நவம்பரில் நான் பார்த்த படங்கள்
மூன்றுமே கே.பாலசந்தர் இயக்கியவை. அது வரை குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீதேவி கதாநாயகியாகவும், ரஜினிகாந்த் வில்லனாகவும் அறிமுகமான படம் மூன்று முடிச்சு. இருவருமே புதுமுகம் என்பது போல் இல்லாமல் மிகச் சிறப்பாக நடித்திருந்திருக்கிறார்கள். கமலஹாசன்(அப்போதெல்லாம் அவர் கமலஹாசனாகத்தான் இருந்திருக்கிறார். பின்னாளில்தான் கமல்ஹாசன்) இடைவேளைக்கு முன்பாகவே இறந்து விடுகிறார். படத்தில் கொஞ்ச நேரம்தான் வந்தாலும், நிறைவான நடிப்பு.
டைட்டிலில் படப்பிடிப்புக்கு இடம் தந்து உதவிய திருமதி.ராஜலக்ஷ்மி, திரு.ஸ்ரீனிவாசனுக்கு நன்றி என்று போடுகிறார்கள். கமலின் பெற்றோர்கள் என்று நினைக்கிறேன்.
அபூர்வ ராகங்கள் படத்தை அந்தக் காலத்தில் ஆஹா, ஓஹோவென்று புகழ்ந்தார்கள். அந்த கால கட்டத்தில் இது ஒரு வித்தியாசமான முயற்சிதான். ஸ்ரீ வித்யா,நாகேஷ், சுந்தர்ராஜன் கச்சிதம். கமல் கொஞ்சம் ஓவர் ஆக்ட் செய்திருக்கிறாரோ என்று தோன்றுகிறது. அவருக்கு ஏன் அப்படி ஒரு கன்றாவி ஹேர் ஸ்டைல்? ஜெயசுதா தவறான தேர்வு. புதுமையாக செய்யலாம் என்று ஆரம்பித்து ஒரு கட்டத்திற்குப் பிறகு கதையை கட்டுப்படுத்த முடியாமல் அதன் போக்கில் விட்டு விட்டார் போலிருக்கிறது.
குட் ஜோக்! என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு உடனே நல்ல ஹாஸ்யம் என்று மொழி பெயர்க்கும் சுந்தர்ராஜனின் ஸ்டைல் புன்னகைக்க வைக்கிறது.
மன்மத லீலை... கதாநாயகன் என்பவன் கண்ணியவானாகத்தான் இருக்க வேண்டும் என்னும் அந்தக் கால மரபை உடைத்து ஒரு சபலிஸ்டை கதாநாயகனாக காட்டியிருக்கும் துணிச்சல்...! ஆனால் நடிகர்கள் தேர்வு சரியில்லை. கமலஹாசன் என்னதான் நன்றாக நடித்திருந்தாலும் பால் வடியும் முகம்,சின்னபையனைப் போன்ற தோற்றம் இரண்டும் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரத்திற்கு ஜஸ்டிபை பண்ண முடியாமல் தடுக்கின்றன. உடன் நடித்த நடிகைகளும் சோ சோ தான். சில காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் பல காட்சிகள் செயற்கையாக இருக்கின்றன.' மனைவி அமைவதெல்லாம்...'
'நாதமென்னும் கோவிலிலே...' என்று இரண்டு நல்ல பாடல்கள். இந்தப் படம் வெளிவந்த கால கட்டத்தில் திருமணம் செய்து கொண்ட ஆண்கள் நலங்கின் பொழுது மனைவி அமைவதெல்லாம் பாடல்தான் பாடுவார்கள்.
இந்தப் படத்தைப் பற்றி பாலச்சந்தர் கூறிய பொழுது, "கமலஹாசனின் நடவடிக்கைகளை கவனித்தேன், அப்பொழுது உருவான கதாபாத்திரம்தான் மன்மத லீலை மது" என்றார். கமலஹாசன் மீது இவ்வளவு மோசமான அபிப்ராயமா?