கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, October 1, 2014

இனித்திடும் இரவுகள்!

இனித்திடும் இரவுகள்!




ஒவ்வொரு பண்டிகையுமே அதனதன் அளவில் நமக்கு எதையோ போதிக்கின்றன.  நவராத்திரியோ வாழ்க்கைக்கு மிக மிக அவசியமான சகிப்புத் தன்மையையை வலியுறுத்துகிறது. ஆம், நவராத்திரியில் நாம் எத்தனை விஷயங்களை சகித்துக் கொள்கிறோம்..! 

முதலில் இடம்...! 
எங்களின் இளம் வயதில் பெரும்பாலான வீடுகளில் ரெடிமேட் படி இருக்காது. கட்டும் படிதான். வீட்டில் இருக்கும் பலகை, பெட்டி, ட்ரம்கள் மற்றும் ரேழியில் நாளை எண்ணிக் கொண்டிருக்கும் தாத்தா படுத்திருக்கும் பெஞ்ச் உட்பட.. இவற்றை கொண்டுதான் படி அமைக்கப் படும். தாத்தா கயிற்று கட்டிலுக்கு மாற்றப் படுவார். 
  
கிச்சனில் சாமான்கள் அடுக்க போடப் பட்டிருக்கும் பலகை உருவப் பட்டு ஒரு படியாகி விடும். சாமான்கள்? ஒரு வாரம்தானே கீழே இருந்தால் என்ன? கிச்சன் வரை யார்  வரப் போகிறார்கள்? அப்படியே வந்தாலும்தான்  என்ன? அவர்கள் வீட்டிலும் இதே நிலமைதனே?   இதில் ஒரே ஒரு கஷ்டம் கொலுவை எடுக்கும் வரை கருவடாம் பொரித்து சாப்பிட முடியாது. கருவடாம் டின் அடியில் மாட்டிக் கொண்டிருக்குமே!! 

பலகைகள் ஏறத்தாழ இல்லாமல் சமன் படுத்த சமயத்தில் குழந்தைகளின் நோட்டு புத்தகங்களை வைத்து விடுவார்கள். குழந்தைகளுக்கு சந்தோஷம்தான், பெரியவர்கள் அவர்களை படி படி என்று திட்ட திட்ட முடியாதே..! blessing in disguise!

இப்போது போல மூட்டு வலியால் பெரும்பாலனோர் அப்போது அவதிப் படவில்லை போலிருக்கிறது ஆகவே தரையில் ஒரு ஜமக்காளத்தை விரித்து விட்டால் வருபவர்கள் கீழே உட்கார்ந்து  விடுவார்கள். 

இப்போது, இருக்கும் இடத்தில் கொலுவிர்க்காக  கணிசமான இடத்தை ஒதுக்கிய பிறகு, மிஞ்சி இருக்கும் இடத்தில் சோபா, கட்டில், வாஷிங் மெஷின், ப்ரிட்ஜ்  இவற்றோடு நாம் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.  

அடுத்தது டிரஸ்! 
நாங்கள் சிறுமிகளாக இருந்த பொழுது, ஒரு நாள் ராதா, ஒரு நாள் கிருஷ்ணர், ஒரு நாள் மடிசார்,இதிலும் (ஐயர் கட்டு, ஐயங்கார்  கட்டு என்று இரண்டு நாள் கட்டி விடுவார்கள்). அப்படியெல்லாம் இப்போது சிறுமிகளுக்கு யாரும் வேஷம் போட்டு விடுவதில்லையே ஏன்? அம்மாக்களுக்கே மடிசார் யாரோ ஒருவர் கட்டி விட வேண்டும் என்னும் போது அவர்கள் எப்படி மற்றவர்களுக்கு கட்டி விட முடியும் என்கிறீர்களோ? வாஸ்தவம்தான். இப்படி வேஷம் போட்டுக் கொள்ளாத நாளில் பட்டு பாவாடை  அணிந்து கொள்வோம். இருக்கும் இரண்டு பட்டுப் பாவாடைகளையே தினசரி கட்டிக் கொள்ள முடியுமா? "தரையில் புரள விடக் கூடாது, "அழுக்காக்கி விடக் கூடாது" என்று ஏக கண்டீஷன்களோடு  தன் பாவாடையை அக்கா ஒரு நாள் தருவாள். அதில்  எக்கச்சக்க எண்ணை தாளித்து பேப்பரில் கட்டி தந்த யார் வீட்டு சுண்டலோ   சர்வ நிச்சயமாக கொட்டும். அக்காவிற்கு தெரியாமல் நைசாக அவிழ்த்து வைத்து விடலாம் என்றால், நைட் ஷிப்ட் முடித்து வீடு திரும்பும் அப்பாவி ஐ.டி  இளைஞனை "ஊது" என்று ரவுசு பண்ணும் ராத்திரி ரோந்து போலிஸ் மாதிரி, "எங்க பாவாடையை அழுக்கு பண்ணிக்காமல் இருக்கியான்னு பார்க்கலாம்" என்று பாவாடையை அவிழ்க்கும் நேரத்தில் எங்கிருந்தோ ஆஜராவாள் அக்கா! சில நாட்கள் அம்மா தன்னுடைய பட்டுப்  புடவையை எங்கள் உயரத்திற்கு தோதாக மடித்து, இடுப்பில் ஒரு நாடாவை  கட்டி, அதில் புடவையை பாவாடை போல கொசுவி சொருகி விடுவாள். 

இன்றைய பெண்களுக்கு புடவை கட்டிக் கொள்ள வேண்டும் என்பதே ஒரு டாஸ்க் என்றால் எங்களுக்கு பிரச்சனை ப்ளௌஸ்! இந்த புடவையை கட்டிக் கொண்டு ரொம்ப நாட்களாகி விட்டதே, இன்றைக்கு கட்டிக் கொள்ளலாம் என்று ஒரு புடவையை எடுத்து வைப்போம் . பாழாய்ப் போன ப்ளௌஸ் முழங்கைக்கு மேல் ஏற மாட்டேன் என்கிறதே..!! ஒன்று அவசர அவசரமாக கையை பிரிக்க வேண்டும், அல்லது, வேறு புடவைக்கான ப்லௌசை இன்று போட்டுக் கொண்டு விட்டு, அந்த புடவை கட்டிக் கொள்ளும் போது 'ஞே' என்று முழிக்காமல் ஏதாவது அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். 

மிக மிக டேஞ்சரான அட்ஜஸ்ட்மென்ட் சாப்பாடும்,  சாப்பிடும் நேரமும். 
மஹாலய அமாவாசை அன்று பாயசத்தோடு துவங்கும் சாப்பாடு, புட்டு, ஒக்காரை, வெல்லம் போட்ட காராமணி, சுகியன், வடை, என்று விஜய தசமி வரை தினசரி ஹை கலோரி உணவுகள்,  அதுவும் பெரும்பாலும்  அகாலத்தில்தான். இவற்றை தவிர வாழைப் பழம், வெற்றிலை  பாக்கிற்காக போகும் இடங்களில்  காபி, டீ, ரோஸ் மில்க் வகையறாக்கள் நம் எடையை ஏற்றுவதில் கணிசமான பங்கு வகிக்கும்.  காலை  சாப்பாடு எப்படியோ கிடைத்து விடும். இரவுதான்... எல்லா வீடுகளிலிருந்தும் கலக்ட் செய்யப் படும் சுண்டல், பழங்களை(பழம் கள் இல்லை) ருசி  பார்த்து, ராத்திரிக்கு ஒண்ணும் வேண்டாம், வயிறு புல் என்று ஜம்பமாக கூறியவர்கள் அர்த்த ராத்திரியில் பிரிஜ்ஜை குடைந்து கொண்டு நிற்பார்கள். இல்லாவிட்டால் காலையில் காபி குடிக்கும் பொழுதே பசி பிராண்டும். 



அடுத்த ரொம்ப சிறப்பான அட்ஜஸ்ட்மென்ட் டைம் மானேஜ்மென்ட். 
இந்த ஒன்பது  அல்லது பத்து நாட்களுக்கு மட்டும் நமக்கு எப்படி பூஜை செய்யவும்,கோவிலுக்கு போகவும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு விசிட் செய்யவும், நம்மையும் வீட்டையும் அழகாக அலங்கரித்துக் கொள்ளவும்(அடடா இந்த அழகுணர்ச்சி வருடம் முழுவதும் இருந்தால் எப்படி இருக்கும்!!) நேரம் கிடைக்கிறதே!! இதில் டி.வீ. சீரியல்களையும் விட்டு வைப்பதில்லை. மேலே குறிப்பிட்ட எல்லாவற்றிலும் நமக்குள் ஒளிந்திருக்கும் திறமை வெளிக் கொணரப் படுகிறது. எப்படியோ அட்ஜஸ்ட் செய்து எல்லாவற்றையும் செய்கிறோம்.

இந்த  நவராத்திரி காலத்தில் நம் தந்தை குலத்தின் சகிப்புத் தன்மையை  பாராட்டியே தீர வேண்டும். இந்த வருடம் சிம்பிளாக கொலு வைக்கலாம் என்று தொடங்கும் கொலு எந்த வருடம் சிம்பிளாக முடிந்திருக்கிறது?  கொஞ்சமாக கொஞ்சமாக சேரும் பொம்மைகள், அலங்கார பொருள்கள், ரிடன் கிப்ட்,  மளிகையில் உபரி செலவு, வெளியே போய் வர ஆகும் செலவு என்று அடுத்தடுத்து மனைவிமார்கள் போடும் குண்டுகளால்  பெரிதும்  பாதிக்கப் படுவதலோ என்னவோ, குடும்பத் தலைவர்கள் வாய் மூடி மௌனியாகி விடுகின்றனர். அப்புறம் என்ன பெண்கள் ஜாம் ஜாமென்று நவராத்திரி கொண்டாடுகிறோம்.

"தந்தது என்தன்னை, கொண்டது நின் தன்னை, சதுரர் எவர் கொலோ சங்கரா?" (குறைகள்  உடைய என்னை உனக்குத்  தந்தேன், நிறைவான,  பூரனனான உன்னை பெற்றுக் கொண்டேன், நம் இருவரில் யார் சாமர்த்தியம் மிக்கவர்கள்?) என்று மாணிக்க வாசகர்  சிவபெருமானிடம் வினவியது போல இந்த பத்து நாட்கள் நாம் சில சின்ன விஷயங்களை விட்டு கொடுத்து அட்ஜஸ்ட் செய்து கொள்வதால் பல சந்தோஷங்களையும் புண்ணியங்களையும்{??)  அடைகிறோம். எனவே இனிய நவராத்திரிக்கு நன்றி கூறி மீண்டும் மீண்டும் வருக என்று வரவேற்போம்!