மகளிர் மட்டும்
(விமர்சனம்)
ஊடகத்தில் பணி புரியும், எதிர்கால மாமியாரோடு தங்கி இருக்கும் ஒரு பெண், தனக்கு மாமியாராக வரப்போகும் பெண்மணியின் கடந்த கால வாழ்க்கையை கேட்டு, அவளின் கல்லூரி தோழிகளை சந்திக்க வைத்து, அந்த மூவரையும் மூன்று நாட்கள் தங்க வைக்க எடுத்துக் கொள்ளும் பிரயத்தனங்களும், கல்லூரி காலத்தில் டாம் பாயாக விளங்கிய அந்த பெண்களின் வாழ்வை திருமணம் எப்படி மாற்றுகிறது என்பதும்தான் கதை. மாறத் தேவை இல்லை என்கிறார்கள்.
பெண்களின் துயரங்களை காண்பிக்க வேண்டும் அதே சமயத்தில் ஆண்களை கொடுமைகாரர்களாக சித்தரிக்க கூடாது. ஒரு சீரியஸ் விஷயத்தை ஜனரஞ்சகமாக சொல்ல வேண்டும். ஜோதிகா பப்லியாக தெரிய வேண்டும், கவர்ச்சி கூடாது. என்று ஏகப்பட்ட நிபந்தனைகளோடு படத்தை எடுத்திருப்பதாலோ என்னவோ ஆழமும், அழுத்தமும் இல்லை.
படம் முழுவதும் ஜோதிகா ஆக்கிரமிக்கிறார். உடல் இளைத்து சிக்கென்று இருக்கிறார். 36 வயதினிலே போல புடவையில் வராமல் படம் முழுவதும் ஜீன்ஸில்தான் வருகிறார். என்றாலும் அந்த படத்தில் இயல்பான நடுத்தர வயது பெண்மணியை பார்த்த திருப்தி இதில் வரவில்லை. 36 வயதினிலே பட ப்ரமோவில், "இனிமேல் என்னை கதாநாயகியாக பார்க்க முடியாது, கேரக்டர் ரோல்களில் பார்க்கலாம்" என்றார். ஆனால், உள்ளுக்குள் வாய்ப்பு கிடைத்தால் "மேகம் கருக்குது டங்கு சிக்கு, டங்கு சிக்கு" என்று ஆட்டம் போடலாம் என்ற எண்ணம் இருக்கிறது போல தோன்றுகிறது.
தோழிகளாக வரும் ஊர்வசி, பானு ப்ரியா, சரண்யா மூவரில் கடைசி பெண்மணி நடிப்பில் முதலிடம் பிடிக்கிறார். ஊர்வசி தன் வழக்கமான நடிப்பால் கிச்சு கிச்சு மூட்டுகிறார், பானுப்ரியாவை பானுப்ரியா என்று அடையாளம் காண்பதே கடினமாக இருக்கிறது. தினசரி குடித்து விட்டு வரும் கணவன் மீது வரும் ஆத்திரத்தை அடக்கிக் கொள்வதாகட்டும், திட்டிக் கொண்டே இருக்கும் மாமியாருக்கு முகம் சுளிக்காமல் பணிவிடை செய்வதாகட்டும், சரண்யா சிறப்பாக செய்திருக்கிறார். சரண்யாவின் தொப்பியில் மற்றுமொரு சிறகு!
படத்தில் ஒரு பாடலை பாடியிருப்பது கார்த்தியாம்!! நல்ல திறமை. பின்பாதியில் காட்டப்படும் காடும்,அருவியும் கண்களுக்கு விருந்து.
நாசர், மாதவன் போன்றவர்கள் வந்து போகிறார்கள். ஜோதிகாவால், ஜோதிகாவுக்காக, ஜோதிகாவின் படம். ஜோ மட்டும்.