கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, August 17, 2017

நாள் நல்ல நாள்

நாள் நல்ல நாள் 


"ஹாய் ரம்ஸ் எப்படி இருக்க?" என்று கேட்டபடியே வீட்டுக்குள் 
சதீஷ் நுழைந்த பொழுதே ரமாவிற்கு கணவன் உற்சாக மூடில் இருக்கிறான் என்பது தெரிந்து விட்டது. 

"என்ன ஒரே குஷி? ஆபிஸில் என்ன விசேஷம்?"

"அப்படி கேளு.. என் டீமில் இருக்கிற வித்யா இன்னிக்கு செமத்தியா என்கிட்ட மாட்டிக்கிட்டா.. வெச்சேன் அவளுக்கு சரியான ஆப்பு.."

"என்ன ஆச்சு?"

"இன்னிக்கு லீவு கேட்டா, முடியாதுனு சொல்லிட்டேன்."

"இது ஒரு பெரிய விஷயமா?"

"கண்டிப்பா.. அவ லீவு கேட்டதுக்கு சொன்ன காரணம்தான் முக்கியம்."

"அப்படி என்ன காரணம்? குழந்தைக்கு உடம்பு சரியில்ல.."

"அப்படியெல்லாம் சொல்லியிருந்தா கொடுத்திருப்பேனே.. ஐ  காட் மை சம்ஸ்(பீரியட்ஸ்) னு சொன்னா.. யார் கிட்ட? எங்கிட்ட..?
என்ன மேடம், உங்களோடது டுவெண்ட்டி செவென் டே சைக்கிள், பன்னிரண்டு நாள்தான் ஆகிறது.. அதுக்குள்ள எப்படினு கேட்டேன், பதிலே இல்ல, மரியாதையா ஆஃபீஸுக்கு வந்துட்டா.."

"இந்த விவரம் எல்லாம் உனக்கு எப்படி தெரியும்?"

"ஏன் தெரியாம? ஆபிஸில் வேலை பார்க்கும் எல்லோருடைய பீரியட்ஸ் டைமும் பிங்கர் டிப்பில் வெச்சிருக்கேன். தீபிகாவுக்கு தர்ட்டி டே சைக்கிள், அடுத்த வாரம் ட்யூ, சாக்ஷாவுக்குதான் கொஞ்சம் இரெகுலர், ப்ரியா..."

சதீஷ் அடுக்கிக் கொண்டே போக, "வெய்ட்! வெய்ட்! என்று இடை மறித்த ரமா  என்னோட சைக்கிள் தெரியுமா?" என்று கேட்க.

கொஞ்சம் திடுக்கிட்ட சதீஷ், "அது... உனக்கு ட்வெண்ட்டி செவென் டே சைக்கிள் தானே..?" என்க,

"ட்வெண்ட்டி செவென் டே சைக்கிள் தானே..?..தட் மீன்ஸ் யூ ஆர் நாட் ஷுயர்.. எனக்கு எப்போ டியூ? சொல்லு பார்க்கலாம்.."

"வந்து.. இப்படி திடீர்னு கேட்டா எப்படி சொல்றது..?" சதீஷ் சமாளிக்க முயற்சி செய்தான்.

"வித்யா என்ன முன்னாலேயே சொல்லி வெச்சுட்டு லீவ் கேட்டாளா? ஊர்ல இருக்கிறவ டேட் எல்லாம் தெரியறது, பெண்டாட்டி பத்தி தெரியல..."

ரமா விருட்டென்று எழுந்து உள்ளே சென்று கதவை சாற்றிக் கொள்ள.. "உனக்கு தேவையடா இந்த பெருமை?" என்று சோபாவில் சரிந்தான். 

வேறொன்றுமில்லை பெண்களுக்கு மாதவிடாயின் பொழுது விடுமுறை அளிக்க வேண்டும் என்று பிருந்தா காரத் கூறியதை கேட்டதும், என் கற்பனை பறவை சிறகை விரித்து விட்டது. 

Monday, August 14, 2017

ஆடி அவஸ்தைகள்!

ஆடி அவஸ்தைகள்!




"ஆடி மாதம் வந்து விட்டாலே தொல்லை தாங்க முடியவில்லை..." என்று அலுத்துக் கொண்டார் ஒரு நண்பர். "ஏன்? என்னாச்சு?" என்றேன். 

பின்னே என்ன அவரவர் இஷ்டத்திற்கு சேல், சேல் என்று கூவத் தொடங்கி விடுகிறார்கள். நாம்தானே கஷ்டப் பட வேண்டியிருக்கு..?" என்றார். 

அவர் கஷ்டத்திற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது, எனக்கு வேறு வித கஷ்டம்.  

என்னது நான் சொல்வது காதில் விழவில்லையா? இன்னும் கொஞ்சம் சத்தமாக பேச வேண்டுமா? 

ஓ.. லவுட் ஸ்பீக்கர் அலறுகிறதா? அதை மீறி கத்த வேண்டுமா? 
இதுதான், நான் சொல்ல நினைத்ததும். இந்த லவுட் ஸ்பீக்கர் தொல்லை...

அம்மனுக்கு கூழ் ஊற்றுகிறேன் என்ற பெயரில் வெள்ளிக்கிழமை கூழ் ஊற்றுகிறார்கள் என்றால் வியாழக் கிழமை முதலே லவுட் ஸ்பீக்கரில் பாட்டு அலறத் தொடங்கி விடும். 

இந்த பாடல்களுக்கு இசை அமைத்தவர்களோடு கொஞ்சம் பேச முடிந்தால் நன்றாக இருக்கும். 

"சின்னஞ் சிறு பெண் போலே..." போல  கம்போஸ் செய்ய வேண்டாம், குறைந்த பட்சம் எல்.ஆர்.ஈஸ்வரியின்,"தாயே கருமாரி.." போலவாவது இருக்க வேண்டாமா?

"துர்கா, சாமுண்டி.. " என்று முதலில் ஒரு பெண் அலறுகிறார், உடனே பின்னணி இசை ஒலிக்கிறது. எப்படிப்பட்ட பின்னணி தெரியுமா? எழுபதுகளில் வந்த படங்களில் கதாநாயகியை வில்லன் கடத்தி கொண்டு செல்வான், அவனைத் துரதியப்படி கதாநாயகன் ஒரு காரில் வரும் பொழுது பின்னணியில் ஒரு இசை ஒலிக்குமே, அதைப் போன்ற ஓசை. இதைக் கேட்டால் பக்தி வரும் என்ற அந்த இசை அமைப்பாளரின் நம்பிக்கை வியக்க வைக்கிறது. 

இவர்களுக்கு இத்தனை சத்தம் போடவும், தன் பக்தியை மற்றவர்கள் மீது திணிக்கவும் யார் உரிமை கொடுத்தார்கள்? மார்கழி மாதத்தில் அதிகாலையில் திருப்பாவை,திருவெம்பாவை பாடல்களை ஒலி பரப்புவது தொந்தரவு என்று அவற்றை ஒலி பரப்பக் கூடாது என்று தடை செய்தார்களே, குடியிருப்பு பகுதிகளில் மட்டுமல்லாது அலுவலகங்கள் நிறைந்திருக்கும் பகுதிகளிலும் கூட நாள் முழுவதும் இத்தனை இரைச்சலாக பாடல்கள் போடுவது அங்கு பணி ஆற்றுபவர்களுக்கு எத்தனை பெரிய அசௌகரியம்? இதைப்பற்றி  ஏன் யாரும் ஒன்றும் சொல்வதில்லை? 

இப்படிப்பட்ட கோவில் உற்சவங்களில் இன்னொரு தமாஷ் அவர்கள் ஓலி பெருக்கியை கையாளும் விதம். மைக் என்னும் ஆங்கில வார்த்தையை ஓலி பெருக்கி என்று அழகாக, பொருத்தமாக மொழி பெயர்த்திருக்கிறார்கள். நம்மால் ஒரு கூட்டம் முழுமைக்கும் கேட்கும்படி கத்த முடியாது என்பதற்காகத்தான் ஒலி அளவை பெருக்கிக் காட்டும் மைக்கை பயன் படுத்துகிறோம். ஆனால் நம்மவர்களோ ஒலி பெருக்கியில் உச்ச பட்ச டெசிபலில் அலறுவார்கள் . 

விவேக் நகைச்சுவையாக சொன்னார், நான் எனக்கு தெரிந்த விதத்தில் கூறியிருக்கிறேன். ஊதுகிற சங்கை ஊதுவோம், விடியும் போது விடியட்டும்