கோலாப்பூர் மஹாலக்ஷ்மி தரிசனம்
![]() |
மூல ஸ்தான வடிவம் |
நாங்கள் தரிசித்த அலங்காரம்
புனேயிலிருந்து கோலாப்பூருக்கு காலை 6:30 மணிக்கு பஸ். வால்வோ பஸ் என்றாலும், நம் ஊர் வால்வோ பஸ் போல் இடைஞ்சலாக இல்லாமல் தாராள லெக் பேசோடு சௌகரியமாக இருந்தது. 11:30க்கு கோலாப்பூருக்கு சென்று விட்டோம். இங்கிருந்தே ஆன் லைனில் புக் செய்திருந்த பாலாஜி ரெசிடென்சி கோலாப்பூரின் பிரதான மார்க்கெட்டான மஹாரான பிரதாப் ரோட்டுக்கு அருகில் ஒரு சந்தில் இருந்தது. அமைந்திருந்த இடம் சுமாராக இருந்தாலும், ஹோட்டல் மிக வசதியாகவும், நவீனமாகவும் இருந்தது. அங்கிருந்து மஹாலக்ஷ்மி கோவில் ஆட்டோவில் சென்றால் இருபது ரூபாய் தொலைவுதான், ஆனால், முப்பது கேட்கிறார்கள். நடந்தும் செல்லலாம்.
மஹாலக்ஷ்மி கோவில் ரொம்பவும் பெரிது என்று கூற முடியாது. நான்கு புறமும் வாசல்கள் உள்ளன. புராதனமான கோவில் என்பது அதன் கட்டுமானத்தைப் பார்த்தால் தெரிகிறது.
சக்தி பீடங்களில் முக்கியமான ஒன்று. கரவீரபுரமாக இருந்த இந்த இடத்தில் மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த கோலாஸுரனை, தேவி மஹாலக்ஷ்மியாக வந்து அழித்த இடம். அவன் இறக்கும் தருவாயில் இந்த இடம் தன் பெயரால் அழைக்கப்பட வேண்டும் என்று விண்ணப்பிக்க அதன்படி கோலாப்பூர் ஆயிற்றாம். லக்ஷ்மி அஷ்டோத்திரத்தில் "நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி.." என்று குறிப்பிடப்படுவது நினைவு கூரத்தக்கது.
17ஆம் நூற்றாண்டில் முகமதியர் படையெடுப்பின் பொழுது இந்தக் கோவிலின் பூஜாரி ஒருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட மூல விக்கிரகம் சத்திரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜியின் முயற்சியால் கண்டெடுக்கப்பட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். சிவாஜியின் மருமகள் ராணி தாராபாய் கோலாப்பூர் சமஸ்தானத்தை ஸ்தாபித்த பிறகு இந்த கோவிலை விரிவு படுத்தியிருக்கிறாராம்.
கோவில் பெரியது என்று கூற முடியாது. கோபுரத்தில் நிறைய அழகான சிலைகள். சில உடைக்கப்பட்டிருக்கின்றன. பிரதான மண்டபத்திற்குள் நுழையும் முன் இடது புற சுவற்றில் இருக்கும் விநாயகர் புடைப்புச் சிற்பத்தை சாட்சி கணபதி என்கிறார்கள். நுழைவு வாயில் கொஞ்சம் குறுகலாக, உயரம் குறைவாக இருக்கிறது. உள்ளே நுழைந்து சிறிது தூரத்தில் மஹா காளி சந்நிதி.
அங்கிருந்து மஹாலக்ஷ்மி குடியிருக்கும் பிரதான வாயிலுக்கு செல்லும் வழியில் சூரியநாராயண மூர்த்தியின் சிலையை காண முடிகிறது. கர்பக்ரஹத்தின் வாயிலில் பிருமாண்டமான ஜெய,விஜய துவாரபாலகர்கள்.
![]() |
சூரிய நாராயண மூர்த்தி |
![]() |
துவார பாலகர்களில் விஜயன் |
![]() |
சாட்சி கணபதி |
![]() |
தீப ஸ்தம்பங்கள் |
உள்ளூர் மக்கள் தாயாரை அம்பா, அல்லது அம்பாபாய் என்று குறிப்பிடுகிறார்கள். நின்ற திருக்கோலம். நான்கு கரங்கள். ஒன்றில் மாதுளம் பழம், இன்னொன்றில் பூமியில் ஊன்றப்பட்ட கதை, மற்ற இரு கரங்களில் சக்கரம், மற்றும் அமிர்த கலசம் ஏந்தி, ஆதி சேஷன் குடை பிடிக்க காட்சி அளிக்கிறாள் என்று குறிப்பிடப் பட்டாலும், நாங்கள் சென்ற பொழுது செய்யப்பட்டிருந்த அலங்காரத்தால் கதை, மாதுளம் பழத்தை ஏந்தியிருக்கும் கரம் இவைகளை காண முடியவில்லை. இங்கிருக்கும் அம்மனின் விசேஷம் தன்னை வணங்கும் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதோடு, பந்தங்களிலிருந்து விடுவித்து மோட்சத்தையும் அளிப்பவள் என்பதாகும்.கண்குளிர தரிசனம் செய்து கொண்டு வெளியே வரும் வழியில் தனி சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் மஹாசரஸ்வதியை தரிசித்துக் கொண்டு வெளியே வருகிறோம்.
வெளியே வந்ததும் புகைப்படங்கள்
வெளிசுற்றில் சித்தி விநாயகருக்கென்று ஒரு தனி சந்நிதியும், தத்தாத்ரேயருக்கு தனி சந்நிதியும் இருக்கின்றன. நுழைவு வாயிலுக்கு எதிராக மகாவிஷ்ணுவுக்கு தனி சந்நிதி இருக்கிறது.
அம்மன் சந்நிதிக்கு மேற்கே உள்ள ஜன்னல் வழியே ரத சப்தமியை ஒட்டி வரும் ஜனவரி 31, பிப்ரவரி 1, பிப்ரவரி 2 ஆகிய வருடத்தில் மூன்று நாட்கள் சூரியனின் கிரணங்கள் அம்பாளின், பாதம், மார்பு, திருமுகம் ஆகிய மூன்று பகுதிகளிலும் விழுவது இங்கு கிரனோத்ஸவ் என்று சிறப்பாக கொண்டாடப்படுமாம். அதைத்தவிர நவராத்திரியும் சிறப்பு.
சென்ற வெள்ளியன்று கோலாப்பூர் மஹாலக்ஷ்மியை தரிசிக்கும் பாக்கியம் வாய்த்தது. கோவிலில் கும்பல் இருந்தாலும் வரிசை நகர்ந்து கொண்டே இருந்ததால் நன்றாக தரிசனம் செய்ய முடிந்தது. இரண்டாவது ஆடி வெள்ளியான இன்று, லக்ஷ்மி தேவியின் அருளால், எல்லோர் வாழ்விலும் சகல சௌபாக்கியங்களும் நிறைய அம்பா பாயை வேண்டுகிறேன்.
கோலாப்பூரின் மற்ற பகுதிகளை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.