கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, December 23, 2016

சீக்ரெட் சாண்டாவும், பிராமின்ஸ் டாமினேஷனும்

சீக்ரெட் சாண்டாவும், 
பிராமின்ஸ் டாமினேஷனும் 




என் மகனும் மருமகளும் அன்று ஷாப்பிங் கிளம்பினார்கள். 'சீக்ரெட் சாண்டா' விற்காக பரிசுகள் வாங்க வேண்டும் என்றான். அதென்ன சீக்ரெட் சாண்டா? கார்ப்பரேட் கல்ச்சரில் இதுவும் ஒன்று. க்ரிஸ்மாஸுக்கு ஐந்து நாட்கள் முன்னதாக ஒரு நாளைக்கு ஒரு பரிசு என்று அலுவலகத்தில் நம்மோடு பணிபுரியும் ஒருவருக்கு அவருக்குத் தெரியாமல் தினம் ஒரு பரிசு அவர் மேஜையில் வைத்து விட வேண்டுமாம். யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை கம்பெனியின் ஹெச்.ஆர். டிபார்ட்மெண்ட் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மெயில் அனுப்பி விடுவார்களாம். கடைசி நாளன்றுதான் யார் அந்த சாண்டாக்ளாஸ் என்று தெரிவிப்பார்களாம். தினசரி பரிசு ஐநூறு ரூபாய்க்கு குறையாமல் வாங்க வேண்டுமாம், கடைசி நாள் பரிசு ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கலாமாம். உங்களில் யாருக்காவது இப்படி சீக்ரெட் சாண்டா சுவாரஸ்யமாக ஏதாவது பரிசு கொடுத்திருக்கிறாரா?   

இரண்டு நாட்களுக்கு முன் நானும் என் எதிர் வீட்டில் வசிக்கும் பெண்மணியும் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு டீ மானிடைசேஷன், மோடி, என்று சுற்றி கலைஞரின் உடல் நிலையில் வந்து நின்றது. கலைஞரின் அரசியல் செயல்பாடுகளில் எனக்கு அத்தனை உடன்பாடு இல்லாவிட்டாலும், தனிப்பட்ட முறையில் கலைஞர் மீது மரியாதையும், மதிப்பும் உண்டு. எங்கள் உரையாடலை அப்படியே தருகிறேன்..
எ.வீ.: அவர் ஒரு சிறந்த நிர்வாகி என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. 

நான்: ஆமாம். அவருடைய நிர்வாக திறமையை விட என்னைக் கவர்ந்தது அவருடைய உழைப்பு. இந்த வயதில் எத்தனை உழைப்பு? வேறு யாராவது இப்படி செய்வார்களா என்பது சந்தேகம்தான். பிறகு அவருடைய இலக்கிய திறன்

எ.வீ.: அதில் என்ன விசேஷம் என்றால் அவர் முறையாக பள்ளி,கல்லூரி சென்று பயிலவில்லை. தானாகவே எல்லாவற்றையும் கற்றிருக்கிறார்..

நான்: அதற்கு அவர் பிறந்த குலம் ஒரு காரணமாக இருக்கலாம். அவர் இசை வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர். இசை, நாட்டியம் மட்டுமல்ல,இலக்கியத்திலும் அவர்களுக்கு புலமை அதிகம் இருக்கும். நான் தேவரடியார்களைப்பற்றி ஒரு கட்டுரை வாசித்திருக்கிறேன். அந்தக் காலத்தில் பெண்களில் எழுதப் படிக்க தெரிந்தவர்கள் இருந்தது தேவரடியார்கள் குலத்தில் மட்டுமே என்று குறிப்பிட்டிருந்த அந்த கட்டுரை ஆசிரியர் தேவதாசி முறையை தடை செய்ததன் மூலம் பல நல்ல கலைகளை நாம் இழந்து விட்டோம் என்று எழுதியிருந்தார்.

எ.வீ.: அதற்கு காரணம், தே வேர் எக்ஸ்பிளாய்டெட். சின்ன வயதில் வேண்டுமானால் அவர்களுக்கு டிமாண்ட் இருந்திருக்கும், அதற்குப் பிறகு வறுமையிலும், வியாதியிலும் 
எத்தனை பேர் இறந்திருப்பார்கள்?

நான்: உண்மைதான். நான் சொல்ல வந்தது. அவர்களுடைய கலைத்  திறமையை பற்றி மட்டும்தான். தேவதாசிகளின் நடனத்தில் வேகம் அதிகம் இருக்குமாம். அவர்கள் ஆறு காலம் பயிற்சி செய்வார்கள். இப்போதெல்லாம் மூன்று காலம்தானே பயிற்சி செய்கிறார்கள்? ஏன் கருணாநிதியே தன்னுடைய பேத்தியின் நடன அரங்கேற்றத்தை பார்த்து விட்டு, இன்னும் கொஞ்சம் வேகம் வேண்டும் என்று சொன்னாராம்

எ.வீ.: ஓ! அப்படியா? அது சரி, நடனமும் பாட்டும் எப்படி பிராமணர்களின் ஆதிக்கத்தில் வந்தது?

நான்: பிராமணர்களின் ஆதிக்கமா? அப்படி எல்லாம் கிடையாதே? எல்லாரும்தானே பாட்டும், நடனமும் கற்றுக் கொள்கிறார்கள்?

ஏ.வீ.: இல்லை இல்லை நீங்கள் கண்டிப்பாக பாட்டு க்ளாசில் சேர்த்து விடுவதைப்போல நாங்கள் செய்வதில்லை(அவர் சைவப் பிள்ளை).இசை உலகில் பிராமின்ஸ் டாமினேஷன் எப்படி வந்தது? 

அவருடைய கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. உங்களில் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

Tuesday, December 20, 2016

சாருவும் நானும் - 3

சாருவும் நானும் - 3

"இனிமே நாளைக்கு காலைல ஏழு மணிக்குத்தான் மொத பஸ்" என்ற டீ கடைக்காரரிடம், "அப்போ இனிமே பஸ் கிடையாதா"? என்று டி. வி. யில் பேட்டி எடுப்பவர் போல கேட்க, அவர் முறைத்தார். 

"என்ன சார் கொடைக்கானலா"?... கேட்பது யார் ? ஒரு  ட்ரைவரா?

"என்ன சார்?" மறுபடியும் என் மனதிற்குள் சொல்லி பார்த்துக் கொண்டேன், சிலிர்த்தது. "இன்னா?" "எவ்ளோ தர"? "குந்து.." என்று அஃறிணையில் விளிக்கப்பட்டே பழக்கமாகி விட்டதால் இவருடைய 'சாரு'க்காகவே அவர் வண்டியில் போவதென்று தீர்மானித்தேன்.

"அம்பாசிடர் கார் இருக்கு, பெட்ரோல் போட்டுக்கணும், டீசல் பூட்டின வண்டி இருக்கு எது சார் வேணும்.."?  

"அம்பாசிடர்" என்றேன் மிதப்பாக.

"அறுநூறு ரூபா ஆகும் சார், வேனுக்கு நானூறு ரூபா ஆகும்.."

என் சந்தோஷம் அத்தனையும் நொடியில் மறைந்து போனது. "என்னப்பா இது? கொஞ்சம் பாத்து சொல்லுப்பா.."

நீங்க எவ்ளோ சார் தருவீங்க"?

சாரு ஏதோ சொல்ல வாயைத் திறப்பது தெரிந்தது. அவளை இப்போது பேச விடுவது ஆபத்து. சாருவுக்கு பேரம் பேச ரொம்ப ஆசையுண்டு. காலையில் நான் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் பொழுது பக்கத்து வீட்டிலிருந்து இரையும் ரேடியோ இரைச்சலையும் மீறி வாசலில் கறிகாய்காரனோடு சண்டை போடுவாள். அவன் ஒன்று எட்டணா சொல்லும் வாழைக்காய்களை,"தோ பாருப்பா, அதெல்லாம் முடியாது, நான் மூணு எடுத்துக்கறேன், ஒண்ணே முக்கால் ரூபா குடுத்திடறேன்.." என்று வெற்றிகரமாக வியாபாரத்தை முடிப்பாள்.
எனவே அவளை முந்திக்கொண்டு ஏதோ ஒரு குருட்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "முன்னூறு ரூபா தரேன்.." என்றேன்.

கையிலிருந்த பெட்டியை தொப்பென்று கீழே போட்டான். "ஏய்! சாருக்கு முன்னூறு ரூபாய்க்கு மேலே கொண்டு விடணுமாம் என்று சற்று தள்ளி நின்றிருந்த தன நண்பர்களை பார்த்து கேலியாக கூறினான். 

அங்கிருந்த ஒருவன், " பாவம் ஏன் சார் கஷ்டப்படுரீங்க"? இப்படியே துண்டை விரிச்சுப் படுங்க, கார்த்தாலே மொத பஸ்சுல போய்டலாம்" என்றான். 

கொடை ரோடில் வந்து டாக்ஸி டிரைவர் ஒருவன் கேலியை கேட்டுக் கொள்ள வேண்டும் என்று தலை எழுத்து..!

டீக்கடை ரேடியோவில் 'ஜெயமாலா' முடிந்து 'தேன் கிண்ணம்' துவங்கி விட்டது.சுற்றிலும் கவிந்து கொண்ட இருளில் நாங்கள் தனித்து விடப் பட்டோம். இங்கு தங்குவதற்கு நல்ல லாட்ஜ் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. நாங்கள் இருப்பதையே லட்சியம் செய்யாமல் ட்ரைவர் குழு அரட்டை அடித்துக் கொண்டிருந்தது. கடைசியில் வேறு வழி இல்லாமல், எங்களிடம் வந்து பேசிய டிரைவரிடம் மன்றாடித் தோற்று, அவன் கேட்ட தொகையை தருவதாக ஒப்புக் கொண்டு வேனில் ஏறினோம். 

"என்ன சார் ஹோட்டலில் ரூம் புக் பண்ணிடீங்களா..? இப்போ கோடை விழா நடக்குது, ரூமே கிடைக்காது.." சொன்ன அவன் நாக்கு கரி நாக்காக இருக்க வேண்டும்.

ஹோட்டல் ஸ்வயம் ப்ரகாஷில் ரிஸப்ஷனிஸ்ட் விவரம் கேட்டு விட்டு, தடிமனான புத்தகத்தை திறந்து எதையோ தேடினான். "என்னிக்கு டெலிக்ராம் கொடுத்தீங்க.."? என்று கேட்டு, சற்று சிறிய நோட் ஒன்றில் மீண்டும் தேடி விட்டு, " சாரி சார், உங்க பேர்ல ரூம் புக் பண்ண சொல்லி எந்த இன்பார்மேஷனும் எங்களுக்கு வரலை.." என்றான். 

-தொடரும்