கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, November 18, 2019

ஒரு இட்டிலியும், ஆறு சட்டினிகளும்

ஒரு இட்டிலியும், ஆறு சட்டினிகளும் 


வாழ்க்கை வாழ்வதற்கே என்னும் தலைப்பில் திரு. சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவை  யூ டியூபில் கேட்டேன். அதில் அவர் அவருடைய தாயாரைப் பற்றி கூறும் பொழுது, ஆறு பேர்கள் இருந்த அவருடைய வீட்டில் ஒருவருக்கு தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த சட்டினியும், ஒருவருக்கு வெங்காய சட்டினியும், ஒருவருக்கு மிளகாய்ப் பொடியும்,  ஒருவருக்கு சாம்பாரும் இருந்தால்தான் இட்லி சாப்பிடுவார்களாம். அவருடைய தாயாரும் அவரவருக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பார்கள் என்று கூறியவர், அதோடு நிறுத்திக் கொண்டிருந்தால் பரவாயில்லை. "இப்போதெல்லாம் சில வீடுகளில் என்ன இலையில் விழுகிறதோ அதை சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்கள். இலையில் விழுவதை சாப்பிடும் இடத்திற்கு மிலிட்டரி என்று பெயர். நாம் என்ன மிலிட்டிரியா நடத்துகிறோம்? குடித்தனம் நடத்துகிறோம். என்ன சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறோமோ அது கிடைக்கும் இடம்தான் வீடு" என்கிறார். இதையெல்லாம் மேடையில் கை தட்டல் வாங்குவதற்காக பேச நன்றாக இருக்கும்.  ஆனால், குழந்தை வளர்ப்பில் இது ஒரு மோசமான முறை. வீடு என்பது குழந்தைகளுக்கு விரும்பியதையெல்லாம், அல்லது விரும்பியதை மட்டும் சமைத்து கொடுத்துக்கொண்டே இருக்கும் இடம் மட்டும்தானா? எல்லாவற்றையும் சாப்பிடுவதற்கும், எல்லோருடனும் அனுசரித்து போவதற்கும் கற்றுக் கொடுக்கும் இடமும் அல்லவா? இப்படி பிடித்ததைத்தான் சாப்பிடுவேன் என்று பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகள் பின்னாளில் அந்த சாப்பாட்டு பழக்கத்தாலேயே பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பார்கள், மற்றவர்களுக்கு தொந்தரவாக இருப்பார்கள்.  

ஒரே நாளில் ஆறு பேருக்கு ஆறு விதமான சட்னி, செய்து கொடுக்கும் அம்மாவை விட, "நேற்று உனக்கு பிடித்த தேங்காய் சட்னி செய்து கொடுத்தேன், அதை அப்பா,அண்ணன்கள் எல்லோரும் சாப்பிட்டார்கள், இன்று அண்ணனுக்கு பிடித்த வெங்காயச் சட்டினியை நீ சாப்பிடு" என்று சொல்லும் அம்மாதான் நல்ல அம்மாவாக இருக்க முடியும். வாழ்க்கை முழுவதும் நமக்கு பிடித்த விஷயங்கள் எல்லாம் எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்காது. எது கிடைக்கிறதோ அதை ஏற்றுக் கொள்ள பழக்க சாப்பாட்டிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். 

ஹாஸ்டல் சாப்பாடு நன்றாக இல்லை என்பதற்காக கல்லூரியிலிருந்து வெளியேறிய மாணவனையும், நல்ல சாப்பாடு கிடைக்கவில்லை என்று வெளியூர் செல்ல மறுத்த இளைஞனையும், "நாற்பது வருடங்களாக சமைத்துப் போடுகிறேன், ஒரு நாள் கூட குறை சொல்லாமல் சாப்பிட்டதில்லை" என்று புழுங்கும் மனைவிகளையும் நான் அறிவேன். ஏன் இன்றைக்கு பல விவகாரத்துகளுக்கு அனுசரித்து போக முடியாத, விட்டு கொடுக்க முடியாத மனப்பாங்குதான் காரணம். அனுசரித்துப் போகும் குணமும், அனுசரித்து போவதும், வீட்டிலிருந்துதான் தொடங்க வேண்டும். அதற்கு எளிய வழி பிடித்ததை மட்டுமே சாப்பிடுவேன் என்று கூறாமல், இலையில் விழுவதை சாப்பிட குழந்தைகளை பழக்குவதுதான். 

தவிர காலம் இருக்கும் இருப்பில் இப்போதைய பெண்கள் வீட்டில் இட்டிலிக்கு மாவு அரைத்து, வார்ப்பதே பெரிய விஷயம். அதில் இருக்கும் நான்கு பேருக்கு, அல்லது மூன்று பேருக்கு விதம் விதமாக சட்டினி அரை என்றால் முதலுக்கே மோசமாகி விடாதா?

இவருக்கு நேர் மாறான கருத்தை வழக்கறிஞர் சுமதி கூறியிருக்கிறார்.
இந்த சுட்டியை சொடுக்கி கேளுங்கள்.
https://youtu.be/8tjkIYlXW50