கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, June 16, 2018

பேசுங்க,பேசுங்க,பேசிக்கிட்டே இருங்க

பேசுங்க,பேசுங்க,பேசிக்கிட்டே இருங்க

காலா  வெளியாகி ஓடிக்கொண்டும் இருக்கிறது. வெற்றியா, தோல்வியா என்பது பின்னல் தெரியும். கர்நாடகாவில் இது வெளியிடப்படாது என்று நினைத்து சில தீவிர ரஜினி ரசிகர்கள் பெங்களூரிலிருந்து ஹோசூர், கிருஷ்ணகிரி, சேலம் போன்ற ஊர்களுக்குச் சென்று இந்தப் படத்தை பார்த்திருக்கிறார்கள். பார்த்து திருப்தி அடைந்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு ரஜினி படம் வெளியாகும் பொழுதும் அதைப் பார்ப்பதற்காகவே ஜப்பானில் இருந்து இந்தியா வரும் ஒரு தம்பதி, காலா படம் அவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும்,வேறு எந்த ரஜினி படமும் இந்த அளவிற்கு அவர்களுக்கு ஏமாற்றம் அளித்ததில்லை என்றும் கூறியிருக்கிறார்கள். இப்படி கூட ரசிகர்கள்!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பேச்சு ஒரு கலை. அந்தக் கலையை உபாசிப்பவர்கள்  இந்தியர்களாகிய நாம்.  

ஜப்பானியர்கள் ஆங்கில இலக்கணம் படிக்கும் பொழுது, 
ஐ ஒர்க், யூ ஒர்க், ஹி ஒர்க்ஸ் என்றும் 
ஃ பிரஞ்ச் காரர்கள் ஐ பிளே ,யூ பிளே, ஹி பிளேஸ் என்றும் 
இந்தியர்கள் ஐ டாக், யூ டாக், ஹி டாக்ஸ் என்றும் படிப்பார்கள் என்பது முன்பு  பிரபலமாக இருந்த ஒரு ஜோக். ஆனால் அந்த ஜோக் இப்போது உண்மையாகி விட்டது. நாம்  பஸ்ஸில் பேசுகிறோம்,  புகை வண்டியில் பேசுகிறோம், நடக்கும் பொழுது பேசுகிறோம், தொலை கட்சியில் பேசுகிறோம், எஃப்.எம். ரேடியோவில் வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கிறோம். 

ஜூன் மூன்றாம் தேதி கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள். அன்று கலைஞர் டி.வி.யில் முன்பு எப்போதோ கலைஞருக்கு நடத்தப்பட்ட பாராட்டுவிழா ஒன்றை ஒளி பரப்பினார்கள். அதில் காணொளி காட்சியாக, கலைஞர் எழுதிய நீ..ண் ..ட .. வசனத்தை ஏற்ற இறக்கங்களோடு சிவாஜி பேசிய காட்சி காட்டப்பட்டது(எந்த படம் என்பதை நான் கவனிக்கவில்லை).

சிவாஜி பேசுவதற்கென்ன? பிரமாதமாக பேசினார். அதைப் பார்த்த பிரபு, உணர்ச்சிவசப்பட்டு, ஓடிப்போய் கலைஞர் கையை பிடித்து குலுக்கி விட்டு, தன் இருக்கையில் அமர்ந்து கண்களை துடைத்துக் கொண்டார். எல்லாம் சரி, எனக்கு ஒரு சந்தேகம் வந்தது.

அந்த காட்சி அரசவையில் அரசனை நோக்கி வேற்று நாட்டு அரசனோ, வேறு யாரோ பேசுவதைப் போன்ற காட்சி. ஏனென்றால் டயலாக் பேசிய சிவாஜியும் அரச உடைகளைத்தான் அணிந்து கொண்டிருந்தார். ஒரு ராஜாவிடம் முறையிடுபவன் இத்தனை நீ...ள...மா...க... பேசினால் அது ராஜாவின் மண்டைக்குள் செல்லுமா? ராஜாங்க, நிர்வாக விஷயங்களைப் பற்றி சுருங்கச் சொல்லி விளங்க வைக்கத் தெரிய வேண்டாமா?  

கேட்பவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ தன் வாய் ஜாலத்தை காட்டி ஆட்சியைப் பிடித்த தி.மு.க., ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன் அப்போதைய நிதியமைச்சராக இருந்த நெடுஞ்செழியன் தனது முதல் சட்ட சபை உரையை மிகவும் விஸ்தாரமாக தயாரித்து, "அரிஸ்டாட்டில் அப்படி சொல்லியிருக்கிறார், காரல் மார்க்ஸ் இப்படி சொல்லியிருக்கிறார்" என்றெல்லாம் நீளமாக பேசிக் கொண்டே போக, எதிர்க்கட்சி தலைவராக இருந்த காமராஜ்,"அவங்க சொன்னதெல்லாம் இருக்கட்டும், நீங்க என்ன செய்யப் போறீங்க, அதைச் சொல்லுங்க" என்றாரம். அதுதானே தேவை? 


மிகச் சிறந்த நிர்வாகத் திறமை கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி ஐசன் ஹோவரைப் பற்றி ஒன்று சொல்வார்கள். அவர் முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய விஷயங்கள் அடங்கிய கோப்பு(file) அவர் மேஜைக்கு வந்ததும், அது எத்தனை பக்கங்களை 
கொண்டிருந்தாலும் அதன் சாராம்சத்தை கால் பக்கத்திற்கு 
சுருக்கித் தருமாறு தன் உதவியாளர்களுக்கு உத்தரவு போட்டு விட்டு அவர் கால்ஃப் விளையாடச் சென்று விடுவாராம். அவருடைய உதவியாளர்கள் மண்டையை உடைத்துக் கொண்டு சுருக்கி தந்ததை படித்து விட்டு, விரைவாக முடிவெடுத்து விடுவாராம். 

நம்முடைய மூதறிஞர் ராஜாஜி அவர்களுக்கும் இரண்டு பக்க விஷயத்தை இரண்டே வரிகளில் சுருக்கி சொல்லும் திறன் உண்டு என்பார்கள். 

இவையெல்லாம் இருக்கட்டும் ஜோதிடத்தை தொழிலாக கொள்ளாவிட்டாலும், அதில் நிறைய ஆர்வமும், அறிவும், திறமையும் கொண்ட என் சகோதரர் எந்தெந்த ராசிக்காரர்களிடம் எப்படி பேச வேண்டும் என்பதை தன் அனுபவத்தில் கண்டு எங்கள் குடும்ப குழுவில் அனுப்பி இருந்தார். சரியாக இருக்கிறதா என்று சொல்லுங்கள்.





மேஷ ராசிக்காரங்ககிட்ட எச்சரிக்கையா பேசணும். பாராட்டி பேசலாம், ஆனால் வாக்குவாதம் செய்யக் கூடாது.

ரிஷப ராசிக்காரங்ககிட்ட கனிவா, பக்குவமா பேசணும்.

மிதுனம் ராசிக்காரங்ககிட்ட அதிகமா வெச்சுக்காதீங்க. லைட்டா பேசுவாங்க, ஹெவியா உங்களை ஆராய்ச்சி பண்ணுவாங்க.

கடக ராசிக்காரங்ககிட்ட பாசமா பேசலாம், எல்லா உதவியும் கிடைக்கும்.

சிம்ம ராசிக்காரங்ககிட்ட பொறுமையா பேசணும். படபடன்னு பேசிட்டு போயிட்டே இருப்பாங்க. நேர்மையா பேசலைனா கட்டம் கட்டிடுவாங்க.

கன்னி ராசிகாரங்க நட்பை முறிச்சுக்கள் கூடாது. அவர்களால் நிறைய ஆதாயம் உண்டு. அதுவே உத்திரம் நட்சத்திரக் காரர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையை பார்த்து பேசுங்க.

துலாம் ராசின்னா, ஜாலியா பேசலாம். ஸ்வாதி கம்பீரமா நடந்துக்குவாங்க. கொஞ்சம் கவனமா இருங்க, உங்களை எடை போட்டு நீங்க இவ்வளவுதான்னு மார்க் போட்டுருவாங்க.

விருச்சிகம்.. அன்பா, அனுசரணையா பேசலாம். கொஞ்சம் கவனக் குறைவா கிண்டலடிச்சா, நீங்க வாழ்க்கையில வாங்காத நோஸ்கட் வாங்கிக்குவீங்க. அன்புல தென்றல், கோபத்துல சுனாமி.

தனுசு ராசிக்காரங்க கிட்ட அன்பா பேசி காரியம் சாதிக்கலாம்.நாலு வார்த்தை பாராட்டுங்க, அன்புக்கு நான் அடிமை என்பது தனுசுவின் குணம். அர்ஜுனன் கிருஷ்ணர் மீது வைத்திருந்தது சாதாரண அன்பு இல்லை. அந்த அன்புக்குத்தான் பகவானே மயங்கி கிடந்தார். தேரோட்டியாக வந்தார். வில்லுக்கு விஜயனான அர்ஜுனன் தனுசு ராசி. 

மகரம் ராசிக்காரங்க நிறைய புலம்புவாங்க, அப்படியே நம்ப வேண்டாம். அவங்க இயல்பு அது. கடுமையான உழைப்பாளிகள், பேச்சுதான் முன்ன பின்ன இருக்கும்.

கும்பம்... அடுத்த அம்பானி இவர்தான்னு நம்புற மாதிரி பேசுவாங்க, உம் கொட்டிட்டு நீங்களும் உங்க சாதனைகளை சொல்லுங்க.

மீனம்..அசந்தா ஆத்துல இல்ல, காத்துல கூட மீன் பிடிப்பாங்க. மத்தவங்க ரகசியங்கள் எல்லாம் இவங்ககிட்ட தெரிஞ்சுக்கலாம். 

சரிதானா என்று  சொன்னால் சந்தோஷப் படுவோம்.

Wednesday, June 13, 2018

உரத்த சிந்தனை!

உரத்த சிந்தனை!



எங்கள் வீட்டிக்குப் பக்கத்தில் ஒரு வீட்டில் திருமணம். இரண்டு நாட்களாக லவுட் ஸ்பீக்கரில் பாடல்களை அலற விட்டு படுத்தி எடுத்து விட்டார்கள். நமக்கு  இவ்வளவு சத்தம் போட யார் உரிமை கொடுத்தார்கள்? 

எல்லாவற்றையுமே நாம் சத்தமாகத்தான் செய்கிறோம். "கெட்டி மேளம்" "கெட்டி மேளம்" என்று எல்லோரும் அலற, 'டம' 'டம' வென்று மேளம் சத்தமாக கொட்டிதான் கல்யாணம் செய்து கொள்கிறோம். இறுதி ஊர்வலத்தில் கூட தாரை, தப்பட்டை அதிர் வேட்டு என்று அதிர அடிக்கிறோம். பூப்பு நீராட்டு போன்ற அந்தரங்க விஷயங்கள் கூட பகிரங்கமாக்கப்படும் பொழுது பாண்டு கச்சேரி, மெல்லிசை என்று அமர்களப்படுத்தபடும்.  


அது மட்டுமா? இறை வழிபாட்டிலும் நாம் சோடை போவதில்லை அம்மனுக்கு கூழ் வார்த்தாலும் சரி, ஐயப்பனுக்கு மாலை போட்டாலும் சரி லவுட் ஸ்பீக்கர் நிச்சயம் தேவை.


போனில் எவ்வளவு பேர் மெதுவாக பேசுகிறோம்? எஸ்.டி.டி. கால் என்றால் உரக்கத்தான் பேச  வேண்டும்  என்று  இன்றும்  சிலர்  நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  சிலர்  பொது  இடம்  என்றும் பாராமல் தங்கள் குடும்ப விவகாரங்களையும், முக்கிய  தகவல்களையும்  பகிர்ந்து  கொள்கிறார்கள்.  


ஹார்ன்  அடிக்காமல் வண்டி ஓட்டத் தெரியாது. நான் வெளி நாடு சென்ற புதிதில் அங்கு கார்கள் ஒலி எழுப்பாமலேயே விரைவதைப் பார்த்து இங்கு கார்களுக்கு ஹார்னே கிடையாதா? என்று அப்பாவித்தனமாக கேட்க நண்பர் ஒருவர்,"உண்டே", என்று ஒலி எழுப்பிக் காண்பித்தார். அங்கெல்லாம்  எப்படிப்பட்ட  டிராபிக்  ஜாமிலும் ஹார்ன் அடிக்க மாட்டார்கள்.  





சமீபத்தில் காஸ் அடுப்பு விலாசம் மாற்ற ஏஜென்சிக்குச் சென்றிருந்தேன். அங்கு புதிய இணைப்பிற்காக விண்ணப்பம் கொடுக்க வந்திருந்தவர்களின் கூட்டம். இங்கு விஷயம் கூட்டமில்லை, அது போட்ட கூச்சல், அதனால் விளைந்த குழப்பம்....அம்மம்மா..! ஏன் இப்படி இரைச்சல் போடுகிறார்கள்? 

நம் திரைப் படங்களிலோ மணி ரத்னம் வரும் வரை, "கிட்ட வா உன்கிட்ட ஒரு ரகசியம் சொல்லணும்"  என்னும்  வசனத்தைக்  கூட   ஹை  டெசிபெல்லில்தான்  கூறுவார்கள்.  


எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர் சமீபத்தில் அவர் பெண் இருக்கும் ஆஸ்திரேலியாவிற்கு சென்று விட்டு வந்தார். அதை பற்றி அவரிடம் விசாரித்த பொழுது, "எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் மிகவும் நிசப்தமாக இருக்கிறது. அவ்வளவு சைலண்டாக இருந்தாலும் என்னவோ போல் இருக்கிறது" என்றார்.  

ஏதோ நிர்பந்தத்தால் பூ விற்பவர் வீட்டில் தங்க நேரிடும் ஒரு மீனவன் மறு  நாள் காலையில் சொன்னானாம், "முடை நாற்றம் இல்லாத இந்த பூ வாசனையில் தூக்கமே வரவில்லை" என்று. 


 இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் தீவிரமாக யோசித்தப்பொழுது ஒன்று தோன்றியது.  இருக்கும் மேலை நாடுகளை விட இரைச்சலாக  இருக்கும்  நம் நாட்டில்தான் தியானம், யோகம்  போன்ற  விஷயங்களும்  இருக்கின்றன. மௌன  விரதம்  அனுஷ்டிக்கும்  பழக்கமும்  நம்  மதத்தில்  ஒரு வழிபாட்டு முறை. ஒரு  வேளை  நம்மை  சுற்றி  இத்தனை  சத்தம்  இருப்பதால்தான் ஒரு  சிலராவது  அமைதியை  தேடிச்  செல்கிறார்கள்  போலிருக்கிறது.  பெரும் பாலோர் சைவமாக இருக்கும் இந்தியர்களுக்கு செல்லப் பிராணிகள் வளர்க்கும் பழக்கம் குறைவு. ஆனால் பெரும்பாலானோர் அசைவமாக இருக்கும் மேலை நாட்டினருக்கு செல்ல பிராணிகள் வளர்ப்பில் ஈடுபாடு அதிகம் என்பது ஒரு இனிய முரண்பாடு என்பார்கள். அதைப்போலத்தான் இதுவுமோ? 


படங்கள்: கூகிள். நன்றி