தேவிப்பட்டிணம் - நவ பாஷாணம்
ராமேஸ்வரம் யாத்திரை மேற்கொள்பவர்கள் முதலில் தேவி பட்டிணம் சென்று அங்கு ராமபிரான் ஸ்தாபித்த நவபாஷாண நவகிரகங்களை வணங்கி, பின்னர் திருப்புல்லாணி சென்று தர்பசயன ராமரை சேவித்து பின்னரே ராமேஸ்வரம் வந்து பர்வதவர்த்தினி சமேத ராமநாதரையும், அவருக்கு அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் காசி விஸ்வநாதரையும், விசாலாக்ஷியையும் வணங்க வேண்டுமாம். இந்த நடைமுறை எங்களுக்குத் தெரியாது. ஆனாலும் யதேச்சையாக இப்படி நேர்ந்தது இறையருள் என்றுதான் கூற வேண்டும்.
சென்னையிலிருந்து ராமேஸ்வரம் சென்றவுடன் தேவிபட்டிணம், உத்திரகோசமங்கை, திருப்புல்லாணி தலங்களுக்கு சென்றுவிட்டு வந்து விடலாம் என்று முடிவு செய்தோம்.
தேவிப்பட்டிணம் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது நவபாஷாண நவக்கிரகங்கள். ஆனால் இந்த இடம் பல புராதன பெருமைகளை உடையது. மூல சேது என்று அழைக்கப்படும் இங்கு ஒரு முறை தர்ம தேவதை தன்மைகொண்டது நான்கு கால்களோடு தவம் புரிந்து சிவ பெருமானின் வாகனமாகிய ரிஷபமாகியதால் இதற்கு தர்ம தீர்த்தம் என்று ஒரு பெயர் உண்டு.
காலவ மகரிஷி என்பவர் இங்கு மஹாவிஷ்ணுவை குறித்து அக்னிக்கு நடுவில் தவம் இயற்றிக் கொண்டிருந்த பொழுது, மிகுந்த பசியோடிருந்த துர்தமன் என்னும் அசுரன் பயங்கர சப்தம் எழுப்பியபடி இவரை விழுங்க வந்தான். அவன் எழுப்பிய சப்தத்தால் தவம் கலைந்த காலவ மகரிஷி அவனைக் கண்டு பயந்து போய் கண்களை மூடி மஹாவிஷ்ணுவை மனதில் இருத்தி மீண்டும் தவத்தில் ஈடுபட, மஹாவிஷ்ணு தன் சக்ராயுதத்தால் துர்தமனை வதம் செய்தார். காலவ மகரிஷி சக்ராயுதத்தின் ஒரு பகுதி இந்த தீர்த்தத்தில் இருக்க வேண்டும் என்று வேண்டினார். அதன்படி சக்ராயுதத்தின் ஒரு பகுதி இந்த தீர்த்தத்தில் இருப்பதால் இது சக்ர தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது.
மஹிஷாசுரனுக்கும், அம்பிகைக்கும் யுத்தம் நடந்த பொழுது, மகிஷாசுரன் இங்கிருக்கும் சக்ரகுளத்தில் வந்து ஒளிந்து கொள்கிறான். அம்பிகை தனது வாகனமாகிய சிங்கத்திடம், இந்த குளத்தின் நீரை குடிக்கச் செய்து மகிஷாசுரனை வதம் செய்கிறாள். எனவே இந்த குளம் வற்றி விடுகிறது. இந்திரன் முதலான தேவர்கள் தேவலோகத்திலிருந்து அமிர்தத்தை கொண்டுவந்து இதை நிரப்புகிறார்கள். ஏனவே இது அமிர்த தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. மஹிஷனை அம்பிகை அழித்த இடமாகையால் தேவிப் பட்டிணம் என்னும் பெயர் பெற்றது.
ராமபிரான், ராவணனோடு யுத்தம் செய்யவும் முன் இங்கு நவபாஷாணத்தால் ஆன நவகிரகங்களை அமைத்து,வழிபட்டுவிட்டு சென்றாராம். இப்போது தேவி பட்டினம் என்றால் எல்லோருக்கும் அதுதான் நினைவுக்கு வரும். முன்பெல்லாம் கடலுக்குள் இருக்கும் அந்த நவபாஷாண நவகிரகங்களை கடலுக்குள் இறங்கித்தான் வணங்க முடியும். இப்போது அதைச் சுற்றி பாலம் போல அமைத்து விட்டார்கள். இயலாதவர்கள் அந்த பாலத்தில் மேல் நடந்து சென்று நவகிரகங்களை சுற்றி வர முடியும். நாங்கள் அதைத்தான் செய்தோம்.
அடுத்து தர்பசயன ராமரை தரிசிக்கலாம்.
*கடைசி புகைப்படம் உபயம் கூகுள்.