கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, December 6, 2010

aachirayamaana ahobilam...!

அஹோபிலம் என்பதற்கு ஆச்சர்யமான குகை என்று பொருளாம். நிஜமாகவே ஆச்சர்யம்தான் குகை மட்டுமல்ல, அமைந்திருக்கும் இடம் மற்றும் அங்கு நிலவும் தெய்வீக சானித்தியமும்!

"ஜெயஸ்ரீ டிராவேல்சில் அஹோபிலம் அழைத்துச் செல்கிறார்கள் மூன்று நாள்கள் யாத்திரை, நீங்களும் வருகிறீர்களா?"  என்று என் தோழி பிரமிளா கேட்டதும் அதிகம் யோசிக்காமல் "சரி"  என்று விட்டேன். பிறகு கொஞ்சம் பயம் வந்தது, "அஹோபிலம் போனால் அரை சொர்க்கம் போனது போல என்பார்களே.. "என்று ஒரு சிந்தனையும், "ஏதோ பெருமாள் நம்மை அழைக்கிறார் போலிருக்கிறது, போகும் வரை தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் பண்ணலாம்" என்று நினைத்துக்கொண்டாலும் செயல் படுத்தியது என்னவோ ஒரு நாளைக்கு மட்டும்தான்.

மூன்று நாட்களுக்கு தேவையான உடைகள், ஒரு மெல்லிய போர்வை,  டார்ச் லைட், மற்றும் உங்களுக்கு தேவையான மருந்துகள் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய சாமான்களின் பட்டியல் தந்தார், டூர் ஆபரேடர். அதோடு செல் சார்ஜெர், காமிரா என்று நான் சேர்த்துக்கொண்டேன். ஆனால் வேறு சிலர் கல்கண்டு, உலர்ந்த திராட்சை, பாதாம் இவைகளை ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்துக்கொண்டு எல்லா கோவில்களிலும் அர்ச்சனை செய்யும் பொழுது  கையோடு கொண்டு வந்திருந்த சிறிய மரபேழையில் இவைகளை போட்டு நெய்வேத்தியம் செய்ய செய்தார்கள். அதோடு மட்டுமல்லாமல் கருவறை தீபத்தில் சேர்க்க நெய் கொண்டு வந்தவர்களும் உண்டு. ஒரு மாமி கையோடு அரிசி மாவு கொண்டு வந்து சுவாமி சந்நிதியில் கோலம்  கூட போட்டார்.

நவம்பர்  25 வியாழக்கிழமை தி.நகர் நாதேல்ளாவுக்கு அருகே இரவு ஒன்பது முப்பதுக்கு புறப்பட்ட எங்கள் பேருந்து இரவு இரண்டு மணிக்கு நெல்லூரை அடைந்தது. அங்கு ஒரு கல்யாண சத்திரத்தில் தங்க வைக்கப்பட்டோம். காலை ஐந்து மணிக்கு காபிக்குப் பின்னர் அருகில் இருந்த நெல்லூர் ரெங்கநாதர் கோவிலில்  விஸ்வரூப தரிசனம்! எங்கெல்லாம் ஆறு இரண்டாக பிரிகிறதோ அங்கெல்லாம் ரெங்கன் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருவார் என்னும் கோட்பாட்டின்படி இங்கு வட பெண்ணை ஆறு இரண்டாக பிரிகிறது நடுவே  ஆதிசேஷன் மீது  பள்ளிகொண்ட அரங்கன், அவருடைய தொப்பூழிளிருந்து  புறப்பட்ட தாமரையில் பிரம்மா. வடக்கே சிரம் வைத்து தெற்கே பாதம். அழகான திருக்கோலம்!  தனி சந்நிதியில் அருள் வடிவான தாயார். கண் குளிர தரிசம் செய்தோம்   அதன் பின்னர் அருகிலேயே இருந்த ஸ்ரீதேசிகன் மடத்திலேயும்  தரிசனம் செய்தோம்.  சமீபத்தில்   கட்டப்பட்டுள்ள  தேசிகன் மடத்தில் பெரிய அளவில் மகாவிஷ்ணுவின்   
 விஸ்வரூப கோலம், சக்கரத்தாழ்வார், யோகா நரசிம்மர் சிலைகள் கண்ணைக் கவருகின்றன.    
வடபெண்ணை ஆற்றங்கரையில் பிரேமா மாமி,உஷா மற்றும் நான்  

நரசிம்மாகுடாவில் கருடன் புடைப்பு சிற்பம்  

 

Premila infront of Mahavishnu staue - Desikan asram 

நரசிம்ம குடாவில் அனுமன் புடைப்பு சிற்பம்
 

நெல்லூர் தேசிகன் ஆஸ்ரமத்தில் நவீன சிற்பங்கள் முன்பு கட்டுரை ஆசிரியர்      
 
அதற்குப் பிறகு சிற்றுண்டி, பிறகு நரசிம்ஹாகுடாவிற்கு சென்றோம். சிறிய குன்றின் மீது அமைந்துள்ள அழகிய கோவில். கீழேயே அர்ச்சனை தட்டு, சீட்டு முதலியவை வாங்கிக்கொண்டு சென்று விட வேண்டும். சுயும்பு மூர்த்தியான மூலவர், அளவில் பெரியவர். வெள்ளி கவசம் அணிவித்திருந்தார்கள். அந்த சன்னதியிலும் அமிர்தவல்லி தாயார் சன்னதியிலும் மிக நல்ல அதிர்வுகளை உணர முடிகிறது. விசாலமான பிராகாரம் .  பிராகரத்தில்  மகாலக்ஷ்மிகென்று தனி சந்நிதி உள்ளது. 
 அங்கிருந்து புஜ்ஜிரெட்டிபாளையத்தில் உள்ள  ராமர்  கோவிலுக்குச்  சென்றோம். இதுவும் சிறிய கோவில்தான்.  கருவறையில்  நின்ற திருக்கோலத்தில் ராமர், லக்ஷ்மணர் மற்றும் சீதா பிராட்டி! அவர்களுக்கு கீழே சிறிய விக்கிரக ரூபங்களாக  சக்கரத்தாழ்வார், கிருஷ்ணர்  சேவை சாதிக்கிறார்கள். கோவிலுக்கு வெளியே ராமர் சன்னதிக்கு நேர் எதிரே  கூப்பிய கரங்களோடு சிறிய கோவிலில் காட்சி தருகிறார் ஆஞ்சநேயர்! கோவிலின் நுழை வாயில் அழகிய சிற்பங்களோடு விளங்குகிறது.  வாயிலின் இரண்டு புறமும் மற்றும் விதானத்தில் செதுக்கப்பட்டிருக்கும்  தசாவதார,அஷ்ட லக்ஷ்மி சிற்பங்கள் மிகவும்   அழகாக   இருக்கின்றன. 
 
 
 
 
முதல் நாள் தரிசனங்களை முடித்துக்கொண்டு  மதிய உணவையும்  முடித்துக்கொண்டு அஹோபிலம் புறப்பட்டோம்.   
 
அஹோபில  யாத்திரை அனுபவங்கள் தொடரும்.....