இலை அடை
தேவையான பொருள்கள்:
பச்சை அரிசி - 1 1/2 ஆழாக்கு
தேங்காய் துருவல் - மீடியம் சைஸ் தேங்காய் ஒன்றை
துருவியது
வெல்லம் - தேங்காய் துருவல் அளவு
ஏலக்காய் பொடி - சிறிதளவு
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
வாழை இலைகள்(must)
செய்முறை:
இதில் இரண்டு ப்ரிபரேஷன்கள் இருக்கின்றன. ஒன்று பேஸ் மாவு, இரண்டாவது பூரணம். பேஸ் மாவிற்கு அரிசியை ஊற வைத்து அரைக்க வேண்டும். எனவே பச்சரிசியை நன்றாக கழுவி இரண்டு மணி நேரங்கள் ஊற வையுங்கள். அது ஊறிக் கொண்டிருக்கும் நேரத்தில் தேங்காய் பூரணத்தை ரெடி பண்ணி விடலாம்.

தேங்காய் பூரணம் இரண்டு விதமாக செய்யலாம். சிலர் வெல்லத்தில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து,வெல்லம் கரைந்த பின் பின்னர் அதில் தேங்காயை சேர்த்து பூரணமாக கிளறுவார்கள். சிலர் தேங்காய், வெல்லம் இரண்டையும் ஒன்றாக போட்டு கிளறி விடுவார்கள். நான் இரண்டாவது முறையை பின்பற்றுகிறவள். பூரணம் ரெடியானதும் அதில் ஒரு ஸ்பூன் நெய், கொஞ்சம் ஏலப்பொடி சேர்த்து கிளறி ஆற விடவும்.
அரிசி நன்றாக ஊறியதும், அதை மிக்சியில் போட்டு, தண்ணீர் விடாமல் கெட்டியாகவும்,நைஸாகவும் அரைத்துக் கொள்ளவும். இப்போது இங்கிரிடையேன்ட்ஸ் தயார். இலை அடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
வாழை இலையை தண்ணீர் விட்டு துடைத்து, பின் அதில் அரைத்த அரிசி மாவை ஒரு சிறிய கரண்டி அல்லது பெரிய ஸ்பூனால் ஊற்றி, தோசை வார்ப்பது போல *வட்டமாக தேய்த்து, அதில் ஒரு ஓரத்தில் பூரணத்தை வைத்து, மறு பக்க இலையோடு சேர்த்து மடித்து மூடவும், மூடிய பக்கம் கீழே இருக்கும் வண்ணம் இட்லி தட்டில் வைத்து வேக வைக்க வேண்டும். ஒரு தட்டில் மூன்று அல்லது நான்கு இலை அடைகள் வைக்கலாம். நன்றாக வேக 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஆகும். சற்று சூடு ஆறியதும் இலையை உரித்தால், அழகான, சுவையான இலை அடைகள் தயார்.

* மாவை தேய்ப்பதில் கவனம் தேவை, மிகவும் மெலிதாகவும் இருக்கக்கூடாது, மிகவும் தடிமனாகவும் இருக்கக்கூடாது. நிதானமாக இருக்க வேண்டும்.
பின் குறிப்பு: இதில் தேங்காய் பூரணம்தான் வைக்க வேண்டும் என்பதில்லை. சக்கை விழுது என்னும் பலாப்பழ விழுதோடு தேங்காய் சேர்த்து அதையும் பூரணமாக வைத்து மூடலாம். ஊற வைத்த அவல், தேங்காய், வெல்லம், இவற்றோடு பொடியாக நறுக்கிய வாழைப்பழம் சேர்த்து பூரணமாக செய்து, வைத்து மூடலாம்.