கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, September 21, 2018

பரவசம் தந்த நவ திருப்பதியும், நவ கைலாசமும் - 4

பரவசம் தந்த நவ திருப்பதியும், 
நவ கைலாசமும் - 4



ஆழ்வார் திருநகரியில் திருப்தியாக தரிசனத்தை முடித்துக் கொண்டு, ராகு, கேது தலங்களான இரட்டைத் திருப்பதி என்னும் திருத்தொலைவில்லி மங்கலம் என்னும் தலத்திற்குச் சென்றோம். இரண்டு சிறிய கோவில்களும் அருகருகே, நடந்து செல்லும் தொலைவில்தான் இருக்கின்றன. இரண்டிற்கும் இடையே அழகான நந்தவனம் ஒன்றை அமைத்து பராமரிக்கிறார்கள். நவதிருப்பதி கோவில்களை பராமரிக்கும் டி.வி.எஸ். ட்ரஸ்டின் அலுவலகமும் இங்குதான் இருக்கிறது.  

ஆத்ரேய சுப்ரபர் என்னும் ரிஷி யாகம் செய்வதற்காக பூமியை சுத்தம் செய்த பொழுது,பூமியில்புதையுண்ட மிகவும் ஒளிமயமான ஒரு வில்லையும், தராசையும் கண்டார். அவைகளை கையில் எடுத்தவுடன் வில் ஆணாகவும், தராசு பெண்ணாகவும் மாறி, குபேரன் சாபத்தால் தாங்கள் இது போல மாறி, பூமியில் புதையுண்டு கிடந்ததாக கூறி,முக்தி அடைந்தனர். அதனாலேயே இந்த ஷேத்திரம் தொலைவில்லி மங்கலம் எனப் பெயர் பெற்றது. 

யாகத்தை சிறப்பாக நடத்தி முடித்த சுப்ரபர் அவிர் பாகத்தை தேவர்களுக்கு அளித்தார். அவிர் பாகம் கிடைக்கப்பெற்ற தேவர்கள் சுப்ரபருடன் திருமாலை வேண்ட, திருமாலும் அங்கு காட்சி அளித்தார். அதனால் மூலவர் தேவர்பிரான் என அழைக்கப்படுகிறார். இந்திரனுக்கும், வருணனுக்கு, வாயு பகவானுக்கும் பெருமாள் காட்சி அளித்த இடம். தாயாருக்கு தனி சந்நிதி இல்லை. நவகிரகங்களில் ராகுவிற்கான தலம். 

தேவர்பிரானை சுப்ரபர் தினமும் தாமரை மலர் கொண்டு பூஜிப்பதை பார்த்த, இத்திருக்கோவிலின் பெருமாள், தன்னையும் அதைப் போல தாமரை மலர் கொண்டு பூசிக்கும்படி வேண்ட, சுப்ரபர் இரண்டு கோவிலில் உள்ள பெருமாளையும் தாமரை மலர் கொண்டு தினமும் பூஜித்தாராம். "இந்தக் கோவிலில் தாமரை மலர் கொண்டு தன்னை பூஜிப்பவர்களின் சகல பாவங்களையும் நீக்கி அருள் தருவேன்" என்று பெருமாள் கூறியிருக்கிறார். ஆகவே, மக்களே, இந்த கோவிலுக்குச் செல்லும் பொழுது தாமரை மலர் வாங்கிச் செல்லுங்கள். 

மருத்துவத்திற்கு அதிபதிகளான அஸ்வினி குமாரர்கள் இந்தக் கோவில் பெருமாளை வழிபட்டு அவிர்பாகம் பெற்றார்கள் என்கிறது தல வரலாறு. 

கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் மூலவர் அரவிந்தலோசனர். உற்சவர் செந்தாமரைக்கண்ணன். தாயார் கருந்தடங்கண்ணி. தனி சந்நிதி கிடையாது.

இங்கிருந்து வன திருப்பதி என்று இப்போது அறியப்படும் புன்னை  நகர் அல்லது புன்னையடியில் சரவணபவன் முதலாளி ராஜகோபால் அண்ணாச்சி எழுப்பியிருக்கும்  ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவிலுக்குச் சென்றோம். 

நாங்கள் சென்ற நேரம் நடை அடைத்திருந்ததால் அங்கிருக்கும் சரவண பவனில் பகல் உணவை முடித்துக் கொண்டோம். உணவு அத்தனை சிலாக்கியம் இல்லை. உணவருந்திவிட்டு வந்த பொழுது நடை திறக்கப்பட்டிருந்தது. அங்கு தரிசனம் செய்து விட்டு, ஸ்ரீ ஜெயந்தி என்பதால் கொடுக்கப்பட்ட சுவையான வெல்லச்சீடை பிரசாதத்தை பெற்றுக் கொண்டு, ஸ்ரீனிவாச பெருமாள் சந்நிதிக்கு அருகில் இருந்த அந்த ஊரின் தெய்வமான  ஆதி நாரயணப் பெருமாள், மற்றும் கிராம தெய்வங்களான பெரிய  பலவேசம், சின்ன பலவேசம் முதலிய சன்னிதிகளில் வணங்கிவிட்டு வந்தோம். அங்கிருந்த பூசாரி, "இந்த இடத்துக்கு முன்பு யாரும் வர மாட்டார்கள், பக்கத்தில் பாலாஜி கோவில் பெரிதாக வந்தவுடன், இந்த கோவிலும் பெரிதாகி விட்டது" என்றார். 

அங்கிருந்து திருச்செந்தூர் சென்றோம். வன திருப்பதி, திருச்செந்தூர் போன்றவை நவ திருப்பதி தலங்களில் வராது என்றாலும், அவைகளுக்கும் இப்போது டூர் ஆபரேட்டர்ஸ் அழைத்துச் செல்கிறார்கள். திருச்செந்தூர் கோவிலை காலை ஆறுமணிக்கு திறந்தால், காலை ஆறு மணிக்கு இரவு 9:30குத்தான் அடைப்பார்களாம். இடையில் திரை கூட போடா மாட்டார்கள் என்பதால் மதிய நேரத்தை வீணடிக்காமல் அங்கு அழைத்துச் சென்று விடுகிறார்கள். கார் நிருத்தும் இடத்திலிருந்து பேட்டரி காரில் கோவிலின் ப்ரதான வாயில் வரை செல்லலாம். 



திருச்செந்தூரில் கும்பல் அதிகம் இல்லாததால் சந்தனக் காப்பில் முருகனை கண் குளிர தரிசனம் செய்து கொண்டோம். வெளியே ப்ரொஃபெஷனல் காமிராவை வைத்துக் கொண்டு, கடல் பின்ணனியிலும், கோவில் பின்ணனியிலும் புகைப்பட்ம் எடுத்து, அதை உடனே ப்ரிண்டும் போட்டுத் தருகிறார்கள். எங்களுக்கு பேட்டரி கார் வந்து விட்டதால் அதற்கெல்லாம் நேரம் இல்லாமல் வந்து விட்டோம்.

இன்னும் இரண்டு திருப்பதிகளை தரிசிக்க வேண்டுமே...



Thursday, September 20, 2018

படித்ததில் பிடித்தது!

படித்ததில் பிடித்தது!


சமீபத்தில் இரண்டு புத்தகங்கள் படித்தேன். ஒன்று சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' இரண்டாம் பாகம், மற்றது  சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞராக இருக்கும் திரு.SP.சொக்கலிங்கம் அவர்கள் எழுதியுள்ள 'பிரபல கொலை வழக்குகள்' என்னும் புத்தகம்.

கற்றதும் பெற்றதும்: 

ஆனந்த விகடனில் தொடர் கட்டுரைகளாக வந்த பொழுது இருந்த சுவாரஸ்யம் அத்தனை கட்டுரைகளையும் மொத்தமாக படிக்கும் பொழுது இல்லை. ஒரு புத்தகம் வெளியிட்டதுமே குறிப்பாக கவிதை தொகுப்பு தனக்கு அனுப்பிவிடுவதாக மீண்டும் மீண்டும் பல இடங்களில் குறை பட்டுக்கொண்டிருக்கிறார். அதைப்போலவே அசல் ஹைகூவிற்க்கும் ஹைக்கூ என்று நினைத்துக் கொண்டு அடுக்கப்படும் வார்த்தைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்க பல முறை முயன்றிருக்கிறார். சுவாரஸ்யமான இரண்டு விஞ்ஞான கட்டுரைகள். வீரமாமுனிவர் தமிழில் மட்டுமில்லை மத மாற்றத்திலும் வல்லவராக இருந்திருக்கிறார் என்னும் புது விஷயத்தையும் அவருடைய பரமார்த்த குரு கதைகள் இந்து மத சாமியார்களையும் நம்பிக்கைகளையும் கேலி செய்து எழுதப்பட்டவை என்பதும் கொஞ்சம் அதிர்ச்சி அளித்தன. 

 பிரபல கொலை வழக்குகள்:

ஒவ்வொரு கால கட்டத்திலும் பல் வேறு ஸ்வாரஸ்யமான வழக்குகள் நீதி மன்றத்தில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. நாம் அவற்றைப்  பற்றி கொஞ்ச நாள் பேசி விட்டு, அடுத்த பரபரப்பு செய்தி வந்தவுடன் மறந்து விடுகிறோம். அப்படி பேசப்பட்ட சில வழக்குகளைப் பற்றி துப்பறியும் நாவல் போல விவரித்துள்ளார் புத்தகாசிரியர். 

நமக்கு கொஞ்சம் பரிச்சயமான வாஞ்சிநாதன் சம்பந்தப்பட்ட  ஆஷ் கொலை வழக்கு, லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு, எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கு இவைகளோடு   சிங்கம்பட்டி கொலை வழக்கு, பாவ்லா கொலை வழக்கு, ஆளவந்தான் கொலை வழக்கு, பகூர் கொலை வழக்கு, நானாவதி கொலை வழக்கு, விஷ ஊசி வழக்கு மற்றும் மர்ம சன்யாசி வழக்கு என்று மொத்தம் பத்து கொலை வழக்குகளைப் பற்றி சரளமான நடையில் விறுவிறுப்பு குறையாமல் எழுதப் பட்டிருப்பதால் புத்தகத்தை கையில் எடுத்து விட்டால் கீழே  வைக்க முடியவில்லை. நூலாசிரியர் வக்கீலாக இருந்தாலும் வழக்கு சம்பத்தப்பட்ட தொழில் நுட்ப தகவல்களை அளவுக்கு அதிகமாக தராமல் வாசகர்களுக்கு எவ்வளவு கொடுத்தால் அவர்களால் உள் வாங்கிக் கொள்ள முடியுமோ அவ்வளவு மட்டும் விஷய தானம் செய்திருப்பது ஒரு சிறப்பு. சம்பவங்களால் பிரபலமான வழக்குகள், பிரபலமான மனிதர்கள் சம்பந்தபட்டிருப்பதால் பிரபலமான வழக்குகள் என இரண்டு வகையான வழக்குகளையும் சேர்த்திருப்பது இன்னும் ஒரு சிறப்பு.

ஆஷ் துரை கொலை வழக்கில் முதல் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்விற்காக சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்ட பொழுது அதை விசாரணை செய்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில் P.R.சுந்தரம் ஐயரும் ஒருவர் என்பதும் அவர் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லுபடியாகுமா என்று சந்தேகம் தெரிவித்தார் என்பதையும்  அறிய ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. 

எம்.ஜி.ஆர். சுடப்பட்ட வழக்கில் எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக் கொண்டார்  எம்.ஆர். ராதா. ஆனால் ஆச்சர்யம்  இருவருக்கும் உயிர் போகவில்லை. காரணம் 17 ஆண்டுகளுக்கு முன்னால் வாங்கப்பட்டு எம்.ஆர்.ராதாவின் மேஜை டிராயரில் வைக்கப்பட்டிருந்த அந்த குண்டுகள் ஒவ்வொரு முறை மேஜை டிராயர் திறந்து மூடப்பட்ட பொழுதும் அதிர்ச்சிக்கு உள்ளானதால் தன் வீர்யத்தை இழந்து விட்டிருக்கின்றன எனவே துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட பொழுது அவைகளால் போதுமான வேகத்தில் சென்று இலக்கை தாக்க முடியவில்லை என்னும் தகவல் மற்றொரு ஆச்சர்யம். 

அந்தக் கால சூப்பர் ஸ்டார்களான எம்.கே. தியாகராஜ பாகவதரும் என்.எஸ்.கிருஷ்ணனும் சம்பத்தப்பட்ட லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு மேல் முறையீடிர்க்காக   சென்னை உயர் நீதி மன்றத்தில் விசாரணைக்காக வந்த பொழுது அதை விசாரித்த நீதிபதிகளுள் ஒருவராக இருந்த ஷஹாபுதீன் பிரிவினைக்குப் பின் பாகிஸ்தான் சென்று அங்கு உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஒய்வு பெற்றார் என்பதை அறிய ஆச்சர்யமாக இருக்கிறது என்றால் அதை விட ஆச்சர்யம் லக்ஷ்மிகாந்தனை  கொலை செய்தது யார் என்பது இன்றளவும் மர்மமாகவே உள்ளது என்னும் செய்தி.

நானாவதி கொலை வழக்கு விசாரணை 1959ஆம் ஆண்டு நடை பெற்ற பொழுது அஹுஜா டவல்களும் நானாவதி  விளையாட்டு துப்பாக்கிகளும் அமோகமாக விற்பனையாகினவாம்.

பாவ்லா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜரானவர் முகமது அலி ஜின்னா, அனால் அவரால் இந்த கேசில் வெற்றி அடைய முடியவில்லை.

எல்லாவற்றையும் விட மிக மிக சுவாரஸ்யமானது இறந்து விட்டதாக கருதப்பட்ட ஜமீன் வாரிசு மீண்டு வந்த 'மர்ம சாமியார்' வழக்கு. தற்போதைய பங்களா தேஷின் டாக்காவில் இருந்த மேஜோ குமார் என்னும் ஜமீன் இளவரசரைப் பற்றி living with the Himalayan Masters என்னும் புத்தகம் படித்தவர்கள் அறிந்திருக்கலாம். எனக்கு நான் மிகச்  சிறிய வயதில் பார்த்த 'இதய கமலம்' படம்தான் நினைவுக்கு வந்தது.  உண்மை கற்பனையை விட விநோதமானது என்பதை மெய்ப்பிக்கும் நிகழ்வுகள்.

ஸ்வாரஸ்யமான நல்ல புத்தகம்! கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு. ஆசிரியர் எஸ்.பி.சொக்கலிங்கம்.


குறிப்பு: இது ஒரு மீள் பதிவு.

Monday, September 17, 2018

ஒண்ணுமே புரியல உலகத்திலே..

ஒண்ணுமே புரியல உலகத்திலே..



செப்டெம்பர் 17,  தந்தை பெரியாரின் பிறந்தநாள். பெரியாரின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. மூட நம்பிக்கைகள் மலிந்து கிடந்த அந்த காலத்தில் விடிவெள்ளி மாதிரி அவர் தோன்றாவிட்டால் பல மாறுதல்கள் நடந்திருக்குமா என்று தெரியாது. ஆனால் அவை ஏன் நீடிக்கவில்லை என்று தெரியவில்லை. 

அவர் எத்தனை பிள்ளையார் சிலைகளை உடைத்தாரோ, அவைகளைப் போல பன்மடங்கு பிள்ளையார் சிலைகள்  இன்று பூஜிக்கப்படுகின்றன. அன்று நூற்றுக் கணக்கானவர்கள் கருப்பு சட்டை அணிந்து கொண்டு நாத்திகம் பேசினார்கள் என்றால்,இன்று லட்சக் கணக்கானவர்கள் கருப்பு வேட்டி அணிந்து கொண்டு சபரி மலைக்குச் செல்கிறார்கள். 

எழுபதுகளில் கூட பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி போன்ற தினங்களில் மிகச் சிலரே அதுவும் வயதானவர்கள் மட்டுமே கோவிலுக்குச் செல்வார்கள். இன்றோ அந்த நாட்களில் சிறிய கோவில்களில் கூட நெரிசல் தாங்க முடியவில்லை. அதுமட்டுமல்ல கிருஷ்ணபட்ச அஷ்டமியில் பைரவருக்கு விசேஷ அபிஷேகம், அமாவாசை,மற்றும் ஞாயிற்றுக் கிழமை பிரத்யங்கரா தேவிக்கு அபிஷேகம். செவ்வாய் ராகு காலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சம்பழ விளக்கு என்று கோவில்களில் கும்பல். நேற்று கூட(16.9.18) பானு சப்தமி, மிகவும் விசேஷம் என்று வாட்ஸாப்பில் தகவல்கள் வந்தன.

சென்ற வருடம் காவேரி புஷ்கரம் என்று காவேரி பாயும் மாவட்டங்கள் விழி பிதுங்கின, இந்த வருடம் தாமிரபரணி புஷ்கரத்திற்கு ஐந்து லட்சம் பேர்களை எதிர்பார்க்கிறார்கள். நாற்பது வருடங்களுக்கு முன்பு புஷ்கரம் என்ற விஷயம் எத்தனை பேர்களுக்குத் தெரியும்? அதே போல இருவது வருடங்களுக்கு முன்பு அட்சயத் த்ருதியை அன்று பொன் வாங்கினால் நிறைய 
பொன் சேரும் என்பது யாருக்காவது தெரியுமா? இப்போது அன்றைக்கு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வாகனங்களை வேறு வழியில் திருப்பி விட வேண்டியிருக்கிறது. நகை கடையிலோ வாசலில் நிற்கும் காவலாளி நகை வாங்க வருபவர்களை,"வரிசையில் நில்லுங்கள்" என்று குச்சியால் அடிக்க வருகிறார். காலக்கொடுமையடா..!!  

1995ஆம் ஆண்டு, கும்பகோணத்தை சுற்றி இருக்கும் நவகிரக கோவிலைகளுக்குச் செல்லலாம் என்று கிளம்பினோம். பல கோவில்களில் யாருமே இல்லை, ஆனால் இன்றோ, எல்லா கோவில்களும் பக்தர்கள் வருகையால் வழிகின்றன. எல்லா சிவன் கோவில்களும் பரிகார கோவில்களாக மாறி விட்டதில் கொஞ்சம் வருத்தம்தான் என்றாலும், யாருமே வராமல் இருந்த கோவில்களுக்கு மக்கள் வருகை அதிகரித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. 

முன்பு இத்தனை ஜோதிடப் புத்தகங்கள் கிடையாது. இப்போது ஒவ்வொரு பத்திரிகையும் ஒரு ஜோதிடப் புத்தகம் வெளியிடுகின்றன. இஸ்லாமிய பெண் ஒருவரை ஆசிரியையாக கொண்டு கூட ஒரு ஜோதிடப் புத்தகம் வருகிறது. அதைத்தவிர குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, முன்பு அவ்வளவாக யாருக்கும்  தெரியாத அல்லது பொருப்படுத்தாத  ராகு, கேது பெயர்ச்சிகளின் பொழுது இலவச இணைப்புகள் வழங்காத பத்திரிகை இல்லை என்றே கூறலாம். அந்த நாட்களிலும் நாம் கோவில்களுக்குச் சென்றுவிட முடியாது. 

அதே போல ஜாதி ஒழிப்பு என்ற பெயரில் பெயருக்கு பின்னால் ஜாதிப் பெயரை போட்டுக் கொள்வதை ஒழித்தார்கள். இந்தியாவின் பிற மாநிலங்கள் இன்னும் ஜாதிப் பெயரை போட்டுக்கொள்ளும் பொழுது தமிழகத்தில் அதை கை விட்டிருப்பது நல்ல விஷயம்தான். ஆனால் முன்பு இல்லாத அளவிற்கு ஜாதி சங்கங்கள் இப்போது இருக்கிறதே....??!! கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் ஜாதி சங்கங்கள் கலப்புத் திருமணம் செய்து  கொள்வதற்கு தடை விதித்திருப்பதோடு, அப்படி மீறி கலப்பு திருமணம் செய்து கொள்ளும் குடும்பங்களை ஜாதிப்ரஷ்டம் செய்கிறார்களே..??!!  தவிர ஆணவக் கொலைகளும் நிற்கவில்லை.  

ராசிபலன் சொல்லாத சேனல் கிடையாது. சன் டி.வி.யில் முதலில் நட்சத்திர பலன், பின்னர் ராசி பலன் என்று இருவிதமாக கூறுகிறார்கள். இரண்டுமே பொத்தாம் பொது என்னும் பொழுது என்ன வித்தியாசமாக சொல்லிவிடப் போகிறார்கள்?

எல்லாவற்றையும் விட என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தும் ஒரு விஷயம் சன் டி.வி.யின் ஆரம்ப நாட்களில் விநாயக சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்தும் பொழுது, விநாயக சதுர்த்தி அன்று என்று கூற மாட்டார்கள்.  விடுமுறை நாளன்று என்பார்கள். இப்பொழுதோ, விநாயக சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள் என்று அறிவிக்கிறார்கள். அது மட்டுமல்ல, காலையில், ஆலய வழிபாடு, ஆன்மீக கதைகள், நட்சத்திரம், ராசி என்ற இரண்டின் அடிப்படையிலும் ராசி பலன், ஜெய் ஹனுமான், விநாயகர், சாயிபாபா என்று வரிசையாக தெய்வீக தொடர்கள். இவற்றில் சில காலை,மாலை என்று இரண்டு வேலைகளிலும் ஒளிபரப்பப்படும். எப்படி இவர்களுடைய பகுத்தறிவு இத்தனை சீக்கிரம் நீர்த்துப் போனது? புரியத்தான் இல்லை.

Sunday, September 16, 2018

பரவசம் தந்த நவ திருப்பதியும், நவ கைலாசமும் - 3

பரவசம் தந்த நவ திருப்பதியும், 
நவ கைலாசமும் - 3 




திருப்புளியன்குடியில் தரிசனத்தை முடித்துக் கொண்டு நாங்கள் அடுத்ததாக ஆழ்வார் திருநகரிக்குச் சென்றோம். நாங்கள் சென்ற பொழுது நம்மாழ்வார் சந்நிதியில் தான் பலர் வரிசையில் தரிசனத்திற்காக காத்திருந்தனர். நாங்கள் பெருமாளை சேவித்து விட்டு வரலாம் என்று அங்கு சென்ற பொழுது, அங்கு அவர்கள் எங்களிடம் "முதலில் ஆழ்வார் சந்நிதிக்குச் செல்லுங்கள். அங்கு தீர்த்தமும், சடாரியும் பெற்றுக் கொண்டு, திருப்புளியாழ்வார் என்னும் புளியமரத்தை தரிசனம் செய்து விட்டு வாருங்கள்". என்றனர். சரி என்று நாங்கள் அங்கு வரிசையில் நின்று கொண்டிருந்தவர்களோடு சேர்ந்து கொண்டோம். நம்மாழ்வார் சந்நிதியில் பாசுரம்  படித்துக்(அனுஸந்தானம் செய்து) கொண்டிருந்தார்கள். 

ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் இரண்டு ஊர்களுக்குப் பிறகு இங்குதான் அரையர் சேவை உண்டாம்.  அதன் பிறகு கற்பூர ஆரத்திக்குப் பிறகு எல்லோருக்கும் நெய் வாயில் தொங்கும் படி கோதுமை ரவை கேசரி வழங்கப்பட்டது. பின்னர் தீர்த்தமும், சடாரியும் சாதிக்கப் பட்டன. பின்னர் வரிசையில் சென்று நம்மாழ்வாரை தரிசனம் செய்து விட்டு, கீழிறங்கி, பின்புறமாக நடந்து சில படிகள் ஏறி, திருப்புளியாழ்வார் எனப்படும் புளியமரத்தை தரிசனம் செய்து கொண்டோம். 

குருகூரில் பிறந்த ஒரு ஆண் குழந்தை பிறந்ததிலிருந்து அழவில்லை, பேசவில்லை, சாப்பிடவில்லை. அதன் பெற்றோர்கள் அந்த குழந்தையை இந்த புளிய மரத்தினடியில் விட்டு விட்டு சென்று விடுகிறார்கள். அந்த புளிய மரத்தில் இருக்கும் ஒரு பொந்தில் அமர்ந்து தன் தவத்தை தொடர்கிறார். இப்படி பதினாறு வருடங்கள் கழிகின்றன. 

குருகூருக்கு அருகில் இருக்கும் திருக்கோளூரைச் சேர்ந்த மதுரகவி ஆழ்வார்(இவருடைய இயற் பெயர் எனக்குத் தெரியவில்லை) ஒரு குருவைத் தேடி வட தேச யாத்திரை செல்கிறார். அங்கே விண்ணில் தோன்றும் ஒரு தெய்வீக ஒளியைத் தொடர்ந்து வந்து, குருகூரில் இருக்கும் இப்புளிய மரத்தினடியை அடைகிறார். அங்கு தேஜோ மயமாக விளங்கும் நம்மாழ்வரைப் பார்த்ததும் அவருக்கு இந்த சிறுவனா நமக்கு குரு? என்னும் எண்ணம் தோன்றுகிறது. அவரை பரிசோதிக்க நினைத்து,

"செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்?" என்று வினவுகிறார். உடனே பதினாறு வருடங்கள் வாயைத் திறக்காமல் இருந்த அந்தக் குழந்தை,
அத்தை தின்று அங்கே கிடக்கும்" என்று பளிச்சென்று பதில் கூறுகிறது.  இங்கே செத்தது என்பது உடலைக் குறிக்கும். சிறியது என்பது ஜீவாத்மா. ஜடமாகிய ஒரு உடலுக்குள் ஒரு ஜீவன் புகுந்து பிறவியை எடுக்கும் பொழுது அது என்ன செய்யும்?(தின்பது என்பது உலக விஷயனுபவங்களை அனுபவிப்பது)

அத்தைத் தின்று அங்கே கிடக்கும் என்பதற்கு, உலக விஷயங்களை அனுபவித்துக்கொண்டு உலகில் இருக்கும் என்பது பொருள். 

மதுரகவி ஆழ்வாருக்கு புரிந்து விடுகிறது, தான் தேடிய குரு இவர்தன் என்று. மற்ற ஆழ்வார்கள் பெருமாளை பாடினார்கள் என்றால் மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வரைதான் பாடினார். நம்மாழ்வார் விக்கிரகத்தை தன் தவ வலிமையால் வடித்தவர் மதுரகவி ஆழ்வார்தான். 

அந்த பேறு பெற்ற புளியமரத்தை விட்டு வேறு எங்கும் நம்மாழ்வார் செல்லவில்லை. பெருமாள், வெவ்வேறு தலங்களில் இருந்த வடிவில் இங்கே அவருக்கு காட்சி அளித்தார்.  

இந்த கோவிலில் நம்மாழ்வார் சந்நிதிக்கு முன்பும் ஒரு கொடி மரம் இருக்கிறது. 

புளிய மரம் ஆதிசேஷன் ஆகிய லக்ஷ்மணன் அம்சம், நம்மாழ்வார் ராமனின் அம்சம். ஆகவே வேறு எங்கும் இல்லாத வகையில் ராமனுக்கு ஆதிசேஷன் குடை பிடிக்கிறார் என்றார் அர்ச்சகர். இது பற்றி தெரிந்து கொள்ள துருவிய பொழுது, கிடைத்த தகவல்:

ஒரு முறை ஏகாந்தத்தில் இருக்க விரும்பிய ஸ்ரீ ராமன், தன் தம்பி லக்ஷ்மணனை காவலுக்கு வைத்து விட்டு, "யார் வந்தாலும் உள்ளே அனுப்ப கூடாது என்று எச்சரிக்கிறார். அப்பொழுது துர்வாசர் ராமனைக்காண வருகிறார். அவருடைய கோபத்திற்கு அஞ்சிய லக்ஷ்மணன் துர்வாசரை உள்ளே அனுமதித்து விடுகிறார். இதனால் வெகுண்ட ஸ்ரீராமன், தன் கட்டளையை மீறியதற்காக புளியமரமாகும்படி தம்பியை சபித்து  விடுகிறார். அண்ணனை விட்டுப் பிரிய முடியாத தம்பி லக்ஷ்மணர், "உன்னைப் பிரிந்து நான் எப்படி இருப்பேன் ராமா?" என்று கதற, தான் *சடகோபனாக அவதரிக்கும் பொழுது லக்ஷ்மணர் எந்த புளியமரமாக இருக்கிறாரரோ, அந்த புளியமரத்தையே தான் இருப்பிடமாக கொள்வதாக வாக்களிக்கிறார்.  இத்தனை பெருமைகள் உடைய அந்த புளியமரத்தையும் வணங்கி விட்டு, மூலவரை தரிசிக்க செல்கிறோம். 

Add caption


புளியமரத்தின் இரு வேறு தோற்றங்கள் 

மூலவர் ஆதிநாத பெருமாள். நின்ற திருக்கோலம். உற்சவர் பொலிந்து நின்ற பிரான். பெயருக்கு ஏற்றார் போல் பொலிவான தோற்றம். குருகூர் வல்லி, ஆதிநாத வல்லி என்று இரண்டு நாச்சியார்கள் தனித்தனி சந்நிதிகளில்.  

பிரம்மா பூமியில் தவம் இயற்ற சிறந்த இடம் எது என்று திருமாலைக் கேட்க, தான் ஏற்கனவே தாமிரபரணிக்கரையில் எழுந்தருளியிருப்பதாக பெருமாள் காட்டிய இடம்தான் இது. ஆரம்பத்திலிருந்தே(ஆதியிலிருந்தே) இருப்பதால் ஆதிநாதன்.  ஆற்றில் மிதந்து வந்த சங்கு இந்த பெருமாளை வணங்கி மோட்சம் பெற்றதால், திருசங்கன்னித்துறை, ஆதிசேஷன் அம்சமாகிய லக்ஷ்மணன் புளியமரத்தின் வடிவில் இருப்பதால் சேஷ ஷேத்திரம், வராஹ அவதாரத்தை காண வேண்டும் என்று தவம் இருந்த முனிவர்களுக்கு பெருமாள் வராஹ நாராயணனாக பிராட்டியுடன் காட்சி அளித்த ஷேத்திரம் ஆனதால் வராஹ ஷேத்திரம். நாய்க்கும் மோட்சம் அளித்த தீர்த்த கரை என்பதால் தீர்த்த கரை என்று பலவாறாக அறியப்படுகிறது.  

கோவில் மிகப்பெரியது என்று கூற முடியாது. ஆனால் மிக அழகான சிற்பங்கள் இங்கும் இருக்கின்றன. அவசியம் செல்ல வேண்டிய கோவில்களில் இதுவும் ஒன்று.





* நம்மாழ்வார் ஏறத்தாழ முப்பத்தி நான்கு பெயர்களால் அறியப்படுகிறார். அவற்றுள் சடகோபன் என்பதும்  ஒன்று.