கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, July 11, 2019

மன்னிப்பு

மன்னிப்பு 

அன்று அயோத்தி நகரமே சந்தோஷத்திலும், கொண்டாட்டத்திலும் மூழ்கி திளைத்தது. பின்னே தசரத குமாரன் ஸ்ரீ ராமனின் பிறந்த நாள் என்றால் சும்மாவா? அதுவும் ராமனுக்கு திருமணமானபின் வரும் முதல் பிறந்த நாள், கொண்டாட்டத்திற்கு கேட்கவா வேண்டும்? அயோத்தியில் கால் வைத்த அத்தனை பேரும் ஏதோ ஒரு பரிசோடுதான் திரும்பினார்கள். 

வழக்கம் போல அந்தணர்களுக்கு விதை நெல்லும், கறவை மாடுகளும் தானமாக தரப்பட்டன என்றால், மற்றவர்களுக்கு அவரவர் தேவைக்கேற்ப பொன்னும் பொருளும் வழங்கப்பட்டன. 

கொடுத்து கொடுத்து கைகளும், புன்னகைத்து, புன்னகைத்து கன்ன கதுப்புகளும் லேசாக வலிக்கத் துவங்கி இருந்தன தசரத குமாரனுக்கு. பெரியவர்களிடமும், குல குரு வஸிஷ்டரிடமும் பெற்ற ஆசிகள், மாமனார் ஜனகர் மாப்பிளைக்காக அனுப்பியிருந்த தாராள  ஸ்ரீதன பொருள்கள், அருமையான ராஜ விருந்து இவைகளால் ராமனுக்கு தலை சற்றே கிறுகிறுக்க சீதையை சீண்டிப் பார்க்கலாம் என்று தோன்றி விட்டது. 

மிகவும் அசதியாக இருப்பது போல சோம்பல் முறித்தபடி படுக்கையில் சரிந்தான். 

"கொடுத்து கொடுத்தே இன்றைக்கு மிகவும் களைத்து விட்டீர்கள்  போலிருக்கிறது" என்றபடி ராமனின் கரங்களை எடுத்து மெல்ல நீவி விட்டபடியே சீதை கூற, 

அதெல்லாம் ஒன்றுமில்லை, கொடுப்பதற்கு அலுப்பு கொள்பவர்கள் நாங்கள் இல்லை.." என்றவன் தொடர்ந்து,

" உனக்கு பிறந்த தின கொண்டாட்டங்கள் உண்டா?" என்றான் 

"ஏன் இல்லாமல்? எனக்கு மட்டுமல்ல, என் சகோதரிகளுக்கும் உண்டு..'', 

''நான் சித்திரை மாதம் புனர்வசு நட்சத்திரத்தன்று பிறந்தவன் என்பது தெரிந்திருப்பதால் என் ஜென்ம தினத்தை கொண்டாடுகிறோம். நீ பிறந்த தினம், நட்சத்திரம் எதுவுமே தெரியாதே எதை 
கொண்டாடுவீ ர்கள்?''

"ஏன்? என் தந்தை என்னை கண்டெடுத்த நாளைத்தான் என் பிறந்த நாளாக கொண்டாடுவார்.."

"உன்னை பெற்றவர்கள் யார் என்பதும் தெரியாது, எங்கே, எப்பொழுது பிறந்தாய் என்றும் தெரியாது, ஜனக மஹாராஜா யாகத்திற்க்காக நிலத்தை உழும் பொழுது அவரால் கண்டெடுக்கப் பட்டதால் ஜானகி ஆகி விட்டாய். ஆனால் நானோ, ரிஷ்ய ஸ்ரிங்கர்  தலைமையில் என் தந்தை புத்திர காமேஷ்டி யாகம் செய்ய, யாக குண்டத்திலிருந்து தோன்றிய தேவ புருஷன் கொணர்ந்த பாயசத்தை என் தாய் அருந்தியதால் பிறந்தவன். அழகிலும், குணத்திலும் நீ எனக்கு இணையாக இருக்கலாம், ஆனால் பிறப்பால் நான்தான் உன்னைவிட மேம்பட்டவன். ஒருவருடைய பிறப்புதானே எல்லாவற்றையும் நிர்ணயம் செய்யும்... அந்த வகையில் உன்னை விட உசத்தியான நான் அதை பொறுப்படுத்தாமல் உன்னை மணந்து கொண்டிருக்கிறேன்" குறும்பாக கூறினான் ராமன்.

சுருக்கென்று தைத்தது சீதைக்கு. விளையாட்டாக கூறப்பட்டதா? அல்லது அந்த போர்வையில் மனதில் இருப்பது வெளியில் வந்து விட்டதா? நான் இழி குலத்தை சேர்ந்தவளா? பாதிக்கப்பட்ட மனது பதில் சொல்ல தீர்மானித்தது. 

"இருக்கலாம்.. என்னை விட நீங்கள்தான் உயர்ந்தவராக இருக்கலாம். ஆனால், உலக வழக்கில் உயர்ந்த ஒரு விஷயம் தன்னை விட தாழ்ந்த விஷயத்தை தேடிச் செல்லுமா? தன்னை விட உயர்ந்த விஷயத்தைதானே அடைய விரும்பும்? அதன்படி பார்த்தால் நான் அல்லவோ உங்களை நாடி வந்திருக்க வேண்டும்? ஆனால் நடந்தது என்ன? நீங்கள் அல்லவா மிதிலைக்கு வந்து, என் தந்தை வைத்த சுயம்வர போட்டிக்கு கட்டுப்பட்டு, சிவ தனுசை உடைத்து என்னை மணந்து கொண்டீர்கள்.. இதிலிருந்தே நம் இருவரில் யார் உசத்தி என்று தெரியவில்லையா?" 

காலையிலிருந்து புகழ்ச்சி, பாராட்டு இவற்றில் திளைத்துக் கொண்டிருந்த ராமனுக்கு சீதையின் இந்த பதில் யாரோ முகத்தில் குத்தி கீழே தள்ளியது போல இருந்தது. விருட்டென்று சீதையின் கையை உதறினான். திரும்பி படுத்துக்க கொண்டான். அவன் விழித்துக் கொண்ட பொழுது சீதை அங்கு இல்லை. 

மற்றவர்கள் முன்னிலையில் சாதாரணமாக இருப்பது போல 
காட்டிக் கொண்ட சீதை, தனிமையில் ராமனை புறக்கணித்தாள். அவளின் இந்த பாரா முகம் ராமனுக்கு புதிது. அப்படியே இரண்டு நாட்கள் சென்றன. அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாது என்று ராமனுக்கு தோன்றியது. தவறு தன்னுடையது என்பதால், தானேதான் இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்தான். 

அன்று பகல் உணவு முடித்து ஓய்வு எடுத்துக் கொள்ள அவர்களின் பிரத்யேக அரண்மனைக்கு வந்தவன், சீதை வருவதற்கு முன், தன் கை விரல் மோதிரத்தை கழட்டி, அறையின் ஒரு மூலையில் போட்டான். அவள் வந்து உறங்கி விழித்து விட்டாள் என்று தெரிந்ததும் அவனும் அப்போதுதான் விழிப்பவன் போல எழுந்து கொண்டு,'' உனக்கு என் மேல் என்ன கோபம் இருந்தாலும் நான் தூங்கி கொண்டிருக்கும் பொழுது உன் தந்தை எனக்களித்த மோதிரத்தை கழட்டி வைத்துக் கொள்வது சரி கிடையாது.." 

"இது என்ன புது கதை? நான் எதையும் கழட்டவில்லை. எந்த மோதிரத்தை சொல்கிறீர்கள்?" 

"நம் திருமணத்தின் பொழுது உன் தந்தை எனக்களித்த மோதிரம்.."

"அதையா காணவில்லை? ஐயோ! அது சப்த ரிஷிகளில் ஒருவராகிய காஸ்யபர் என் தந்தைக்கு அளித்தது. அதை அவர் மிகுந்த மரியாதையோடும், கவனத்தோடும் பாதுகாத்து வந்தார், நம் திருமணத்தின் பொழுது உங்களுக்கு அணிவித்தார், அதையா  காணவில்லை..? காலையிலிருந்து எங்கெல்லாம் சென்றீர்கள்? கடைசியாக எப்போது அதை பார்த்தீர்கள்? 

"இங்கு வரும்வரை அது என் கையில்தான் இருந்தது. இப்போதுதான் காணவில்லை"

"திருமணத்தில் போடப்பட்ட மோதிரம் தொலைந்து போவது துர் சகுனம் அல்லவா?" பதட்டமும் துக்கமும் சீதையை பற்றிக் கொண்டன. 

"இரு இரு, அவசரப்பட வேண்டாம்,அந்த மோதிரம் கொஞ்சம் தளர்வாகத்தான் இருக்கும், அதுவும் கொஞ்ச நாட்களாக நழுவி விழுந்து விடுமோ என்று தோன்றியது, ஒரு வேளை படுக்கையில் விழுந்திருக்கிறதா என்று பார்க்கலாம்.." பேசிக் கொண்டே படுக்கையை உதறி தேடுவது போன்ற தன் நடிப்பை துவங்கினான்.

சீதை நிஜமாகவே தேட, அவள் கையில் சிக்கியது தொலைக்கப்பட்ட மோதிரம். "இதோ இங்கே இருக்கிறது! அப்பாடா!  காஸ்யபர் என் தந்தைக்கு அளித்தது.."கண்கள் பனிக்க அந்த மோதிரத்தை கண்களில் ஒற்றிக் கொண்டு கணவனிடம் நீட்டினாள்.

"அட! நானும் இத்தனை நேரமாக ததேடிக் கொண்டிருக்கிறேன், என் கண்களில் படவேயில்லை, நீ கண்டு பிடித்து விட்டாயே..! நிஜமாகவே நம் இருவரில் நீதான் உசத்தி. நீயே எனக்கு அணிவித்து விடு" என்று தன் கரத்தை அவள் முன் நீட்ட

இன்னும் இரு வேறு தருணங்களில் அவனை மன்னிக்க வேண்டும் என்று அறியாமல், கணவன் விரலில் மோதிரத்தை அணிவித்த சீதை ராமனை மன்னித்தாள்.

பின் குறிப்பு:

இந்த சம்பவம் அனந்தராம தீக்ஷதர் எழுதியிருக்கும் சுந்தரகாண்ட பாராயண புத்தகத்தில் குறிப்பிட பட்டிருக்கும். 

இந்த கதை 'சீதை ராமனை மன்னித்தாள்' என்று முடியும்படி சிறுகதை எழுத வேண்டும் 
என்று 'எங்கள் பிளாகில்' கேட்டுக் கொண்டதற்கு இணங்க, நான் எழுதிய சிறுகதை. எங்கள் பிளாகில் படிக்காதவர்கள் இதில் படிக்கலாம்.