சீக்ரெட் சாண்டாவும்,
பிராமின்ஸ் டாமினேஷனும்
என் மகனும் மருமகளும் அன்று ஷாப்பிங் கிளம்பினார்கள். 'சீக்ரெட் சாண்டா' விற்காக பரிசுகள் வாங்க வேண்டும் என்றான். அதென்ன சீக்ரெட் சாண்டா? கார்ப்பரேட் கல்ச்சரில் இதுவும் ஒன்று. க்ரிஸ்மாஸுக்கு ஐந்து நாட்கள் முன்னதாக ஒரு நாளைக்கு ஒரு பரிசு என்று அலுவலகத்தில் நம்மோடு பணிபுரியும் ஒருவருக்கு அவருக்குத் தெரியாமல் தினம் ஒரு பரிசு அவர் மேஜையில் வைத்து விட வேண்டுமாம். யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை கம்பெனியின் ஹெச்.ஆர். டிபார்ட்மெண்ட் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மெயில் அனுப்பி விடுவார்களாம். கடைசி நாளன்றுதான் யார் அந்த சாண்டாக்ளாஸ் என்று தெரிவிப்பார்களாம். தினசரி பரிசு ஐநூறு ரூபாய்க்கு குறையாமல் வாங்க வேண்டுமாம், கடைசி நாள் பரிசு ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கலாமாம். உங்களில் யாருக்காவது இப்படி சீக்ரெட் சாண்டா சுவாரஸ்யமாக ஏதாவது பரிசு கொடுத்திருக்கிறாரா?
இரண்டு நாட்களுக்கு முன் நானும் என் எதிர் வீட்டில் வசிக்கும் பெண்மணியும் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு டீ மானிடைசேஷன், மோடி, என்று சுற்றி கலைஞரின் உடல் நிலையில் வந்து நின்றது. கலைஞரின் அரசியல் செயல்பாடுகளில் எனக்கு அத்தனை உடன்பாடு இல்லாவிட்டாலும், தனிப்பட்ட முறையில் கலைஞர் மீது மரியாதையும், மதிப்பும் உண்டு. எங்கள் உரையாடலை அப்படியே தருகிறேன்..
எ.வீ.: அவர் ஒரு சிறந்த நிர்வாகி என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.
நான்: ஆமாம். அவருடைய நிர்வாக திறமையை விட என்னைக் கவர்ந்தது அவருடைய உழைப்பு. இந்த வயதில் எத்தனை உழைப்பு? வேறு யாராவது இப்படி செய்வார்களா என்பது சந்தேகம்தான். பிறகு அவருடைய இலக்கிய திறன்
எ.வீ.: அதில் என்ன விசேஷம் என்றால் அவர் முறையாக பள்ளி,கல்லூரி சென்று பயிலவில்லை. தானாகவே எல்லாவற்றையும் கற்றிருக்கிறார்..
நான்: அதற்கு அவர் பிறந்த குலம் ஒரு காரணமாக இருக்கலாம். அவர் இசை வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர். இசை, நாட்டியம் மட்டுமல்ல,இலக்கியத்திலும் அவர்களுக்கு புலமை அதிகம் இருக்கும். நான் தேவரடியார்களைப்பற்றி ஒரு கட்டுரை வாசித்திருக்கிறேன். அந்தக் காலத்தில் பெண்களில் எழுதப் படிக்க தெரிந்தவர்கள் இருந்தது தேவரடியார்கள் குலத்தில் மட்டுமே என்று குறிப்பிட்டிருந்த அந்த கட்டுரை ஆசிரியர் தேவதாசி முறையை தடை செய்ததன் மூலம் பல நல்ல கலைகளை நாம் இழந்து விட்டோம் என்று எழுதியிருந்தார்.
எ.வீ.: அதற்கு காரணம், தே வேர் எக்ஸ்பிளாய்டெட். சின்ன வயதில் வேண்டுமானால் அவர்களுக்கு டிமாண்ட் இருந்திருக்கும், அதற்குப் பிறகு வறுமையிலும், வியாதியிலும்
எத்தனை பேர் இறந்திருப்பார்கள்?
நான்: உண்மைதான். நான் சொல்ல வந்தது. அவர்களுடைய கலைத் திறமையை பற்றி மட்டும்தான். தேவதாசிகளின் நடனத்தில் வேகம் அதிகம் இருக்குமாம். அவர்கள் ஆறு காலம் பயிற்சி செய்வார்கள். இப்போதெல்லாம் மூன்று காலம்தானே பயிற்சி செய்கிறார்கள்? ஏன் கருணாநிதியே தன்னுடைய பேத்தியின் நடன அரங்கேற்றத்தை பார்த்து விட்டு, இன்னும் கொஞ்சம் வேகம் வேண்டும் என்று சொன்னாராம்
எ.வீ.: ஓ! அப்படியா? அது சரி, நடனமும் பாட்டும் எப்படி பிராமணர்களின் ஆதிக்கத்தில் வந்தது?
நான்: பிராமணர்களின் ஆதிக்கமா? அப்படி எல்லாம் கிடையாதே? எல்லாரும்தானே பாட்டும், நடனமும் கற்றுக் கொள்கிறார்கள்?
ஏ.வீ.: இல்லை இல்லை நீங்கள் கண்டிப்பாக பாட்டு க்ளாசில் சேர்த்து விடுவதைப்போல நாங்கள் செய்வதில்லை(அவர் சைவப் பிள்ளை).இசை உலகில் பிராமின்ஸ் டாமினேஷன் எப்படி வந்தது?
அவருடைய கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. உங்களில் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.