கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, November 26, 2016

தொடரும் நட்பு!

தொடரும் நட்பு!

நமக்கு அமையும் பெற்றோர்களை நாம் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால் நண்பர்களை தேர்ந்தெடுக்க முடியும். அப்படி அமையும் நண்பர்களுக்கு நம் வாழ்க்கையையே மாற்றும் வல்லமை உண்டு. 

உதவாக்கரை என்று வீட்டில் உள்ளவர்களால் கரித்து கொட்டப்பட்டவர் குடும்பத்தையே தூக்கி நிறுத்துபவராக மாறலாம், மிகச் சிறந்த குழந்தை என்று கொண்டாடப்பட்ட குழந்தை உதவாக்கரை ஆகலாம். இதைத்தான் பூவுடன் சேர்ந்த நாரும் மணம் பெரும், பன்றியுடன் சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்னும் சொலவடை கூறுகிறது. 

ஆடை இழந்தவனுக்கு கைகளை போல நண்பனுக்கு ஆபத்து என்றல் ஓடி வந்து உதவ வேண்டும் என்று நட்புக்கு இலக்கணம் கூறுகிறது திருக்குறள். ஆனால் பெரும்பான்மையோர் நண்பனுக்கு ஆபத்து என்று தெரிந்தால் ஓடிப் போய் விடுவார்கள். 

நண்பர்களை மூன்று விதமாக பிரிக்கலாமாம். கடைசி வகை நண்பர்கள் வாழை மரம் போன்றவர்கள். வாழை மரத்திற்கு தினமும்  தண்ணீர் பாய்ச்ச வேண்டும், பூச்சி அரிக்காமல் பாதுகாக்க வேண்டும், கொஞ்சம் வேகமாக கற்று அடித்தால் வாழை மரம் சாய்ந்து விடும், சாயாமல் இருக்க முட்டு கொடுக்க வேண்டும். அப்பொழுதான் பலன் கொடுக்கும், அதுவும் ஒரு முறைதான். இது போல தினசரி பார்த்து, பேசி பழகி பராமரித்தால்தான் சிலருடைய நட்பை பாதுகாக்க முடியும். 






மத்திம வகை தென்னை மரம் போன்றவர்கள். தென்னை மரத்திற்கு அவ்வப்பொழுது தண்ணீர் பாய்ச்சினால் போதும். வருடக் கணக்கில் பலன் கிடைக்கும். இது மாதிரி சிலரோடு அவ்வப்பொழுது தொடர்பில் இருந்தால் போதும் நட்பு நீடிக்கும்.  

முதல் தர நண்பர்கள் பனை மரம் போன்றவர்கள். பனை மரத்தை யாரும் விதைப்பதில்லை. அதற்கு நீர் பாய்ச்ச வேண்டும் என்பதெல்லாமும் கிடையாது. பறவையின் எச்சத்தாலோ, அல்லது வேறு ஏதோ வகையில் தானே முளைக்கும் அது தன்னைத்தானே பராமரித்துக் கொள்ளும். இப்படி ஏதோ ஒரு சிறிய விஷயத்தில் தோன்றினாலும், எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி வளர்ந்து அபரிமிதமாக நன்மையையும் செய்வார்கள் இந்த வகை நண்பர்கள்.
எனக்கு மூன்று வகை நண்பர்களும் உண்டு. 

இராமாயணத்தில், நண்பனாக அறிமுகமான குகனையும், சுக்ரீவனையும், சகோதரனாகவே ஏற்றுக் கொள்கிறான் ராமன். வாலியை மறைந்து நின்று அவன் அம்பு எய்த பிறகு மரணப் படுக்கையில் இருக்கும் வாலி ராமனிடம் சில கேள்விகளை கேட்கிறான், அவற்றுள் ஒன்று, "உன் மனைவியை ராவணன் கவர்ந்து சென்று விட்டான், அவளை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக போயும் போயும் இந்த சுக்ரீவனோடு போய் நட்பு பூண்டிருக்கும் உன் சாதுர்யம் எனக்கு வியப்பாக இருக்கிறது. நான் ஒரு சொடக்கு போட்டால் ராவணன் உன் மனைவியை உன் காலடியில் கொண்டு வைத்து விடுவான், அப்படி இருக்க இந்த கோழையை எப்படி நண்பனாக்கிக் கொண்டாய்?" என்று கேட்க, அதற்கு ராமன், " உன்னோடு நான் எப்படி நட்பு பூண முடியும்? சுக்ரீவனும் நானும் ஒரே நிலையில் உள்ளவர்கள். நீயோ மாற்றான் மனைவியை கவர்ந்து வந்துள்ளவன், உனக்கு என்னுடைய வலியும் துயரமும் ஒரு போதும் புரியாது. நட்பு சமமான இருவருக்கிடையேதான் சிறப்பாக இருக்கும்." என்று பதில் கூறுகிறான்.   

அறிவு, அந்தஸ்து, சூழல், எண்ணம் போன்ற எதிலாவது சமமாக இல்லாத இருவர் நட்பு பூண்டால் அது நீடிக்காது என்பதற்கு புராணத்திலும், சரித்திரத்திலும் எண்ணற்ற சான்றுகள் உள்ளன. மிகச் சிறப்பான உதாரணம் மஹாபாரதத்தில் அரசன் துருபதனுக்கும், அந்தணர் துரோணருக்கும் இடையே இருந்த நட்பு. 

சிறு வயதில் குருகுலத்தில் ஒன்றாக படித்த பொழுது தோழர்களாகிறார்கள் இருவரும். பிரியும் பொழுது, அரசனான தன்னிடம் எந்த உதவி தேவை என்றாலும் அணுகலாம் என்று கூறி பிரிகிறான் துருபதன். கால் ஓட்டத்தில் வறியவராகி விட்ட துரோணர் தன மகனுக்காக ஒரு பசு மாட்டினை தன் தோழனான அரசன் துருபதனிடம் தானமாக பெற்று வரலாம் என்று அவனை நாடிச் செல்கிறார். நாடாளும் அரசனாக விளங்கும் தனக்கு ஏழையான பிராமணர் எப்படி நண்பராக இருக்க முடியும் என்று அவரை அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறான். இதனால் மனம் புண் பட்ட துரோணர், அர்ஜுனனிடம் குரு தக்ஷணையாக துருபதனை போரிட்டு வென்று, அவனை தேர்க்காலில் கட்டி இழுத்து வர வேண்டுகிறார். அர்ஜுனன் அப்படியே செய்ய, "நீ அரசன் என்ற மமதையில்தானே அன்று என்னை அவமதித்தாய், இன்று நீ என் அடிமை, நான் உனக்கு என் வசப்பட்ட ராஜ்ஜியத்தை பிச்சையாக போடுகிறேன், எடுத்துக் கொள்" என்று அவனை வேறு விதமாக அவமானப் படுத்த, அதை மனதில் வைத்து கருவிய துருபதன், அர்ஜுனனை மணந்து கொள்ள ஒரு மகளும், துரோணரை கொல்ல ஒரு மகனும் தனக்கு வேண்டும் என்று வேள்வி செய்து திரௌபதியையும், திருஷ்டதுய்மனையும் பெறுகிறார். 

ஆக மஹாபாரதத்தில் முக்கிய திருப்பங்களுக்கு காரணமாக அமைவது அந்தஸ்தில் சமமில்லாத இருவரிடையே உண்டான நட்பு.! அதே மஹாபாரதத்தில் சுயநல நோக்கோடு ஏற்பட்டது என்றாலும் கர்ணனுக்கும் துரியோதனனுக்கும் இடையே நிலவிய நட்பு ஒரு சிறப்பான இடத்தை வகிக்கிறது. தேரோட்டியின் மகனான கர்ணனை அரசனாக உயர்த்தி நண்பனாக்கிக் கொண்டு அதற்க்கு 100% நியாயம் கர்ப்பிக்கிறான் துரியோதனன்! அதற்கு விலையாக கர்ணன் தன் உயிரையே தருவது நட்பின் பரிமாணத்தை உயர்த்துகிறது.

புராணத்தை விட்டு விட்டு சரித்திர காலத்திற்கு வந்தால், கம்பனுக்கும் குலோத்துங்கனுக்கும் இடையே நிலவிய நட்பிற்கு வில்லனாக வந்தது அவர்கள் வாரிசுகளின் காதல். இங்கேயும் அந்தஸ்துதான் தடை. ஆனால், இந்த அந்தஸ்து கிருஷ்ண தேவராயருக்கும் தெனாலி ராமனுக்கும் இடையேயும், அக்பருக்கும் பீர்பாலுக்கும் இடையேயும் வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

ஒளவையாருக்கும் அதியமானுக்கும் இடையே நிலவிய நட்பு ஆச்சர்யமானது. அந்த காலத்திலேயே ஒரு பெண்ணும் ஒரு ஆணும் நட்பு கொள்ள முடியும் என்று நிரூபித்த நட்பு. இதைப் போல மற்றொரு ஆச்சர்யமான நட்பு பிசிராந்தையாருக்கும், கோப்பெருஞ் சோழனுக்கும் இடையே நிலவிய நட்பு. 


பாண்டிய நாட்டில் வாழ்ந்த பிசிராந்தையாரும், சோழ மன்னனான கோப்பெருஞ்சோழனும் ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே நட்பு கொள்கின்றனர்.  இறுதி காலத்தில் தன் புதல்வர்களின் செயலால் மனமொடிந்த கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்து உயிர் விடத் துணிகிறார். அப்போது, தான் வடக்கிருந்து உயிர் விடத் துணிந்திருப்பது தெரிந்தால் தன் நண்பரான பிசிராந்தையார் நிச்சயம் தன்னை காண வருவார், தன்னுடன் அவரும் வடக்கிருந்து உயிர் விடுவார் என்று தனக்கு அருகில் தன் நண்பருக்கும் ஒரு ஆசனத்தினை தயாராக வைத்து காத்திருக்கிறார். அதைப் போலவே இந்த செய்தியை கேள்விப் பட்ட பிசிராந்தையார் பாண்டிய நாட்டிலிருந்து உறையூருக்கு வந்து கோப்பெருஞ் சோழனோடு வடக்கிருந்து உயிர் நீக்கினார் என்பது ஆச்சர்யமூட்டும் விஷயம்.



மிகச் சமீபத்தில் மூதறிஞர் ராஜாஜியும், பெரியார் ஈ.வே.ரா.வும் கருத்தாலும்,கொள்கையாலும் மாறுபட்டாலும் சிறந்த நண்பர்களாகவே விளங்கினர். ராஜாஜி மரணமடைந்த பொழுது, அவருடைய இறுதிச் சடங்குகளை  தள்ளாத வயதிலும், வீல் சேரில் அமர்ந்தபடி கண்களில் தாரை தாரையாக நீர் வழிய பார்த்துக் கொண்டிருந்தார் பெரியார். அப்படிப் பட்ட தலைவர்களை இனிமேல் பார்க்க முடியுமா? 

ஒரு சீன பழமொழி உங்கள் குழந்தைகளை பத்து வயது வரை இளவரசனைப் போல நடத்துங்கள், பதினெட்டு வயது வரை அடிமையை போல நடத்துங்கள், அதற்குப் பிறகு நண்பனைப் போல நடத்துங்கள் என்கிறது. ஆனால் வேறு சிலர் குழந்தைகளுக்கு நண்பர்கள் வெளியில் நிறைய பேர் கிடைப்பார்கள், பெற்றோர்கள் ஒருவர்தானே இருக்க முடியும், எனவே நான் என் குழந்தைகளுக்கு பெற்றோராகவே இருக்க விரும்புகிறேன் என்கிறார்கள். என்னுடைய கேள்வி, நாம் நண்பர்களாக நடத்தினாலும் அவர்கள் நம்மை நண்பனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமே?
    
இந்து மதம் கடவுளிடம் செலுத்தும் பக்தியில் ஒன்பது விதங்களைக் கூறி, அதில் ஒன்று 'சக்யம்' என்கிறது. அதாவது கடவுளை தோழனாக கருதுவது. அர்ஜுனன் கிருஷ்ணனிடம் செலுத்திய பக்தி இந்த வகையைச் சார்ந்தது. சைவ சமய குரவர்கள் நால்வரில் சுந்தரர் இந்த வகை பக்தியைத்தான் சிவ பெருமான் மீது செலுத்தி தம்பிரான் தோழர் எனப்பட்டார்.

ஸோ, மனிதர்கள் முதல் கடவுள் வரை செல்லுபடியாகக் கூடிய நட்பு கொண்டாடப்பட வேண்டிய விஷயம்தானே ?    

என் வலைப்பூவில் நான் என் கணவரின் பள்ளித் தோழர்கள் சந்திப்பை பற்றி எழுதியிருந்தேன். அதைப் படித்து விட்டு 'எங்கள் ப்ளாக்' ஸ்ரீராம் நட்பை பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார். அதைப் படித்த பிறகு, நட்பை பற்றி யோசித்ததில் இந்த பதிவு உருவாயிற்று. மராத்தான் போல இது ஒரு ப்ளாகத்தான் ஆகி விட்டது. 

Tuesday, November 22, 2016

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே


1965 ஆம் வருடத்திலிருந்து 1971 வரை சென்னை மைலாப்பூர் பி.எஸ்.ஹை ஸ்கூல்(வடக்கு)ல் படித்த மாணவர்கள் ஒன்று கூடிய நிகழ்வு 15.11.16 செவ்வாய் அன்று மைலாப்பூர் கிளப்பில் நடந்தது. அந்த மாணவர்களில் என் கணவரும் ஒருவர் என்பதால், நானும் என் கணவரோடு அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டேன். 

மாலை 6:30 முதல் 8:30 வரை என்று குறிப்பிட்டிருந்தார்கள். நாங்கள் அங்கு சென்ற போது 6:40 இருக்கும். மூன்று குடும்பத்தினர்தான் வந்திருந்தனர். சற்று நேரத்தில் பெரும்பான்மையோர் வந்து விட்டனர். உடனே ஜூசும், ஸ்டார்ட்டர்களும் வரத் துவங்கின, மெயின் கோர்ஸ் உணவு ஆரம்பிக்கும் வரை வந்து கொண்டே இருந்தன.

ஒரு சிலரைத் தவிர பெரும்பான்மையோர் 45 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் சந்திக்கின்றனர். 

"உன்னைப் பார்த்ததும் படகோட்டி படத்தில் வரும் பாடல்தாண்டா நினைவுக்கு வருது, நீ பாடுவாயே..." என்றும்,

"எப்படிடா அப்படியே இருக்க? இப்போ கூட தோளில் ஒரு பையை மாட்டி விட்டால் கடைசி பெஞ்சில் உட்கார்த்தி விடலாம்". என்றும் 

"நாங்கள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது ஒரு முறை கணக்கு வாத்தியார், மிகவும் கஷ்டமாக கேள்வித்தாளை தயாரித்து விட்டார், இவன் கிட்ட கொஞ்சம் ஆன்செர் ஷீட் காட்டுடானு சொன்னேன், காட்ட  மாட்டேன்னு சொல்லிட்டான்..." என்றும் அந்த காலத்திற்கே சென்று விட்டார்கள். 

இந்த ரீ யூனியனை ஏற்பாடு செய்ததில் பெரும் பங்கு வகித்த திரு.கிருஷ்ண பிரசாத், திரு. முரளி, மற்றும் திரு.ரகுநாதன் இவர்களில் ரகுநாதன் அமெரிக்கா சென்று விட்டதால் கலந்து கொள்ளவில்லை. கிருஷ்ண பிரசாத் ஏதோ அவர் வீட்டு விசேஷம் போல எல்லோரையும் தனிப்பட்ட முறையில் உபசரித்து, கவனித்துக் கொண்டார். 

எல்லோரையும் வரவேற்று பேசிய கிருஷ்ண பிரசாத் அவர்கள் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்பு முதன்முதலாக ஒரு நண்பரின் வீட்டில் சந்தித்த பொழுது ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 30ம் தேதி சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்ததாகவும் ஆனால் இந்த வருடம் பல்வேறு காரணங்களால் அது தள்ளிப் போய் விட்டது என்றும் கூறினார்.. 

தங்கர் பச்சனின் பள்ளிக்கூடம் படத்தை பார்க்கும் போதெல்லாம் தனக்கு தங்கள் பள்ளியின் ஞாபகமும், ஆசிரியர்களின் ஞாபகமும்தான் வரும் என்றார். பள்ளிக்கூட நண்பர்களை பார்த்தால் தான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு விடுவேன் என்று கூறிய அவரை விட அப்படி எதுவும் சொல்லாத திரு.விஸ்வநாதனும், திரு. ராஜசேகரும் உணர்ச்சி பொங்க தங்கள் பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 

அவர்களுக்கிடையே நிலவிய ஆரோக்கியமான போட்டி பற்றியும், அதே நேரத்தில் நண்பர்கள் எப்படி ஒருவரை ஒருவர் மோட்டிவேட் செய்து கொண்டனர் என்பது பற்றியும் விரிவாகவே பேசினார் ராஜசேகர். 

சமீபத்தில் மரணமடைந்த அவர்களின் பள்ளித் தோழர் நாகலிங்கம் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினோம். 

இதில் கிருஷ்ண பிரசாத், விஸ்வநாதன், விஜயகுமார் என்ற மூவரும் ஒன்றாம் வகுப்பிலிருந்து கல்லூரி வரை ஒன்றாகவே படித்தனராம். இப்படி ஆண்கள் தங்கள் நட்பை கொண்டாடிக் கொண்டிருக்க, பெண்கள், " ஆண்கள் எப்படி இத்தனை ஆண்டுகள் தங்கள் நட்பை தொடர்கிறார்கள்,நம்மால் ஏன் முடிவதில்லை? என்ற கேள்வி எழுந்தது.(ஏன் முடிவதில்லை? யாராவது சொல்லுங்களேன்) 

சிட்டிபாபு என்பவரின் மனைவி டாக்டர் ஆனந்தி என்பவர் மட்டும் இதை மறுத்தார். கோவில்பட்டியில் பள்ளி படிப்பை முடித்திருக்கும் இவரும் இவர் பள்ளித் தோழிகளும் அதே பள்ளியிலேயே ரீ யூனியனை நடத்தினார்களாம். விதி விலக்கான பெரிய விஷயம்தான்.  

இன்றைக்கு தாத்தாவாகி விட்ட எல்லோரும் ஒரே குரலில் ஒப்புக்கொண்ட விஷயம், பேரன் பேத்திகளிடம் அவர்களுக்கு உள்ள வாஞ்சை! எங்கள் குழந்தைகள் சிறியவர்களாக இருந்த பொழுது அவர்களோடு நேரம் அதிகமாக செலவிட முடியவில்லை, இன்றைக்கு பேரக் குழந்தைகளோடு இருக்கும் சந்தோஷத்திற்கு ஈடு இல்லை என்றார்கள். 

இதன் பிறகு,  இனிப்பு மற்றும் ஐஸ் கிரீமோடு சுவையான உணவு. என்னென்ன ஐட்டம் என்பதை சொல்ல மாட்டேன், கண் பட்டு விடும். கால எந்திரம் எதுவும் இல்லாமலேயே பல வருடங்களுக்கு பின்னால் சென்று விட்டு வந்த சந்தோஷம் என் கணவருக்கு. புதிதாக சில நண்பர்களை சந்தித்த எனக்கு மகிழ்ச்சி!