கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, December 10, 2019

மசாலா சாட் - 14

மசாலா சாட் - 14

என்னுடைய சென்ற பதிவில் எனக்கு வாட்ஸாப்பில் வந்த  பஞ்சம் போக்கிய ஐ.ஆர் 8 என்னும் ஃபார்வர்ட் மெசேஜை பகிர்ந்திருந்தேன். அதற்கு மறுப்பு இயற்கை விவசாயம் என்னும் குழுவிலிருந்து வந்திருக்கிறது.
இரண்டாம்  உலகப்போர் அத்தனை சீக்கிரம் முடிந்து விடும் என்று அதில் ஈடுபட்ட நாடுகள் எதிர்பார்க்கவில்லையாம். வெடிகுண்டுகள் செய்வதற்காக தயாரிக்கப்பட்ட ரசாயன கலவையை விவசாய நிலத்தில் போடும்பொழுது அதில் விளையும் பயிர்கள் நல்ல விளைச்சலை தந்ததைக் தற்செயலாக கண்டு பிடித்த அமெரிக்க கம்பெனிகள் அதை காசாக்குவதற்காக  உரமாக பயன் படுத்தினார்களாம். நார்மென்ஃபோர்லாக் ஒன்றும் நல்ல எண்ணத்தில் செய்யவில்லை என்கிறார் அதை அனுப்பியவர்.  ஐ.ஆர்.8 பஞ்சத்தை போக்க பயன் பட்டது என்பது ஆகச் சிறந்த பொய் என்பது அவரது கருத்தாக இருக்கிறது. நம் நாட்டில் அரிசி எல்லோருடைய உணவாகவும் இருந்ததில்லை. புன்செய் தானியங்களைத்தான் பெரும்பான்மையோர் பயன்படுத்தினார்கள். அரிசி என்பது மேட்டுக்குடியினரின் உணவு என்கிறார்.

இதற்கான ஆடியோ க்ளிப்பிங்கை எப்படி பகிர்வது என்று தெரியாததால் பகிரவில்லை. .

என்னுடைய தோழி சமீபத்தில்,"இப்போதைய இளைய தலைமுறை நம்மோடு பேசுவதில்லை. நாம் சொல்வதை கேட்பதில் அவர்களுக்கு ஆர்வமும் இல்லை, எப்போதும் செல்ஃபோன், கூகுள் சொல்வதைத்தான்
கேட்கிறார்கள்." என்றாள்.  எனக்கு கூட இதில் ஒரு அனுபவம் இருக்கிறது. என் மருமகளிடம் நான் பலமுறை கோலம் போடச் சொல்லியும் அவளுக்கு அதில் ஏதோ தயக்கம் இருந்தது. ஆனால் எங்களுடைய யூ டியூப் சேனலில் தினசரி கோலங்கள் என்று என் அக்கா போட்டிருந்ததை பார்த்து விட்டு, அதை ஒரு நோட்டில் போட்டுக்கொண்டு இப்போது தினசரி சாமிக்கு முன் போடுகிறாள்.
"தாங்கள் சொல்வதை மற்றவர்கள் கேட்பதில்லை என்று கூறுகிறவர்கள், மற்றவர்கள் கேட்கும் வண்ணம் கூற கற்றுக் கொள்ள வேண்டும்" என்று பாண்டிச்சேரி அன்னை கூறியிருப்பதின் தாத்பர்யம் இதுதானோ?


எனது சமீபத்திய சென்னை விஜயத்தின் பொழுது, கிருஷ்ணகிரியில் காலை சிற்றுண்டிக்காக நிறுத்தினார்கள். அங்கு சிறுண்டியை சாப்பிட்டுவிட்டு கேஷ் கவுண்டர் அருகே வைக்கப்பட்டிருந்த  டெரகோட்டா பொருள்களை பார்வையிட்டேன். அங்கிருந்த ஒரு சிறு குருவி பொம்மை என்னைக் கவர்ந்தது. ஊதுபத்தி ஸ்டாண்ட் போல இருந்த அது விசில் என்றார் விற்பனை பெண்மணி. அது இரண்டு விதமாக விசில் அடிக்கும் என்று ஊதியும் காட்டினார். முதலில் ஊதிய பொழுது எல்லா விசில்களையும் போல கீச்சென்ற ஒலியைத்தான் எழுப்பியது. அதில் நீர் நிரப்பி விட்டு ஊதினால் பறவை கத்துவது போல ஒலி வருகிறது. அந்த விசிலடிச்சான் குஞ்சு ஒன்றை அக்காவின்  பேத்திக்காக வாங்கினேன்.

துக்ளக்கில் நான் ரசித்த கார்ட்டூன்



நான் ஒரு விளம்பர பிரியை. தவறாக நினைக்க வேண்டாம், தொலைகாட்சியில் வரும் விளம்பரங்களை ரசித்துப் பார்ப்பவள். கற்பனைத்திறன் மிக அதிகமாக தேவைப்படும் ஒரு துறை விளம்பரத்துறை. ஒரு பொருளைப்பற்றி நச்சென்று சுருக்கமாக கூறி பார்ப்பவர் மனதில் ஆசையைத்தூண்ட வேண்டும்.



சின்ன வயதில் ரேடியோவில் விவிதபாரதியில் கேட்ட "இன்பமூட்டிடும் கோககோலா இன்பமூட்டிடும் கோக்.." பாடல் திடீரென்று ஒரு நாள் நினைவுக்கு வந்தது. அதை முகநூலில் நான் பகிர்வதற்கு முன் ஸ்ரீராம் கேட்டு விட்டார். நினைவில் நிற்கும் வேறு சில விளம்பரங்கள்:

"கரகரப்ரியா ராகத்தில் எவரெடி ட்ரான்ஸிஸ்டர் பேட்டரி..." பாடல்.

 "மம்மி மம்மி மாடர்ன் ப்ரெட்..."

"வானவில்லும் மெய் சிலிர்க்கும் எதனைக்கண்டு?
வண்ண வண்ண கீதா சேலைகளின் அழகைக் கண்டு" என்று எங்கள் ஊர்(திருச்சி) கீதாஸ் விளம்பரத்திற்காக ரதி அக்னிஹோத்ரி, மஞ்சு பார்கவி  நடித்த விளம்பர படம்+ பாடல். இப்பொழுது கீதாஸ் கடையே இல்லை.

"வாஷிங் பவுடர் நிர்மா..."

"சொட்டு நீலம் டோய்! ரீகல் சொட்டு நீலம் டோய்.."

பலராலும் மறக்க முடியாத,மிகப் பிரபலமான "என்னாச்சு? குழந்தை அழுதது" என்னும் க்ரைப் வாட்டருக்கான விளம்பரம்.

இதயம் நல்லெண்ணெய் வந்த புதிதில் ஒளி பரப்பப்பட்ட,"இதுல காரல் இல்ல, கசப்பு இல்ல, போய் வாங்கிட்டு வாங்கன்னா வாங்களேன், இதெல்லாம் பொம்பளைங்க விஷயம்" என்னும் விளம்பரம் மிகவும் பிரபலமாகி அதில் நடித்த நடிகைக்கு 'நல்லெண்ணய் சித்ரா' என்ற பட்ட பெயரே கிடைத்தது.

ஹார்லிக்ஸுக்கான விளம்பரத்தில் ஒரு நடன மாது, "ஒரு தில்லானா ஆடிட்டு ஒரு கப் ஹார்லிக்ஸ் குடிச்சா அது தரும் தெம்பே தனி" என்பார்.
ஒரு மருத்துவர் எல்லாருக்கும் ப்ரிஸ்க்ரைப் பண்றேன், நானும் குடிக்கிறேன், தினமும் ரெண்டு வேளையும் என்பார்.
எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து ஹார்லிக்ஸ்தான், எங்கம்மாவும் அதே குடிச்சா" என்று ஒரு மூதாட்டி சொல்லுவார்.
ஒரு பொடியனோ,"குடிக்க வேண்டாம் அப்படியே சாப்பிடலாம்" என்பான்.

இதை அடிப்படையாக வைத்து, ஒரு முறை சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மாணவர்கள் தங்கள் ஆண்டு மலரில் பிட் அடிப்பதை பற்றி,
"நானும் பிட் அடிக்கிறேன், எல்லோருக்கும் சொல்றேன், எல்லா பரீட்சைக்கும்"
"எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து பிட் தான், எங்கம்மாவும் அதே அடிச்சா"
"படிக்க வேண்டாம், அப்படியே அடிக்கலாம்" என்று ஜோக் எழுதியிருந்ததாக குமுதத்தில் எடுத்து போட்டிருந்தார்கள்.

மீண்டும் சந்திக்கும்வரை உங்களிடமிருந்து வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் நண்பன், மன்னிக்கவும் விளம்பரம் என்றதும் ஒரு ஃப்ளோவில் வந்து விட்டது. ஹி ஹி!