கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, December 25, 2014

உறவுகள்

உறவுகள் 

திரு.G.M. பாலசுப்ரமணியன் தன் வலைப்பூவில் 'உறவுகள்' என்னும் பதிவில் முன்பு போல் இல்லாமல் தற்காலத்தில் உறவுகள் இருக்கின்றனவே தவிர அதில் ஒட்டுதல் இல்லை அதற்கு காரணம் பெண்கள் பிறந்த வீட்டு சொந்தங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை புகுந்த வீட்டினருக்கு அளிக்காததுதான் என்று முடித்திருப்பதோடு  இதை  ஒரு தொடர் பதிவாக்க விரும்புவதாகவும், குறிப்பாக பெண் பதிவாளர்களை தொடரும்படியும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஒரு வேளை நம்மை(அதாங்க பெண்களை) சீண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறாரோ என்றும் ஒரு சந்தேகம் வந்தது.  எப்படி இருந்தாலும் பதில் சொல்லலாம் என்று முடிவு எடுத்து விட்டேன்.. 

Disclaimer: இது பெண்ணிய கட்டுரை அல்ல 

உலகம் முழுவதிலுமே திருமணத்திற்கு பின் ஒரு ஆணோடுதான் பெண் வர வேண்டி இருக்கிறது. தன்னுடைய தாய்,தந்தை,உடன் பிறந்தவர்கள் என்று எல்லோரையும் துறந்து கணவனை மட்டும் உறவாக கொண்டு புகுந்த வீட்டிற்குள் வாழ வரும் அவளை எத்தனை வீட்டில் தன் குடும்ப உறுப்பினராக முழு மனதோடு சேர்த்துக் கொள்கிறார்கள்? மருமகள் என்று கூறினாலும் மகளுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் மருமகளுக்கு பெரும்பாலும் வழங்கப்படுவதில்லை. பேரன், பேத்திகளை கொண்டாடும் குடும்பங்கள் அவர்களை பெற்றுத் தந்த மருமகள்களை பெரும்பாலும் மதிப்பதில்லை. சில குடும்பங்கள் இன்னும் மோசம், மறுமகள் மேல் உள்ள த்வேஷத்தை பேரக் குழந்தைகள் மேலும் காண்பிப்பார்கள். 

பல பெண்களுக்கு வருத்தம் தரும் ஒரு விஷயம் என்னவென்றால், புகுந்த வீட்டினர் சில விஷயங்களை டிஸ்கஸ் செய்யும் பொழுது, மாமனார், மாமியார், கணவன்,மைத்துனர்,நாத்தனார் என்று எல்லோரும் கூடி பேசுவார்களே தவிர அந்த கூட்டத்தில் மருமகள்கள் ஓரங்கட்டப்படுவதுதான். இப்படி இருக்கும் பொழுது அந்தப் பெண்ணிற்கு எப்படி புகுந்த வீட்டினர் மீது பாசம் வரும்? சிறு வயதில் தாயோடு அதிக நேரத்தை கழிக்கும் குழந்தைகள் தாய் சிறுமை படுத்தப் படுவதை உணரும் பொழுது அவர்களின் அடி மனதில் தந்தை வழி உறவினர் மீது ஒரு கோபம் பதியலாம். 

தான் எதிர்பார்த்த பாசமும் நேசமும் புகுந்த வீட்டில் கிடைக்காத பொழுது அந்த ஏக்கத்தை தன் கணவனிடம் சொல்லி ஆறுதல் தேட முயலும் பொழுது கணவன்மார்கள் மனைவியின் குறையை காது கொடுத்து கேட்டால் போதும்.  ஆனால்  எத்தனை கணவன்மார்கள் இதை செய்கிறார்கள்? "ஆரம்பித்து விட்டாயா உன் புலம்பலை?" " என் வீட்டு மனிதர்களை குறை சொல்லா விட்டால் உனக்கு தூக்கம் வராதே" "ஏண்டா வீட்டுக்கு வரோம்னு இருக்கு" என்றெல்லாம் இவள் மீதே குற்றத்தை திருப்ப, வேறு வழியில்லாமல் அவள் தன் பிறந்த வீட்டையே தஞ்சம் அடைகிறாள். அங்கு அவளுக்கு ஆறுதலும், தேறுதலும், அரவணைப்பும் கிடைக்க எங்கு தாய் சந்தோஷமாக இருக்கிறாளோ,அங்கு குழந்தைகளும் பாசமாக இருக்கின்றன.

கணவன்மார்கள் நினைத்தால் உறவுகளை மேம்படுத்த முடியும். மனைவிக்கு மனிதர்களை அனுசரித்துச் செல்லும் குணம் இல்லை என்றாலும் அவளுக்கு தெரியாமல் அவன் தன் தாய் தந்தையோடும், உடன் பிறந்தவர்களோடும் உறவைத் தொடர வாய்ப்பும்,வசதியும் உண்டு. மனைவி வராவிட்டாலும் தன் உறவினர் வீடுகளுக்கு தான் செல்வதோடு, தன் குழந்தைகளையும் அழைத்துச் செல்வது, அவர்களைப் பற்றி நல்ல விதமாக குழந்தைகளிடம் பதிய வைப்பது போன்ற செயல்களை செய்வதன் மூலம் உறவுகளை மேம்படுத்தலாம். இப்படி செய்த பல ஆண்களை எனக்கு தெரியும். நாளாவட்டத்தில் அவர்களின் மனைவியரும் மனம் மாறி புகுந்த வீட்டினரோடு பாசமாக மாறினர்.

திருமணத்திற்கு முன் புகைபிடிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டவன் மனைவி எத்தனை சொல்லியும் அந்த பழக்கத்தை விடுவதில்லை. திருமணத்திற்கு முன் மது அருந்த ஆரம்பித்தவன், மனைவி சொல்லி அதை விடுவதில்லை, ஆனால் பெற்ற தாய்,தந்தையர்,சகோதர,சகோதரியரை மாத்திரம் மனைவி சொல்லி விட்டு விடுவது என்ன நியாயம்?

ஆனால் தற்காலத்தில் நிலைமை கொஞ்சம் மாறி வருவது சற்று ஆறுதல்.