கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, March 2, 2014

கண் தானம் - என் எண்ணம்!

கண் தானம் - என் எண்ணம்!



அவ்வப்பொழுது நம் ஊடகங்களில் கண் தானத்தைப் பற்றி கட்டுரைகளோ, சொர்பொழிவுகளோ வரும். அவை எல்லாமே இலங்கையில்தான் மிக அதிகமாக கண் தானங்கள் நடக்கின்றன, அதற்கு காரணம் அந்த நாடு புத்த மதத்தை தழுவியிருக்கும் நாடு, புத்த மதம் மற்ற உயிர்களுக்கு உதவி புரிவதை வலியுறுத்தும் மதம், எனவேதான் அங்கு கண் தானம் அதிக அளவில் நடக்கிறது என்று கூறுவார்கள்/எழுதுவார்கள். நேற்று(1.3.2014) சனிக்கிழமை சன் டி.வி.யில் 'இந்த நாள் இனிய நாள்' நிகழ்ச்சியில் பேசிய திரு.சுகி.சிவம் அவர்களும் இதையே கூறினார். நம் மத நம்பிக்கைகள் கண் தானத்தை தடுக்கின்றன என்று வருத்தமும் கொஞ்சம் கோபமும் பட்டார். சுகி.சிவம் அவர்களே இப்படி கூறியவுடன், நம் மத நம்பிக்கை ஏன் கண் தானத்தை  தடுக்கிறது? என்று யோசித்தேன், அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன், சரியாய், தவறா கூறுங்கள்.

நம் இந்து மதமும் எல்லா மதங்களையும் போல மற்ற உயிர்களுக்கு உதவி செய்வதை வலியுறுத்தத்தான் செய்கிறது. ஆனால் அது ஏன் உறுப்பு தானங்களை ஆதரிப்பதில்லை? இந்து மதம் என்ன இதயம் இல்லாததா? இல்லவே இல்லை, இங்குதான் நாம் கொஞ்சம் நுட்பமாக யோசிக்க வேண்டும். மற்ற மதங்களில் இல்லாத ஒரு விஷயம் இந்து மதத்தில் வலியுறுத்தப்படுகிறது. அதுதான் கர்மக் கொள்கையும் மறு பிறப்பில் நம்பிக்கையும். அதன்படி ஒருவன் இந்தப் பிறவியில் அடையும் நன்மை தீமைகளுக்கு அவன் சென்ற பிறவிகளில் செய்த நன்மை தீமைகளே (பாவ, புண்ணியங்களே) காரணம் என்பதை அழுத்தி சொல்வதோடு, அந்தக் கர்மங்களை ஆகாமி, சஞ்சித, பிராரப்த என்று மூன்றாகவும் பிரித்து விவரிக்கின்றது. இதில் மிகவும் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் இந்த கர்ம வினையிலிருந்து யாரும் தப்ப  முடியாது, கடவுள் உட்பட! இதை இந்து மத புராணங்கள் விளக்கும். 

இருக்கட்டும், இதற்கும் உறுப்பு  தானத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? இந்து மத கோட்பாட்டின்படி யாரோ ஒருவருக்கு இந்தப் பிறவியில் உறுப்பில் குறைபாடு உண்டாகிறது என்றால் அதற்கு அவர் தன்னுடைய  முந்தைய பிறவியில்/பிறவிகளில் செய்த ஏதோ ஒரு தீவினைதான் காரணம். இதை சற்றே விரிவு படுத்திக் கூறினால் அவர் தன்னுடைய பூர்வஜென்ம வினைப் பயனை இந்தப் பிறவியில் அனுபவித்துக் கழிக்கிறார் என்று பொருள். அந்த வினைப் பயனை அவரை முழுவதுமாக அனுபவிக்க விடாமல் தன்னுடைய உறுப்பை தானமாக தருவதன் மூலம் வேறு ஒருவர் தடுத்து விட்டால் அனுபவிக்க வேண்டிய வினை எங்கே செல்லும்? உதாரணமாக நாம் ஒரு பேருந்தில் பயணிக்கிறோம், நல்ல கும்பலான அந்த பேருந்தில் நமக்கு உட்கார இருக்கை கிடைத்து விட்டது. அமர்ந்திருக்கிறோம், அப்போது கையில் குழந்தையோடு ஒரு பெண்மணி ஏறுகிறாள், அவளுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று நாம் விரும்பினால் நம்முடைய இடத்தை விட்டுக் கொடுக்க வேண்டும். அவளுக்கும் இடம் கிடைக்க வேண்டும், நானும் உட்கார வேண்டும் என்றால் நடக்குமா?

மகான்களால் மட்டுமே ஒருவரின் வினைப் பயனை வேரறுக்க முடியும். அவர்களுமே சில சமயங்களில் தன் பக்தர்களின் வியாதியை நீக்கிய பிறகு அதன் பாதிப்பை சில நாட்களோ,சில மணி நேரங்களோ அனுபவித்திருக்கிறார்கள் என்பதை படித்தும், கேட்டுமிருக்கிறோம்.  இந்தக் காரணத்தினால்தான் ஹிந்துக்களுக்கு கண் தானம் செய்வதில் தயக்கம் இருக்கும் இன்று நினைக்கிறேன். சரியா? தவறா? சொல்லுங்கள்...