ஒரு ஆர்ட்டிஸ்ட் போட்டாலும் போட்டார், கனகாம்பரம் அப்படியே தன்னை மாற்றிக்கொண்டு எழுத்தாளராகி விட்டார். 

ஒரு கட்டுரை எழுதி விட்டால், அது பிரசுரமானால் ஒழிய அடுத்த கட்டுரை எழுத மாட்டார். இதனால் ஒரு கட்டுரைக்கும் அடுத்த கட்டுரைக்கும் இடையே இரண்டு,மூன்று வருட இடைவெளி கூட ஏற்பட்டு விடும். அடிக்கடியா கல்கத்தாவிற்கு தமிழ் பத்திரிகை ஆசிரியர்கள் வருகிறார்கள்?

அஞ்சாம் பிளாக் மாமியைப் பற்றி எழுதும் போது, மாமிக்கு தலைவலி, மாமி சினிமா போறேன், மாமி இன்று உபவாசம் என்ற ரீதியில்தான் பேசுவாள். ஏன் சொந்தக் கணவனிடம் பேசும் போது கூட," உங்களை கல்யாணம் பண்ணிக்க கொண்டதில் என்ன லாபம்? மாமிக்கு ஒரு நகை நட்டு உண்டா? இல்லை சினிமாதான் உண்டா?" என்பாள்.

இவர் சித்தரித்திரிக்கும் கேரக்டர்களை பற்றி படிக்கும் பொழுது,  ஒரு வருத்தம் படருகிறது. அப்போதெல்லாம் இப்படி விதை விதமான, தனித்தன்மை கொண்ட மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு நமக்கு வாய்த்தது. அவர்கள் இயல்பாகவே தங்களை வெளிப்படுத்திக் கொண்டார்கள், இப்போது குறிப்பாக நகரங்களில் நெருங்கி பழகினாலே ஒழிய மற்றவர்களின் சுய ரூபம் தெரிவதில்லை. எல்லோரும் ஒரு முகமூடியோடுதான் திரிகிறார்கள். 

அதிலும் " உன் தலையில் இடி விழ, நீ காலரா வந்து போய் விட" என்று திட்டிக் கொண்டேதான் உதவி செய்யும் பட்டம்மா என்னும் 
கேரக்டரையும், ராமசேஷு என்னும் காரெக்டரையும், தபால்காரர்  அல்லா பக்ஷ் ஐயும் பற்றி படிக்கும் பொழுது இப்படிப்பட்ட கேரக்டர்களை நாம் இனிமேல் பார்க்கவே முடியாதோ என்றுதான் தோன்றுகிறது.  தீபாவளி, பொங்கல் என்றால் அல்ல பக்ஷ் யார் வீட்டிலும் போய் இனாம் கேட்க மாட்டார். அவர்களாகவே ஐந்து,பத்து என்று கொடுத்து விடுவார்கள். இல்லாவிட்டால் பண்டிகை கொண்டாடிய திருப்தியே அவர்களுக்கு இருக்காது. என்று அவர் எழுதியிருப்பதை படிக்கும் பொழுது, எப்படியிருந்த தேசத்தில் இன்று பிரிவினை தோன்றி விட்டதே என்னும் வருத்தம் மேலிடுவதை தவிர்க்க முடியவில்லை. 

கடைசியில் தன்னையும் ஒரு கேரக்டராக அவர் வர்ணித்திருக்கும் சிறப்பை நீங்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அவருடைய வர்ணனைக்கு தன் ஓவியத்தில் உயிர் கொடுத்திருக்கிறார் கோட்டோவிய மன்னன் கோபுலு.

நம் சேமிப்பில் இருக்க வேண்டிய புத்தகம்.    

இது ஒரு மீள் பதிவு.  

Sunday, May 31, 2020

சில கோவிட்-19 கற்பனைகள்

சில கோவிட்-19 கற்பனைகள் 

இந்த வருடம் நாம் பண்டிகைகளை எப்படி கொண்டாடப் போகிறோம் என்று தெரியவில்லை. கோகுலாஷ்டமி அன்று குட்டி கண்ணனை வரவேற்க முறுக்கு,சீடை, அப்பம், என்று பட்சணங்கள் செய்து வைத்து விட்டு கூடவே சானிடைசரும் வைக்க வேண்டுமோ? 

நவராத்திரியின் பொழுது தினமுமே வீட்டிற்கு வருகிறவர்களுக்கு வெற்றிலை, பாக்கு கொடுக்கும் பழக்கம் மாறி, வாரத்தில் ஒரு நாளோ, இரண்டு நாட்களோ அழைப்பு அனுப்பி வெற்றிலை பாக்கு தரும் வழக்கம் வந்து விட்டது. இந்த வருடம் அதிலும் சோஷியல் டிஸ்டென்ஸ் மெயின்டைன் செய்வதற்காக நேரமும் குறிப்பிடப்படுமோ? அதிலும் நவராத்திரி கிஃப்ட்டை ஒரு பையில் போட்டு ஒரு கழியில் மாட்டி எடுத்துக் கொள்ளச் சொல்வார்களோ?

தீபாவளிக்கு டிரஸ் வாங்கும் பொழுது கண்டிப்பாக மேட்சிங்காக மாஸ்க்கும் வாங்கப்படும். 

மார்கழியில் கோலம் போடும்பொழுது சிலர் ஸ்கார்ஃப் கட்டிக்கொள்வார்கள். அதோடு சேர்ந்து மாஸ்க்கும் அணிந்து கொண்டால் கொஞ்சம் பயமுறுத்துவது போலத்தான் இருக்கும். 

போகி அன்று கொரோனாவை கொளுத்தி விட்டு, புத்தாண்டை புது மலர்ச்சியோடு வரவேற்கலாம். 

*கொரோனவை கொளுத்தி விட்டு என்றதும் வட கர்நாடகாவில் ஒரு கிராமத்தில் நடந்திருக்கும் ஒரு வினோதமான நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. எப்போதெல்லாம் ஊரில் உயிர்கொல்லி வியாதிகள் பரவுகிறதோ அப்போதெல்லாம் அந்த வியாதியையே ஒரு பெண் தெய்வமாக பாவித்து, வேப்பிலைகளால் அலங்கரித்து, பூஜித்து, இனிப்புகள் படைத்து எங்கள் ஊரை விட்டு வெளியேறு என்று வேண்டி, ஊரின் எல்லையில் கொண்டு விட்டு விடுவார்களாம். இதற்கு முன்னால் சிக்கன் குனியா வந்து பொழுதும் இப்படி செய்தார்களாம். இப்போது கொரோனமாவுக்கு(பெயரை கவனியுங்கள்) இந்த பூசை நடந்திருக்கிறது.   


கொரோனாவால் வியாபாரம் படுத்து விட்டது, வியாபாரிகளுக்கு நஷ்டம் என்றுதான் எல்லோரும் சொல்கிறோம். டாபர் கம்பெனி மட்டும் இதற்கு விதிவிலக்கு. கடந்த இரண்டு மாதங்களில் இதன் தயாரிப்பான தேன், மற்றும் ஸ்யவனபிராஷ் லேகியம் நிறைய விற்றிருப்பதால் டாபர் கம்பெனி லாபம் ஈட்டியிருக்கிறதாம்.  பலருக்கு துன்பம், சிலருக்கு இன்பம். 
--------------------------------------------------------------------------------------------------------------------------
சில கோவிட்-19 ஜோக்குகள்:

முதலாமவர்: என்னது லேப்டாப் சர்வீஸ் பண்ண போனவனை குவாரண்டைன்னுக்கு அனுப்பி விட்டார்களா?

இரண்டாமவர்:ஆமாம், எங்கே போற என்று கேட்ட போலீசிடம், வைரஸ் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறான், முழுமையாக கேட்காமல் குவாரன்டைனுக்கு அனுப்பி விட்டார்கள். 
--------------------------------------------------------------------------------------------------------------------------
மணப்பெண்ணின் அப்பா: என்ன ஐயரே, தாலிக் கயிறா? தாம்புக் கயிறா?  இவ்வளவு நீளமா வாங்கியிருக்கீங்க?

ஐயர்: நாத்தனார் தாலி முடியும் பொழுது சோஷியல் டிஸ்டென்ஸ் மெயின்டைன் பண்ண வேண்டாமா? அதுக்குத்தான் 

வாய் விட்டு சிரியுங்கள் நோய் விட்டுப் போகட்டும். 


* நன்றி Times of India