கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, March 13, 2014

சாவித்ரி

சாவித்ரி

இன்னும் இரண்டு நாட்களில் காரடையான் நோன்பு வருகிறது. அஸ்வபதி என்னும் அரசனுக்கு மகளாக பிறந்து, குறை ஆயுள் உடையவன் என்று அறிந்தும் சத்தியவானை மணந்து, தன பதிவ்ரதா தன்மையினாலும், தெய்வ பக்தியினாலும், எமனுடன் போராடி தன் கணவனின் உயிரை மீட்டவள் சாவித்ரி என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. சாவித்ரி என்னும் அந்தப் பெண் மட்டுமல்ல, சாவித்ரி என்னும் பெயரே ஒரு அசாதரணமான தன்மை கொண்டதோ என்று தோன்றுகிறது.

சாவித்ரி வித்யாசாலா:

முதலில் எங்கள் ஊரான திருச்சியிலிருந்து ஆரம்பிக்கிறேன். யாரிடமாவது நான் பிறந்து, வளர்ந்து, படித்தது எல்லாம் திருச்சியில்தான் என்றால் உடனே அவர்கள், "எங்கே படித்தீர்கள்? சாவித்ரி வித்யாசாலாவிலா?"  என்பார்கள். அப்படி திருச்சிக்கே ஒரு அடையாளமான கல்வி நிறுவனம் அது. நாம் உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் அங்கே எஸ்.வி.எஸ்.சிலோ  (சாவித்ரி வித்யா சாலா வின் சுருக்கம்) அல்லது அதன் சகோதரி நிறுவனமான எஸ்.ஆர். காலேஜிலோ படித்த ஒரு பெண்ணை சந்திக்க முடியும். அவர் அங்கு பிரபலமாகவும் இருப்பார்.

சாவித்ரி வைத்தி:



எண்பது வயதை கடந்தும் சமூக தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும்  கொண்டிருக்கும் திருமதி சாவித்ரி வைத்தி 'மண்டே சாரிட்டி கிளப்' மூலம் தன சமூக சேவையை தொடங்கியவர். பின்னர் அதரவற்ற பெண்களுக்காக விஸ்ராந்தி என்னும் முதியோர் இல்லத்தை அமைத்தார். தமிழகத்தின் முதல் முதியோர் இல்லமான அதில் 150 க்கும் மேற்பட்ட மூதாட்டிகள் வசிக்கிறார்கள். இதைத்தவிர ஒற்றை பெற்றோரை(single parent) உடைய குழந்தைகளுக்காக "மலர்ச்சி" என்னும் நிறுவனத்தையும் மனச் சோர்வு உடைய இளம் பெண்கள் தற்காலிகமாக தங்கிப் போக 'நிழல்' என்னும் அமைப்பையும் நடத்திக் கொண்டிருக்கிறார்.

சாவித்ரி - அரபிந்தோவின் அற்புத காவியம்!



ஆன்மீகத்தில் நாட்டமுடையவர்களால் எப்படி  ராமகிருஷ்ண பரமஹம்சரையும், விவேகானந்தரையும், ரமண மகரிஷியையும் தவிர்க்க முடியாதோ அப்படி  தவிர்க்க முடியாத மற்றொரு  மகான் ஸ்ரீ.அரவிந்த கோஷ்!
அவர் எழுதிய பல நூல்களுள் முக்கியமானவை 'லைப் டிவைன்(life divine)',சிந்தசிஸ் ஆப் யோகா(synthesis of yoga)', மற்றும் சாவித்ரி என்னும் அமர காவியம். இதை எழுத அரவிந்தர் 50 வருடங்கள் எடுத்துக் கொண்டார். வெளியிடப்படும் முன்  18 முறைகள் திருத்தி அமைத்தாராம். இரண்டு பாகங்களாக 1950 ம் வருடமும் 1951 ம் வருடமும் வெளியிடப்பட்டது. 

49 காண்டங்களில்,24000 வரிகளில் எமனோடு போராடி தன் கணவன் சத்யவானின் உயிரை சாவித்ரி மீட்ட கதை அருமையான ஆங்கிலத்தில் விவரிக்கப் படுகிறது. இங்கு சத்ய ஜீவிதத்தை சுமந்திருந்தாலும், மரணத்திற்கும்,அறியாமைக்கும் இலக்காகும் ஜீவனுக்கு சத்யவானும், அவனை காக்க இறங்கி வரும் தெய்வீக அருளுக்கு சாவித்ரியும், நிலயாமைலிருந்து சாஸ்வததிர்க்கு நம்மை உயர்த்தும் தவ வலிமைக்கு சாவித்ரியின் தந்தை அஸ்வபதியும், விஷய ஞானம் இருந்தும் தெளிவு இல்லாததால் குருடாகி, தன்னுடைய சிறப்பான ஆளுமையை இழக்கும் அறிவுக்கு சத்யவானின் தந்தையும் உருவகப்படுத்தப் படுகின்றனர் என்று சான்றோர் உரைப்பர். என்னைப் போன்ற சிற்றறிவு கொண்டார்க்கு இக்காவியத்தை படித்து புரிந்து கொள்வது கடினம்தான். அர்த்தம் புரியாவிட்டாலும் என்ன இதன் ஒவ்வொரு வரியும் விசேஷ சக்தி கொண்டது . மந்திரமாக ஜபித்து பலன் அடையலாம். அப்படி பலன் அடைபவர் பலர் இருக்கிறார்கள்.

நடிகையர் திலகம் சாவித்ரி:





நல்ல வேளை இப்போது போல அப்போது கதா நாயகி என்றால் தோள் பட்டை எலும்புகள் தெரிய வேண்டும் என்று யாரும் நினைக்கவில்லை. அது கூட பரவாயில்லை, கதா நாயகி நடிக்கவே தேவை இல்லை என்றும் இல்லை. அப்படி இருந்திருந்தால் குண்டு முகமும், வண்டு கண்களும் கொண்ட இந்த நடிகையின் இயல்பான திறமை கண்டுகொள்ளபடாமலே போயிருக்கும். என்ன நடிப்பு! என்ன நடிப்பு! மிஸ்ஸியம்மாவையும், மாயா பஜாரையும் எத்தனை முறை பார்த்திருக்கிறேன்..! சிவாஜிக்கு இணையாக பலர் நடித்திருக்கிறார்கள், ஆனால் சிவாஜியை தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டது இரண்டே பேர்தான். ஒன்று நாகேஷ், மற்றொன்று சாவித்ரி! 


இவருடைய நடிப்பு திறமைக்கு ஒரு சாம்பிள் சொல்ல வேண்டும் என்றால் ஒரு முறை பின்னணி பாடகி பி.சுசீலா கூறியதைத்தான் குறிப்பிட வேண்டும். ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் பி.சுசீலாவிடம், "நீங்கள் பாடியதற்கு எந்த நடிகை மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று நினைக்கீறிர்கள்?" என்று கேட்டபொழுது, அவர், சரஸ்வதி சபதம் படத்தில் கோமாதா எங்கள் குலமாதா பாடலில் கொஞ்சம் தம் பிடித்து பாடி  விட்டு இறுதியில் வண்ணகோமதா... என்று முதித்து விட்டு கொஞ்சம் மூச்சு வாங்கி கொண்டிருப்பேன். நான் எந்த இடத்தில மூச்சு வாங்கிக் கொண்டேனோ அதே இடத்தில் சாவித்திரியும் லேசாக மூச்சு வாங்கிக் கொள்வது போல நடித்திருப்பார், அதைப் பார்த்த பொழுது எனக்கு மிகுந்த சந்தோஷமாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது."என்றார். அவருடைய இடம் இன்னும் நிரப்பப் படவில்லை.

சாவித்ரி - திரைப்படம்!

1980இல்  பரதன் இயக்கத்தில் மேனகா நடித்து வெளியான 'சாவித்ரி' திரைப்படம் எதிர்ப்பு அலையை சந்தித்தது. வயோதிகரை மணந்து கொள்ளும் இளம் அந்தணப் பெண் வேறு ஜாதியைச் சேர்ந்த ஒரு இளைஞனோடு உறவு கொள்வதாக எடுக்கப்பட்ட அந்த படத்தை தடை செய்யக் கோரி பிராமண சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டது தமிழக வரலாற்றில் முதல் முறை.

சாவித்ரி என்னும் பெயர் ஒரு கலக்கு கலக்கும் போலிருக்கிறது. உங்களுக்கு தெரிந்த சாவித்ரிகளைப்  பற்றி எழுதுங்கள்!