கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, June 4, 2017

எளிய மனிதர்கள்,பெரிய உண்மைகள்.

எளிய மனிதர்கள்,பெரிய உண்மைகள்.

சில சமயங்களில் அதிகம் படிக்காத எளிய மனிதர்கள் மிக உயர்ந்த தத்துவங்களை அனாயசமாக சொல்லிச்  சென்று விடுவார்கள்.  என் வீட்டில் வேலை செய்யும் பணிப் பெண்  கோடை காலம் ஆரம்பித்ததிலிருந்து தினமும்," ராத்திரி  தூக்கமே இல்லை, கரண்ட் போய் விட்டது வீட்டிற்குள் காற்று வருவதற்கு வழியே இல்லை. அதனால் தூக்கமே இல்லை.." என்று புலம்புவாள். அதைத்தவிர  அவள் குடியிருப்பது முதல் மாடியில். தண்ணீர் வேறு கீழிருந்து மேலே  வர வேண்டியிருக்கிறது என்பதும்  குறை. வேறு வீடு மாற்றி விடலாம் என்று தேடித் கொண்டிருந்தாள். சென்ற மாத ஆரம்பத்தில் வீடு மாற்றியும் விட்டாள். 

அவள் வீடு மாற்றி ஒரு வாரம் கழிந்து, "புது வீடு வசதியாக இருக்கிறதா?" என்று அவளிடம் கேட்டேன். "யாரும் அப்போ சொல்லவில்லை இப்போ, அந்த வீட்டுக்கா போய் இருக்கிறாய்? தண்ணியே விடாதே அந்த பொம்பள என்கிறார்கள். ஒரு நாளைக்கு ரெண்டு குடம்தான் விடறாங்க, தெரு முனையிலிருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டி இருக்கு..." என்று அலுத்துக் கொண்டாள். 

"அட கஷ்டமே! முன்னாலேயே விசாரித்திருக்க மாட்டாயோ?" என்று நான் சொன்னதும், "என்னவோ போங்க, எதெல்லாம் அனுபவிக்கனும்னு இருக்கோ, அதை எல்லாம் அனுபவித்து கழித்து விடலாம். இப்படியேவா இருந்துடும்? எல்லாம் ஒரு நாள் மாறும்.. சுகப் படும் பொழுது யார்கிட்ட போய் சொன்னோம்? என்றாள். 

நான்  அசந்து போனேன். பள்ளிக்கூட வாசலை கூட மிதிக்காதவள், எப்பேர்ப்பட்ட விஷயத்தை வெகு சாதாரணமாக சொல்லி விட்டாள்?

எதெல்லாம் அனுபவிக்கனும்னு இருக்கோ, அதை எல்லாம் அனுபவித்து கழித்து விடலாம். - எதிலிருந்தும் தப்பித்துக் கொள்ள நினைக்கக் கூடாது.

இப்படியேவா இருந்துடும்? எல்லாம் ஒரு நாள் மாறும்.. -  இதுவும் கடந்து போகும்.

இந்த விஷயங்களைத்தானே நாம் மீண்டும் மீண்டும் ஆன்மீக  சொற்பொழிவுகளில் கேட்கிறோம், அதை எத்தனை அனாயசமாக கூறி விட்டாள் படிப்பறிவில்லாத ஒரு எளிய பெண்!