ஆற்றில் போட்டதை குளத்தில் தேடுவதா?(உரைநடை)
இதே தலைப்பில் ஒரு காணொளி வெளியிட்டிருக்கிறேன். அதை பார்க்க முடியாதவர்களுக்காக இந்த உரை நடை:
சிவபெருமானை தன்னுடைய தோழனாக கருதி வழிபட்ட சுந்தரமூர்த்தி நாயனார், தொண்டை மண்டலத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டு விருதாச்சலத்தை கடந்து செல்லும் பொழுது, "எம்மை மறந்தனையோ சுந்தரா?"என்னும் அசரீரி கேட்டு, அருகில் எங்கேயோ சிவாலயம் இருக்க வேண்டும் ஆனால் அதற்கு எப்படி செல்வது என்பது தெரியவில்லையே..?" என்று மயங்கி நிற்கும் பொழுது, இறைவனும், இறைவியும் வயது முதிர்ந்த தம்பதியினராக வந்து சுந்தரரை விருத்தாச்சலம் கோவிலுக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கிருக்கும் சிவபெருமான் மீது பாடல்கள் பாடிய சுந்தரருக்கு சிவபெருமான் பதினையாயிரம் தங்க கட்டிகளை வழங்குகிறார். அவற்றை தனியாகச் செல்லும் தான் எப்படி எடுத்துச் செல்வது என்று தயங்கிய சுந்தரர், சிவபெருமானிடம், "இந்த தங்க கட்டிகளை நான் இங்கு ஓடும் திருமணிமுக்தா நதியில் போடுகிறேன், அவைகளை திருவாரூரில் இருக்கும் கமலாலயம் திருக்குளத்தில் கிடைக்கும்படி அருள வேண்டும்" என்று வேண்டுகிறார். சிவபெருமானும் அதற்கு ஒப்புக்கொள்ள அவரளித்த பதினையாயிரம் தங்க கட்டிகளில் அடையாளமிட்டு திருமணிமுக்தா நதியில் போட்டு விடுகிறார்.
திருவாரூருக்கு திரும்பிச் சென்ற, சுந்தரர் தன் மனைவியாகிய பரவை நாச்சியாரிடம் இந்த விஷயத்தை கூறி, அவரையும் கமலாலயத்திற்கு அழைக்கிறார். அவர் கூறியதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், அவருடன் செல்கிறார் பரவை நாச்சியார். திருவாரூர் தியாகேசனையும், அங்கிருக்கும் விநாயகரையும் வணங்கி, கமலாலயம் குளத்தில் மூழ்கி தான் மணிமுக்தா ஆற்றில் போட்ட தங்க கட்டிகளை தேடுகிறார், அவருக்கு கிட்டவில்லை. மீண்டும் ஒரு முறை மூழ்கி தேடுகிறார், அப்போதும் கிட்டவில்லை, இதைப்பார்த்த பரவை நாச்சியார்,"ஆற்றில் இட்டதை குளத்தில் தேடுவதோ" என்று கேலியாக நகைத்தாராம். உடனே சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள், சிவபெருமானிடம்,"என் மனைவி என்னை கேலி செய்யும்படி வைத்து விட்டாயே இறைவா, இது சரியில்லை, எனக்கு அந்த பொற்கட்டிகளை தந்தருள வேண்டும்" என்று வேண்ட, அவர் மணிமுக்தா ஆற்றில் இட்ட தங்க கட்டிகள் திருவாரூர் கமலாலயம் குளத்தில் அவருக்கு கிட்டின. நமக்கு ஒரு சொலவடையும் கிட்டியது.