கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, November 23, 2018

பரிகாரம்

பரிகாரம் 

மகனின் பள்ளிக்கு பேரெண்ட்,டீச்சர் மீட்டிங்கிற்கு சென்று விட்டு வந்த ராதிகாவிற்கு வருத்தமும் கவலையும் மேலிட்டது. பத்தாம் வகுப்பு வரை நன்றாக படித்துக் கொண்டிருந்த கிரீஷ் இப்போது கொஞ்சம் பின் தங்கி
விட்டா ன். 

அவனுடைய ஆசிரியர்களும்," நல்லா படிக்கக் கூடிய பையன்தான், ஹோம் ஒர்கெல்லாம் சரியா செய்ய மாட்டேங்கரான், லாட் ஆஃப்  டிஸ்ட்ராக்ஷன்ஸ், கொஞ்சம் கவனியுங்கள்" என்று கூறி விட அவள் மிகவும் அப்செட் ஆகிவிட்டாள்.

ப்ளஸ் டூவில் நல்ல மார்க் வாங்கினால்தானே நல்ல கல்லூரியில் சேர்க்க முடியும்? என்ன பிரச்சனை அவனுக்கு? கணவனிடம் சொன்ன பொழுது அவன்," இப்போ செவன்டி பர்சென்ட் வாங்கறாந்தானே?" என்றான்.

"அதை வைத்துக் கொண்டு என்ன பண்ண முடியும்?"

"இத்தனைக்கும் ட்யூஷன் வேற போகிறான்.." 

"அந்த டீச்சர் ஒரு நாளைக்கு 200 கணக்கு போடணும்னு சொல்றா..இவன் எவ்வளவு போடறானோ?"

"இருநூறு கணக்கா?" அஷோக்கிற்கு கண்ணை கட்டியது. நல்ல வேளை, நாம் படித்து முடித்து விட்டோம் என்று நினைத்துக் கொண்டான். "அதெல்லாம் கொஞ்சம் கஷ்ட்டம்மா"

"என்ன கஷ்டம்? போட்டுதான் ஆகணும். இந்த டீச்சர் பரவாயில்லை, இருநூறு கணக்கு போடணும்னு சொன்னாலும், ஐம்பதுதான் ஹோம் ஒர்க்காக தருகிறாள், ஆஷா மேடம்னா, இருநூறு கணக்கு போடாவிட்டால் டியூஷனிலிருந்து நிறுத்தி விடுவாள். "

"படிப்பான், படிப்பான், ரொம்ப ப்ரெஷர் கொடுக்காத. அடலஸண்ட் ஏஜ்." 

"அதனால்தான் நான் சொன்னேன், கோ எஜுகேஷன் ஸ்கூல் வேண்டாம்னு, யூ டிண்ட் லிசன்."

"கமான், இதெல்லாம், பார்ட் அண்ட் பார்செல் ஆஃப் லைஃப். ரிஷ்யஸ்ருங்கர் மாதிரி வளர்க்கச் சொல்றியா?. அவன் படிக்க நம்மால் முடிஞ்ச அளவு ஹெல்ப் பண்ணலாம்"    

சொல்லிவிட்டானே தவிர எப்படி உதவுவது என்று தெரியவில்லை. நகரத்தின் நல்ல பள்ளியில் சேர்த்து விட்டோம், ட்யூஷனும் வைத்திருக்கிறோம். பள்ளிக்கு போய் வர ஆட்டோ, படிக்க தனி அறை, வீட்டில் அவனுக்கென்று லேப்டாப். வேறு என்ன வேண்டும்? நம்மைப் போல் நடந்து பள்ளிக்குச் சென்று, ஒரே அறையில் மூன்று பேர்கள் படிக்க வேண்டும் என்னும் நிர்ப்பந்தமெல்லாம் உண்டா? டியூஷன் வகுப்பில் சேர்ந்தால் அவமானம் என்று அப்பா சேர்த்து விட மறுத்து விட்டார். என்ன செய்வது?

மகனை நல்ல மார்க் வாங்க வைக்க ராதிகா ஒரு உபாயம் கண்டு பிடித்தாள். அவன் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு டி.வி.யில் ஜோதிடம் சொல்லும் ஒரு ஜோசியரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி கொண்டு   சந்தித்தாள்.அவர் அவனுடைய ஜாதகத்தை பார்த்து விட்டு, "அதெல்லாம் நன்னா படிப்பான், கவலைப்படாதீங்கோம்மா". என்று கூறி விட்டு, அவனுக்கு ஏதோ தசையில் ஏதோ புக்தி  நடப்பதாகவும், அதற்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிள்ளையாருக்கு அவன் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்,எனவும் மேலும் ஐந்து புதன் கிழமைகளில் நவகிரஹ சந்நிதியில் உள்ள புத பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் எனவும் கூறினார். மேலும் தினசரி விஷ்ணு சஹஸ்ரநாமத்தை உங்களை பிள்ளை சொல்லாவிட்டாலும் கேட்கச் சொல்லுங்கள். என்று கூறினார். அதோடு ராசிக்கல் மோதிரம் ஒன்றையும் பரிந்துரைத்தார். 

ராசிக்கல் மோதிரத்திற்கு அசோக் ஒப்புக்கொள்ளவில்லை."ராதிகா நீ எந்த கோவிலுக்கு வேணாலும் போ, அர்ச்சனை பண்ணு, நான் வேண்டாம்னு சொல்லலை, ஆனால் மோதிரமெல்லாம் வேண்டாம். நாளைக்கு அவன் படித்து நல்ல மார்க் வாங்கினாலும், மோதிரத்தால்தான் தான் வாங்கினோம் என்று அவனுக்கு தோன்றி விடும். தட்ஸ் நாட் குட்" என்று தீர்மானமாக சொல்லிவிட, ராதிகா மோதிரம் வாங்கும் எண்ணத்தை கை விட்டாள்.

தன்னால் கோவிலுக்குச் செல்ல முடியுமோ முடியாதோ என்று, தன் வீட்டில் சமையலுக்கு வரும் லதா மாமியிடம் பணத்தையும் மகனின் பெயர், நட்சத்திரம் போன்ற விவரங்களையும் கொடுத்து புதன் கிழமை அர்ச்சனை செய்து கொண்டுவரச் சொன்னாள். தினசரி வீட்டில் விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்கத் தொடங்கியது. 

லதா மாமி அதோடு கூட தானும் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லியபடியே சமைப்பாள். கோவிலில் அர்ச்சனை செய்யும் பொழுதும், விளக்கு போடும் பொழுதும் அந்த வருஷம் ப்ளஸ் டூ பரீட்சை எழுதப் போகும் தன் மகனுக்காகவும் வேண்டிக் கொள்வாள். 

அந்த வருட பொதுத்தேர்வில் கிரீஷ் பெற்ற மதிப்பெண்களில் பெரிதாக முன்னேற்றமில்லை. ஆனால் லதா மாமியின் மகன் 92% சதவிகிதம் வாங்கி தேர்ச்சி பெற்றிருந்தான்.


Wednesday, November 21, 2018

கார்த்திகை தீபம் - தீப ஜோதி நமோ நம:

கார்த்திகை தீபம் - தீப ஜோதி நமோ நம: 



27தீபங்களும்_அதன்_பயன்களும் !

தீபஜோதியே நமோ நம :
சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தன சம்பதா
சத்புத்தி ப்ரகாசாய தீபஜ்யோதிர் நமோநம:

தீபம் ஏற்றுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தனசேர்த்தி, நல்லபுத்தி ஆகியவை பெருகும் எனச் சொல்கிறது மேற்காணும்  ஸ்லோகம்.

நம் பாரதத்தின் ஆன்மிகக் கலாசாரத்துடன் இரண்டறக் கலந்தது தீபவழிபாடு. விரிவான வழிபாடுகள் தெரியவில்லை என்றாலும், காலை-மாலை இரண்டு வேளைகளில் தீபம் ஏற்றிவைத்து, அதற்கு நமஸ்காரம் செய்தாலே போதும்; தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் ஸித்திக்கும் என்கின்றன ஞான நூல்கள். அப்படியான தீபத்தைச் சிறப்பிக்கும் மாதம்தான் திருக்கார்த்திகை. இந்த மாதத்தில் திரு விளக்கேற்றி வழிபடுவது அவ்வளவு விசேஷம்.

தினமும் 27 விளக்குகள்...

கார்த்திகை மாதத்தில், நமது வீடுகளில் 27 இடங்களில் தீபங்கள் ஏற்றிவைக்க வேண்டுமாம். அவை எந்தெந்த இடங்கள், எந்தெந்த  இடங்களில்  எத்தனை தீபங்கள்  ஏற்றுவது?   என்பது குறித்து விரிவாக அறிவோமா

கோலமிடப்பட்ட வாசலில்: ஐந்து விளக்குகள்

திண்ணைகளில்: நான்கு விளக்குகள்

மாடக்குழிகளில்:  இரண்டு விளக்குகள்

நிலைப்படியில்: இரண்டு விளக்குகள்

நடைகளில்: இரண்டு விளக்குகள்

முற்றத்தில்: நான்கு விளக்குகள்

இந்த இடங்களில் எல்லாம் தீபங்கள் ஏற்றிவைப்பதால், நமது இல்லம் லட்சுமி கடாட்சத்தை வரவேற்கத் தயாராகி விடும்; தீய சக்திகள் விலகியோடும்.

பூஜையறையில்: இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றிவைக்கவேண்டும். இதனால் சர்வமங்கலங்களும் உண்டாகும்.

சமையல் அறையில்: ஒரு விளக்கு; அன்ன தோஷம் ஏற்படாது.

தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில்: யம தீபம் ஏற்றவேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.

பின்கட்டு பகுதியில்:நான்கு விளக்குகளை ஏற்றிவைக்க விஷ ஜந்துக்கள் அணுகாது.

ஆனால், அபார்ட்மென்ட் மற்றும் மாடி வீடுகள் அதிகம் உள்ள தற்காலத்தில்,   மேற்சொன்ன முறைப்படி விளக்கு ஏற்ற முடியாது ஆகையால், வசதிக்கு ஏற்ப வீட்டுக்குள்ளேயும் வெளியிலுமாக 27 விளக்குகளை ஏற்றிவைத்து பலன் பெறலாம்.

தீபத்தின் வகைகள்:

தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் `தீபலட்சுமியே நமோ நம' என்று கூறி வணங்குவது அவசியம். தீபத்தை பலவகையாகச் சொல்லி விளக்குகின்றன ஞானநூல்கள். அவற்றில் சில...

சித்ர தீபம்: தரையில் வண்ணப் பொடி களால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது  ஏற்றப்படும் தீபங்கள்.



மாலா தீபம்: அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படுவது.



ஆகாச தீபம்: வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படுவது, ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதிநாளில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், யம பயம் நீங்கும்.

ஜல தீபம்: நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபங்கள் ஜல தீபம் ஆகும்.



நௌகா (படகு) தீபம்: கங்கை  கரையோரங்களில் வாழும் மக்கள், புண்ணிய யாத் திரையாக கங்கைதீரத்துக்குச் செல்பவர் கள், கங்கை நதிக்கு மாலைவேளையில் ஆரத்தி செய்து, வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றிவைத்து, அதை கங்கையில் மிதக்கவிடுவர். படகு போன்ற வடிவங் களில் தீபங்கள் தயார் செய்தும் மிதக்க விடுவார்கள். இவற்றையே நெளகா தீபங் கள் என்று அழைப்பர். சம்ஸ்கிருதத்தில் `நௌகா' என்றால் `படகு' எனப் பொருள்.

சர்வ தீபம்: வீட்டின் அனைத்து பாகங் களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை சர்வ தீபமாகும்.

மோட்ச தீபம்: முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, ஆலய கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படுவது.

சர்வாலய தீபம்: கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று, மாலைவேளையில் சிவாலயங்களில் ஏற்றப்படுவது. அதாவது, பனை ஓலை களால் கூடுபோல் பெரிதாகச் செய்து, அதற்கு பூஜை செய்து தீபாராதனை காட்டி, கற்பூரத்தின் ஜோதியை அதில் ஏற்றுவது, சர்வாலய தீபம் ஆகும்.

அகண்ட தீபம்: மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம்.திருவண்ணாமலை, பழநிமலை, திருப் பரங்குன்றம் முதலான திருத்தலங்களில், அகண்ட தீபத்தைத் தரிசிக்கலாம்.



லட்ச தீபம்: ஒரு லட்சம் விளக்குகளால் ஆலயத்தை அலங்கரிப்பது லட்சதீபமாகும்.   திருமயிலை, திருக்கழுக்குன்றம் (12 ஆண்டுகளுக்கு ஒருமுறை) முதலான பல ஆலயங்களில் லட்சதீபம் ஏற்றுவது உண்டு.

மாவிளக்கு தீபம்: அம்மன் ஆலயங்களில் நோய் தீர வேண்டிக்கொண்டு மாவிளக்கு ஏற்றுவார்கள். அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டை யாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரி போட்டு ஏற்றுவது மாவிளக்கு ஆகும்.



காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு  கச்சபேஸ்வரர் ஆலயத்தில், கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமை களில், இவ்வகை தீபத்தை தலையில் வைத்துக்கொண்டு ஆலயத்தை வலம் வந்து வழிபடும் வழக்கம் உண்டு. இதை, மண்டை விளக்கு பிரார்த்தனை' என்கிறார்கள்.

விருட்ச தீபம்: ஒரு மரத்தைப்போன்று கிளைகளுடன் அடுக்கடுக்காக அமைக்கப் படும் தீப ஸ்தம்பங்களில் விளக்கேற்றும்போது, விருட்சத்தைப் போன்று காட்சித் தரும்.சிதம்பரம், திருவண்ணாமலை, குருவாயூர் ஆலயங்களில் விருட்ச தீபத்தைக் காணலாம்.

தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள் !!

பி.கு. வாட்ஸாப்பில் வந்த செய்தியை பகிர்ந்திருக்கிறேன்.
படங்கள்: கூகுள் உபயம்