மாமி சொன்ன கதைகள் - 2
ஒரு ஊரில் இருந்த ஒரு பெற்றோர்களுக்கு ஒரே ஒரு மகன். கொஞ்சம் தாமதமாக பிறந்த அந்த பையன் மேல் அவன் பெற்றோர்களுக்கு மிகுந்த பாசம். அவனும் தன் பெற்றோர்களின் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்தான். வயதான தன் பெற்றோர்களை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டியது தன் கடமை என்று நினைத்தான்.
அவனுடைய மனைவியோ கணவன் இருக்கும் பொழுது மாமனார், மாமியார் மீது பக்தி கொண்டவள் போல, அவர்களுக்கு பணிவிடைகள் செய்வது போல நடிப்பாள். கணவன் அலுவலகம் சென்றதும் தான் எந்த வேலையும் செய்யாமல், கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டு எல்லா வேலைகளையும் அவர்களையே ஏவுவாள்.
ஒரு நாள் அலுவலகத்திலிருந்து ஏதோ காரணத்தினால் சீக்கிரம் வீடு திரும்பி விட்ட மகன் தன் பெற்றோர்கள் தன் மனைவியிடம் படும் பாட்டை பார்த்து விடுகிறான். தன் மனைவிக்கு பாடம் புகட்ட நினைத்த அவன் தன் மனைவியின் பெற்றோர்களுக்கு,"உங்கள் மகளுக்கு உடல் நலம் சரியில்லை, உயிருக்கே ஆபத்து. ஜோதிடர்களிடம் கேட்டதில் அவளுடைய பெற்றோர்களாகிய நீங்கள், வேப்பிலையை மட்டும் ஆடையாக உடுத்திக் கொண்டு, தாரை, தப்பட்டை எல்லாம் முழங்க தெருவில் நடனமாடிக்கொண்டே வரவேண்டும்" என்று கடிதம் போடுகிறான்.
அடுத்த வாரத்தில் தெருவில் தாரை, தப்பட்டை ஒலி கேட்டு என்ன விசேஷம் என்று வாயிலுக்கு வந்து பார்த்த அந்த கொடுமைக்கார மருமகள் திடுக்கிடுகிறாள். ஏனென்றால் தெருவில் எல்லோரும் வேடிக்கை பார்க்க, வேப்பிலை ஆடையில் நடனமாடிக் கொண்டு வருவது அவளுடைய பெற்றோர்கள் அல்லவா? இது என்ன கூத்து? என்று அவள் ஆச்சரியப் பட்டுக் கொண்டிருக்க, உடல் நலம் சரியில்லை என்று கூறப்பட்ட தங்கள் மகள் ஆரோக்கியமாக இருப்பதை பார்த்து அவளுடைய பெற்றோர்களுக்கும் அதிர்ச்சிதான்.
"என்னடி? உனக்கு உடம்பு சரியில்லை என்றார்களே?" என்று கேட்கிறார்கள்.
"உடம்பா ? எனக்கா? நான் நன்றாகத்தானே இருக்கிறேன், நீங்கள் ஏன் இப்படி ஒரு கோலத்தில் நடனமாடிக் கொண்டு வருகிறீர்கள்?" என்று எதிர் கேள்வி கேட்க, அவள் கணவன், "நீ என் பெற்றோர்களை என்னவெல்லாம் இழிவு படுத்தினாய்? அதனால்தான் உன் பெற்றோர்களை அவமானப் படுத்தவே நான்தான் அவர்களுக்கு உனக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி, இப்படி வரச் சொன்னேன்" என்று கூறுவான். (கதை இங்கே முடிந்து விடும். இதைக் கேட்டு அவன் மனைவி தன் தவறை உணர்ந்து மனம் திருந்தினாள் என்றெல்லாம் கிடையாது)
இந்த கதையை வெகு சுவாரஸ்யமாக சொல்லுவார் என் மாமி. அவர் ஒரு நல்ல கதை சொல்லி. கதையை பாவத்தோடு நேரில் பார்ப்பது போல சொல்லுவார். நான் நிறைய தடவை இந்தக் கதையை சொல்லச் சொல்லி கேட்டிருக்கிறேன்.
அதே போல மஹாபாரத கதைகளும் சொல்லுவார். பீஷ்ம சபதம், பாண்டவர்கள் அரக்கு மாளிகையிலிருந்து தப்பித்த விதம், திரௌபதி சுயம்வரம், திரௌபதியை சூதில் பாண்டவர்கள் தோற்பது, கண்ணன் கருணையால் அவளுக்கு புடவை வளர்வது போன்ற காட்சிகளை மோனோ ஆக்டிங் போல கூறுவார். அதனால்தானே இன்றுவரை எனக்கு அந்த கதைகள் நினைவில் இருக்கின்றன.